மேலும் பத்துநாட்கள் சென்ற வேகம் தெரியவில்லை. அஷ்வின் இன்னும் மருத்துவமனையில் தான் வாசம்.
லேசாக உடல்நிலையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லியது.
ஆனால் அவனிடம் அசைவுகள் என்பது எதுவுமில்லை. முன்பை விட நம்பிக்கை வந்திருந்தது மீண்டுவிடுவான் என்று.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் எந்தவித நம்பிக்கையும் ஸ்பூர்த்திக்கு இல்லை.
முழுதாய் எழுந்தமர்ந்திருந்தாள் ஸ்பூர்த்தி. தானே ஸ்டிக் வைத்து நடக்க முடிந்தது. காலின் காயங்கள் இன்னும் குணமாகவில்லை.
மனதின் பலம் அவளை வீறுகொண்டு எழ வைத்திருந்தது. தான் எழுந்தாள் தான் அஷ்வினை பார்க்கமுடியும் என்ற ஒரு காரணமே போதுமானதாக இருந்தது அவள் மீண்டு வர.
ஆனால் அதுவே அவளை குற்றுயிராக்கி கொண்டிருந்தது. தானிருந்து அவன் இல்லாத நொடிகள் அவளின் உயிரை அறுத்துக்கொண்டிருந்தது.
உண்ண மறுக்காதவள் உறங்க மட்டும் அத்தனை பயந்தாள். கண்ணை மூடினால் விழிகளுக்குள் வந்து தன்னிடம் உரையாடுபவனை விரட்டிக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
“என்ன குடுக்கறீங்க எனக்கு? என்னோட டேப்லேட்ஸ் கூட ஸ்லீப்பிங் டோஸ் ஏன் குடுக்கறீங்க?…” என கத்தி தீர்த்தாள் வீட்டினரிடமும் மருத்துவர்களிடமும்.
“தூங்கினா தான் ஸ்பூர்த்திப்பா முழுசா குணமாக முடியும். தூக்கமில்லைன்னா என்னாகறது டா?…” அதிரன் மகளிடம் கெஞ்சவே செய்தான்.
“ஏன் புரியமாட்டிக்குது உங்களுக்கு? இங்க படுத்திருக்கறவன் நான் தூங்கிட்டா மட்டும் என் கிட்ட வரான். என்னை எழுந்து போ சொல்றான். தனியா பழகுன்னு சொல்றான். (Alprazolam) என்னால சும்மா கூட கண்ணை மூட முடியலை. டார்ச்சர் பன்றான். செத்துடட்டுமா?…”
அவளின் அலறல் மருத்துவமனை அறையில் ஒவ்வொருவரின் காதிலும் இடியாய் இறங்கியது.
“இவ்வளோ நாளாச்சு. கொஞ்சமாவது ரியாக்ட் பண்ணனும். எதுவுமில்லாம மனசுக்குள்ள வந்து அந்த பிம்பம் என்னை ரொம்பவே பயமுறுத்துதுப்பா….” என்றவள்,
“ம்மா, என்னால முடியலை. என்னை ரொம்பவே போராட வைக்கிறாங்க. எவ்வளோ தான் நானும் பார்க்கறது. சொல்லுங்கம்மா. எனக்கு தூங்க வேண்டாம். நானாவே தூங்கினா தூங்கிக்கறேன். இப்படி தூங்க வைக்காதீங்க…” என்று மேகாவின் மடியில் படுத்து அரற்றுபவளை தேற்ற முடியாமல் அத்தனைபேரும் தேம்பினார்.
ஆனாலும் மருந்துகள் கொடுத்தவண்ணம் தான் இருந்தனர். அதில் மருத்துவர்கள் பின்வாங்கவே இல்லை.
அத்தனை மருந்தின் வீரியத்திலும் கூட ஸ்பூர்த்தி உறக்கத்தை விரட்ட போராடினாள்.
தூக்கம் வந்துவிட்டால் கூட அதற்குள் அவள் அஷ்வினிடம் பேச முயல்வதும், கண்விழிக்க போராடுவதுமாய் பார்த்தவர்கள் நெஞ்சை பிசைய செய்தது அவள் படும் அவஸ்தையை.
“இப்படியே போனா என் ரெண்டு பிள்ளைங்களையும் இழந்துருவேன் போல அதி?…” என்ற மேகாவை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.
“பிழைத்து வரும் பிராப்தம் இருந்தால் யாராலும் தடுக்க முடியாது. அதுக்குன்னு இருக்கறவங்களும் சரியில்லாம போயிட கூடாது. நீயே இப்படி இருந்தா பிள்ளையை யார் பார்க்க?…” என மோனிகா தாங்கிக்கொண்டாள்.
அஷ்வின் படுக்கையில் இருந்தான். ஸ்பூர்த்தி எழுந்திருந்தாள். அதுமட்டுமே இருவரிடையே இருந்த வித்தியாசம்.
பெரும்பாலும் ஸ்பூர்த்தி அஷ்வினின் அறையில் தான். மற்றவர்கள் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் ஸ்பூர்த்தி ஒருவார்த்தை கூட பேசமாட்டாள்.
அவனின் கையை பிடித்தபடி விரல்களை வருடியபடி ஏக்கமும், தவிப்புமான பார்வையும் கண்ணில் கசியும் நீருமாய் கண்சிமிட்டாமல் விழித்தே இருந்து நேரத்தை கடத்தினாள்.
பொழுதுகள் அவனுடனே விடிந்து அவனுடனே முடிந்து கொண்டிருந்தது. இப்படி ஒவ்வொருவரையும் துக்கத்தில் தள்ளியிருந்தவனிடம் முதல் அசைவு.
வழக்கம் போல ஸ்பூர்த்தி அஷ்வின் விரலை பிடித்தபடி அமர்ந்திருக்க நர்ஸ் வந்து அவனை மானிட்டர் செய்துவிட்டு செல்லும் தருவாயில் மூடிய விழியில் இமையோரம் ஒரு துடிப்பு.
கனவோ என்பதை போல ஸ்பூர்த்தி கண்சிமிட்டி பார்க்க இல்லை, இல்லை. இது நிஜம்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்த அந்த நிகழ்வு நிகழ்ந்துவிட்டது. அசையாமல் அவனை பார்த்தபடி அப்படியே சமைந்துபோனாள்.
“மாமா…” என்றவளின் சத்தம் கூட வெறும் காற்றாய் தான் வெளிவந்தது.
மொத்த ரத்தமும் உச்சந்தலையில் பாயும் உணர்வு. உள்ளங்கால்கள் சில்லிட்டுவிட மீண்டும் அசைக்கிறானா? கண் திறப்பானா? என உயிரை உள்ளங்கையில் பிடித்தபடி அவனையே பார்த்திருந்தாள்.
அவள் உள்ளங்கைக்குள் அவள் உயிரின் அசைவு. உண்மை தான். கனவல்ல. கனவல்ல பெண்ணே என்பதை போல அவள் இதயப்பகுதியில் பிடித்திருந்த அவனின் விரலின் அசைவு.
“நர்ஸ், டாக்டர்…” என்றவளுக்கு மூச்சுவிடவே முடியவில்லை.
சத்தமாய் அழைக்க முயன்றவள் வார்த்தைகளின் ஓசை தொண்டையில் சிக்கிக்கொள்ள ‘யாராவது வாங்களேன்’ என்று மனதிற்குள் தான் ஓலமிட முடிந்தது.
மீண்டும் மீண்டும் விரலில் அசைவு. அஷ்வின் உயிர் பெற்றான். உணர்வை பெற்றான். ஸ்பூர்த்திக்கு உயிர்ப்பூட்டினான்.
“ம்மா, ப்பா, வாங்களேன். ஏன் யாருமே வரலை?…” இதழசைந்தது. சத்தம் செல்லவில்லை.
ஸ்பூர்த்திக்கு எழுந்து செல்லமுடியாமல் கால்கள் வேரோடி போயின. எங்கே அழுத்தி பிடித்தால் அவனின் விரலசைவுகள் வலிக்க பெறுமோ என மென்மையாய் பிடித்திருந்ததில் அவன் விரலில் இன்னும் சில நெகிழ்வுகள்.
“மாமா மாமா…” என மீண்டும் உயிரால் அழைக்க இமைகளுக்குள் இன்னும் சுழன்றது அவனின் கருவிழிகள்.
“ப்ளீஸ், முழிச்சுக்கோங்க. முழிச்சு பாருங்க. ஒரு தடவை. ப்ளீஸ் மாமா. பார்த்திடுங்க…” என்றவள் கதறல் சத்தம் கூட அவனை எட்டவில்லை.
அவளின் காதுக்கே கேட்கவில்லை. ஆனால் பேசினாள். சத்தமின்றி பேசிக்கொண்டே இருந்தாள் ஸ்பூர்த்தி.
எங்கே யாரும் வரும் முன் அஷ்வின் கண்விழிக்கும் முன் தன் இதயத்துடிப்பு நின்றுவிடுமோ என்னும் வகையில் தான் இருந்தது அவள் நிலை.
கண் திறக்கவே அத்தனை சிரமப்படும் அவனின் போராட்டத்தை கண்கூடாக பார்த்தவள் உள்ளம் அலறியது.
தொண்டையெல்லாம் ஏறி இறங்க ஒரு உயிர் போராட்டம். எல்லாவற்றையும் உதறிவிட்டு உறவுகளோடு சேர்ந்துவிட எழ துடிக்கும் ஆண்மகனின் இறுதி போராட்டம் போலிருந்தது.
“ஐயோ…” என்றவள் அழுகை கண்ணீர் எல்லாம் தொண்டையை தாண்டவில்லை.
குரல்வளையை யாரோ இறுக்கி பிழியும் வலியும், அவனின் வேதனையை காண பொறுக்காத வேதனையும் அவள் உயிரை குடிக்க,
“ப்பா…” என்றாள் சத்தமாக.
மனதும், உணர்வும் கொண்டவனை போல பெற்றவனையும் அடையுமே. மகளின் அழைப்பு எட்டியதை போல வந்தான் அதிரன்.
இருவருக்கும் தனிமை கொடுத்து முடிந்தளவு அஷ்வினுடன் ஸ்பூர்த்தி இருக்கும் வேளைகளில் அவள் மனம் விட்டு பேசட்டும் என யாரும் தொந்தரவு செய்வதில்லை.
அன்றும் அப்படியே இருக்க என்னவோ உள்ளுணர்வு அவனை செலுத்த அதிரன் எழுந்து சென்ற வேகத்தில் என்னவோ என்று மற்றவர்களும் வெளியிலிருந்து அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தனர்.
சத்தமில்லாத ஒரு கேவல் ஸ்பூர்த்தி உடல்மொழியில் தெரிய பதறி ஓடிவரவும் தான் அவள் பார்வை அஷ்வினிடம் இருப்பதும், அவனின் விழியசைவும் மற்றவர்களும் கண்டது.
“ஸ்பூர்த்திப்பா…” என்றவனின் முகத்தை பார்க்காமல் ஒரு விரலை கொண்டு அஷ்வினை காண்பித்தவளின் பேச்சற்ற தவிப்பும், விசும்பலும் காண சகிக்கவில்லை யாருக்கும்.
“ஸ்பூர்த்தி ஸ்பூர்த்தி…” என்று அவள் முதுகை தடவி கொடுத்து தலையை பிடித்து என சமாதானம் செய்ய முயன்றனர்.
ஒருபக்கம் அத்தனை சந்தோஷம். அஷ்வினின் உடல்நிலை முன்னேற்றத்துடன். இதோ அவன் விழிக்க முயன்றது.
இன்னொருபக்கம் மூச்சுவிடவே சிரமப்படுவதை போல பேசமுடியாமல் ஸ்பூர்த்தி திணற பார்க்க முடியவில்லை.
அதற்குள் நந்தன் மருத்துவர்களை அழைத்து வந்துவிட உடனே பரிசோதிக்க லேசாய் உடலிலும் அசைவு அஷ்வினிடம்.
“குட்டிம்மா, மூச்சுவிடுடா. அஷ்வின் முழிச்சிட்டான். இனி பயமில்லை. குட்டிம்மா இங்க பாரு…” பல்லவனும் மோனியும் அவளை அசைக்க முற்பட இழுத்து மூச்சுவிட முயன்றவளின் நாடித்துடிப்பு குறைந்தது.
“டாக்டர் அவங்களுக்கு பாருங்க. பல்ஸ் செக் பண்ணுங்க…” என்று இன்னொரு மருத்தவ பெண்மணியிடம் ஸ்பூர்த்தியை கவனிக்கும்படி கூறி அஷ்வினிடம் கவனம் வைத்தார்.
பெண் மருத்துவர் ஸ்பூர்த்திக்கு பல்ஸ், பிபி செக் செய்து ஒரு ஊசியை போட்டு அவளை ஆசுவாசப்படுத்த முயன்றனர்.
“நத்திங். நத்திங் ரிலாக்ஸ்…” என்று சொல்லி அவளை இயல்புநிலைக்கு திரும்ப செய்ய ஸ்பூர்த்தி அஷ்வினிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தாள் மனதால், விழியால், உயிரால்.
இதோ அடுத்த நிகழ்வு. உயிர் திரும்பியது அவர்கள் குடும்பத்திற்கு. அஷ்வினின் இமை இழைகள் பிண்ணியிருக்க அது ஒன்றைவிட்டு ஒன்றை பிரிந்து கழன்றது.
மெல்ல விழி மலர்ந்தவன் பார்வை மீண்டும் மூடி திறக்க அத்தனை பேரும் அந்நிகழ்வை சப்தமின்றி கவனித்தனர்.
“மாமா…” என்றவள் சுவாசகாற்று அவன் நுரையீரலை சரணடைய மலர்ந்திருந்த கருவிழிகள் சுழன்றது.