“இது அவங்க நாள். சேம்ப் சமாளிச்சுப்பான். இதெல்லாம் மெமரீஸ் மேகா…” என்று அதிரன் சொல்லவும் தலையசைத்து புன்னகைத்தது அவன் மேகம்.
“ஜஸ்ட் வாவ் மேகா…” என்றவனின் பாராட்டுதலில் மேகாவின் முகத்தில் மின்னலாய் சில ஒளிக்கற்றைகள்.
“ப்பா, கல்யாணம் அங்க…” என்று நந்தன் இருவருக்கிடையே நின்று இருவரின் மீதும் தோளில் கைபோட்டு நிற்க அவனின் கன்னத்தை கிள்ளிய மேகா,
“நீ என்ன பன்ற இங்க? அஷ்வின் பக்கத்துல போய் நில்லு…” என்றாள்.
“நோ, நோ. இங்க தான் இப்படிதான் இருப்பேன்…” என்று நந்தன் சொல்லிவிட,
“ஓகே…” என்று மகனின் தோளை அணைத்துக்கொண்டு நின்றான் அதிரன்.
இன்னும் சில வருடங்களில் நந்தனுக்கும் திருமணம் செய்ய வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து அடுத்த கட்டத்தில் தனித்து வாழ ஆரம்பித்திருக்க அவற்றை தகப்பனாய் கண்ணார ரசித்திருந்தான்.
மொத்த குடும்பமும் எதிர்பார்த்த அந்த நொடி. இதோ கெட்டிமேளம் முழங்க அஷ்வின் ஸ்பூர்த்தி கழுத்தில் மூன்று முடிச்சிட அனைவரின் ஆசிர்வாதங்களும் சாட்சியாகின.
சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்க மதிய வேளையில் வீட்டிற்கு கிளம்பும் முன் அமைச்சர் ஆவுடையப்பன் அங்கே திடீர் வருகை புரிந்தான்.
இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு வரவேற்பிற்கு அழைப்பு விடுத்திருக்க திருமணம் முடிந்த சில நிமிடங்களில் அதிரனுக்கு அழைத்து அங்கே வருவதாய் சொல்லிவிட்டான்.
சொல்லியபடி ஆவுடையப்பன் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு அதிரனை தனியே அழைத்தான். உடன் செல்வமும், பல்லவனும் வந்தனர்.
“ஒன்னும் கவலைப்படவேண்டாம். எல்லாம் நமக்கு சாதகம் தான். கேஸ்ல ஜட்ஜ்மென்ட் குடுத்துட்டாங்க. வேதநாயகத்துக்கு தண்டனையும் குடுத்தாச்சு. இனி அவரால ஒன்னும்…” என்று தன் தலைமுடியை பிடித்து காண்பித்து சிரித்த ஆவுடையப்பன்,
“இன்னும் இந்த கேஸ்ல யாரெல்லாம் இன்வால்வ்ட்ன்னு இனி தான் இன்வஸ்டிகேஷன் நடக்கும். அது தனி. அதை கவர்மென்ட் பார்த்துக்கும். இனி பயம் வேதநாயகம் கூட இதுல தொடர்பில இருந்தவங்களுக்கு தான். நிம்மதியா இருங்க…” என சொல்லி அதிரனின் கையை பிடித்துக்கொள்ள,
“இதை மறக்கவேமாட்டேன் ஸார். பெத்தவங்களோட பெரிய கனவு பிள்ளைங்க கல்யாணத்துல சந்தோஷத்தை பார்க்கறது. அதுல நிம்மதியா, நிறைவா இருக்கறது. இவ்வளோ நேரம் சந்தோஷமா இருந்தாலும் ஒருபக்கம் ஒரு உறுத்தல். இப்ப அதில்லை…”
“என்ன அதிரன், இவ்வளோ எமோஷனல்? முதல்ல பிள்ளைங்களை பாருங்க. இனி ப்ரீயா இருங்க…” என்று அதிரனிடம் சொல்லிவிட்டு ஆவுடையப்பன் நகர அவனை வழியனுப்ப செல்வமும், பல்லவனும் உடன் சென்றார்கள்.
எல்லாம் சுபம் என்று நினைத்து அப்படி ஒரு பெருமூச்சு. அதுவே அதிரன் முகத்தில் தனி சோபையை தந்தது.
வீட்டினருக்கு இந்த கூடுதல் உற்சாகம் கேள்வியை தந்தாலும் ஓரளவு அனுமானித்தது போல அது இன்னும் மகிழ்ச்சியை தான் தந்தது.
அதன் பின்னர் அனைவரும் அடுத்ததாய் வீட்டிற்கு வர அதிரனின் இல்லத்திலிருந்து அஷ்வின் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள் ஸ்பூர்த்தி.
இனி அது அவள் தாயின் பிறந்தவீடு, அவள் தாய்மாமன் வீடு மட்டுமல்ல. அவள் வீடும் அதுவே என்று நினைக்க உள்ளுக்குள் உற்சாகபெருவூற்று.
அதிரனின் வீட்டினரை போலில்லாது அமுதினியன் பக்க சொந்தங்கள் எல்லாம் வீட்டில் நிறைந்திருந்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்கள் இருக்க சுபத்ரா கூட சொல்லியிருந்தார் இரவு சடங்கை தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று.
அதனை மேகாவே மறுத்துவிட்டாள். எந்த சம்பிரதாயத்தையும் மாற்றவேண்டாம் என்று.
அமுதினியன் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டார். செல்வம் இரவு வரை அங்கிருந்துவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
மறுநாள் வரலாம் என்றதும் ஆட்களும் குறைவென்பதால் செல்வம் சொல்லிவிட கிளம்பிவிட்டார்கள்.
திருமணமாகிவிட்டது, புகுந்தவீடு என்று எல்லாம் இல்லாமல் ஸ்பூர்த்தி வெகு இயல்பாக வளையவர அஷ்வினுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
அதிரன் சொல்லியபின்பு, அதுவும் ஆவுடையப்பன் நேரில் வந்து அத்தனை உறுதியாய் சொல்லிய பின்பு அவனுக்கிருந்த சஞ்சலங்களும் விலகியிருக்க நிம்மதியாக அன்றைய மணாளனான பொலிவுடன் இருந்தான்.
அதிரனிடம் போனில் பேசிவிட்டு வந்தவன் ஸ்பூர்த்தியை தேட அங்கே சமையல் மேடையில் காலாட்டியபடி மலரிடம் பேசிக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
அதுவரை சொந்தங்கள் நிறைந்திருக்க திருமண புடவையுடன் இருந்தவள் எப்போது உடை மாற்றினாள் என்று தெரியவில்லை.
சுடிதாரில் தான் அமர்ந்திருந்தாள். கையில் எதையோ வைத்து கொறித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்க,
“இங்க என்ன பன்ற?…” என்று வந்தான் அஷ்வின்.
“பாருடா, புடவை மாத்திக்கோன்னா கேட்கவே இல்லை. நேரமாகட்டும்ன்னு சொல்றா…” என்ற மோனிகா,
“முதல்ல வருவுக்கு போன் போடனும்…” என்று மோனிகா சொல்லி அங்கிருந்து செல்ல,
“நீயே பேசு…” என மலரும் சென்றுவிட அஷ்வின் சிரிப்புடன் நெருங்கினான்.