அந்தளவுக்கு நிகழ்வுகள் அவளை உருக்கியிருந்தது மனதோடு உடலையும் சேர்த்து.
“ஒழுங்கா சாப்பிடறதில்லையா?…”
“அப்படி எல்லாம் இல்லை மாமா…”
“பின்ன? இந்த ஆக்ஸிடன்ட்னாலா சரியா சாப்பிடலையா? தூங்கறது கூட இல்லை போல?…” அவன் கேள்விகளால் அவளை திணறடிக்க தப்பிக்கும் மார்க்கமின்றி புரையேறியது அவளுக்கு.
“ஓகே, நான் எதுவும் கேட்கலை சாப்பிடு…” என்று கையை கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
உணவு இறங்கவில்லை என்றாலும் அதற்கும் சத்தம் போடுவான் என்று ஸ்பூர்த்தி சாப்பிட அவள் முடிக்கும் தருவாயில் மேலும் இரண்டு இட்லியை எடுத்து வைத்தான்.
“இது என்னோட பங்கு. சாப்பிடு…” என்று சொல்ல ப்ளேட்டையே பார்த்திருந்தவளுக்கு கண்கள் கலங்கியது.
விழிநீர் சொட்ட நிமிராமல் அதனை உண்டு முடித்தாள். இந்த அஷ்வின் அவள் விருப்பம் சொல்வதற்கு முன்பிருந்தவன் தான் என அடித்து கூறியது அவள் மனது.
அந்த அக்கறையும் பேச்சும் தன்னவனை தேட வைக்க உள்ளுக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்த உணவை வலுக்கட்டாயமாய் விழுங்கி தண்ணீரை குடித்தாள்.
உண்டு முடித்தவற்றை எடுத்து வைத்துவிட்டு அஷ்வினுக்கு மாத்திரையை எடுத்து தர வாங்கியவன்,
“உன்னோட டேப்லட்ஸ்?…” என கேட்கவும் தான் அதனை மறந்து வந்ததே ஞாபகம் வந்தது.
“அது மறந்துட்டேன் மாமா. வீட்டுல…”
“அதுக்கேன் டென்ஷன் ஸ்பூர்த்தி? உன்னோட ப்ரிஸ்க்ரிப்ஷன் இங்க தானே இருக்கும். நான் நர்ஸ்ட்ட கேட்கறேன். நீ போய் இதை கிளீன் பண்ணிடு…” என்று அனுப்பிவைத்தான்.
அவள் மீண்டும் வருகையில் நர்ஸ் மாத்திரைகளுடன் காத்திருக்க வந்ததும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவள்,
“நானே போட்டுப்பேனே சிஸ்டர்…” என்று வாங்கி மாத்திரையை போட்டுக்கொண்டாள்.
நர்ஸ் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் அஷ்வின் எதிரே அமர்ந்தவள் ஒன்றும் பேசாம இருக்க,
“தூக்கம் வரலை ஸ்பூர்த்தி. அந்த கிடாரை எடு…” என்றான்.
அறையில் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த கிடாரை எடுத்து வந்து தந்தாள். நந்தனிடம் சொல்லி இரு நாட்களுக்கு முன்பு தான் கொண்டுவந்து தர சொல்லியிருந்தான் அஷ்வின்.
இப்போது எடுத்து தரவும் இன்னும் கொஞ்சம் வசதியாய் அமர்ந்துகொண்டு அதனை லாவகமாய் பிடித்தான்.
“ஜஸ்ட் ஒரு கேம். பொழுதும் போகலை. தூக்கம் வர வரைக்கும்…” என ஷவின் சொல்ல,
“என்ன கேம் மாமா?…” என்றாள்.
“நான் ட்யூன் போடறேன். நீ சாங் கண்டுபிடிக்கனும்…” என சொல்ல,
“நானா? நான் பாட…”
“நீ தான். உன்னை பாட சொல்லலை. கண்டுபிடின்னு சொன்னேன். என்ன பாட்டு, சரணம், பல்லவி மட்டும் சொல்லு…” என்றவன் அவள் இன்னும் தயங்கி இருப்பதை பார்த்து,
“பேசாம மாமாவை வர சொல்லியிருக்கலாம்…” என்றதும் உடனே தலையசைத்தாள்.
“நானே கண்டுபிடிக்கறேன். அப்பா இப்ப ஸ்டூடியோல இருக்காங்க…” என்று சொல்ல சிரிப்புடன் ஒவ்வொரு பாடலாய் அவன் இசைத்து காண்பிக்க எப்போதும் பாடலை வரிகளாய் அவள் ஒப்பிப்பதில்லையே.
தாளத்திற்கேற்ப ராகமாய் அதன் ஸ்வரம் குறையாமல் பாடலாகவே பாடிவிடுபவள் அன்றும் பாட லேசாய் உறக்கம் வரும் போலிருக்க முயன்று கண்ணை விழித்தாள்.
முதலில் அவனோடு இந்த விளையாட்டிற்கு தயங்கியவள் பின் நேரம் செல்ல செல்ல தானாகவே அடுத்து என்ன என்று கலகலத்து பாட ஆரம்பிக்க அடுத்ததாய் அவன் இசைத்ததில் திகைத்து விழித்தாள்.
“மாமா ஸ்ருதி வரலை…” என தொண்டையை செருமினாள்.
“இவ்வளோ நேரம் சேர்ந்த ஸ்ருதி இப்ப சேரலையா?…” என்றவன் கேள்வியில் தடுமாறியவள்,
“சாங் தானே? நீ ஏன் விஷுவலோட கனெக்ட் பன்ற?…” என்று பட்டென்று அவன் சொல்லவும் அதிர்ந்து பார்த்தாள்.
“என்னாச்சு? ஏன் இப்படி முழிக்கிற?…” என அப்போதும் சாதாரணமாக அவளை கேட்க அழுகையாய் வந்தது ஸ்பூர்த்திக்கு.
அது இறுதியாய் இருவரும் கொடைக்கானல் மலையில் வைத்து இதே போல் அவன் இசைத்து கேட்க அவள் பாடியது.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் தலைசைத்து அவனை ஸ்வரத்தை மீட்ட செய்யும் பொழுதே கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சியது.
“இது லாஸ்ட் சாங். ஓகே…” என்று மீண்டும் அவன் ஸ்வரம் மீட்டினான்.
“கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றிலொன்றாய் கலந்தாட. ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற. காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு…” என்று முடித்தவள் பார்வை அஷ்வினிடம் நிலைக்க கைதட்டினான் அஷ்வின்.
“இவ்வளோ அழகா பாடிட்டு லயம் கிடைக்கலை. ஸ்ருதி சேரலைன்னு சொல்றியே?..” என்று பாராட்ட அதற்கு மேல் அமர முடியாமல் அப்படியே சாய்ந்து உறங்கி போனாள் ஸ்பூர்த்தி.
“குட்நைட் ஸ்பூர்த்தி…”
“குட்நைட் அஷ்வின் மாமா…” என்றவளின் குரல் உறக்கத்தில் குழற லேசாய் முறுவலித்தான் அஷ்வின்.
அவள் உறங்கவும் தனக்கருகே இருந்த பெல்லடித்து நர்ஸ்ஸை வரவழைத்து கிடாரை ஓரமாய் வைக்கும்படி சொல்லியவன் தன்னுடைய மாத்திரைகளை போட்டுக்கொண்டான்.
அதன் பின்னர் தான் அவனுக்குமே உறக்கம் என்பது வந்தது. அசைந்தால் எழும்பிவிடுவாளோ என்று கவனமாய் சரிந்து படுத்தவனும் அயர்ந்த உறக்கத்திற்கு சென்றான்.
உறக்கம் மட்டுமே இரு மனங்களுக்கு அமைதியை தரும் போலிருக்க சூழலும் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.