வெகு நேரம் அமைதியாய் அதனை எல்லாம் கவனித்தவள் பதில் கூறாமல் இருக்க அதற்கும் கூட்டத்தில் சலசலப்பு.
“ஓகே, கேரியான்…” என்று சொல்லி வேகமாய் உள்ளே சென்றுவிட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அத்தனை கொந்தளிப்பு.
“என்ன கொஞ்சமும் மதிக்காம போறாங்க இந்த ஆபீசர்?…”
“அதிகாரத்தில இருக்கறவங்களோட கைத்தடி. வேற எப்படி இருப்பாங்க?…”
“இந்த கேஸை திசை திருப்பத்தானே முயற்சி செய்வாங்க. நம்ம கேள்விக்கு பதில் வருமா?..”
“இன்னும் ஜோடிச்சிருக்க மாட்டாங்கப்பா. வந்து நாடகத்தை சொல்லுவாங்க…”
“இல்லை இவங்க அப்படி கிடையாது. ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்…”
இப்படியான பலதரப்பட்ட பேச்சுக்கள் வெளியே வந்துகொண்டிருக்க இது நேரலையிலும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
“என்ன கமிஷனர்? என்ன பண்ணிட்டிருக்கா இந்த ஆபீசர்? எதுக்கும் மடியமாட்டேன்னு நிக்கிறாளே?…” நேரலையை பார்த்துக்கொண்டிருந்த வேதநாயகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க,
“ஸார், கொஞ்சம் பொறுமையா இருங்க. கேஸ் பைல் பண்ண ரிபோர்ட் பண்ண மட்டும் தானே முடியும். டிப்பார்மென்ட்க்கு கேஸ் கை மாறவும் பசங்களை நல்லபடியா வெளிய கொண்டுவந்திடலாம்…”
“வெளிய கொண்டுவரவா உன்கிட்ட இத்தனை பேசறேன். அவ வாய் திறக்க கூடாதுன்னு சொல்றேன்….”
“ஓகே ஸார். நான் பேசறேன்…”
“எங்க பேச? அவ கேட்கனுமே?…” என்ற வேதநாயகம்,
“சொன்னமாதிரி ரிப்போர்ட் ரெடியா?…”
“எல்லாம் ரெடி ஸார்…” என்னும் பொழுதே குரலில் சிறு தடுமாற்றம்.
“இவளை எல்லாம் யார்ய்யா இந்த வேலைக்கு வர சொன்னா? தாத்தன், அப்பன் சம்பாத்தியம் கோடிகோடியா கொட்டி கிடக்குது. வசதியா இருந்தோமா வாழ்தோமான்னு போகாம உசிரை எடுக்கன்னே வந்து சேர்ந்திருக்கா…”
“ஸார், இது அந்த பொண்ணோட ஆம்பிஷன். சொல்ல போனா இதுக்கு நாம ப்ரவ்டா தான் பீல் பண்ணனும்…”
“என்ன கமிஷனருக்கு அந்தபக்கம் இருந்து கமிஷன் வருதா என்ன? அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்டே பேசற? நான் நினைச்சா?…” என்று பல்லை கடிக்கவும் கமிஷனர் வாயை மூடிக்கொண்டார்.
“என் வாயை புடுங்காத. வேற என்னத்தையும் பண்ணாம அவளை அந்த இடத்தைவிட்டு கிளப்பற வழியை பாரு…”
“நீங்க சொன்ன மாதிரி தான். பசங்களை ஹாஸ்பிட்டல் மாத்திடலாம். இந்த கேஸ்ல இருந்து ஸ்மூத்தா வெளில கொண்டுவந்திடலாம்…”
“என்னமோ பண்ணு. ஆனா இந்த விஷயம் இப்படியே அமுங்கிடனும்…”
“ஹ்ம்ம் ஸார்…”
“இப்படித்தான் பாரஸ்ட் ஃபயர் கேஸ்லையும் சொன்ன. எவ்வளோ பெரிய இஷ்யூவாகி இப்ப கேஸ் வேற மாதிரி போய்ட்டிருக்கு. அந்த தலைவலி வேற…”
“பார்த்துக்கலாம் ஸார்…”
“என்னத்த பார்க்க போற? இல்ல என்னன்றேன்? ஆட்சி பன்றதுன்னா என்ன சும்மாவா? இங்க ஒவ்வொருத்தனுக்கும் அவ்வளவு துட்டு அழுது அழுது இந்த சீட்டுக்கு வந்திருக்கேன்….”
“ஸார் ப்ளீஸ்…”
“என்னய்யா ப்ளீஸ்? இத்தனை வருஷ சர்வீஸ்ல இப்படி எந்த பொண்ணும் என்கிட்டே சவால் விட்டதில்ல. என் முன்னாடியே எப்படி பேசிட்டா?…” என கொதித்துக்கொண்டிருந்தார் வேதநாயகம்.
காடு தீப்பற்றி இருக்க அதன் நெருப்புகள் ஓய்ந்த வேளையில் அதனை பார்வையிட என்று திடீரென கிளம்பி சென்றவரை கொஞ்சமும் மதிக்காமல் அதன் உள்ளே அனுமதிக்கவும் மறுத்து திமிராய் நின்றிருந்தாளே?
“எவ்வளவு துணிச்சல் இருக்கனும்? வெளில நானே இழுத்துட்டு போய் விடற மாதிரி நடந்துக்காதீங்க ஸார்ன்னு பேசினாளே? எவ்வளோ திண்ணக்கம்? பெரிய குடும்பத்துல இருக்கோம். இன்ப்ளூயன்ஸ்ன்னு தானே ஆடறா. அடக்கி காண்பிக்கறேன்…”
“ஸார், இப்ப இதெல்லாம் எதுக்கு? அந்த பொண்ணு அதோட ட்யூட்டியை பார்த்துச்சு. அதோட அவ வேண்டாம்ன்னு மறுத்தும் நீங்க பிரஷர் குடுத்து அந்த ஷூட்க்கு ஏற்பாடு பண்ணின கோவம் தான்…”
ஆனால் கமிஷனருக்கு அதனை கேட்டதும் தன்னிடம் அவள் பேசியது தான் ஞாபகம் வந்தது.
“ஒருநாள் இருக்கு அவளுக்கு. கவனிச்சுக்கறேன்….”
“ஸார், இதை இதோட விட்டுடலாமே? பெருசு பண்ண வேண்டாம்…” கமிஷனர் தன்மையாக சொல்ல,
“ம்ஹூம், உன் போக்கும் சரியில்லை. என் பசங்களை வெளில விடு. நான் அப்பறம் பார்த்துக்கறேன்…” என்று போனை வைத்துவிட்டார்.
“இந்தாளு வேற இம்சையை கூட்டிட்டு…” என கடுப்புடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கும் காவலதிகாரிக்கு அழைப்பு விடுத்தார்.
“என்ன லக்ஷ்மணன் கேஸ் ரிபோர்ட் வாங்கிட்டீங்களா?…”
“இப்பதான் ஸார் மேடம் வந்திருக்காங்க…”
“ஓகே, எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. ரிப்போர்ட் வாங்கிட்டு சைன் வாங்கிருங்க. அவங்க கிளம்பவும் எனக்கு கால் பண்ணுங்க. நெக்ஸ்ட் என்ன ஆக்ஷன்னு சொல்றேன்…”
“சார் வெளில பிரஸ் பீப்பிள்ஸ்…”
“சோ வாட் லக்ஷ்மணன்? இதை கூட டீல் பண்ண முடியாதா?…”
“ஓகே ஸார்…”
“விசாரணைல இருக்கு. சொல்றோம்ன்னு மட்டும் சொல்லுங்க. வேற ஒன்னும் பேச கூடாது…” என்று சொல்லிக்கொண்டிருக்க அவளின் சத்தம்.
“ஹலோ ஸார்…” என்ற அவளின் குரல்.
“ஹலோ மேம், ஹவ் ஆர் யூ?…” என்றான் லக்ஷ்மணன்.
“குட்…” என்றவள் சத்தம் கேட்கவில்லை அடுத்து.
“என்னய்யா?…” என்றார் கமிஷனர் சில நொடி மௌனத்தை கவனித்து.
“உள்ள போயிருக்காங்க…” கமிஷனரிடம் சொல்ல,
“ஓகே, திரும்ப திரும்ப சொல்றேன். எந்த இஷ்யூவும் வர கூடாது…”
“சூர் ஸார்…” என சொல்லும் பொழுதே உள்ளே ஒருவன் அலறும் சத்தம்.
“என்னய்யா?…”
“உள்ள அடிக்கிறாங்க…”
“என்னன்னு போய் பாரு…” என சொல்ல லக்ஷ்மணன் வருகையில் இன்னொரு அறை விட்டிருந்தாள் அவள்.
படுக்கையில் கையில் கட்டுடன் இருந்தவன் ஓரமாய் ஒடுங்கி அமர்ந்திருக்க அந்த கட்டை மடமடவென்று பிரித்தாள்.
“மேடம் மேடம் என்ன பன்றீங்க? சிவியர் இஞ்சூரி. இப்படி பிரிச்சுவிடறீங்க?…” என்ற மருத்துவரின் அலறலை ஒற்றை பார்வையில் அடக்கினாள்.
கட்டிலில் இருந்தவனோ அவளின் கை பிடியில் ஏற்கனவே வலி கூட இப்போது அவளின் பேச்சில் இன்னும் அலறினான்.
“சொல்லுடா, சிவியர் இஞ்சுரியா உனக்கு?…”
“இல்ல மேம், இல்ல மேம்…” என கத்தினான்.
வெளியே அவனின் உறவினர் சத்தம் போட அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை காவலாளிகள்.
“சொல்லு, உன் வாக்குமூலத்துல என்ன சொன்ன? அதை இப்ப சொல்லு…” என்று அவன் முன்னால் சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள்.
பார்வையின் தெனாவெட்டில் அவனுக்கு சர்வமும் நடுங்கியதென்றால் லக்ஷ்மணன் மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.
லக்ஷ்மணன் போனில் லைனில் இருந்த கமிஷனருக்கு டென்ஷன் ஏறியது. என்ன இத்தனை செய்கிறாள் என்று.
“யோவ் லக்ஷ்மணா, யோவ்…” என்று போனில் இறைந்துகொண்டிருக்க அவனுக்கு கேட்டலும் கேட்காததை போலவே நின்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அதில் உடனே போனை கட் செய்துவிட்டு மீண்டும் அவனுக்கு அழைக்கவும் அழைப்பு சத்தத்தில் லக்ஷ்மணன் எடுக்க அவளும் அவனிடம் கவனத்தை ஒரு நொடி செலுத்தி பின் கட்டிலில் இருந்தவனிடம் திருப்பினாள்.
“சொல்லு…” என்ற அழுத்தத்தில் அவன் பதில் சொல்லும் முன் இங்கே கமிஷனர் பரபரத்தார்.
“என்னய்யா? என்ன அங்க பராக்கு பார்த்திட்டு இருக்க? எத்தனை தடவை கூப்பிட?…”
“ஸார், அடிக்கிற சத்தத்துல உள்ள ஓடி வந்தேன். போன்ல நீங்க லைன்ல இருக்கறதை மறந்துட்டேன் ஸார் இங்க நடந்ததை பார்த்த டென்ஷன்ல…” என்றான்.
“முதல்ல அவக்கிட்ட போனை குடு…” கமிஷனர் உத்தரவிட,
“எஸ் ஸார்…” என்றவன்,
“மேம் உங்ககிட்ட பேசனுமாம்…” என நீட்ட,
“ஹலோ ஸார், என்கிட்ட பேசனும்னா நீங்க என் நம்பருக்கே கூப்பிட்டிருக்கலாமே?…” என்றாள் கட்டிலில் அமர்ந்திருந்தவன் முன்னால் தனது தொப்பியை ஆட்டியபடி.
அவள் ஆட்டியவிதமே எந்த நொடியும் அதனை கொண்டு அடித்துவிடுவேன் என்பதை போலிருந்தது.
ஒவ்வொருமுறை அது நீண்டு தன்னை நெருங்கையில் எல்லாம் உடல் எகிற பின்னால் பயந்து பயந்து நகர்ந்தான்.
“என்ன பண்ணிட்டிருக்கம்மா? ரிப்போர்ட்டை லக்ஷ்மணன்கிட்ட ஹேன்டோவர் பண்ணிட்டு கிளம்பறது மட்டும் தான் உன் ட்யூட்டி…”
“என் ட்யூட்டியை தான் சார் நானும் பார்த்தேன்….”
“வாட்? இப்படி பேஷண்டை அடிக்கிறது தான் உன் ட்யூட்டியா?…”
“ஸார் நேத்து இந்த பையனுக்கு வேறு சின்ன காயம் மட்டும் தான். இப்ப வந்து பார்த்தா பெரிய கட்டு. அதான் நான் கிளம்பி போன பின்னாடி யாரும் அவனை நடந்ததை மாத்தி சொல்ல சொல்லி அடிச்சு காயப்படுத்திருப்பாங்கலோன்னு ஒரு நல்லெண்ணம்…”
“இந்த நக்கல் எல்லாம் வேண்டாம் ம்மா. உன் வயசுக்கு இது நல்லதில்லை…”
“போனை லக்ஷ்மணன் கிட்ட குடுத்துட்டு கிளம்புங்க. உங்க வேலை இத்தோட முடிஞ்சது. இனி எங்க டிப்பார்ட்மென்ட் இதை பார்த்துக்கும்…” என்று சொல்லவும் பல்லை கடித்தவள்,
“பார்த்துக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு போனை அவனிடம் நீட்டினாள்.