அசைத்ததில் தலையில் ஏற்பட்ட காயமும், அறுவைசிகிச்சையின் காயமும் அவனை தீண்டியதன் அடையாளமாய் விழிகளை சுருக்கினான்.
“வலிக்குதுப்பா மாமாக்கு…” என்றவள் குரல் மெல்லிய ராகமாய் அவனை அடைய சுழன்ற விழிகள் அவள் குரல் திசைக்கு ஏற்ப திரும்ப,
“பேசுங்க. கூப்பிடுங்க…” என்று மருத்துவர் மற்றவர்களுக்கு சொல்ல பேசும் நிலையில் அங்கே யாருமில்லை.
அப்படி ஒரு உணர்ச்சி ததும்பல். வார்த்தைகளின்றி சந்தோஷ கண்ணீருடன் அவனை பார்த்தவர்களுக்கு பேசும் திராணி இல்லை.
ஒவ்வொருவராய் பார்த்தவன் பார்வை ஸ்பூர்த்தியை தேடி தவித்து கீழே தாழ்ந்து அவளை தீண்ட சிலிர்த்தாள் அந்நொடி.
“மாமா…” என்றவளின் கண்ணீருடனான உச்சரிப்பை உணர்ந்து கொண்டவனின் விழிகளும் நிறைய பொங்கிய விழி நீர் இருபக்கமும் வடிந்தது.
பேச முயன்றான். எழ முயன்றான். அருகே அழைக்க முயன்றான். தொட்டு தழுவ முயன்றான்.
எதற்கும் வழிவகை இல்லை. உதட்டை பிரிக்க முடியவில்லை. அவளை அருகே இழுக்க முடியவில்லை. கைகளுக்குள் அடக்க முடியவில்லை.
‘அதான் வந்திட்டேன்ல, ஏன் அழற?’ என்று கண்டித்து அவளை அதட்டி கரங்களுக்குள் இறுக்க முடியவில்லை.
குறைந்தபட்சம் அவள் விழிநீரை துடைத்து தோள் சாய்த்துக்கொள்ள முடியவில்லை.
அதுவே இயலாமையால் அஷ்வினின் விழியில் நீரை பெருக செய்ய இன்னும் இன்னும் வழிந்தது.
“அழாதீங்க ப்ளீஸ்…” என்றவள் பொருள் அவனுக்குள் நுழைய அவனால் இந்த உணர்வை தவிர வேறு எதையும் காட்டமுடியவில்லையே.
அவள் கைகளுக்குள் இன்னும் அவனின் கரம் இருக்க மெல்ல அதனை அசைத்து அவளை ஆற்றுப்படுத்த நினைத்த நொடி மீண்டும் அப்படியே விழிகள் சொருகியது.
“ஒன்னும் பயப்பட வேண்டாம். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க….” என்று அவர்களை வெளியேற்றிவிட்டு மேலும் பரிசோதனையை மேற்கொண்டனர்.
வெளியே வந்தமர்ந்தவள் கைகளை அப்படியே வைத்திருக்க அவளை பார்க்கவே அத்தனை வருத்தமாய் இருந்தது.
“எல்லாம் சரியாகிடும் டா. எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்று ஒவ்வொருவரும் அவளை தான் தேற்றினார்.
தலையசைத்தவள் முகத்தில் சிறு வெளிச்சம். இது போதும். இது ஒன்றே போதும் என்று அத்தனை நன்றிகளை சொன்னாள் காப்பாற்றி தந்தவர்களுக்கு எல்லாம்.
இத்தனை தூரம் தன்னை அசையவிடாமல் செயலற்று நிற்கவைத்துவிட்டானே என்று மனதிற்குள் அஷ்வினை திட்டி, கொஞ்சி, அடித்து என பாடாய் படுத்திக்கொண்டிருந்தாள்.
‘எழுந்து வரட்டும் இருக்கு, பேசிக்கறேன். எவ்வளோ கஷ்டப்படுத்திட்டாங்க? முழிச்சு பார்க்க இவ்வளோ நாளா? உங்களோட நான் பேசவே மாட்டேன். சண்டை மாமா’ என்ற பிதற்றல்கள் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது.
இதழ்வரியில் சின்னதாய் ஒரு சிரிப்பு. கண்ணீருடன், தவிப்புடன், பெருமூச்சுடன் என்று அவளின் புன்னகை அங்கே கொஞ்சம் விஸ்தாரமாய் ஆட்சி புரிய நினைத்தது.
‘ஹவ் ஸ்வீட், கேட்பீங்க இல்ல. என்ன பன்றேன் பாருங்க. இவ்வளோ நாள் பேசாம, சிரிக்காம இருந்ததுக்கு வாய்லையே நாலு போடறேன். அந்த மீசையை பிடிச்சு ஒன்னன்னா இழுத்து வலிக்க வைக்கறேன்’ என்று அவள் எண்ணங்கள் எல்லாம் எங்கெங்கோ சென்றது.
கிட்டத்தட்ட ஒருமாதத்தை நெருங்கியிருந்தது மருத்துவமனை வாசம். அஷ்வின் கண் திறக்கும் முன் அத்தனைபேரும் பாதி உயிராய் மாறியிருந்தனர்.
மீண்டும் மருத்துவர் வந்து பேசும் வரை வெளியே காத்திருந்த ஒருவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை.
கையை கட்டியபடி அதிரன் அறை வாசலை பார்த்திருக்க பல்லவன் எட்டி பார்ப்பதும், தனியே நடப்பதுமாய் இருந்தான்.
தேவராஜ், அமுதினியன், செல்வம் என்று ஒருபக்கம் அமர்ந்திருக்க சுபத்ரா, மலர் இன்னொருபக்கம்.
நந்தன் மேகாவோடு அமர்ந்திருந்தான். அருகே மோனிகாவும், ஸ்பூர்த்தியும் இருந்தனர்.
கதவு திறக்கப்பட்டு முதலில் நர்ஸ் வெளியேற அத்தனைபேரின் உடல்மொழியும், கவனமும் அங்கே குவிந்தது.
“டாக்டர் சேம்ப் எப்படி இருக்கான்?…” அதிரன் வர,
“அஷ்வின் இப்ப நார்மல் தானே?…” என்றான் பல்லவன்.
“எஸ், நார்மல் தான்…” என்ற மருத்துவர், அதிரனையும், பல்லவனையும் பார்த்து,
“என்னோட ரூம்க்கு வாங்க. பேசலாம்…” என்று சொல்லி கிளம்ப,
“என்னன்னு இங்க சொல்லுங்க டாக்டர். நான் தெரிஞ்சுக்கனும்…” என்றாள் ஸ்பூர்த்தி.
“நந்து பார்த்துக்கோ…” என மகனிடம் சொல்லிவிட்டு மூவருமாக செல்ல தேவராஜும் சேர்ந்துகொண்டார்.
நால்வரும் உள்ளே வரவும் ஸ்பூர்த்தியை அமர வைத்து தாங்களும் அமர மருத்துவர் புன்னகைத்தார்.
“நிஜமாவே பயப்பட ஒன்னும் இல்லைம்மா. இது மேஜர் ஆப்பரேஷன். இதனால சில மாற்றங்கள் இருக்கலாம். அதை பேசத்தான் இவங்களை வர சொன்னேன்…” என்றார் அவர் ஸ்பூர்த்தியிடம்.
“அதை நானும் தெரிஞ்சுக்கறேன் டாக்டர்…” என்று சொல்லியவள் முகத்தில் அத்தனை தெளிவு.
“ஓகே, உங்களுக்கே தெரியும் தலையில அடிபட்டவங்களுக்கு என்னென்ன மாதிரி பிரச்சனைகள் வர கூடும்ன்னு. ஓரளவு ஜெனரலா கேள்விப்பட்டிருப்பீங்க…”
“அஷ்வின் கண் விழிக்கத்தான் இத்தனை போராட்டமும். இப்ப அதுவே நடந்திருச்சு. டூ பி பிராங். இதை நாங்க யாருக்கும் சொல்லமாட்டோம். ஆனா சொல்றோம். அஷ்வின் இந்தளவு மீண்டு வந்தது மெடிக்கல் மிராக்கிள் தான்…”
“தலையில அடிபட்டதோட மரத்தோட பட்டைகள் சொருகி இருந்தது. அவ்வளவு காயம். அதான் ஆப்பரேஷன் பண்ணும் போதே பிஃப்டி பர்சன்ட்ன்னு மறைக்காம சொன்னோம். எங்களோட முயற்சி வீண் போகலை. உங்க வேண்டுதலும்…”
“அஷ்வின் முழுசா குனமாகிட்டார்ன்னு சொல்லமுடியாது. ஆப்பரேஷன் மேஜர். முதல்ல அவரோட மெமரி எந்தளவு இருக்குன்றது முக்கியம். ஆனா அப்படி எதுவும் லாஸ் இல்லைன்னு நினைக்கறேன்….”
“எப்படி சொல்றீங்க டாக்டர்?…” தேவராஜ் கேட்க,
“எஸ், உங்க எல்லாரையும் அவரால அடையாளம் கண்டுக்க முடிஞ்சது. அது அவர் முகபாவனைகள் வச்சே புரிஞ்சது. ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் போதும்ன்னு சொல்லமுடியாது. திரும்ப மயக்கம் தெளியட்டும்…” என்ற மருத்துவர்,
“அப்படி எதுவுமாகாம இருந்தா சந்தோஷம். அதுக்கான சான்ஸ் நிறையவே இருக்கு. பார்க்கலாம். எதுவா இருந்தாலும் உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிடலாம்ன்னு தான் கூப்பிட்டேன்….” என்றார் அவர்.
“இன்னைக்கே கூட வரலாம். இல்லை இன்னும் ரெண்டுநாள் ஆகலாம். இப்பதான் அவர் உடல் சிகிச்சையை முழுசா ஏத்துக்க ஆரம்பிச்சிருக்கு. இனி இன்னும் கவனமா அவரை பார்த்துக்கனும். மெண்டல் ஸ்ட்ரெஸ் மட்டும் குடுத்திட கூடாது…” என்று சொல்ல ஸ்பூர்த்தி முகம் வெளிறி இருந்தது.
“என்னம்மா, ஏன் டல்லாகிட்டீங்க? நம்பிக்கையை தளர விடாதீங்க. அதுதான் உங்க ஹஸ்பண்டை மீட்டு கொண்டு வந்திருக்கு. இதுவும் சரியாகிடும்ன்னு நம்புங்க. முதல்ல நீங்க இன்னும் தைரியமா இருக்கனும்…” என்றார்.
அவரின் எச்சரிப்பு எல்லாம் ஸ்பூர்த்தியை இன்னும் சற்று கலவரப்படுத்துவதை போலிருந்தது.
ஆனாலும் இதை விட பெரிய வேதனை என்ன வந்துவிட போகிறது என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் இன்னும் என்னவென்றாலும் தாங்கும் வலிமையை பெற முயன்றாள் தன் நேசம் கொண்ட இதயத்திடம்.
உள்ளுணர்வு. அதனை அறவே வெறுத்த தருணம் அது. முன்பெல்லாம் அவள் உள்ளுணர்வு மெய்யாகும் வண்ணம் அமையும் நிகழ்வுகள் அவளை பெருமிதம் கொள்ள செய்பவையாகவே இருந்தது.
ஆனால் அஷ்வின் விஷயத்தில் நிகழ்ந்துவிட, இனி நிகழவிருக்க போவதை அவள் உள்ளுணர்வு எடுத்துரைக்க மொத்தமாய் சுருண்டு போனாள்.
அஷ்வின் இருந்த அறைக்குள் நுழைந்தவளின் மனது அவனை கண்டதும் தாளம் தப்பி துடித்தது.
“மறக்கமாட்டீங்க தானே மாமா?…” என்று மனதோடு மன்றாடியவளின் எண்ணங்கள் அவனிடம் நுழைய மூச்சை இழுத்து சுவாசித்தான் அஷ்வின்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அஷ்வினிடம் மீண்டும் ஒரு கண்விழிப்பு.
இப்படியே அந்த வாரம் முழுவதும் விழிப்பதும், பார்ப்பதும், பின் ஆழ்ந்த உறக்கதிற்கு செல்வதுமாய் இருந்தான் அஷ்வின்.
இப்போது சற்று முன்னேற்றமாய் என்னவோ பேச முயன்று இதழ்களை அசைக்க, கையை அசைக்க என்று அவனிடம் மேலும் முன்னேற்றம்.
மெலிதான புன்னகை கூட மற்றவர்களை கண்டதும் எழுந்தது. கண்களால் ஆற்றுப்படுத்தினான் தன் உறவுகளை.