“இன்னும் எவ்வளோ நேரமாகும் ஸ்பூர்த்தி?…” என்று நந்தன் தன் வாட்சில் நேரத்தை பார்த்துவிட்டு கேட்க,
“அரைமணி நேரமாகும்ன்னு சொன்னாங்க நந்து….” ஸ்பூர்த்திக்கும் பொறுமை குறைய ஆரம்பித்தது.
தற்போது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் ஸ்பூர்த்தி. உடன் பல்லவனும், நந்தனும்.
அஷ்வின் உடல்நிலை தேறிய பிறகு இன்னும் ஓரிரு நாளில் வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என்றவகையில் இங்கே கிளம்பி வந்திருந்தாள்.
ஏற்கனவே மருத்துவ விடுப்பில் தான் இருக்க, காலும் இன்னும் குணமாகவேண்டும் என்று விடுப்பை நீட்டித்திருந்தாள்.
“இப்ப இது அவசியமா குட்டிம்மா? எனக்கென்னமோ சரியாபடலை…” என பல்லவன் சொல்ல ஸ்பூர்த்தி முகத்தில் அத்தனை வலி.
“ஓகே, ஓகே டா. ஆனா முடிஞ்சதை திரும்ப நாமளே துவக்கனுமான்னு யோசிக்கிறேன்…”
“இல்ல மாமா, இப்படி உயிர்பயம் காட்டிட்டா பின்வாங்கிருவாங்கன்னு தப்பு செஞ்சவங்க நினைச்சிட கூடாதுல. இதை சும்மா விட சொல்றீங்களா?…” என்றவள்,
“ஓகே, வேண்டாம்ன்னா சொல்லுங்க. கிளம்பிருவோம்…” என்று சொல்லவும் இருவருமே அமைதியாகிவிட்டனர்.
வெளிப்படையாய் இது கொலைமுயற்சி என்று தெரிந்திருக்க சம்பந்தப்பட்ட பகுதியில் இது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடந்த விபத்து என்று வழக்கை முடித்திருந்தனர்.
குடும்பத்தின் சூழ்நிலை கருதி யாராலும் இதில் கவனம் செலுத்தமுடியாமல் போன நேரத்தில் பிள்ளைகளா, வழக்கா என்று பார்க்க பிள்ளை திரும்பட்டும் முதலில் என்று விட்டுவிட ஸ்பூர்த்தி விட தயாராக இல்லை.
“ஸ்பூர்த்தி அப்பா லைன்ல…” என்று நந்தன் மொபைலை தர,
“இப்ப ஏன் நந்து?…” என்றவள் வாங்கி பேசினாள்.
“வெய்ட் பண்ணிட்டிருக்கோம் ப்பா…” என்றாள் அதிரன் பேசும் முன்.
“ஓகே டா. லன்ச்க்கு முன்னாடி ஒரு டேப்லெட் போடனும். மறந்திடாத. அதை சொல்ல தான் கூப்பிட்டேன்…”
“அப்பா, ஐ க்னோ. நீங்க சமாளிக்காதீங்க…” என்று சொல்லவும் மறுபக்கம் மகளின் கண்டுகொள்ளலில் அதிரன் முகத்தில் புன்னகை.
“வெல்கம் ஸ்பூர்த்தி. ஹவ் ஆர் யூ?…” என்றவர் அவள் வந்தமரும் வரை அவளின் கால்களை தாம் பார்த்துக்கொண்டிருந்தது.
“இப்ப கூட ஸ்டிக் இல்லாம நடக்க முடியும் ஸார். ரொம்ப பரிதாபப்பட வேண்டாம். இது சும்மா ஒரு சப்போர்ட்க்கு தான். டாக்டர் அட்வைஸ்…” என்று அவரின் பார்வையை கண்டு கூறினாள்.
“அட்வைஸ் எல்லாம் பொறுமையா கேட்பீங்க போல?…” என சற்று நக்கலாய் கமிஷனர் சொல்ல,
“நல்லது சொன்னா கேட்கவேண்டியது தான். நாதாரித்தனத்துக்கு கேட்கனுமா என்ன?…” என்றதும்,
“ஸ்பூர்த்தி…” என்றார் பல்லை கடித்துக்கொண்டு.
“இப்பவும் அதே மாதிரியே பேசிட்டிருக்கறது நல்லதில்லை. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கம்மா…” என்றார்.
“அதை வீட்டுல போய் நடந்துக்கறேன் ஸார். இப்ப நான் வந்த விஷயம்…”
“கேள்விப்பட்டேன். அதான் நீங்க வந்த கார்ல ஏற்பட்ட கோளாறு தான் இந்த ஆக்ஸிடன்ட்க்கு காரணம்னு அந்த ஏரியா ஸ்டேஷன்லயே பைல் பண்ணி கோர்ட்ல சமிட் பண்ணி கேஸ் க்ளோஸ் பண்ணியாச்சே…”
“எங்க அனுமதி இல்லாம நீங்களா எப்படி முடிக்கலாம் ஸார்?…”
“உங்க தரப்புல இருந்து கம்ப்ளெயின்ட் குடுக்க ஆளில்லை. அதே நேரம் கேஸை இன்வெஸ்டிகேஷன் பண்ணி கோர்ட்ல சமிட் பண்ண நீங்க ரெக்கவராகற வரை வெய்ட் பண்ண முடியாது…”
“உங்களுக்கு தனி சட்டம் போல? எனிவே, சம்பந்தப்பட்ட நான் இப்ப கேஸ் குடுக்க வந்திருக்கேன். முடிஞ்ச கேஸா இருந்தாலும் சந்தேகத்தின் பேர்ல திரும்ப ரீ ஓபன் பன்றதொன்னும் புதுசில்லையே…”
ஸ்பூர்த்தி தெளிவாய் பேச பேச கமிஷனருக்கு அத்தனை கடுப்பு. இவள் என்ன என்னை அதிகாரம் பண்ணுவது என்று பார்த்தவர்,
“உங்க இஷ்டத்துக்கு இதை பண்ண முடியாது ஸ்பூர்த்தி. இங்க எங்களுக்கு வேற வேலை இல்லையா?…” என்றார் அவர்.
“இருக்கே, கேள்விப்பட்டேனே வேதநாயகத்தை வெளில எடுக்க முழுமூச்சா முயற்சி பன்றதுல நிறைய உதவிகள் உங்ககிட்ட இருந்தும் போகுதாமே? உபரி தகவல்களும் இருக்கு…”
அத்தனை கேவலமாய் ஒரு பார்வை அவளிடமிருந்து ஆணையருக்கு கிடைக்க இன்னுமே கோபமானார்.
“ஸ்பூர்த்தி, உங்க அசெம்ஷன்க்கு எல்லாம் நாங்க ஆட முடியாது. எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கோங்க. முடிஞ்சா இது அட்டம்ட் டூ மர்டர்ன்னு எதாச்சும் ஆதாரம் இருந்தா கொண்டுவாங்க. பார்க்கலாம்…”
“நான் கலெக்ட் பண்ணி கொண்டுவரதுனா உங்களுக்கு இந்த சீட் எதுக்கு? பதவி எதுக்கு? மாசா மாசம் சம்பளம் எதுக்கு?…” என கேட்டேவிட்டாள் ஸ்பூர்த்தி.
“நீங்க உங்க லைனை க்ராஸ் பன்றீங்க ஸ்பூர்த்தி. தப்பு. இதுக்கே உங்க மேல கேஸ் போட்டு என்னால உள்ள தள்ள முடியும்….” என்றதும்,
“செய்ங்க ஸார். பார்க்கலாம்…” என்றாள் அந்த இருக்கையில் பின்னால் சாய்ந்தமர்ந்து.
தன்னையே இத்தனை பேசும் இவளை மட்டம் தட்டவே முடியாதா என்றளவிற்கு ஆத்திரம் பொங்கியது.
கிளம்பி வந்திருந்தவள் முன்அனுமதி வாங்கியிருந்தது மினிஸ்டர் ஆவுடையப்பனை கொண்டு என்பதால் இன்னும் அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயம் வேறு.
‘இவள் மட்டும் சாதாரண பின்புலம் கொண்டிருந்திருக்க வேண்டும், அப்போதிருக்கிறது’ என பற்களை நரநரவென்று கடித்தார்.
“கேஸ் எடுக்கறீங்களா? இல்லையா ஸார்?…” ஸ்பூர்த்தி கேட்க,
“நீங்க சந்தேகப்படறது வேதநாயகம் மேல. அவரே இப்போ பதவி இல்லாம மிகப்பெரிய வழக்குல சிக்கியிருக்கார். ஜெயில்ல தண்டனைல இருக்கார். அவர் வெளில தொடர்பு கொண்டு இந்த கொலைமுயற்சி நடத்தினார்ன்றது நம்பற மாதிரி இல்லையே?…”
“நீங்க எதை நம்புவீங்க, நம்பமாட்டீங்கன்னு கூடவா தெரியாது. ஓகே, நான் இதை கோர்ட் மூலமாவே டீல் பண்ணிக்கறேன். அவ்வளோ சுத்தி வரனுமான்னு யோசிச்சேன். அதுதான் தப்பு…” என்று எழுந்துகொண்டாள் ஸ்பூர்த்தி.
“எப்போ ட்யூட்டில ஜாயின் பண்ண போறீங்க ஸ்பூர்த்தி?…” என்று சம்பந்தமில்லாமல் அவர் கேட்க ஸ்பூர்த்தி ஒருநொடி என்னவென்று யோசித்து அவர் முகம் பார்த்தாள்.
“போஸ்டிங் மாறலாம். தயாரா இருங்க…” என்று இகழ்ச்சியாய் சொல்லவும் ஸ்பூர்த்தியின் விழிகள் இடுங்கின.
“யூ மீன்…”
“எஸ், பிசிக்கலா நீங்க அன்பிட் உங்க போஸ்ட்டிங்க்கு. சோ…” என நக்கலாய் அவர் கையை விரித்து சொல்ல இன்னும் நேராய் நின்று அவரை பார்த்தாள்.
“ஆடரே ரெடி போல?…” என கேட்டதும் அவன் கண்டுகொண்டதில் லேசாய் தடுமாறி பார்த்தார்.
உளறிவிட்டார் ஆத்திரத்தில். இருப்பினும் என்ன? (https://conversionwise.com/) பயமா? அப்படித்தான் என்பதை போல அவளை பார்த்தார்.
தன் அனுபவத்தின் வயதாவதிருக்குமா இப்பெண்ணுக்கு? இவளிடம் இத்தனை இடறுகிறோமே என உள்ளே கசிந்த அவமானத்துடன் அவளை பார்த்தார்.
“போஸ்டிங் பத்தி பேசறீங்களே? இதை கூட மெய்ண்டெய்ன் பண்ண முடியலை. சூப்பர்ப் ஸார்…” என எள்ளல் பொங்க அவள் கூற அதற்கே அவளை காயப்படுத்திவிடும் வேகம் அவருக்கு.
“ஒண்ணுமில்லாத போஸ்டிங்ல இருந்து பாரும்மா. அப்ப புரியும் எங்கே யார்க்கிட்ட மோதனும்னு. ஒரு அளவுக்கு தான் பொறுமையும் கூட…”
“ரொம்ப பொறுக்க வேண்டாம் ஸார். அப்படி ஒரு போஸ்ட்டிங்கே தேவையில்லைன்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்…” என்றவளை நம்பமுடியாமல் பார்த்தார்.
கொஞ்சமேனும் தான் சொல்லியதில் கலங்கி, லேசாய் தயங்கி யோசித்து பேசுவாள், என்னவென்று கேட்பாள் என நினைத்து தான் சொல்லியிருக்க ஸ்பூர்த்தியிடம் அது எடுபடவில்லை.
“உங்கள மாதிரி சம்பளத்துக்கு வேலைக்கு வரலை நான். இதை குத்தி காமிக்கவும் சொல்லலை. இந்த உலகத்தோட மிகப்பெரிய பொக்கிஷம் காடும், காடு சார்ந்த உயிரினங்களும். அதை பாதுகாக்க தான் பிடிச்சு படிச்சு நான் வேலைக்கே வந்தேன்…”
“ஹ்ம்ம், இது மூலமா ஒன்னு புரிஞ்சிருச்சு. இருக்கறதை பாதுகாக்கறது எவ்வளோ முக்கியமோ அதேமாதிரி உங்களை மாதிரி இருக்கறவங்க அழிக்கிறதை உருவாக்கிறது அதைவிட முக்கியம். அதுக்கு இந்த போஸ்டிங்ல தான் நான் இருக்கனும்னு அவசியமில்லை…”