இன்றுவரை ஊடகங்களுக்கு அது தீனியாக இருக்க கொஞ்சமும் அதன் தாக்கம் குறையவிடாமல் நித்தம் ஒரு செய்தியை ஒளிபரப்பியபடி தான் இருக்கின்றனர்.
உடலில் உயிர் மட்டுமே இருக்க மருத்துவ உபகரணங்கள் அஷ்வினின் உயிரை பிடித்துவைக்க பெரிதும் போராடிவருகின்றனர்.
“அவரால எங்களுக்கு ஒத்துழைக்க முடியலை. சப்கான்ஷியஸ் மைண்ட்ல ரொம்பவே போராடி வரார். ஆனா அவரோட மனபலத்துக்கு அகைன்ஸ்டா அவரோட பாடி கண்டிஷன் இருக்கு. அவரோட உடல் ஒத்துழைக்கமாட்டிக்குது, எங்களால முடிஞ்ச பெஸ்ட்டை நாங்க குடுக்கறோம். அதுக்கு மேல அந்த ஆண்டவன் செயல்….”
“உடல்நிலையில எந்தவித முன்னேற்றமும் இல்லை. கோமாவுக்கு போக தான் அதிக வாய்ப்பிருக்கு. அப்படி ஒன்னு நடந்திடாம இருக்கனும். யாராவது அவரோட பேசிக்கிட்டே இருங்க. நிச்சயம் அவர் எதுக்காகவாச்சும் ரியாக்ட் பண்ணுவார்…”
இப்படி அஷ்வின் இன்றுவரை அவர்களை கத்திமுனையிலேயே தான் நிறுத்தி வைத்திருந்தான்.
மகள் விழிக்கவே இத்தனை நாட்களாகி இருக்க அவனின் உடல்நிலைக்கு என்னவாகுமோ என பயந்து உறங்காமல் தான் காத்திருந்தனர்.
ஒருவர் மாற்றி ஒருவர் அஷ்வினின் அறையிலேயே இருக்க அவனிடம் பேசிக்கொண்டே தான் இருந்தனர்.
இரு குடும்பங்களும் இருவரின் உடல்நிலையில் பெரிதாய் துவண்டிருக்க இப்போது ஸ்பூர்த்தியின் விழிப்பு சற்று நம்பிக்கையை தந்தாலும் அவள் அஷ்வினை இந்த நிலையில் பார்த்தாள் என்னவாளோ என்றிருந்தது.
“இதுக்கா இதுக்கா நான் இன்னும் உயிரோட இருக்கேன்? என் பிள்ளைகளுக்கு இப்படி கல்யாணம் ரெண்டுபேரையும் தூக்கி குடுக்கவா இவ்வளோ சந்தோஷத்தையும் அந்த ஆண்டவன் அள்ளி குடுத்தான்?…” என்று நித்தமும் மலரின் அரற்றல் கேட்காத நாளில்லை.
பிள்ளைகள் எழுந்து குணமாகி வரும் வரை சுபத்ரா யாரிடமும் பேசவில்லை. மௌனவிரதம் இருந்தார்.
யாரிடமும் பேசாமல் மாற்றி மாற்றி இருவரையும் பார்த்துக்கொண்டே அவர் நாட்கள் கழிய தங்களை தாங்களே தேற்றி, தாங்களே துவண்டு, தாங்களே உடைந்து, தெளிந்து என்று ஒவ்வொருவரும் உயிரை கரைத்துக்கொண்டிருந்தனர்.
போதும் போதும். இந்த வேதனைகள் எல்லாம் போதும் என ஒவ்வொரு நாளும் விடிவதிலும், முடிவதிலும் வேண்டுதலுடன் தான் தொடர்ந்தது.
அன்று இரவு முழுவதும் அதிரன் அஷ்வினின் அறையில் இருக்க தொண்டை வற்ற அவனிடம் ஏதேதோ பேசியபடி கழிந்தது.
அதிகாலை வரை அவன் இருக்க பல்லவன் வந்துவிட்டான் அறைக்குள். உள்ளே வந்தவன் அதிரனின் தோளில் கைவைக்க,
“டைம் என்ன?…” என்றான் அதிரன்.
“நாலு மணியாகிருச்சு. நீங்க போங்க. நான் இருக்கேன்…” என பல்லவன் சொல்லவும் அதிரன் எழுந்துகொண்டான்.
விபத்து என்று அறிந்ததிலிருந்து பல்லவனிடம் பேச்சுக்கள் வெகுவாய் குறைந்துவிட்டது.
அதிரனுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்றே புரியவில்லை. தன்னைவிட அவனுக்கு எத்தனை வலிக்கும் என்று உணர்ந்து அமைதியாக இருந்தான்.
தான் அமர்ந்திருந்த இடத்தில் மகனை பார்த்தபடி பரிதாபமான தோற்றத்தில் பல்லவன் அமர்ந்திருக்க கண்ணீர் கசிந்தது அதிரனுக்கு.
வேறு எந்த வகையிலும் தன்னால் அவனுக்கு ஆறுதல் தரமுடியாதே? மனதெல்லாம் ரணப்பட்டு ரணப்பட்டு காயத்தின் சுவட்டில் மேலும் மேலும் கீறல்கள்.
கதவை திறந்துகொண்டு மகள் அறைக்கு வர மோனிகா தான் இருந்தாள் நந்தனுடன்.
இருவருமே ஆளுக்கொரு இருக்கையில் சாய்ந்திருக்க லேசாய் கண்ணயர்ந்திருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு மகளை திரும்பி பார்க்க ஸ்பூர்த்தி விழித்திருந்தாள்.
தன் கையில் போட்டிருந்த மோதிரத்தையே அசையா விழிகளுடன் வெறித்துக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
“ஸ்பூர்த்தி…” என சத்தமின்றி மகளை அழைத்தவன் நெருங்க அவன் வரும் அரவத்தை உணர்ந்தாலும் உயர்த்தியிருந்த கையை இறக்கவில்லை.
“ஸ்பூர்த்திப்பா, டேய்…” என்று அதிரன் மகளின் தலையை வருட,
“ப்பா…” என்றாள் அவள்.
“மாமா எங்கப்பா?…” மீண்டும் கேட்க மோனிகாவும், நந்தனும் விழித்துவிட்டனர்.
“மாமா எங்கப்பா? கூப்பிடுங்க ப்ளீஸ்…” என்று சொல்லியவள்,
“எனக்கு என்னவோலாம் தோணுது. ரொம்ப பயமா இருக்கு…” என சொல்ல நெஞ்சமெல்லாம் கனத்தது.
“ஸ்பூர்த்திம்மா, தூங்கிடுடா. அஷ்வின் இங்க தான் இருக்கான். இவ்வளோ நேரம் இருந்துட்டு இப்ப தான் தூங்க போனான்…” மோனிகா துக்கத்தை விழுங்கிக்கொண்டு அவளிடம் சொல்ல,
“மாமா என் பக்கத்துல இருந்தா ஏன் என்னை போன்னு சொல்றாங்க. நீங்கலாம் தேடுவீங்கன்னு என்னை தனியா உங்ககிட்ட போக சொல்றாங்க. ஆனா அவங்க எங்கையோ போறாங்க த்தை…” என்று திணறலுடன் சொல்லியவள்,
“கூப்பிடுங்க, ப்ளீஸ். ஒருவாட்டி பார்க்கனும். பார்க்கனும் நான்….” என்று சொல்லியவள் பேச்சு சற்று சத்தமாய் இருக்க,
“கூப்பிடுங்கன்னு சொல்றேன்ல. எனக்கு தலை வலிக்குது. கண்ணை மூடினா அங்க வராங்க மாமா. அப்பாவும் என் பக்கத்துல வரலை. கையை பிடிக்கலை. கூப்பிட்டா பின்னாடியே போறாங்க. எனக்கு மாமாவை பார்க்கனும். கூப்பிடுங்க…” என்று உடலை முறுக்கிக்கொண்டு கத்தினாள்.
அவள் சத்தம் கூட கூட தொண்டையில் இருந்த காயங்கள் எல்லாம் இன்னும் வலியை கொடுக்க,
“ப்பா வலிக்குதுப்பா. மாமாவை வர சொல்லுங்க. ஒருதடவை பார்த்திடறேன். என்னால முடியலைப்பா. எனக்கு என்னவோ பயமா இருக்கு. மாமா இருக்காங்களா? இருக்காங்களா நிஜமா?…” என்றவள் சத்தத்தில் மருத்துவர்கள் வந்துவிட உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கி மகளின் தலையை நெஞ்சில் பிடித்துக்கொண்டான்.
“ஸ்பூர்த்திப்பா, அஷ்வின் இப்ப வந்திருவான். கொஞ்சம் கேளுமா. ரிலாக்ஸ். ரிலாக்ஸ்…” என்று சொல்ல மருத்துவர்கள் வந்ததும் அவளுக்கு மருந்தை செலுத்திவிட்டு ஸ்பூர்த்தி அமைதியாகும் வரை உடன் இருந்தார்கள்.
“ஸார் நீங்க உண்மையை சொல்லிடலாம். கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. அவங்க ஹஸ்பன்ட்க்கு என்னாச்சோன்னு தான் இவ்வளோ வயலன்ட். இப்படியே விட்டா மெண்டலி அஃபெக்ட்டாக வாய்ப்பிருக்கு…” என்று சொல்ல,
“அவனை அந்த கோலத்துல பார்த்தா பொண்ணு தாங்கமாட்டா டாக்டர்…” என மோனிகா சொல்ல அதிரன் நொறுங்கி போனான் இதை கேட்கும்பொழுதே.
“இங்க பாருங்க மேம்…” என்று அவளுக்கு சொல்ல,
“நான் சொல்றேன் டாக்டர். என் பொண்ணுக்கிட்ட நான் பேசறேன்….” என்றான் அதிரன்.
“அப்பா…” நந்தன் தகப்பனின் அருகே வர,
“அவன் பிழைக்கமாட்டான்னு நாமளே நினைக்கிற மாதிரி இருக்கு நந்து ஸ்பூர்த்திக்கிட்ட இதை சொல்லாம மறைக்கிறது…” என்ற அதிரன்,
“அவளும் தெரிஞ்சுக்கட்டும். ஸ்பூர்த்தி வாய்ஸ் கேட்டா அஷ்வின் உடல்நிலையில மாற்றம் வரும். கண்டிப்பா வரும்டா…” என்று சொல்ல மோனிகா முகத்தை மூடியபடி அங்கேயே மடங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“இப்படி ரெண்டுபேரையும் இரக்கமில்லாம வதைக்கிறாரே அந்த ஆண்டவன்?…” என்று அழ நந்தன் அவளை சமாதானம் செய்ய அதிரன் மகளின் அருகே வந்து அமர்ந்துகொண்டான்.
“ஸ்பூர்த்திப்பா, அப்பா சொல்றது உனக்கு புரியும் தானேப்பா?…” என்றவன் விரல்களுள் தந்த அழுத்தம் மகளை எட்டியதை போல அவள் இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள்.
மீண்டும் ஒரு நாள் முழுவதும் உறக்கம் தான். மறுநாள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் வந்துவிட பாட்டிகள், தாத்தாக்கள் என்று அனைவரும் ஒன்றுமாற்றி ஒன்று வந்து பேசியிருந்துவிட்டு செல்ல பல்லவனை எதிர்பார்த்தாள் ஸ்பூர்த்தி.
அவனும் வந்தான், நின்றான். பார்த்தான். வேறு எதுவும் பேசவில்லை. பார்வையில் என்ன இருந்ததென என்று கூட ஸ்பூர்த்தியால் அனுமானிக்க முடியவில்லை.
மனது அஷ்வினை அத்தனை தேடிக்கொண்டிருக்க வந்தவர்களிடம் பேசும் முன் பல்லவனின் முகத்தை பார்த்தவள் தானாக அமைதியாகி போனாள்.
அவள் தாய்மாமனின் பார்வையே தன்னிடம் ‘சொன்னேனே கேட்டியா?’ என்பதை போல அவளை குத்தி கிழிக்க அஷ்வினை பார்க்கவேண்டும் என கேட்கும் தைரியமெல்லாம் வடிந்தது.
அதில் முழுமுற்றாய் அவள் உணர்ந்த ஒன்று. அவளின் ஒட்டுமொத்த தைரியம், துணிச்சல் எல்லாம் அஷ்வின் என்ற ஒருவனை கொண்டு என்பதை உயிரின் எல்லை வரை உணர்த்திய நொடிகள்.
தனக்கு தன் வாழ்வில் அவனில்லை என்றாலும் தன்னால் இருக்கமுடியும், வாழமுடியும் என்று எப்போதோ நினைத்திருந்தவள் இன்று அடுத்த நொடியை கடக்க அத்தனை துயரப்பட்டாள்.
அவன் இருக்கிறான். உயிருடன் இருக்கிறான். இங்கே கைக்கெட்டும் தூரத்தில் உயிரை பிடித்துக்கொண்டு இருக்கிறான்.
அது ஒன்றே போதுமானதாக இருக்க மனதில் தன்னவனை பார்க்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் பல்லவனை கண்டதும் தீயில் எரிந்து போக சருகாய் சரிந்துபோனாள் ஸ்பூர்த்தி.
கேட்கவே இல்லை. அதன் பின் வாய்விட்டு கேட்கவில்லை. ‘உன்னால என் பிள்ளை நிலைமையை பார்?’ என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் அவ்விடத்திலேயே மரித்துவிடுவோமே என்றிருந்தது ஸ்பூர்த்திக்கு.
எதுவும் கேட்காமல் அவள் இருந்தாலும் விழிகளில் தவிப்பு அத்தனைபேருக்கும் தெரிந்தது.
மேகா இதனை கண்டு மகளிடம் கேட்க வர அவள் இறுகிய முகமே அதற்கு தடையாய் இருந்தது.
“என்னப்பா? நான் கூட்டிட்டு போறேன்…” என அதிரன் சொல்ல,
“ம்ஹூம்…” வேறு எதுவும் பேசவில்லை.
ஒரு நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்து பெரும்பாலும் கண்ணை மூடிக்கொண்டு கடந்தாள்.
சுவாசத்தில் கலந்துவிட்டவனின் இருப்பை, உயிர்ப்பை கண்ணார கண்டுவிட அவள் ஆவி துடித்தது.
மனதை அடக்கியாளவும், மற்றவர்கள் முன் தெரியாமல் அழவும் முடியாமல் ஸ்பூர்த்தி இரவில் யாருமறியாமல் கண்ணீரில் கரைந்தாள் ஸ்பூர்த்தி.
“குட்டிம்மா…” என வந்தான் பல்லவன்.
கண்ணீர் கரை சுமந்த முகத்துடன் களையிழந்து போய் தன் மாமனை பார்த்தவள் அழுகையை அடக்க முடியாமல் முகத்தை திருப்ப,
“ஏன்டா மாமா உன்னை என்னடா சொல்ல போறேன்? நான் அவ்வளோ தள்ளி போய்ட்டேனாப்பா ஸ்பூர்த்திக்குட்டி?…” என கேட்டதுமே பெரும் கேவலுடன் அவனின் கையை பற்றிக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“என்னால தான் மாமா…” என்றவளின் கதறலை கேட்கமுடியவில்லை பல்லவனால்.
“இல்லடா, எவனோ ஒருத்தன் பேடித்தனமா உன்னை பார்த்து பயந்து செஞ்ச வேலை இது. இதுக்கு நீ காரணமாடா? மாமா இன்னுமாடா முட்டாள்? என்னை ஏன்டா இப்படி நினைக்கிற நீ?…” என்று சொல்ல இருவரின் கண்ணீரில் அங்கிருந்த மேகாவும் கலங்கி நிற்க.
“என் வரும்மா பொண்ணுடா நீ. என் பொண்ணுடா. மாமா எப்பவோ தப்பா நினைச்சேன் தான். இப்ப உன்னை இப்படி கஷ்டப்படுத்த நினைப்பேனா? என்னால உன்கிட்ட அப்ப பேச முடியலை குட்டிம்மா. ஸாரி, ஸாரிடா. மாமா தப்பு…” என்று சொல்ல மேகாவும் ஒருபக்கம் வந்து நிற்க இருவரையும் அணைத்து நின்றான் பல்லவன்.
“நீ வா அஷ்வினை வந்து பாரு…” என்று சொல்ல,
“நான் எப்படி?…” ஸ்பூர்த்தி மறுக்க,
“நர்ஸ்…” என்றான் சத்தமாய் பல்லவன்.
“ட்ரிப்ஸ் கொஞ்ச நேரம் க்ளோஸ் பண்ணலாமா? என் பையன் ரூம்க்கு போகனும்…” என கேட்க,
அங்கே அமர்ந்திருந்த அதிரன் இவர்களை கண்டு திகைத்து நின்றுவிட ஸ்பூர்த்தியின் விழிகள் நிலைகுத்திவிட்டன அஷ்வின் இருந்த இருப்பை பார்த்ததும்.
“மாமா…” என்றவளின் அழைப்பு கிடையாய் கிடந்தவன் காதுமடலை ஸ்பரிசித்தது.
“மாமா என்னை பாருங்களேன்…” என்றவள் அழைப்பு அவனை எட்டவே இல்லை.
நிராசையுடன், பரிதவிப்பும், ஏக்கமுமாய் உயிரெல்லாம் கூச்சலிட மீண்டும் அழைத்தாள்.
பார்க்கவே மாட்டானா? விழித்துவிடமாட்டானா? என்பதை போல இருக்க அவனை மீண்டும் மீண்டும் அழைத்தவள் குரல் குழற ஸ்பூர்த்தி மீண்டும் மயங்கியிருந்தாள் பல்லவன் கைகளில்.