“முடியாது, இதென்ன உங்க வீடு மட்டுமா? என் அம்மாவோட பிறந்த வீடு. என் தாய்மாமா வீடு. அதுக்கெல்லாம் மேல…” என்றவள் அவனின் பார்வையில் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.
“இப்ப நீ கிளம்பலையே ஸ்பூர்த்தி? அதான் ஹெல்ப் பண்ண சொன்னேன். வா வா, எனக்கு தூக்கம் வருது…” என்றான் ஒன்றுமே நடக்காததை போல.
முகம் வாடிவிட்டால் கூட ஆதுரமாய் அருகே அமரவைத்து என்னவென பொறுமையாய் கேட்டு அவளை சமாதானம் செய்த அந்த அஷ்வின் எங்கே என்று மனது ஆவலாய் அலைபாய்ந்தது.
“முன்னாடி நகர்ந்துக்கோங்க…” என்று சொல்லியவள் அவனுக்கு படுக்க எதுவாய் தலையணை எடுத்து வைத்துவிட்டு போர்வையை போர்த்திவிட்டு திரும்ப அவளின் கையை பற்றினான்.
“தேங்க்ஸ் ஸ்பூர்த்தி…” என்று லேசாய் சிரிக்க அந்த கன்னத்தில் நன்கு வலிக்க கடித்தால் என்னவென்று பொங்கிக்கொண்டு வந்தது.
‘சிரிக்காதயேன், முடியலை மாமா’ என்றவள் மன ஓட்டங்கள் முகத்தில் தெரிய அவற்றை படிக்கும் மும்மரத்தில் அஷ்வின்.
“என்ன?…” என்றான் புருவமுயர்த்தி.
“நத்திங் மாமா…” என்று கையை உருவிக்கொண்டு வெளியேறிவிட்டாள் ஸ்பூர்த்தி.
“டோர் லாக் பண்ணு ஸ்பூர்த்தி…” என்றவன் சத்தத்தில் எப்போதும் ஒருக்களித்து திறந்திருக்கும் அறை கதவை இன்னும் மூடியதை போல வைத்துவிட்டு தன்னறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அஷ்வினின் பேச்சுக்கள், பாவனைகள், பார்வைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரணாய் இருக்க யோசித்து யோசித்து தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.
சற்று நேரத்தில் வீட்டில் பூஜை. அதற்குள் தயாராக வேண்டும் என்று குளித்து கிளம்பி ரெடியாகி வர மேகா சுபத்ராவுடன் வந்துவிட்டாள்.
“அஷ்வின் என்ன பன்றான்?…” என வந்ததும் மேகா கேட்க,
“உங்க அஷு என்னை இங்க ஏன் இருக்கன்னு இன்னைக்கு மட்டும் நிறைய தடவை கேட்டுட்டாங்க. ஒருநாள் இருக்கு அவங்களுக்கு…” என பொறுக்கமாட்டாமல் ஸ்பூர்த்தி சொல்லிவிட அனைவரின் முகமும் கவலையானது.
“ப்ச், அதெல்லாம் ஒரு விஷயமா? என்கிட்டே கூட தான் கல்யாணமாகிருச்சு, அவ புருஷன் கோவிச்சுக்க போறான். அனுப்பி வைங்க. நீங்க சரியா பார்த்துக்கறதில்லை அப்படின்னு சொன்னான். எல்லாம் ஒரு அக்கறையில தான் ஸ்பூர்த்தி…”
மோனிகா சொல்லவும் ஸ்பூர்த்தியால் ஏற்கவே முடியவில்லை. என்னவோ அங்கிருக்கவே மனதில்லாமல் போனது.
நான்கு நாட்களேனும் தாய் வீட்டிற்கு சென்றால் என்ன என்று தோன்ற முடிவெடுத்தாள்.
“ம்மா, கோவில்ல பூஜை முடிச்சுட்டு போகும் போது என்னையும் கூட்டிட்டு போறீங்களா? அங்க ஒரு நாலு நாள் இருக்கறேன்…” என்றதும் அனைவரும் பதறிவிட்டனர்.
“என்ன ஸ்பூர்த்தி இது? ஏன்?…” என்று மேகா கேட்க,
“முடியலைம்மா. எனக்கும் கொஞ்சம் மாற்றம் தேவைப்படுது. ஒரு ரெண்டுநாளாவது…” என்ற பேத்தியை தாங்கவியலாமல் அணைத்துக்கொண்டார் மலர்.
“அவனுக்கு இருக்கு ஒருநாள். பேசட்டும். பேசட்டும். பொண்டாட்டின்னு வருவான்ல, வச்சிக்கறேன்…” என்று சுபத்ரா சொல்ல அவர் சொல்லியவிதத்தில் ஸ்பூர்த்தியே சிரித்துவிட்டாள்.
“கரெக்ட் பாட்டி, அன்னைக்கு வச்சு செய்வோம்…” என்றவள் முகத்தில் பழைய தெளிவு மீண்டிருக்க,
“சரி பூஜையை முடிச்சிருவோம்…” என்று சாமி கும்பிட ஆரம்பித்தனர்.
இடையே மோனிகா அஷ்வினுக்கு மாலை சிற்றுண்டி செய்து கொண்டு செல்ல அஷ்வின் பார்வை திறந்திருந்த கதவில் பதிந்து மீண்டது.
“ஸ்பூர்த்தி எங்கம்மா?…” என்றான் மோனிகாவிடம்.
“பூஜை ரூம்ல இருக்கா, நீ இதை சாப்பிடு அஷ்வின்…” என்ற மோனிகா,
“ஸ்பூர்த்தி மட்டும் இருப்பா. நாங்க வரவும் அவ கிளம்பிருவா…”
“ஓகே…” என்று சொல்லி தலையசைத்தான் அஷ்வின்.
அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டனர் அனைவரும்.
“அப்பா சீக்கிரம் வந்திருவாங்க. வர சொல்லிடறேன். பார்த்துக்கோ…” என மோனிகா வந்து சொல்ல,
“இப்ப எதுக்கு? நான் கேட்டேனா? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். அப்பாவை டென்ஷன் பண்ண வேண்டாம். ஸ்பூர்த்தி இருக்கா தானே?…” என்றதும் மோனிகாவும் கிளம்பிவிட்டாள்.
அவர்கள் சென்று பத்துநிமிடங்களாக ஸ்பூர்த்தி அவனிருந்த அறைக்குள்ளேயே வரவில்லை.
வெளியே பூவம்மாவுடன் பேசிக்கொண்டிருக்க குரல் மட்டும் கேட்டது இவனுக்கு. சற்று நேரம் பார்த்தவன்,
“ஸ்பூர்த்தி…” என்றான் சத்தமாக.
“மாமா கூப்பிடறாங்க. வரேன்…” என பூவம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் எழுந்து வர பார்த்தவனுக்கு விழிகள் விரிந்தது.
இத்தனை நாளில் அழுது வடிந்து என்னவோ ஒரு உடை என்றிருந்தவள் இன்றைக்கு பட்டு சுடிதாரில் பார்க்க பாந்தமாய் நின்றிருந்தாள்.
“உள்ள வான்னு கூப்பிட்டா தான் வருவியா?…” என அஷ்வின் அதட்டவும் வந்தவள்,
“எதுவும் வேணுமா மாமா?…” என்றாள்.
எதற்கு அழைத்தோம் என்று மறந்திருக்க படுக்கையை விட்டு எழுந்தவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான் அந்த வாக்கிங் ஹேண்டிலை ஊன்றியபடி.
“உட்கார். அந்த நோட்பேட் எடுத்துக்கோ. நான் சொல்றதை எழுதனும்…”
“ஹ்ம்ம்…” என்று எடுத்து வந்து சேரில் அமர்ந்தாள்.
“சும்மா கொஞ்சம் லிரிக்ஸ் தோணுது. எழுதி வச்சா சாங் போடலாம் பாரு…” என்றான்.
எப்போதாவது செய்வது தான். ஆனால் பாடல் முடிந்து வரும்வரை அவன் எழுதியது என்று யாரிடமும் சொல்லிக்கொள்ளமாட்டன்.
இன்று அவளை வைத்தே அஷ்வின் எழுத சொல்ல ஒன்றும் கூறாமல் எழுத ஆரம்பித்தாள்.
இரண்டு வரிகள் தான். அதற்கு மேல் சொல்லாமல் அவன் நடந்துகொண்டே அவனே இருக்க சொல்லட்டும் என இவளும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க சுற்றி வந்தவன் அவளின் பின்னால் வந்து நின்றான்.
“இப்பலாம் ஹேர் கட் பன்றதில்லையா ஸ்பூர்த்தி? நல்லா வளர்ந்திடுச்சே….” என கேட்க படக்கென்று திரும்பி அவனை பார்த்தாள்.
“அவ்வளோ கஷ்டமாவா கேட்டுட்டேன்?…” என்று கேட்டவன் மீண்டும் நடக்க நடந்துகொண்டே பாடவும் செய்ய ஸ்பூர்த்தியின் ஐம்புலன்களும் விழித்துக்கொண்டது.
பார்வை அஷ்வினை துளைக்க சளைக்காமல் அவள் பார்வையை எதிர்கொண்டவனின் இதழ்கள் பாடலை நிறுத்தவில்லை.
“மாமன்காரன் தானே, மாலைபோட்ட நானே ஆசை தீரவே பேசலாம் முதல்நாள் இரவே…” என்று பாடியபடி நடக்க ஸ்பூர்த்தி எழுந்து நின்றுவிட்டாள்.
நிச்சயம் நினைவில்லாத அஷ்வினால் தன்னிடம் இப்படியெல்லாம் பாடவோ, தன்னை சீண்டவோ முடியாது.
அவனின் பார்வையே வேறு. ஆனால் இப்போதிருப்பவன் தன்னை ஆதியிலிருந்து அந்தம் வரை அறிந்திருப்பவன்.
அதுவும் குறிப்புகள் கொடுப்பது போன்ற பாடல்களும், பேச்சுக்களும், பார்வையுமே அன்று ஸ்பூர்த்திக்கு அவன் மேல் தோன்றிய சந்தேகத்தை உறுதி படுத்த விழிகள் சிவந்தது.
அவனின் செயல்பாடுகள் அத்தனையும் ஞாபகம் வர ஒவ்வொன்றாய் வரிசையாய் பிண்ணிக்கொண்டு வந்தவளின் இறுதி இதோ அவன் எவ்வளவு தூரம் தன்னை முட்டாளாக்கி இருக்கிறான் என புரிந்தது.
“பிராட் மாமா…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
அவனுக்கு எல்லாம் தெரிகிறது. அதில் உள்ளுக்குள் அத்தனை உணர்வு பிரவாகம் ஆர்ப்பரித்தாலும் கோபமும் சேர்ந்தே பெருகியது.
“நானா?…” என அவளின் கேள்விக்கு கோபம் கொள்ளாமல் நடையை மெதுவாய் கதவு வரை எட்டி போட்டவன் அறை கதவை இழுத்து சாற்றினான்.
“இன்னும் எவ்வளோ நாள் இப்படியே ஏமாத்தலாம்ன்னு இருந்தீங்க?…” குரல் உடைந்து போக ஸ்பூர்த்தி கேட்க,
“நீ இன்னும் எவ்வளோ நாள் இதை தொடரனும்னு நினைச்சியோ அவ்வளோ நாள்…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
அவனின் பார்வையே குத்தி கிழிக்க அதனை எதிர்கொள்ள முடியாமல் ஸ்பூர்த்தி தான் தடுமாறி நின்றாள்.
அவனின் ரௌத்திரம் அஷ்வினிடம் தான் விருப்பத்தை கூறிய நாளில் இருந்ததை போலிருக்க தொண்டை வறண்டுவிட்டது.