“ஒன்னொண்ணுக்கும் உங்களுக்கு எல்லாம் ரிப்போர்ட் பண்ணிட்டு, நீங்க சொல்றதை செஞ்சுட்டு, நல்லதுக்கு கூட யோசிச்சிட்டு, போதும் போதும். இனி அது எனக்கு தேவையில்லை….”
“என்னோட வேலையை செய்ய இந்த போஸ்டிங் ஒரு கருவி. இது இல்லாமலும் என்னால என்ன செய்ய முடியுமோ அதை செயல்படுத்துவேன். அதுக்கு உங்க அனுமதி எனக்கு அவசியமில்லை. குட்பை…” என்று சொல்லிவிட்டு கொண்டுவந்த புகாரை கையோடு எடுத்துக்கொண்டாள்.
“சீக்கிரமே என்னோட ரெஸிகினேஷன் லெட்டர் வரும். அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்க வேண்டாம். இதையும் ஒரு வார்னிங்கா எடுத்துக்கோங்க. உங்களோட அந்த சிலபேர் சம்பந்தப்பட்ட குழு இருக்காங்களே? சொல்லிடுங்க…” என்றவள்,
“பை த பை, நீங்க கூட ரெடியா இருங்க ஸார். எப்ப வேணா என்னவேணா நடக்கலாம். எப்பவும் அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகாது. எழுந்துக்கவிடாம கட்டி போட்டதுக்கான பலனை சீக்கிரம் அனுபவிப்பாங்கன்னு கடவுள் மேல நம்பிக்கை வச்சு சொல்லலை. நானே சொல்றேன்…”
பூடகமாய் அவள் சொல்லி சென்றிருக்க கமிஷனருக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி பேசுவாள் என எதிர்பார்க்கவும் இல்லை.
அத்துடன் இறுதியாய் அவள் சொல்லி சென்றது வேறு மனதை முரண்டியது. என்னவோ இருக்கிறது இருக்கிறது என்று மனது சொல்ல அதை நிரூபிப்பதை போல தான் நிகழ்வுகளும் நடக்கவிருக்கிறது.
அந்த அறையை விட்டு வேகமாய் வெளியே வந்தவள் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.
“கிளம்பலாம் மாமா…” என்று சொல்ல,
“என்ன இன்னும் கம்ப்ளைன்ட் லெட்டர் கையிலையே இருக்கு? உள்ள குடுக்கலையா ஸ்பூர்த்தி?…” என்றான் நந்தன்.
“ம்ஹூம், இதை இப்படி டீல் பண்ண முடியாது நந்து. கிளம்புவோம்…” என்றவள்,
“நான் இந்த ஜாபை ரிஸைன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன் மாமா…” என்று பல்லவனிடம் சொல்ல சுத்தமாய் நம்பமுடியவில்லை அவனால்.
“கிளம்புவோம் போகும் போது பேசலாம்…” என்று நடக்க அவர்கள் வெளியே பேசுவதை உள்ளே கமிஷனர் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
காரில் ஏறியதும் தன்னுடைய மொபைலில் இருந்து தியாகராஜன், லக்ஷ்மணனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அழைக்கட்டும் என காத்திருக்க, நந்து அதிரனுக்கு செய்தி அனுப்பினான்.
“ஓகே, வரவும் பேசிக்கலாம்…” என்ற மட்டும் அதிரன் திருப்பி அனுப்பியிருந்தான்.
இரவு பேசுவதாக நேரத்தை சொல்லிவிட்டு தியாகராஜன் செய்தி அனுப்பியிருக்க பார்த்தவள் கண்ணை மூடி சாய்ந்துகொண்டாள்.
“குட்டிம்மா, இங்க வா. மடில சாய்ஞ்சுக்கோ…” என்றதும் மாமனின் மடியில் தலை வைத்து படுத்தவள் மனதிற்குள் அஷ்வின்.
மருத்துவமனையில் அன்று நினைவு திரும்பியதிலிருந்து அவனிடம் அத்தனை மாற்றங்கள்.
எதனால் விபத்து, என்னவாகிற்று என்று கேட்டவனிடம் அதிரன் சொல்லிவிட்டான். காரில் பிரச்சனை என்று மட்டும் சொல்லியிருந்தான்.
மருத்துவரின் பரிந்துரைப்படி அவனிடம் யாரும் வேறு எதுவும் சொல்லவில்லை. முழு ஓய்வு ஒன்றே அவனை விரைவில் குணமடைய செய்யும் என்று சொல்லியிருந்தார்.
அதற்கு ஏற்றதை போல அஷ்வினும் எதை பற்றியும் எதுவும் கேட்பதில்லை. முடிந்தளவு கண்ணை மூடிக்கொண்டு உறங்குவான். இல்லை கேட்டதற்கு பதில் சொல்வான்.
பேசுவதை கவனிப்பான். அவனாக எதை பற்றியும் கேள்வி எழுப்பவில்லை. ஸ்பூர்த்தி மிகவும் பயந்தது அவள் திருமணத்தை பற்றி மீண்டும் பேசுவானோ என்று.
அவள் உடன் இருக்கும் தருணங்களில் பார்வையில், பேச்சில் முன்பை விட இன்னுமே சுருக்கம் தான்.
இன்னும் இரு நாட்களில் வீடு திரும்பவேண்டும். மாடிக்கு செல்லவேண்டாம் என்று வீட்டினர் கீழே ஒரு அறையில் முதலிலேயே ஏற்பாடு செய்துவிட்டனர்.
அனைவருக்குமே இந்த அஷ்வின் புதிதாக தான் தெரிந்தான். சில வருடம் முன்பு வரை தான் அவனின் நினைவுகள் என்று சொல்லியிருக்க அதை பற்றி கூட பேசவில்லை அவன்.
“ஏதாவது செய்யுதா சேம்ப்? நீ இவ்வளோ அமைதியா இருந்ததில்லையே? உடம்புக்கு சரியில்லைன்னா சொல்லுடா…” என அதிரனும் கேட்டிருக்க,
“நத்திங் மாமா. ரொம்ப யோசிக்கவோ, ரொம்ப பேசவோ செஞ்சா தலை வலிக்குது. அதான். திரும்ப ஏதாவது நானே ஸ்ட்ரெய்ன் பண்ணி இழுத்துவச்சு உங்களை எல்லாம் கஷ்டபடுத்திட கூடாது பாருங்க…” என்றுவிட்டான்.
அதுவே மற்றவர்களை அமைதிப்படுத்தியது. ஆனால் ஸ்பூர்த்தி உணர்வதோ வேறாக இருந்தது.
அவனின் பார்வைகள் எல்லாம் முன்பை போல அதே கண்டிப்பு தன்மையுடன் இருக்க அதையும் தாண்டி உள்ளுணர்வு அவளிடம் என்னவோ உணர்த்தியது.
நிகழ்வுக்குள் உணர்வுக்கும் நடுவில் மிகப்பெரிய போராட்டம் மனதால் அவள் அல்லாடிக்கொண்டிருந்தாள்.
நேராக அமுதினியன் இல்லத்திற்கே வந்துவிட கீழே மேகாவின் அறையில் குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
“சாப்பாடு ரெடியாகிருச்சு ஸ்பூர்த்தி. நைட் நீ இருப்பேன்னா சொல்லு. இல்லைன்னா நானே வரேன்…” என்று மோனிகா சொல்ல,
“இல்லைத்தை நான் இருக்கேன். நேத்தும் இல்லை நான். இன்னைக்கு நானே இருக்கேனே?…” என்று கிளம்பிவிட்டாள்.
பல்லவனுடன் மருத்துவமனைக்கு செல்ல அங்கே சுபத்ராவும், மேகாவும் இருந்தனர்.
அஷ்வின் சுபத்ரா பேசுவதை கேட்டபடி சிறு புன்னகையுடன் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
ஸ்பூர்த்தி உள்ளே வரவும் அவளை பார்த்துக்கொண்டே மெல்லிய குரலில் பேசியவன் முகத்தில் அத்தனை அமைதி.
முழுதாய் தலை மழிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருக்க சவரம் செய்யப்படாத தாடியுடன் காலில் கட்டுடன் என்று அவனின் நிலை இன்னுமே வருத்தியது.
தனது சொல்லுக்கிணங்க யாரும் தன்னை பற்றி அஷ்விடம் சொல்லவில்லை. அதற்கு அவனும் வாய்ப்பு தரவில்லை என்பதே உண்மை.
எதையும் கேட்கவோ, தெரிந்துகொள்ளவோ அவன் முயலவில்லை. பேசுவதை கேட்டு, பதில் சொல்லி என்று இன்றுவரை நாட்கள் கழிந்தன.
“வா ஸ்பூர்த்தி…” என மகளை பார்த்ததும் உள்ளே அழைக்க அஷ்வினை பார்க்கவே அத்தனை தயக்கம் அவளுக்கு.
அவனுக்கு பிடிக்காத இன்னொரு காரியத்தை செய்துவிட்டு வந்திருக்கிறாளே? அந்த விழிகளை ஏறிட முடியவில்லை.
அதுவே அஷ்வினின் பார்வையில் விழ ஒரு ஆழ்ந்த பார்வையோடு ஸ்பூர்த்தியை கவனித்தான்.
“அத்தை டின்னர் குடுத்துவிட்டாங்கம்மா..” என்று மேகாவிடம் ஸ்பூர்த்தி சொல்ல,
“குடு…” என்று வாங்கிய மேகா அதனை பிரிக்க,
“இப்ப பசிக்கலை த்தை…” என்றான் அஷ்வின்.
“ஓஹ், மாத்திரை போடனுமே அஷ்வின்…” என மேகா கேட்க,
“கொஞ்ச நேரமாகட்டும். அதான் ஸ்பூர்த்தி இருக்கா தானே?…” என்று சொல்ல ஸ்பூர்த்தி திகைப்புடன் நின்றாள்.
மேகாவிடம் கொடுத்து உணவை முடித்து மாத்திரை போட்டான் என்றால் அடுத்து காலையில் தான் விழிப்பான்.
அதுவரை அவனோடு அவன் விரல் கோர்த்து, அவன் நெஞ்சில் சாய்ந்து, ஏதாவது பேசிக்கொண்டு என்று இருப்பவள் இப்போது இப்படி சொல்லவும் செய்வதறியாமல் பார்த்தாள்.
“ஓஹ், அப்படியா?…” என மேகா மகளை பார்க்க,
“நீங்க கிளம்புங்க த்தை. மார்னிங் வாங்க…” என்று வேறு சொல்ல பல்லவன் ஸ்பூர்த்தியை தான் பார்த்தான்.
எங்கே அதற்கு மேல் மறுத்தாலோ இருந்தாலோ வேறு கேள்வி கேட்பானோ என மேகாவும், சுபத்ராவும் கிளம்பிவிட்டனர்.
அவன் இதுவரை எந்தவித கேள்வியும் ஸ்பூர்த்தியையும், அவள் திருமணம் பற்றியும் கேட்காததே சங்கடத்திற்கு வழிவகுக்காமல் இருந்தது.
இப்போது கேட்டு தாங்களும் உண்மையை சொல்லி பெரிதாய் ஒரு பாதிப்பும் இல்லை என்றால் பிரச்சனை இல்லை.
ஆனால் அதனை கொண்டே அதிகமாய் யோசித்து பார்த்து என்னவென கேட்டு அவனுக்கு ஏதேனும் என்றால் நினைக்கவே அச்சமாய் இருந்தது.
“நான் ட்ராப் பண்ணிட்டு வரேன்…” என பல்லவனும் உடன் சென்றான்.
அவர்கள் சென்றும் கதவருகே நின்றிருந்தவளை பார்த்தவன் எப்போது வருவாள் என்பதை போல பார்த்திருந்தான்.
அஷ்வினிடம் பார்வையை திருப்பியவள் அவன் தன்னை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு துணுக்குற்றாள்.
“இன்னும் எவ்வளோ நேரம் அங்கயே இருப்ப? என்னை பார்த்துக்க தானே வந்த ஸ்பூர்த்தி?…” என்றான்.
“என்ன பண்ணிட்டு வந்திருக்க? உன் முகமே சரியில்லையே?…” என்றான் அடுத்ததாக.
பேச்சில் எந்தவித மாற்றமும் இல்லை. பார்வையிலும் அப்படியே. ஆனால் மனதெல்லாம் தவித்தது இவனுக்கு ஏன் தன்னினைவு இல்லாமல் போனது என்று.
“என்ன மாமா? வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா?…” என பதறி போய் கேட்க,
“சும்மா கூட தலையை அசைக்க கூடாதா? என்னாகிடும்?…” என சாதாரணமாய் சொல்லியவன்,
“உட்கார், உன்கிட்ட பேசனும்…” என்றான்.
என்ன கேட்பானோ என ஜீவன் வற்றி போனது ஸ்பூர்த்திக்கு. உள்ளுக்குள் பொங்கிய அலையை அதட்டி அமிழ்த்தியவள் முகத்தை அமைதியாக வைக்க பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியதானது.
“இன்னும் எவ்வளோ நாள் லீவ்? நீ இப்போ ஓகே தானே?…” என்றான் அவளிடம்.