அஷ்வின் அவளை திடப்படுத்த சொல்லிய வார்த்தைகள் எல்லாம் ஸ்பூர்த்தியின் தைரியத்தை ஆட்டம் காண செய்தது அன்றைகென்று பார்த்து.
அவன் பேச பேச கண்ணீர் வந்துகொண்டே இருக்க அஷ்வின் மனதளவில் கலங்கி போனான்.
இதென்ன இன்றைக்கு இவள் இப்படி இருக்கிறாள் என்று தான் தோன்றியது அஷ்வினுக்கு.
“அச்சோ, என்ன நீ? எல்லாத்துக்கும் எமோஷனல் ஆகிட்டு?…” என கண்ணீரை துடைத்துவிட்டவன்,
“நான் சொல்றது நீ காட்டுக்கு போகவும் சில நாள் நான் உன்னோட இருக்க முடியாது இல்லையா. அதை சொன்னேன்டா. என்னை பார்க்காம, பேசாம நான் என்ன நினைக்கிறேன்னு கூட தெரியாம ரெண்டுவருஷம் எவ்வளோ தைரியமா இருந்த. அப்பவே உன் கூட உன் நினைப்போட இருந்தவன் நான்…”
“இப்ப உனக்குள்ள நான் கலந்து உன்னோட வாழவேண்டிய அத்தனை ஜென்மத்து வாழ்க்கையும் இத்தனை நாள் வாழ்ந்திட்ட சந்தோஷத்துல இருக்கேன். இனி உன்னை விட்டு இருப்பேனா சொல்லு?…”
“ப்ளீஸ் மாமா, எதுவுமே பேசாதீங்க. நீங்க சொல்ல சொல்ல எனக்கு அது என்னையே உள்ளுக்குள்ள உடைய வைக்குது…” என்றவளுக்கு காரணமின்றி தங்கள் திருமண பத்திரிக்கை காண்பிக்க வந்த அன்று அஷ்வின் பேசியவை தான் தோன்றியது.
“என்னடா ஸ்பூர்த்தி? என்ன இப்படி பார்க்கற?…” அஷ்வினுக்கு அவளின் இந்த முகம் தான் அச்சத்தை உண்டுசெய்தது.
“அன்னைக்கே சொன்னீங்க இல்ல. வேண்டாம் வேண்டாம்ன்னு தூக்கி போட்டதோட பலன் உனக்கு புரியாது. அதோட எஃபெக்ட் நான் இல்லைன்றபோ தெரியும்ன்னு…” என்று சொல்ல அஷ்வினுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.
“லூஸாடி நீ?…” என்று அதட்டியவன் அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்.
“வீட்டுக்கு தான போறோம். ஏன் இவ்வளோ பன்ற நீ? உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு ஸ்பூர்த்தி…” என்று தன் அணைப்பில் அவனின் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க அதற்கு இருமடங்காய் அவள் காண்பித்தாள்.
“ஸ்பூர்த்தி…” என்றவனை பேசவே அனுமதிக்கவில்லை அவள்.
ஸ்பூர்த்தியின் பதட்டங்கள் மெல்ல மெல்ல தணியும் வரை அவளை கரைய வைத்தவன் நிதானமாக அவளில் இருந்து விலகினான்.
ஆபீஸ் மேனேஜருக்கு அழைத்து இருவருக்கும் காபிக்கு சொல்லிவிட்டு பார்க்க ஸ்பூர்த்தி அவனையே பார்த்தபடி படுத்திருந்தாள்.
ஒன்றும் சொல்லாமல் தலையணையை நிமிர்த்தி வைத்து அவளருகே சாய்ந்து அமர்ந்துவிட்டான் அஷ்வின்.
கிளம்பவும் மனதில்லாமல், இருக்கவும் மனதில்லாமல் ஒருவாறு அவன் நிலை அவஸ்தை தான்.
அஷ்வினின் அமைதியில் தானாக அவனை நெருங்கி அவன் மடியில் தலைசாய்த்துக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“மாமா, கோவமா?…” என கேட்க,
“நத்திங் டா…” என்று மட்டும் சொல்லியவன் கைகள் அவள் முகத்தையும் தலையையும் வருடியபடி இருந்தது.
இருவரின் பார்வையும் ஒற்றையோன்று தாங்கி நிற்க விலக்கிக்கொள்ளவில்லை இருவருமே.
சில நொடிகளில் வெளியே அழைப்பு சத்தம் கேட்டு அஷ்வின் எழுந்து செல்லவும் அவனின் போனும் அடித்தது. பல்லவன் தான் அழைத்திருந்தான்.
“மாமா, இதோ இனிமே தான்…” என்ற ஸ்பூர்த்திக்கு சரியாக வார்த்தை வரவில்லை.
“ப்ரேக்பாஸ்ட் முடிச்சதும் கிளம்பனும்னு சொன்னான் அஷ்வின். அதான் கிளம்பிட்டீங்கன்னு நினைச்சேன். ஓகே டா, பார்த்து கிளம்புங்க. கிளம்பவும் கால் பண்ணுங்க…” என்று சொல்ல,
“ஓகே மாமா…” என்றவள் அஷ்வின் காபியுடன் வர அதற்குள் பல்லவன் போனை வைத்துவிட்டான்.
“அப்பாவா?…” என கேட்டுக்கொண்டே ஸ்பூர்த்திக்கு காபியை நீட்டினான் அஷ்வின்.
“ஊருக்கு கிளம்பியாச்சான்னு கேட்டாங்க…” என்றதும் அஷ்வின் ஒன்றும் சொல்லவில்லை.
“குடி…” என காபியை நீட்ட,
“நீங்க குடிங்க மாமா. இப்ப வந்திடறேன்…” என்று எழுந்து குளியலறைக்கு சென்றாள்.
அஷ்வின் முகத்தில் குறுஞ்சிரிப்பு. எப்படியும் கிளம்பி தான் வர போகிறாள் என்று தெரிந்துவிட்டது அவனுக்கு.
இதற்கு மேலும் நிச்சயம் ஸ்பூர்த்தி இங்கே இருக்க நினைக்க போவதில்லை. அவளின் மாமாவின் அழைப்பில் கிளம்பியிருக்க, ‘அப்ப நான்?’ என நினைத்தாலும் ‘நீ மட்டும் என்னவாம்?’ என அவனின் மனதே அவனை எக்களித்தது.
நினைத்ததை போல சல்வாரில் வந்திருந்தாள் ஸ்பூர்த்தி. ஆனாலும் முறைத்துக்கொண்டு அவன் பார்க்க,
“காபி ஆறிடுச்சா…” என சாவகாசமாக கேட்டவளை பிடித்து முதுகில் செல்லமாய் நான்கடி வைத்தான் அஷ்வின்.
“எவ்வளோ பேச்சு பேசி, என்னையும் ஒருவழியாக்கிட்டு இப்ப காபி ஆறிடுச்சாவாம்…” என்று கேட்க ஸ்பூர்த்தி புன்னகைத்தாள் மனதில் இப்போதும் அந்த சஞ்சலத்தை மறைத்துக்கொண்டு.
“அப்ப தோணலை. இப்ப தோணுது அங்க எல்லாரும் நம்மளை தேடுவாங்களேன்னு…” என்று சொல்லி அஷ்வினிடம் இன்னும் இரண்டு குட்டுக்களை வாங்கிக்கொண்டாள்.
“ஓகே, காபியை குடி. இப்ப கிளம்பினா வெளில தான் சாப்பிடனும். இங்க லன்ச் முடிச்சிட்டு கிளம்புவோம்…” என்று சொல்லவும் சரி என்று காபியை குடிக்க,
“எனக்கு இல்லையா பூரிக்குட்டி?…” என்று ஆரம்பித்தான் அஷ்வின்.
“அதான் குடிச்சிட்டீங்களே?…” என்றாலும் அவள் தர,
“ஹவ் ஸ்வீட்ல…” என்றவனின் பாராட்டலில் அவன் தோள் சாய்ந்தாள்.
வெட்கமோ, நாணமோ, ரசிப்போ எதுவுமற்ற ஒரு பாவனை. மொத்தமாய் தவிப்பு மட்டுமே அவளிடத்தில் அவன் சற்று முன் உணர்ந்தது.
“என்னடாம்மா? ஏன் இப்படி இருக்க?…” மீண்டும் கேட்டவன்,
“ஓகே, நானே உன் மூடை ஸ்பாயில் பண்ண வேண்டாம். வீட்டுக்கு பேசலாம் கொஞ்சம்…” என்று சொல்ல வீடியோகாலில் அழைத்தான் அனைவருக்கும்.
அமுதினியனில் தொடங்கி மலர், பல்லவன், மோனி என்று ஒருவட்டம் வந்துவிட்டவன் அடுத்து அதிரனின் வீட்டிற்கு அழைத்தான்.
அங்கேயும் அனைவரிடமும் வெகுநேரம் பேசிவிட்டு நந்தனுடன் இருந்த சேம்பியின் விளையாட்டுக்களை, சேட்டைகளை பார்த்து சிரித்தான்.
அவனின் ஒவ்வொரு பேச்சுக்களுக்கும், புன்னகைக்கும் மனது அதிர்ந்தது ஸ்பூர்த்திக்கு.
மகளின் முகத்தில் அதிரனுமே துணுக்குற என்னவோ என்று உள்ளம் பிசைந்தது அவனுக்கும்.
“ஹேய் என்ன ஸ்பூர்த்தி?…” என்று அவள் பார்வையில் அஷ்வின் திகைக்க,
“மாமா, இப்பவே ஸ்பூர்த்திக்கு உங்களை விட்டுட்டு எப்படி இருக்க போறோம்ன்னு தோணிடுச்சு போல. பாருங்க அழுது வடியறா…” நந்தன் கேலி பேச ஸ்பூர்த்தி மனது கிடுகிடுத்தது.
“நான் ஏன் மாமாவை விட்டுட்டு இருக்க போறேன்? என்னடா பேசற நீ? மாமா கூட தானே இருப்பேன். சும்மா இரு நந்து…” என்றாள் படபடவென்று.
“ஸ்பூர்த்தி?…” என ஆளாளுக்கு அவளின் பதட்டத்தில் என்னவோ என பதறிவிட அதற்கு மேல் அவளால் முகத்தை சாதாரணமாக வைக்க முடியவில்லை.
எழுந்து சென்று வெளியை வெறித்தபடி நின்றுவிட்டாள். வந்த அன்று மனதை சுண்டியிழுத்த எதையும் இப்போது அவள் உள்ளுணர்வு உள்ளே வர அனுமதிக்கவில்லை.
அதுவரை இருந்த சஞ்சலம் எல்லாம் கரும்புகையாக மாறியிருக்க மனதிற்குள் அத்தனை இருள்.
திசையறியாமல் என்னவென்று எதையோ பரிதவிப்புடன் துழாவியது அவளின் அக கண்கள்.
இன்று ஏன் இப்படி ஒரு தோற்றம்? மனது தானே உருவகப்படுத்துகிறதா? இல்லை எதையோ தனக்கு எச்சரிக்கிறதா? என்று யோசித்து யோசித்து வெறுத்து போனாள்.
வெளியே நின்றவளின் தோளில் அஷ்வின் கரம் படவும் கண்ணை மூடியபடி அவன் பக்கம் திரும்பி சாய்ந்துகொண்டாள்.
“என்னவோ பயமா இருக்கு மாமா. எப்பவும் இதெல்லாம் எனக்கு தோணினதே இல்லை…” என்றவள் தவிப்பு அஷ்வினுக்கும் தோன்ற அவளை ஆதரவாய் அணைத்தபடி உள்ளே வந்தான்.
“ஓகே, என்ன செய்யலாம். இங்க இருக்கலாமா? இருப்போம். அவ்வளோ தானே?…” என கேட்க அதற்கு மனதில்லை.
“தெரியலை மாமா. நாம ஊருக்கு போய்ருவோம். எல்லாரோட இருப்போம். நீங்க என் கூடவே இருக்கனும்…” என்று சொல்லியவளை என்ன சொல்லி தேற்ற என்று தெரியவில்லை.
யாரிடம் அழைத்து இதனை பேச என்று இருந்தவன் தனியே இருந்தால் இன்னும் எதையாவது நினைத்து கவலைப்படுவாளோ என்று கிளம்புவதே உசிதம் என முடிவெடுத்தான்.
“ஓகே, ஊருக்கு போய்டுவோம். இங்க வேண்டாம். சரியா?… அஷ்வின் அவள் கன்னம் தாங்கி சொல்லியவனின் இதழ்கள் ஸ்பூர்த்தியின் நெற்றியில் பதிய இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்.
ஸ்பூர்த்தியின் இந்த செயல்பாடுகள் எல்லாம் புதிதிலும் புதிது. இந்தளவிற்கு தடுமாறுபவள் கிடையாது.
என்னவோ அவளை படுத்துகிறது என்று மட்டும் அஷ்வினுக்கு விளங்க அந்த நேரம் அதிரன் அழைத்தான்.
“இன்னும் ரெண்டுநாள் அங்கே வேணா இருந்துட்டே வா சேம்ப்…” அதிரன் சொல்ல,
“சூர் மாமா…” என்று சிரித்தவனின் புன்னகையை அதிரன் அசையாமல் பார்த்தான்.
“மாமா, நீங்களும் ஒருமாதிரியாகிட்டீங்க. ஸ்பூர்த்தி பேசி பயம் காட்டிட்டா எல்லாரையும்…” என்று அஷ்வின் சிரிக்க,
“அதுதான் பயமே. இதுவரைக்கும் என் பொண்ணு இப்படியெல்லாம் சொன்னதே இல்லையே சேம்ப்…” என்ற அதிரன்,
“ஓகே, பத்திரம். ஸ்பூர்த்தியோட பத்திரமா வந்திரு சேம்ப்…” என அத்தனை முறை சொல்லிய அதிரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற அஷ்வினால் முடியவில்லை.
கொடைக்கானல் மலையிலிருந்து கிளம்பியவர்கள் மலையிறங்கும் முன்னர் விபத்தில் தூக்கி வீசப்பட இறுதியாய் ஸ்பூர்த்தி பார்த்தது அஷ்வினின் அசைவற்ற விழிகளை தான்.
எப்போதும் உயிரோட்டமான அஷ்வினின் விழிகளில் இறுதியாக நிராசையும், தவிப்பும் திறந்திருந்த அவனின் கண்மணிகளில் அப்படியே நின்றுவிட அதனை பார்த்தபடி மயங்கினாள் ஸ்பூர்த்தி.
மூடிய இமைகளுக்குள் அக கண்ணில் புன்னகையுடன் அவளை பார்த்தவன் அவளை நோக்கி கை நீட்டினான்.
“எழுந்து போ ஸ்பூர்த்தி. தைரியமா இருக்கனும். நம்ம குடும்பத்துல எல்லாரும் வெய்ட் பன்றாங்கடா. போ. போ…” என அவளை விரட்டியபடி பின்னோக்கி சென்றான்.
“போ சொல்றீங்க? மாமா, வா போவோம் சொல்லுங்க. என்னை கூட்டிட்டு போங்களேன். சேர்ந்து போவோம். ஏன் என்னைமட்டும் போ சொல்றீங்க மாமா? ப்ளீஸ், கிட்ட வாங்க…” என்ற அழைப்பை கேட்டும் அஷ்வின் அருகே வரவில்லை.
“மாமா, வந்திருங்க. ஏன் ஏன் போறீங்க? கையை பிடிங்க மாமா. பயமா இருக்கு. போகாதீங்க…” என்றவள் மனதின் கதறலை பார்த்தபடியே அவன் பின்னோக்கியே தான் சென்றான்.
மூடிய இமைகளில் இருந்து நீர் விடிய அஷ்வினை மனதால் தேடியபடி சுயநினைவிழந்தாள் ஸ்பூர்த்தி.