“இது த்ரேட்டன் இருக்குன்றதுக்காக மட்டுமில்லை சேம்ப். நம்மளால மத்தவங்களும் பாதிக்கப்பட கூடாது. அதான்…”
“கண்டிப்பா மாமா, நான் பார்த்துக்கறேன். முடிஞ்சளவு மாஸ்க்லையே இருக்கோம்…” என்ற அஷ்வின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“ஹேய் சேம்ப், எனக்கு புரியுதுடா. ஹேப்பியா போய்ட்டு வாங்க…” என்று சொல்ல அன்று மாலையே கொடைக்கானலுக்கு கிளம்பினார்கள்.
“இவ்வளோ சீக்கிரமா ஏன் மாமா? வந்துட்டு ரெண்டு நாள்ல திரும்பனும்…” ஸ்பூர்த்திக்கு மனதே இல்லை.
அவசரமாய் வந்து, இரு நாட்கள் மட்டும் என்று இருந்துவிட்டு கிளம்புவதா என்றிருந்தது.
இருபது நாட்கள் வரை விடுமுறை எடுத்திருந்தாள் அவள். அவசரமின்றி சேர்ந்துகொள்ளலாம்.
ஒருவாரம் வரவேற்பு முடியும் வரை வீட்டில் உறவுகளுடன் இருந்துவிட்டு வரவேற்பு முடியவும் குறைந்தது பத்துநாட்களேனும் அஷ்வினுடன் தனியே இருக்கவேண்டும் என நினைத்திருக்க இது எதிர்பாராத பயணம்.
ஸ்பூர்த்தியின் முகமே அதனை காட்டிக்கொடுக்க முடிவெடுத்த பின் எதற்கு பின்வாங்க என்று அஷ்வின் சமாளித்து அழைத்துகொண்டு கிளம்பிவிட்டான்.
அதிரனும், மேகாவும் சொல்லியே அனுப்பினார்கள். அத்தனை பத்திரங்கள் சொல்லி உடன் பாதுகாப்பிற்கென்று ஆட்களும் வந்தாலும் இருவரின் தனிமையை கெடுக்காதவண்ணம் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.
மதுரை வந்து மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக கொடைக்கானல் வந்து தங்குமிடத்தை காண்பிக்க ஸ்பூர்த்தி சிலிர்த்து தான் போனாள்.
எங்கே தனியாய் ஒரு காட்டு பங்களா, இல்லை யாருமன்ற பெரிய காட்டேஜ் என்று நினைத்திருக்க இப்படி ஒரு இடத்தை அஷ்வின் தேர்ந்தெடுத்தது அத்தனை ஆச்சர்யம்.
“வாவ் மாமா, எப்படி இது தோணுச்சு?…”
“ஏன்? தோண கூடாதா? சும்மா பார்த்தேன். இது கண்ணுல பட்டது. சரின்னு கிளம்பி வந்தாச்சு. இங்க டூ டேய்ஸ் காட்டுக்கு நடுவில, யார் தொந்தரவும் இல்லாம இந்த ஹனிமூன் க்ளாம்பிங்…” என அவளை தோளோடு அனைத்து நின்றான்.
இரவின் இருளில் ஆங்காங்கே தள்ளி தள்ளியிருந்த க்ளாம்பிங்கில் ஒளிர்ந்த மெல்லிய மஞ்சள் வெளிச்சமும், தூரத்தில் எங்கோ அருவி கொட்டும் சத்தமும், மிதமான சாரலும் என அந்த தருணத்தை ரம்யமாக்கியது.
“இங்க மத்த டெண்டல யாரும் இருக்காங்களா?…” ஸ்பூர்த்தி கேட்க,
“தெரியலை. நமக்கு இத்தனை நெருக்கமில்லாம தள்ளி தான் இருக்கு க்ளாம்பிங். அங்க வா போகலாம்…” என்று அழைத்து சென்றான்.
இவர்கள் வருகையை எதிர்பார்த்து அங்கே பணியாளர்கள் காத்திருக்க மரியாதை செய்து அங்கே வசதிகளை பற்றியும், என்னென்ன தேவைப்படும் என கேட்டு அதற்கு உணவுகள் தயாரிப்பதும் என்று பணிந்து கூறினார்கள்.
“இங்க நீங்க ஸ்டே பண்ணிருக்கீங்கன்னு யாருக்கும் தெரியாது ஸார். எங்கள்ல மூணுபேருக்கு மட்டும் தான். எந்த நேரமானாலும் நீங்க என்னை காண்டேக்ட் பண்ணலாம்….” என்று சொல்லிவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
“ஹ்ம்ம், ஆனாலும் எங்கப்பா எப்படி இதுக்கு ஓகே சொன்னாங்கன்னு தான் தெரியலை. சேம்ப் கேட்டா உடனே சரி தான்…” என கையிரண்டையும் தேய்த்தபடி குளிருக்கு உள்ளே நுழைந்தாள்.
“செம்ம வியூ மாமா. ஆனா…” என்று சொல்லும் பொழுதே திரை கொண்டு வெளியே தெரிந்த உலகத்தை மொத்தமாய் மறைத்தான் அஷ்வின்.
திரும்பி பார்க்க ஸ்பூர்த்தி மீண்டும் வெளியே சென்று நின்றாள். அந்த இடத்தை விட்டு செல்லவே மனதில்லை.