ஸ்பூர்த்தி கண் விழிக்கையில் தலையெல்லாம் பாரமாக இருக்க எங்கெங்கோ சுருக்கென்று முள் தைத்ததை போல் வலி கூடியது.
எங்கேயோ சில இடங்களில் எரிச்சலும், வேதனையும் அவளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க கண்ணீர் தன்னைப்போல வந்தது அந்த வலியில்.
“ம்மாஹ்…” காய்ந்த உதடுகளை பிரிக்கவே சிரமப்பட்டவள் முயன்று தீனமான குரலில் சத்தமிட,
“ஸ்பூர்த்திப்பா, அப்பாடா. ஸ்பூர்த்தி…” அதிரனின் பரிதவிக்கும் குரல் அவள் செவிகளில் எங்கோ ஓரிடத்தில் கேட்பதை போலிருக்க மனதின் பலத்தை ஒன்றுதிரட்டி கண்ணை சிமிட்டி பிரித்தாள்.
மீண்டும் சத்தம் வரவில்லை. பேசமுடியாமல் தொண்டையடைக்க திறந்த விழிகள் மீண்டும் மூடி மூடி திறந்து கலங்கலான காட்சிகளெல்லாம் சற்று தெளியும் வரை அவள் அசைந்தபடி கண்ணை பிரித்தாள்.
“ஸ்பூர்த்திப்பா, குட்டிம்மா. அப்பாடா. அப்பா பாருடா…” என்றவன் தழுதழுக்கும் குரலுக்கு பதில் சொல்ல முயன்று தோற்றவள் லேசாய் விசும்பியபடி அதிரனை பார்த்தவள் அவனன்றி வேறு யாரும் உள்ளனரா என்று தேடினாள்.
அதிரன் மட்டுமே அந்த அறையில் இருந்தான். ஸ்பூர்த்தி விழிகள் அஷ்வினை பற்றி கேட்க அலைபாய மீண்டும் ஒரு போராட்டம் கேட்கும் முன்.
கழுத்தெல்லாம் காயம். தொண்டையோடு இதன் வேதனை வேறு அவளை வார்த்தைகளை கோர்க்கவிடவில்லை.
“ப்பா…” என்ற பெண்ணின் கையை பிடித்துக்கொண்டவன்,
“ஒன்னுமில்லடாம்மா. சரியாகிடுச்சு. எல்லாம் சரியாகிடுச்சு ஸ்பூர்த்திப்பா. அப்பா இருக்கேன்ல…” என்று சொல்ல சொல்ல அவள் கண்ணீர் இன்னும் வழிந்தது.
கண்கள் கலங்கி அது அதிரனின் முகத்தை மறைக்க இமையை பிழிந்து நீரை வெளியேற்றி அவனை பார்க்க மீண்டும் பெருகியது.
“ப்பா, மாமா…” என வார்த்தையை சொல்லும் முன் இறந்து பிறந்தாள் பெண்.
“சேம்ப் நல்லா இருக்கான்….” என்று சொல்லியவனின் முகத்தில் சொல்லொண்ணா துயரம் மண்டிக்கிடக்க ஸ்பூர்த்தியால் அதனை கண்டுகொள்ள முடிந்தது.
“ப்பா, மாமா, மாமா…” என மீண்டும் திணறலுடன் சொல்லியவள் கண்கள் தாமாய் மூடிக்கொள்ள மயக்கத்திற்கு சென்றாள் ஸ்பூர்த்தி.
அதற்குள் மருத்துவர்கள் வந்துவிட உடனே ஸ்பூர்த்தியை பரிசோதித்தனர். அதிரன் பார்த்தபடியே நிற்க,
“சார் நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க ப்ளீஸ்…” என சொல்லவும் அவன் வெளியே வந்தான்.
சென்னையின் மிக புகழ்பெற்ற மருத்துவமனை அது. அந்த தளம் முழுவது இப்போது அவர்கள் வசமாகி இருந்தது.
அந்த அறையின் வெளியே வந்ததும் எதிரிருந்த இன்னொரு அறையிலிருந்து மேகா வந்தாள்.
“என்ன வெளில நின்னுட்டீங்க?…” என்று முகத்தை புடவை தலைப்பால் துடைத்துக்கொண்டு வந்து கேட்க,
“டாக்டர்ஸ் உள்ள பார்த்திட்டிருக்காங்க மேகா…”
“இப்பவா? என்னாச்சு? என்னாச்சு என் பொண்ணுக்கு?…” மேகா அறைக்குள் செல்ல போக அவளின் கை பிடித்து நிறுத்தினான்.
“ப்ளீஸ் மேகா, சரியாகிடும்….” என்று அவனுக்கும் சொல்லிக்கொள்வதை போல மனைவியை தேற்றினான்.
இருவரின் கண்ணீரும் நிற்காமல் வர அறையின் கதவு திறக்கப்படவும் வேகமாய் பார்த்தனர்.
“டாக்டர் என் பொண்ணு…” மேகா கேட்க,
“அவங்களுக்கு கான்ஷியஸ் திரும்பிருச்சு. இனி ஒன்னும் பிரச்சனை இல்லை. சீக்கிரம் ரெக்கவராகிருவாங்க….”
“நிஜமாவா? இனி என் பொண்ணுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?…” மீண்டும் மீண்டும் மேகா கேட்க,
“சூர். அவங்க ஆழ்ந்த மயக்கத்தில இருந்து மீளாதது தான் பிரச்சனையா இருந்தது. இனி நார்மலாகிடுவாங்க. காயமெல்லாம் ஆறட்டும். அதுவரை நல்ல ரெஸ்ட்ல இருக்கனும்…” என்ற மருத்துவர்,
“இனி இன்னும் கவனமா பார்த்துக்கோங்க…” என்றார்.
“இப்ப நீங்க போய் பார்க்கலாம். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவங்களா திரும்ப கண் திறக்கட்டும்….” என்று சொல்லிவிட்டு ஸ்பூர்த்தியை கவனித்துக்கொள்ளும் நர்ஸிடம் பேசிவிட்டு சென்றார்.
அதிரன், மேகாவுடன் உள்ளே வர மீண்டும் ஸ்பூர்த்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
மூச்சுக்காற்று சீரான வேகத்தில் இருக்க அவள் கிடந்த நிலையை தான் பெற்றவர்களால் பார்க்க முடியவில்லை.
“கண் முழிச்சதும் சேம்ப் எங்கன்னு தான் கேட்டா மேகா…” அதிரன் சொல்ல அமிழ்ந்திருந்த அழுகை மீண்டும் பொங்கியது.
“அதி…”
“நான் என்ன சொல்லுவேன் இவக்கிட்ட? என்ன பண்ண போறேன் மேகா?…” என்று அங்கேயே அமர்ந்து கண்ணீர் வடிக்க கண்களை திறக்கமுடியவில்லை என்றாலும் ஸ்பூர்த்தியின் மூடிய விழியிலிருந்து கண்ணீர் வந்தது.
“அதி அழாதீங்க. எங்க தைரியமே நீங்க தான். நீங்களே அழறீங்க?…” என்று தன் அழுகையை அடக்கியவள்,
“ஸ்பூர்த்திக்கு கேட்குது அதி. அவ அழறா…” என்றதும் உடனே கண்ணை துடைத்தவன்,
“அங்க என்ன பன்றாங்க?…” என்று அதிரன் மேகாவிடம் கேட்கும் பொழுதே கதவை திறந்துகொண்டு நந்தன், மோனிகா, பல்லவன் அனைவரும் வந்துவிட்டார்கள்.
“இப்பதான் டாக்டர் சொன்னாங்க. திரும்ப பேசினாளா ண்ணா?…” என மோனிகா கேட்க,
“என்னை கூப்பிட்டிருக்கலாம் தானேப்பா?…” என நந்தன்.
மருத்துவர் சொல்லிவிட்டு சென்றதையும், ஸ்பூர்த்தி பேசியதையும் சொல்ல அத்தனைபேரின் முகத்திலும் துயரம்.
“ஓகே நான் அங்க இருக்கேன். நீ பார்த்துக்கோ…” என்று அதிரன் எழுந்துகொள்ள மற்றவர்கள் ஸ்பூர்த்தியை பார்த்தபடி நின்றனர்.
எதிர் இருந்த அறையை திறந்துகொண்டு உள்ளே சென்றான் அதிரன். அந்த அறைக்குள் நுழைகையில் இப்போதும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
பத்துநாட்களாகிற்று. இன்னும் அந்த அதிர்விலிருந்து வெளிவர முடியவில்லை. இந்த நடுக்கமும் குறையவில்லை.
ஒவ்வொரு நொடியையும் கடக்கும் முன் செத்து பிழைக்கும் வேதனையை உணர்ந்துகொண்டிருந்தான்.
அங்கிருந்த இருக்கையில் அமரவும் தோன்றாமல் படுக்கையில் வெறும் கூடாய் கிடந்தவன் மீது பார்வையை பதித்தபடி நின்றான் அதிரன்.
தலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இத்தனை நாட்களாகியும் இன்னும் நினைவு திரும்பவில்லை.
தலையில் அறுவைசிகிச்சை என்ற பொழுதே அத்தனை உறுதியாய் சொல்லமுடியாது என்று சொல்லி தான் சிகிச்சை மேற்கொண்டனர்.
அப்படி ஒரு நிலையில் தான் அஷ்வினை அவர்கள் கண்டெடுத்து வந்ததும். உயிரில்லையோ என அஞ்சும் வகையில் தான் அவன் இருந்தான்.
“சேம்ப்…” என முனங்கியபடி அவன் விரலோடு தன் விரலை சேர்த்து அவன் அருகே அமர்ந்துகொண்டான் அதிரன்.
தன் பிள்ளைகளுக்கும் மேலாய் அவன் நேசத்துடன் கொண்டாடிவரும் ஒரு உற்ற உறவு.
“அதான் நீங்க இருக்கீங்களே மாமா…” என எப்போதும் தன்னை கொஞ்சிக்கொண்டு நிற்பவனை இந்த நிலையில் பார்க்க பார்க்க உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்தது.
“தப்பு பண்ணிட்டேன்டா. நீ கேட்டதும் சரின்னு சொல்லிருக்க கூடாது. வந்துருடா சேம்ப். மாமாவுக்கு ரொம்ப வலிக்குது. உன்னை இப்படி பார்க்கவே முடியலை. மூச்சுவிட முடியலைடா….”
“சேம்ப், என் பொண்ணுக்கு நான் என்னடா சொல்லுவேன்? உன்னை கேட்காளே. என்ன பதில் சொல்ல? இப்படி படுத்தற நீ? இதுக்காடா இவ்வளோ சந்தோஷமா அன்னைக்கு பேசின? முடியலைடா….”
இப்போதும் கூட அந்த கொடிய நாளை மறக்கவே முடியாதளவிற்கு நினைக்கையில் உடல் தூக்கிபோட்டது.
இருவரும் கொடைக்கானலில் இருந்து மலையிறங்கி அடிவாரத்தை நெருங்கிவிட்டனரா என கேட்க அழைக்க யாருக்கும் அழைப்பு செல்லவில்லை.
காரில் நான்குபேர் இருக்க யாருக்கும் தொடர்புகொள்ளமுடியவில்லை. அதிலேயே அத்தனை பதட்டம்.
தங்கியிருந்த இடத்தில் லோக்கல் ஆட்கள் தான் காவலுக்கு இருக்க அவர்களுக்கு அழைத்து பார்க்கும்படி சொல்லிவிட்டு தகவலுக்கு காத்திருக்க வந்ததோ விபத்து என்னும் தகவல் மட்டுமே.
“ஸார் பொண்ணு மட்டும் இருக்காங்க. கூட ரெண்டுபேர் கிடைச்சிருக்காங்க. உங்க மாப்பிள்ளையை கண்டுபிடிக்க முடியலை. பொண்ணையுமே ஒரு சரிவு பக்கத்துல தான் கண்டெடுத்தாங்க. அங்க இருந்து கீழே விழுந்திருக்கலாம் உங்க மருமகன்…” என்று சொல்லவும் உயிரே போனது.
“சேம்ப்…” என்று அசைவற்று நின்றுவிட்டான் அதிரன்.
வேறு யோசிக்க நேரமில்லை. பல்லவனுக்கு அழைத்து உடனே விஷயம் பகிரப்பட்டது.
அதற்குள் அங்கே என்ன நிலவரம் என்று கேட்டு கேட்டு உயிர்கூடு கொஞ்சம் கொஞ்சமாய் தீர்ந்துகொண்டிருந்தது.
உடனடியாக தனி விமானம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இரு குடும்பங்களும் கிளம்பி வந்துவிட அவர்கள் பார்த்தது மதுரை மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்பூர்த்தியை தான்.
சுயநினைவின்றி உடலெல்லாம் காயத்துடன் தலையில், கையில் என்று பெரும் அடிகள் வேறு.
யாரின் அழைப்பிற்கும் அவளால் பதில் தரமுடியவில்லை. குடும்பத்தினர் கண்ணீர் குரல் அவளை எட்டவே இல்லை.
காற்றோடு கலந்துவிட்டானோ என்பவனின் உருவத்தை மனதிற்குள் பிடித்து வைத்து அவனுடன் மன்றாடிக்கொண்டிருந்தவளுக்கு மண்ணுலகம் நினைவில்லாமலே போனது.
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஊடகங்கள் கூடிவிட ஸ்பூர்த்தியின் இருப்பை ஒரு செய்தியாக்கினால், அஷ்வினின் இன்மையை வேறொரு செய்தியாக்கி சொந்தங்களின் உணர்வுகளை கூறுபோட்டனர்.
அஷ்வினை தேடும் பணி தீவிரமாக அன்றைய நள்ளிரவில் காவல்துறையிடமிருந்து அழைப்பு.
மருத்தவமனையில் மற்றவர்களை இருக்கும்படி சொல்லிவிட்டு உடனடியாக திண்டுக்கலுக்கு விரைந்தனர் பல்லவனுடன், அதிரனும், நந்தனும்.
அங்கே மூட்டையாய் ஒரு குவியலை காண்பித்து அடையாளப்படுத்தும்படி சொல்லிய நொடி ஓவென்ற சத்தத்துடன் அங்கேயே மடங்கி கதறிவிட்டான் அதிரன்.
பல்லவன் நெஞ்சை பிடித்தபடி நிலைகுத்திய பார்வை மேலாக சொருக அப்படியே சரிந்துபோனான்.
“இது நிச்சயம் எங்க மாமாவா இருக்காது. ப்ளீஸ், இன்னும் நல்லா தேட சொல்லுங்க. கண்டிப்பா எங்க மாமாவுக்கு ஒன்னுமாகியிருக்காது…” என்ற நந்தனின் அழுகையில் கொஞ்சம் தன்னை தேற்றிய அதிரன் கண்ணை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவ்விடத்தை பார்த்தான்.
“எங்க இருக்க சேம்ப்? உடைஞ்சுட்டேன் டா. ப்ளீஸ் வந்திடுடா. என்கிட்ட. எங்க போன நீ?…” என்று அரற்றியபடி அந்த வானாந்தரத்தை வெறித்த பார்வையுடன் பார்வையிட,
“ஸார் நீங்க எதுக்கும் இந்த பாடியை…”
“நோ…” என்று சத்தமிட்ட அதிரன்,
“என் பையன் சொன்னமாதிரி தான். ப்ளீஸ், ப்ளீஸ் ஸார். கொஞ்சம் தேடுங்க….” என்று கெஞ்சலுடன் கண்ணீரோடு கைகூப்பி நின்றவனை காணவே அவர்களுக்கு அத்தனை வேதனையாய் இருந்தது.
மீண்டும் அந்த வார்த்தையை காதால் கேட்கமுடியவில்லை. பல்லவனை திரும்பி பார்க்க மயங்கியிருந்தவனின் நிலை மோசம் தான்.
“ப்பா…” நந்தன் அதிரனை தடுத்து,
“நான் பார்க்கறேன்…” என்று சொல்ல,
“இது சேம்ப் இல்லை நந்து. அப்பாவுக்கு தெரியும்டா…” என்று மகனின் கன்னத்தை தட்டியவன்,
“நானே பார்க்கறேன். நீ மாமாவை பாரு…” என்று சொல்ல அந்த உயிரற்ற உடல்குவியலின் உடுப்புகள் என்று ஒருசிலவற்றை காண்பிக்க பார்த்தவனுக்கு நெஞ்செல்லாம் பதறியது.
மனது ஒருபுறம் அது அஷ்வின் இல்லை என்று நிம்மதியை தந்தாலும், இந்த பிள்ளையின் பெற்றோர் தன்னை போல தானே கலங்கி நிற்பார்கள் என்று நினைக்கையில் துக்கம் அடைத்தது.
“இல்லை, இல்லை…” என்றவன் கையில் சிறு குருதி பிசுபிசுப்பு.
“நந்தா…” என்று தடுமாறியவனை பிடித்த மகன் பல்லவனை பார்க்க அதிரன் அவனிடம் ஓடினான்.
“சேம்ப் இல்லை பல்லவன். அவனுக்கு ஒன்னும் ஆகலை. இங்க எங்கையோ தான் இருக்கான், நிச்சயமா கிடைப்பான். தைரியமா இருங்க…” என்று சொல்லியவனுக்கு பதில் சொல்லமுடியாமல் பல்லவன் கண்ணீர்விட்டபடி அமர்ந்திருந்தான்.
மனதெல்லாம் ஏதேதோ எண்ணங்கள். யாரிடமும் பேசவில்லை. பேசக்கூடிய நிலைமையில் பல்லவனும் இல்லை.