“ப்பா…” லேசாய் சிரிப்போடு அழைத்துவிட பல்லவனிடம் அப்படி ஒரு அழுகை.
“அப்பா தான். டேய் எங்களை அழ வச்சிட்டு சிரிக்கிற நீ?…” என்று சொல்ல அதற்குள் மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு பேசும்படி சொல்லிவிட்டு தள்ளி நின்றனர்.
மேகா, மோனிகா என்று அனைவரும் வந்துவிட்டனர். ஸ்பூர்த்தி அப்போது தான் பாத்ரூம் சென்றிருக்க நந்தன் இருந்து அவளை அழைத்துக்கொண்டு வரும் பொழுதே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அஷ்வினிடம் மெல்லிய திணறல் இருந்தது. பேச்சுக்கள் மெதுவாய் வந்தாலும் முயன்று பேசினான் அஷ்வின்.
அவனின் முயற்சி புரிந்தது அனைவருக்கும். இன்னும் பேசும்படி சொல்ல அஷ்வினுக்கு சிரிப்பு தான் வந்தது.
தான் என்ன சிறுபிள்ளையா? பேசி பழகு என்பதை போல சொல்வது என தோன்றினாலும் அவர்களின் பரிதவிப்பில் இத்தனை நாள்எத்தனை கஷ்டத்தை அனுபவித்திருப்பார்கள் என்று புரிந்தது.
அந்த அறைக்குள் வேகமாய் வந்துவிட்ட நந்தனையும், ஸ்பூர்த்தியையும் கண்டவன் விழிகள் ஒளிர்ந்தது.
“வா…” என்ற அழைப்புடன் தலையசைத்தான் அஷ்வின்.
“மாமா…” என்று இருவருமே நெருங்க,
“ஸ்டடீஸ் எப்படி போகுது நந்து?…” என மெதுவாய் திக்கி திணறி அஷ்வின் கேட்க நந்து குழம்பி நின்றான்.
நந்தன் அந்த கேள்விக்கு பதில் சொல்லவே நேரமெடுக்க அதற்குள் ஸ்பூர்த்தியை பார்த்த அஷ்வின்,
“போஸ்டிங் எங்க ஸ்பூர்த்தி?…” என கேட்க காலடியில் பூமி நழுவியதை போல் தலை கிறுகிறுத்தது.
“தமிழ்நாடா? அதர் ஸ்டேட்டா?…” என்றான்.
இதற்கே மூச்சு வாங்க. எச்சிலை கூட்டி விழுங்கியவன் பார்வை ஸ்பூர்த்தியின் கழுத்தில் படிய கண்ணை சிமிட்டி பார்த்தான் அந்த மஞ்சள் கயிற்றை.
“கல்யாணமாகிடுச்சா?…” என்ற உள்ளடங்கிய குரலில் வந்த அடுத்த கேள்வியில் ஸ்பூர்த்தியின் குரல்வளையை மொத்தமாய் பிடித்துவிட்டான் அஷ்வின்.
மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க அதிரன் வேதனை பொங்க மகளை பார்த்தான்.
இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை ஒவ்வொருவரிடமும் தனக்கு ஒன்றுமில்லை என்று பேசியவனின் பேச்சுக்களில் இப்படி ஒன்றை மறந்துவிட்டனர்.
அனைவரையும் தெரிகிறது. இனி எந்தவித கவலையும் இல்லை என்றிருந்தவர்கள் சந்தோஷம் எல்லாம் அந்த நொடியில் மாயமாகியிருந்தது அஷ்வின் இப்போது ஸ்பூர்த்தி, நந்தனிடம் கேட்ட கேள்வியில்.
“அஷ்வின் ஸ்பூர்த்தி…” என பல்லவன் பேசும் முன் கை பிடித்து தடுத்துவிட்டாள் ஸ்பூர்த்தி.
விழிகளில் மிதமிஞ்சிய வேதனையும், வலியும் கண்ணீராய் கொப்பளிக்க முயன்று அதனை உள்ளிழுத்து நிறுத்திக்கொண்டாள்.
“எப்படி இருக்கீங்க மாமா?…” என தழுதழுப்பாய் கேட்கவும் அவளின் முகத்தயே ஆழ்ந்து பார்த்தான்.
அவன் விழிகள் அவளிடம் எதையோ தேட மீண்டும் மீண்டும் அந்த பார்வை என்னவோ சொல்லியது அவனிடம்.
“இங்க வா…” என்றான் லேசாய் தலையசைத்து.
தலையில் சுரீரென்று எங்கேயோ வலி இழுத்து பிடித்தது அவனை. உதட்டை கடித்து அதனை அடக்கிக்கொண்டு ஸ்பூர்த்தியை பார்த்தான்.
அருகே சென்று நின்றவள் முகத்தை பார்த்தவன் என்னவோ சொல்ல முயன்று தலையசைத்தான். தொண்டை அடைத்ததை போலிருந்தது அஷ்வினுக்கு.
“பெய்ன் இருக்கு….”
“ஹ்ம்ம், ம்மா…”
“ஸ்பூர்த்திம்மா…”
“வலிக்குதா, உனக்கு காயம்…”
“அழாதடா…” என்றவன் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து எழுத்துக்களாய் தேய மீண்டும் மயக்கம்.
“ஸ்பூர்த்தி, பூரிக்குட்டி….” என்ற முணங்கல் முனுமுனுப்புடன் வர அதுவரை அடக்கியிருந்த உணர்வுகள் உடைத்து வெளிவர சத்தமாய் பேசிவிடாமல் அங்கேயே மடங்கி அமர்ந்துவிட்டாள் அருகிருந்த படுக்கையில்.
“டாக்டர் அஷ்வின்…” என்று மோனிகா கேட்க,
“இது நான் எதிர்பார்த்தது தான். அவருக்கு ஞாபகம் இருந்தவரை மட்டுமே அவரால பேச்ச முடிஞ்சது. ஆனால் அவரையும் மீறி ஆழ்மனசுக்குள்ள புதைஞ்சிருக்கற நியாபகங்கள் மேலெழும்பும் போது இப்படியான கஷ்டங்கள் இருக்கும்…”
“அவர் நிறைய யோசிக்கிறார். உங்கக்கிட்ட பேசும் போது நார்மல் தான். ஆனா சில விஷயங்களை மறந்திருக்கலாம். இவ்வளோ ஞாபகம் வச்சிருக்கறவர் சில வருஷங்களுக்கு முன்னான நிகழ்வை மட்டும் கேதார் பண்ண ட்ரை பன்றார்…” என்ற மருத்துவர்,
“அப்போ எல்லாம் ஞாபகம் வரும் டாக்டர்?…” நந்தன் கேட்க,
“வரும், நம்புவோம். இப்பவே ஸ்ட்ரெஸ் குடுக்க வேண்டாம். அதுவே ஆபத்துல கூட முடியும். நாமளா திணிக்க நினைச்சா இவ்வளோ கஷ்டப்பட்டது வீணாகிடும். ஒன்னொன்னா தானாவே ஞாபகம் வரும். கொஞ்சம் ப்ரீயா விடுங்க…” என்று சொல்லிவிட்டு சென்றார் மருத்துவர்.
இன்னும் சோதனைகள் முடியவில்லையா என்றிருந்தது அனைவருக்கும். அனைவரின் பார்வையும் ஸ்பூர்த்தியை தொட பல்லவன் அருகே அமர்ந்தான்.
“ஐ’ம் ஆல்ரைட் மாமா. ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்று சொல்ல,
“ஏன்டா உன் முகம் பார்த்தா தெரியாதா?…” மேகா மகளின் தலையை வருட,
“இப்ப அஷ்வின் மாமா தான் முக்கியம். அவங்க சரியாகி வரட்டும். இந்தளவு நம்ம எல்லாரையுமே ஞாபகம் இருக்கே. நாமளே திரும்ப அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் மாமா….” என்றாள்.
“உன்னால முடியுமா? ஏன்டா இப்படி பன்ற? அவனுக்கு சொன்னா தெரியாதா என்ன? புரிஞ்சுப்பான்….” என்று பல்லவன் சொல்ல விரக்தியாய் ஒரு புன்னகை.
மனதெல்லாம் அவனிடம் விருப்பத்தை சொன்ன நாளில் சென்று நின்றது. அந்த அதிர்ச்சி, பார்வை என்று அவளை மீண்டும் நிலைகுலைய செய்தது அந்த எண்ணம்.
“ம்ஹூம், மாமா சரியாகட்டும். அவருக்கா தெரியற வரைக்கும் சொல்லவேண்டாம். அட்லீஸ்ட் குணமாகி வீட்டுக்கு வர வரைக்காச்சும்…” என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டாள்.
ஸ்பூர்த்தியின் பேச்சை மறுக்க ஒருவராலும் முடியவில்லை. அஷ்வினின் நிலையும் அப்படி இருக்க வேறு வழியிருக்கவில்லை.
“திரும்ப அதே கேள்வியை கேட்டா சமாளிச்சிக்கலாம்…” என்று தைரியமாய் சொல்லியவளுக்குள் அந்த துணிவில்லை.
தன்னிடம் அப்படி எதுவும் கேட்டுவிட கூடாதென்று மனதோடு அவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
“ப்பா, நான் இங்க இருக்கேன். நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லவும் மற்றவர்கள் வெளியேறினார்கள்.
நர்ஸ் வந்து செலைன் மாற்ற வர அதனை எல்லாம் பார்த்தபடி இருந்தவள் முகம் அழுது சிவந்து ஒட்டியிருந்தது.
இனி ஆக்சிஜன் உதவி தேவையில்லை என அவற்றை அகற்றியிருந்தனர். சீரான மூச்சுடன் மருந்தின் உதவியால் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
“நர்ஸ்…” என ஸ்பூர்த்தி அழைக்க,
“சொல்லுங்க மேம்…” என்றார் அவர்.
“இனி எப்போ எழுந்துப்பார்ன்னு தெரியுமா?…”
“ஸ்லீப்பிங் டோஸ் குடுத்திருக்கோம். நல்லா தூங்கனும். எப்படியும் மார்னிங் ஆகிடும் எழுந்துக்க, இனி நார்மல் தான். நாளைக்கு சில டெஸ்ட் இருக்கு. அடுத்து கொஞ்சம் கொஞ்சமா லிக்விட் ஃபூட் கூட குடுக்க ஆரம்பிக்கலாம்….”
ஸ்பூர்த்தி இதை தான் கேட்கவருகிறாள் என்று அவர் மொத்தமாய் ஒப்பித்துக்கொண்டிருக்க தலையசைத்து கேட்டுக்கொண்டவள் அவர் செல்லும் வரை அமைதியாய் இருந்தாள்.
“ஈஸியா எதுவுமே கிடைச்சிடாது இல்லையா மாமா? சின்ன சின்ன கஷ்டங்கள் வெறும் கண்துடைப்பு போல. இப்படி ஒன்னு நடக்கும்ன்னு என்னவோ என்னை ஸ்ட்ராங் பண்ணவே அந்த கடவுள் எனக்கு தந்திருக்கான்….”
“அன்னைக்கு சொன்னேங்க, வேண்டாம்ன்னு தூக்கி போடாதன்னு. இப்ப அது நிஜமாகிடுச்சு மாமா. இனி திரும்ப உங்களுக்கு சரியாகி என்னை தெரிய வரும் போது என்ன நடக்குமோ எனக்கு தெரியலை…”
“ஆனா இது என்னால தான். என்னால மட்டும் தான். உங்களை கல்யாணம் செய்யாம இருந்திருந்தா இப்படி எதுவும் உங்களுக்கு வந்திருக்காது மாமா. எனக்கான ஆபத்து உங்களை பறிச்சிக்க பார்த்திடுச்சே…”
“அதுவே எனக்கு திரும்பவும் நீங்க வேண்டாம்ன்னு சொல்ல வைக்குது மாமா. பயமா இருக்கு. என்ன பண்ணனும் மாமா? நீங்க என்னோடவே இருக்கனும்ன்றதை விட நீங்க இருக்கனும். அதுதானே முக்கியம். ஆமா, அதுதான் முக்கியம்….”
“உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய போறேன். கண்டிப்பா நான் உங்களுக்கு யாருன்னு தெரியவரும் போது நிச்சயம் நீங்க கோபப்படுவீங்க. எனக்கு தெரியும். ஒருவேளை தெரியாமலே போய்டுமோன்னும் பதறுது…”
“கொஞ்ச நாள் அப்படியே போகட்டும். பார்க்கலாம். இன்னும் இந்த வாழ்க்கை நமக்கு என்ன வச்சிருக்குன்னு. ஆனா இனிமே உங்களை உரிமையா கட்டிக்க முடியாதுல. உங்களுக்கு முத்தம் குடுக்கனும் போல இருக்கு மாமா…”
தன் கண்ணீரை துடைத்தவள் எழுந்து அவனின் காய்ந்த அதரங்களை ஈரமாக்கினாள். கண்ணீருடன் அவள் காதலும் அவனுக்குள் கரைந்து சேர்ந்தது.
மெல்ல அவனின் முகத்திலிருந்து விலகியவள் மனமோ மீண்டும் மீண்டும் அவனை வேண்ட முகமெல்லாம் முத்தமிட்டு தன் காயத்திற்கு மருந்தை வேண்டி மீண்டும் காயப்பட்டாள்.
முத்தங்கள் முடிவில்லாமல் போய்விடுமோ என்பதை போல அவனிடமிருந்து விலகியவள் அதற்கு மேல் அறையிலிருக்க முடியாமல் வெளியேற அஷ்வினின் விழிகள் லேசாய் திறந்து மூடியது.