“அஷ்வின் என்ன சொல்றான்?…” மேகா மறுபக்கத்திலிருந்து மகளிடம் கேட்க,
“எல்லாம் எடுத்து வச்சிட்டிருக்காங்க ம்மா…” என்றாள் ஸ்பூர்த்தி.
“இப்ப என்ன செய்யனும்? அதை சொல்லு. நாங்க வேணா பேசறோம். அதுக்கு ஏன் வாய்ஸ் டல்லா இருக்குடா?…” மேகா மகளுக்கு சமாதானம் சொல்ல,
“ஒன்னும் வேண்டாம். இங்க என் பேச்சையே கேட்கலை…”
“அப்ப எங்க பேச்சை கேட்கவேண்டாமா?…” மேகாவிற்கு சிரிப்பு வந்தது மகளின் பிடிவாதத்தில்.
“கொஞ்சம் என் பேச்சை இனிமே கேட்டு பழகட்டும் ம்மா. …” என்றவள்,
“அப்பா உங்ககிட்ட எப்படி இருக்காங்க. அதான் உங்களுக்கு தெரியலை. இங்க அப்படியா?…” என்றவள் மீது ஒரு தலையணையை தூக்கி வீசினான் அஷ்வின்.
“ஸ்பூர்த்திப்பா…” அதிரன் பேச,
“ப்பா நீங்க ஏன் வந்தீங்க லைன்ல?…” என்றாள் உடனே ஸ்பூர்த்தி.
“என்னடா? அம்மா பேசிட்டிருந்ததை பார்த்து தான் வந்து வாங்கி பேசறேன்…”
“நீங்க கிரேட் ப்பா. ஆனா இங்கயும் இருக்காங்களே?…” அதிரனிடம் அஷ்வினை கேலி செய்து பேச மீண்டும் அவளின் தலையில் குட்டு வைத்து காதை பிடித்தான் அஷ்வின்.
“என்னடா ஸ்பூர்த்தி?…” அதிரன் சிரிக்க,
“உங்க செல்லப்பிள்ளைக்கு கோவம் வந்திருச்சு. என் காதை பிடிச்சு திருகறாங்க…”
“நீ என்ன சொன்ன என் சேம்பை?…” அதிரன் அதை தான் கேட்டான்.
“இதை கேட்கவா அங்க இருந்து கால் பண்ணுனீங்க? போங்கப்பா….” என்றவள்,
“ப்ரேக்பாஸ்ட் வந்திருச்சு. சாப்பிட்டு கிளம்பறோம்…” என்று சொல்ல போனை பிடுங்கிக்கொண்டான் அஷ்வின்.
“மாமா…” என உற்சாகமாக அழைக்க,
“ஸ்பூர்த்தி சொல்றமாதிரி ரெண்டுநாள் இருந்துட்டு ரிசப்ஷன்க்கு முதல் நாள் வா சேம்ப். இங்க நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” அதிரன் சொல்லவும் அஷ்வின் ஸ்பூர்த்தி முகத்தை பார்த்து சிரித்துவிட்டான்.
தகப்பனின் பேச்சை கேட்பானா இல்லையா என்பதை போலொரு பாவனையும், கேட்கட்டும் நான் மட்டும் என்ன தொக்கா என்பதை போலொரு பாவனையும் மாறி மாறி தெரிய அஷ்வினின் புன்னகை இன்னும் விரிந்தது.
“இங்க ஓகே சொல்லும் நிலைமையும் இல்லை. வேண்டாம் சொல்ற நிலைமையும் இல்லை. நீங்க வேற ஏன் மாமா?…” என்று சலிப்பதை போல ஸ்பூர்த்தியை பார்த்து கண்ணடிக்க அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“ஓகே, என்னதான் பண்ண போற?…” அதிரன் கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருந்து கிளம்பிருவோம். ப்ளைட் டிக்கட் புக் பண்ணினது பண்ணினதாவே இருக்கட்டும்…” என்ற அஷ்வின்,
“மேபி ப்ளைட்ல வரலன்னா என்ன? லேட்டாச்சின்னா கார்லயே கூட வந்திடறோம்…” என சொல்லவும் உடனே மறுத்தான் அதிரன்.
“நோ சேம்ப். அதை பண்ணவேண்டாம். ப்ளைட் தான் சேஃப். லேட்டாச்சின்னா வேற ஏற்பாடு பண்ணலாம். புரியுதா?…” அதிரன் அழுத்தமாய் சொல்ல,
“ஓகே மாமா…” என்று அஷ்வினும் மறுக்கவில்லை.
“ஓகே, டேக் கேர்…” என்று அதிரன் வைத்துவிட்டான்.
“எங்கப்பாவுக்கும் சமத்து போதலைன்னு இப்பதான் தெரியுது மாமா. பேசி சமாளிச்சிட்டீங்க நீங்க…” என ஸ்பூர்த்தி புலம்ப ஆரம்பிக்க,
“என்னடா பூரிக்குட்டி? தனியா பேசிட்டிருக்கியா?…” என்று அஷ்வின் கிண்டல் பேசினான்.
“என் நேரம் மாமா. இப்படி இங்க வந்தும் ரூம் விட்டு எங்கயும் போகலை….”
“வெளில சுத்தி பார்க்கவா வந்தோம்?…” என்று ரகசிய சிரிப்புடன் அஷ்வின் உணவை எடுத்து வைத்தான் சாப்பிட.
“பசிக்கலையா ஸ்பூர்த்தி?…” என அவளை வம்பிழுக்க வேறு செய்ய,
“எனக்கு ஏன் பசிக்காம? அப்ப இருந்தே பசி தான்…” என்று ஆளுக்கு முதலாய் வந்தமர்ந்தாள்.
“உன்னை மாதிரியே புசு புசுன்னு பூரி…” என்று காண்பித்து அதனை பிய்த்து உண்க,
“நான் கோவம் கோவம் தான்…” என்று அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட சாப்பிட்டு முடிக்கும் வரை வம்பு செய்யவில்லை.
தனக்கு வந்த போன் கால், மெசேஜ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
தனக்கென்று தனியாய் மேனேஜர் எதையும் அஷ்வின் வைத்துக்கொள்ளவில்லை.
வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் ஹர்ஷத் மூலமாகவோ இல்லை நேரடியாகவோ தான் வரும்.
இப்போதும் ஹர்ஷத் மூலம் ஒரு செய்தி வந்திருக்க அவனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான் அஷ்வின்.
பேசி முடித்து பார்க்க உண்டு முடித்த மயக்கத்தில் ஸ்பூர்த்தி மீண்டும் இழுத்து போர்த்தியிருந்தாள் படுக்கையில்.
“தூங்கினா மட்டும் எழுப்பி கிளம்பாம விட்டுடுவேனாக்கும்?…” என்ற அஷ்வினின் குரல் கேட்டுவிட்டதன் சலனம் அவள் முகத்தில் தெரிய சுதாரிப்புடன் கண்களை மூடியிருந்தவளை கண்டு வாய்மூடி சிரித்தவன் அவளருகே சென்றான்.
“இதழில் கதை எழுதும் நேரமிது…” என்று மெல்லிய குரலில் பாட உடனே படக்கென்று கண்ணை திறந்தாள் அவள்.
“இப்ப நீ தான் பிராட்…” அஷ்வின் அவள் மூக்கை பிடித்து ஆட்ட,
“ஒரு ம்யூசிக் டைரக்டர், பொண்டாட்டிக்கிட்ட பாட்டு பாட இவ்வளோ ஆட்டம் காட்டறீங்க. உங்க கம்போசிங்ல நீங்க தானே பாட்டு ராகம் எல்லாம் பாடி, சொல்லி தருவீங்க…” என்று போர்வையை விலக்கிவிட்டு கோபமாய் அவள் எழுந்தமர,
“அது கம்போசிங்ல. நீ எனக்கு பாடி தரேன்னு சொல்லு. நானும் உனக்கு சொல்லி தரேன்…” என பேரம் பேசினான்.
“சரியான பிஸ்னஸ் மைன்ட் உங்களுக்கு. இப்ப வரைக்கும் ஒரு சாங் எனக்காக பாடிருப்பீங்களா?…”
“நீயும் தான் பாடலை. உன் தாத்தாவுக்கு பாடி தந்த தானே?…” அஷ்வினும் விட்டுகொடுக்கவில்லை.
“அது எப்பவோ ஸ்கூல் லீவ்ல பாடினது. நான் அதுக்கப்பறம் பாடறதை விட்டுட்டேனே? டச் விட்டு போச்சு…”
“இப்போ திரும்ப டச் பண்ணிக்கோ. நிறைய கேட்கலை. அப்பப்ப எனக்காக ஒரு சாங். உன் வாய்ஸ்ல அவ்வளோ கிக். பாடேன் பூரிக்குட்டி..” என்றவன்,
“உனக்காக இன்னொரு பேவர். டூயட் சாங்னா நானும் உன்கூட சேர்ந்து மேல்(male) வாய்ஸ் தரேன்…” என்று கேட்க புருவங்கள் உயர்ந்தது.
“வாவ் மாமா, உண்மையை சொல்லுங்க. நிஜமாவே என்னை பாட வைக்கனும்னு நீங்களும் பாடறேன்னு சொல்றீங்களா?…” என்றாள் ஆச்சர்யமாக.
இதுவரை அவன் இசையமைத்த எந்த படத்திற்கும் அவன் பாடியதில்லை. மற்ற பாடகர்களை வைத்து தான் பாட வைப்பான்.
இப்போது அவளிடம் சொல்லவும் நம்பமுடியாமல் பார்த்தாள் ஸ்பூர்த்தி. தேவராஜ் கூட அதிரனின் படத்திற்கு, இல்லை வேறு படத்திற்கு அஷ்வினின் குரலில் பாடலை கேட்க மறுத்துவிட்டான் அஷ்வின்.
அதில் தனக்கு பெரிதாய் நாட்டமில்லை என்று சொல்லிவிட்டான். பாடி காண்பிக்கும் பொழுதே அதில் லயித்துவிட கூடிய குரல்வளம் அவனது.
ஆனால் என்னவோ அதனை செய்வதில்லை. இப்போது தனக்காக கேட்கிறானா? நிஜமா? என்று ஸ்பூர்த்தி அவனையே பார்க்க,
“என்னவாம்? உனக்கு இஷ்டமில்லையா?…” என்றான் அஷ்வின் தன் மேல் அவளை சாய்த்துக்கொண்டு.
“ஓகே, பாடலாம். ஆனா இப்ப எனக்காக பாடுங்க ரெண்டு லைன்…” என கேட்க,
“இதானே வேண்டாம்ன்றது. நீ பாடற அன்னைக்கு நாள் முழுக்க உனக்காக பாடிட்டே இருப்பேனாம். இப்ப நாம கிளம்புவோமாம்…” என்று அவளை எழுப்பி தானும் எழுந்துகொள்ள ஸ்பூர்த்தி சட்டமாய் அமர்ந்துகொண்டாள்.
“ப்ளீஸ் மாமா, எனக்கு கிளம்பவே மனசில்லை. சத்தியமா இங்க இருந்து போகனும்னு இந்த நிமிஷம் தோணவே இல்லை…” என தனக்கு முன் நின்றவனின் இடையை கட்டியபடி அவன் மேல் முகத்தை சாய்த்துகொண்டாள்.
“ஸ்பூர்த்திம்மா சொன்னா புரிஞ்சுக்கோ. தனியா அப்பா, தாத்தாவால சமாளிக்க முடியாது. இப்ப என்ன? ரிசப்ஷன் முடிச்சு திரும்ப வேணும்னா இங்க வருவோமே? இல்லைனா வேற எங்கையாவது போகலாம்…”
“ம்ஹூம், எனக்கு கிளம்ப தோணலை. என்னவோ வேண்டாம்ன்னு தோணுது மாமா…” என்றாள் ஸ்பூர்த்தி.
அஷ்வின் மறுக்க மறுக்க ஸ்பூர்த்திக்கு அங்கிருந்து செல்லவேண்டாம் என்னும் எண்ணம் இன்னும் வலுத்தது.
முகத்தை தூக்கிவைத்தபடி அமர்ந்திருந்தவளை பார்க்க சிரிப்பாக இருந்தாலும் இப்போது இளக்கம் காட்டினால் தன் மனதை மாற்றிவிடுவாள் என தோன்ற எல்லாவற்றையும் தானே எடுத்து வைத்தான்.
“இப்படியே லஞ்ச் டைம் கொண்டுவந்திடுவ நீ? எப்படி இந்த ட்ரெஸ்லயே வர போறியா?…” என்றான் அவளின் இரவு உடையை பார்த்து.
“ரொம்ப அடமன்ட் மாமா நீங்க?…” என்று ஸ்பூர்த்தி குற்றம் சொல்ல,
“நீ மட்டும் ஏன் சைல்டிஷா பன்ற ஸ்பூர்த்தி? என்கிட்டே மட்டும் இந்த வேலையை காட்டறது. சேட்டை…” என்றான் அவளை அதட்டும் விதமாய்.
“ஆமா, உங்ககிட்ட நான் ஸ்ட்ரிக்ட்டாவா இருக்க முடியும்?…” என்றவள்,
“ப்ளீஸ் மாமா, கன்சிடர் பண்ணுங்க…” என்று சொல்ல அஷ்வினுக்கு என்னவோ அதனை ஏற்கவே விடவில்லை அவனின் விதி.
ஸ்பூர்த்திக்காக அங்கிருக்க சொல்லி அவன் மனது வாதிட ஆசையிருந்தாலும் என்னவோ அவனை கிளம்ப வைத்தது.
“என்னடா நீ? சின்ன பிள்ளையா? நினைச்சா திரும்ப வர போறோம். ரிஷப்ஷன்…”
“அந்த ரிசப்ஷனே வேண்டாம். ஏன் இவ்வளோ சீக்கிரம் வைக்கறாங்க? எனக்கு போகவேண்டாம்ன்னு இருக்கு. ப்ளீஸ்…” என்று அவனை இன்னுமே அணைத்துக்கொண்டாள்.
அவளின் செயல்கள் அஷ்வின் மனதை உருக்கினாலும் சிரிப்பு தான் வந்தது ஸ்பூர்த்தியின் சிணுங்களில்.
“நான் எங்கடா போக போறேன்? உன் கூடவே தான் இருப்பேன். என்னவோ மொத்தமா விட்டுட்டு போற மாதிரி இப்படி பண்ணிட்டிருக்க?…” என்றதுமே சுருக்கென்ற வலி ஸ்பூர்த்திக்கு.
அவனை அணைத்திருந்த கைகள் அசைவற்று நின்றுவிட்டது அவனின் விளையாட்டான வார்த்தைகளில்.
பயந்துபோனாள் அதில். இதென்ன இன்றைக்கென்று தனக்கு இப்படி தோன்றுகிறது என தான் பதட்டம்.
“ஏன் மாமா?…” என கண்ணீர் கசிய அவள் நிமிரவும் தான் தன்னுடைய வார்த்தை அவளை தைத்திருந்ததையே உணர்ந்தான் அஷ்வின்.
“ஹேய் என்னடா?…” என்று ஸ்பூர்த்தி அருகே அமர்ந்தவன்,
“நான் சும்மா சொன்னேன் ஸ்பூர்த்தி. இப்ப நாம ரெண்டுபேருமா தான் ஊருக்கு போறோம். உன் லீவ் வரை உன் கூடவே இருப்பேன். நீ ட்யூட்டி ஜாயின் பண்ணாலும் உன்னோடவே இருப்பேன். இதுக்கு போய்…” அவளின் கண்ணீரை துடைத்தான்.
“என்ன நீ? சின்ன வார்த்தைக்கு போய் பயந்துட்டு?…” என அதட்டியவன்,
“இங்க பார் ஸ்பூர்த்தி. நீ தைரியமான பொண்ணு. எல்லா விஷயத்திலையும் துணிச்சலா இருக்கனும். நெருப்புன்னா சுட்டிடாது. சுட்டாலும் அந்த காயத்துக்கு மருந்தை போட தான் நினைக்கனும். சுட்டுடுச்சேன்னு பார்த்துட்டே இருக்க கூடாது…” என்றான்.
“இப்ப என்ன சொல்லவரீங்க நீங்க?…” என கேட்டவள் முகத்தில் மிதமிஞ்சிய கலக்கம்.
“புரியுது தானே? சும்மா நான் எப்பவும் கூட இருக்கனும்னு நினைக்க கூடாது. தனியா ஃபேஸ் பண்ண தெரியனும். உனக்கும் தெரியும் தானே? உனக்கு ஏற்கனவே சொன்னது தான். உன் பக்கத்துல நான் இல்லைனாலும் நான் தான் நீ. நீ தான் நான். எப்பவும் உன்னோடவே தான் இருப்பேன் ஸ்பூர்த்தி…”