“அவன் இன்னும் ஊருக்கே வரலைடா. புது பட பூஜைன்னு போயிருக்கான். நாளைக்கு தான் அங்க இருந்தே கிளம்புவான்…” மேகா சொல்ல,
“ஹ்ம்ம், வர வர அப்பாவுக்கு மேல பிஸியாகிட்டு வராங்க மாமா. தாத்தா கூட இப்ப ரொம்ப ஒப்புக்கறதில்லை. இந்த மாமாவோட…” நக்கலாய் நந்தன் சொல்ல,
“நீ வாயை மூடுடா. முதல்ல ஒரு படம் எடுத்து காமி. அப்பறம் மாமாவை பேசலாம்…” ஸ்பூர்த்தி கோபமாய் சொல்ல நந்தனுக்கு ஒருமாதிரியானது.
“விளையாட்டுக்கு தான் பேசினேன் ஸ்பூர்த்தி…” என்று சமாதானமாய் சொல்ல,
“நாமலே இப்படி குறைச்சு பேசலாமா நந்து? என்ன இது? மாமா அவரோட பெஸ்ட்டை குடுக்க எவ்வளோ ட்ரை பன்றாங்க. தெரியும் தானே? விளையாட்டுனாலும் மாமாவை இது நிச்சயம் ஹர்ட் பண்ணிடும். இனி இப்படி பேசாத நந்து…”
“ஏற்கனவே மீடியா மாமாவை விமர்சனம் செஞ்சிட்டு இருக்காங்க ராசியில்லை. ஒப்புக்கற மூவி எல்லாம் ஊத்திக்குது அப்படின்னு. இனி என் முன்னாடி பேசி பாரு…”
படபடவென்று பொரிந்துவிட்டு ஸ்பூர்த்தி அவளறைக்கு சென்றுவிட நந்தனின் முகம் வாடிவிட்டது.
“ம்மா…” மேகாவை பார்க்க,
“உனக்கு தெரியும் தானே அஷ்வினை எதுவும் சொன்னா அவளுக்கு புடிக்காதுன்னு. ஏன் கிண்டலடிக்கிற? அதுவும் நீயே சொல்லும்போது எனக்கும் வருத்தமா இருக்கு நந்து…” என்ற மேகா,
“நீயும் இந்த ஃபீல்ட்ல தான் சாதிக்கனும்னு நினைக்கிற. இப்படி ஒரு சூழ்நிலை எப்படி இருக்கும்ன்னு பார்த்து வளர்ந்தவன் தானே நீ? உனக்கு தெரியாதா? அதான் அவளுக்கு கோவம் வந்திருச்சு…” என்றாள்.
“ஸாரிம்மா…”
“ஸாரி எல்லாம் வேண்டாம். அங்க அஷ்வினும் உங்களை தான் நினைச்சிட்டு இருப்பான். டைம் கிடைக்கவும் கால் பண்ணிடுவான். நாளைக்கு பட பூஜை முடியவும் கிளம்பி வருவான்…” என்று சொல்லி மகனை அனுப்பி வைத்தாள் மேகா.
“ஹ்ம்ம், என்னவோ நேரம் சரியில்லை அஷ்வினுக்கு. மோனிட்ட சொல்லி அஷ்வின் ஜாதகத்தை பார்க்க சொல்லனும்….” சுபத்ரா மேகாவிடம் சொல்ல,
“ஜாதகம்ன்னதும் ஞாபகம் வருதுத்தை. அஷ்வினுக்கு கல்யாண ராசி கூடி வந்திருச்சுன்னு அண்ணா சொன்னாங்க. சொந்தத்துல சில பொண்ணுங்களோட போட்டோஸ் அனுப்பியிருக்காங்களாம். நாளைக்கு அஷ்வின் வரவும் காமிக்கனும்னு சொன்னாங்க…”
“நல்லது, ஒரு கல்யாணம் பண்ணி வச்சா புது பொண்ணோட வரவுல கூட அஷ்வினுக்கு அதிர்ஷடம் இருக்கலாம்…” என்றார் சுபத்ரா.
“அவன் அவனோட திறமையை வச்சு வளர்ந்து இவ்வளோ தூரம் வந்திருக்கான். சமீபமா அவன் பண்ணின படங்கள் தான் தோல்வியே தவிர பாட்டெல்லாம் ஹிட் தான். அதுக்கு அவனை குறை சொல்ல முடியாதே? அவன் வேலையை சரியா செஞ்சு குடுத்துட்டான். இதுல அதிர்ஷ்டம் எங்க இருந்து வந்துச்சு?…”
அதுவரை அமைதியாக இருந்த தேவராஜ் பேசிவிட மேகாவிடம் சுபத்ரா முகத்தை சுருக்கி வைத்து பழிப்பு காட்டினார்.
“பதில் சொல்ல முடியலைன்னா இதை ஒன்னை செஞ்சிடு…” என சுபத்ராவை சொல்லியவர்,
“இந்த அதிர்ஷடம் அது இதுன்னு எதாச்சும் அஷ்வின் முன்னாடி பேசி வைக்காத. அவனுக்கே புடிக்காது…” என்ற தேவராஜ்,
“வர்ணா பொண்ணு பார்க்கறது இருக்கட்டும். முதல்ல அவனை இந்த சுட்சுவேஷன்ல இருந்து வெளில வர டைம் குடுக்க சொல்லு. கொஞ்ச நாளா இதுல டவுனா இருக்கான் அஷ்வின்….” என்றார் மருமகளிடம்.
“அது எனக்கு தெரியாதா ம்மா? மாமாவுக்கு கால் பண்ணினா எடுக்கவே இல்லை. அப்பாவுக்கு கூப்பிட்டா பேசலைன்னு சொல்றாங்க…” என்று பேசிக்கொண்டிருக்க ஹைதராபாத்தில் நடந்துகொண்டிருந்த புதிய பட பூஜையின் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்தது.
“பேசாம அதை பாரு. எனக்கு நிறைய வேலை இருக்கு. இல்லைன்னா வந்து எனக்கு ஆடிட்ல ஹெல்ப் பண்ணு…” என்றதும் ஸ்பூர்த்தி டிவியை போட்டுவிட்டு அமர்ந்துவிட்டாள்.
பட பூஜையில் ப்ளூ கலர் ஷர்ட்டிலும், ஜீன்ஸிலும் பார்க்க பார்க்க அவனுருவம் இன்னுமே மனதில் ஆழமாய் பதிந்து போனது ஸ்பூர்த்திக்கு.
நினைக்கவே இல்லை அவனை இந்தளவு விரும்புவோம் என்று. ஆனால் காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.
அவனருகே இருந்தவரை எதுவும் தோன்றாத பெண்ணுக்கு படிப்பு என்று வேறிடம் கிளம்பவும் தொட்டதற்கெல்லாம் அஷ்வினை தேடினாள்.
ஒவ்வொன்றும் அவனின் பார்வை வழியே தான் அவளுக்கு பயணமானது, பழக்கமானது.
அவளை வழி நடத்துவதாகட்டும், கேட்ட நொடி செய்துதருவதாகட்டும் என்று அதிரனுக்கு வேலையே வைக்காமல் அஷ்வின் பார்த்துக்கொண்டான்.
“அஷ்வின் இல்லைன்னா இவ என்ன பண்ணுவா?…” என சுபத்ரா கிண்டல் பேசும் அளவிற்கு இருந்தது அவளின் செயல்கள்.
“என்னோட மாமா எனக்கு பன்றாங்க. உங்களுக்கு என்னவாம்?…” என மிதப்பாய் கேட்பவள்,
“ஏன் மாமா? சரியா?…” என்பாள்.
“ஆமாடா, நான் உனக்கு செய்யாம எப்படி?…” என்பவன்,
“இதையெல்லாம் சொல்லி எதுக்கு பாட்டி சீண்டறீங்க?…” என்று சுபத்ராவை தான் கேட்பான்.
அப்போதெல்லாம் அத்தனை பெருமையாய், சந்தோஷமாய் இருக்கும். ஆனாலும் அவனின் அன்பில் ஒருவித எல்லை அவன் வகுத்திருக்க அதையும் ஸ்பூர்த்தி உணர்ந்துதான் இருந்தாள்.
நினைப்பும், நேசமும் அந்தளவில் இருக்க திருமணம் என்ற கற்பனைக்குள் செல்லவே இல்லை.
நம்பிக்கையா? இல்லை அப்படி நடக்கும் போது தன்னையன்றி வேறு யாரை தேர்வு செய்துவிடுவார்கள் என்னும் தைரியமா? ஸ்பூர்த்தி அப்படி எந்தவித குழப்பமும் இன்றி சந்தோஷமாக தான் இருந்தாள்.
பல்லவனின் முடிவு வேறாக இருக்க, வீட்டில் யாருக்கும் அந்த எண்ணமே உருவாகாமல் இருக்க ஸ்பூர்த்தி மனது யாருக்குமே தெரியாமலிருந்தது.
மோனிகாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது மதியம் மூன்று மணி போல அஷ்வின் வந்துவிடுவான் என்று.
அதுவரை வீட்டில் மற்ற வேலைகள், தாயுடன் பேச்சு, நந்துவோடு அரட்டை, மதியம் வீட்டிற்கு வந்த அதிரனிடம் தனது வன நாள் அனுபவங்களை சொல்லி என நேரத்தை போக்கியவள் கிளம்பிவிட்டாள் அஷ்வின் வரும் நேரம் பார்த்து.
“கரெக்ட்டா அவன் வர நேரத்துக்கு தான் போகனுமா? கொஞ்சம் லேட்டா போயேன் ஸ்பூர்த்தி? அவனும் ரெஸ்ட் எடுக்கட்டும்….” மேகா சொல்ல,
“போங்கம்மா, எதாச்சும் சொல்லிட்டே இருங்க நீங்க…” என்று தாயின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள் அத்தனை உற்சாகத்துடன் கிளம்ப அஷ்வின் வரும் நேரத்திற்கு சரியாய் செல்ல முடியவில்லை.
வீடு சென்று சேரும் அரைமணி நேரம் முன்பே அஷ்வின் வந்துவிட்டிருந்தான் அங்கே.
வீட்டிற்குள் நுழைந்தவள் அவனை தேட மோனிகா அவன் அறையில் இருப்பதாக சொல்லி முதலில் அவளை சாப்பிட வைத்து அதன் பின்னரே விட்டாள்.
“என்னவோ அப்ஸட் போல. வந்ததுல இருந்து ஒண்ணுமே பேசலை…” என மகனை பற்றி சொல்ல,
“ட்ராவல் டயர்டா இருக்கும்த்தை. நான் பார்த்துட்டு வரேன்…” என மேடையிலிருந்து இறங்கிக்கொண்டவள் உடல்மொழியில் ஒரு பவ்யமும், மரியாதையும் தன்னைப்போல ஒட்டிக்கொள்ள கூடவே துள்ளலும்.
“ம்ஹூம், அதி அண்ணா அவன் பர்த்டேக்கு வாங்கினது. நல்லா இருந்துச்சுல…”
“ஆமா, கண்டிப்பா சுத்தி போடுங்க. ஹீரோ மாதிரி இருந்தாங்க…” என சொல்லி சிரிக்க,
“என்ன கிண்டல் பன்றியா? அவன் முன்னாடி இதை சொல்லு பார்ப்போம்…” என மோனியும் சொல்ல,
“ஏன் சொல்லாம? கண்டிப்பா சொல்லுவேன். இன்னைக்கே கூட சொல்லுவேன்…” என்று குதித்துக்கொண்டு அவள் செல்ல,
“ஹ்ம்ம், காட்டுக்கு தான் ஆபீஸர் மேடம். ஆனா வீட்டுக்குள்ள இன்னும் சின்னபிள்ளை…” என்று சிரித்தபடி அமர்ந்துகொண்டாள் மோனிகா.
மாடிக்கு வந்தவள் அஷ்வின் அறை திறந்திருக்கவும் வாசலில் நின்று எட்டிப்பார்த்து கதவை லேசாய் தட்ட அங்கே சேரில் அமர்ந்திருந்தவன் கையில் ஒரு கவரும், அதில் எதையோ தீவிரமாய் பார்த்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது.
“உள்ள வா ஸ்பூர்த்தி…” என்று நிமிராமல் அழைத்தான்.
“அதானே பார்த்தேன், வந்தது தெரிஞ்சிருச்சு. சரியான பாம்பு காது…” என சத்தமின்றி சொல்லிக்கொண்டு அவள் உள்ளே வர,
“ஹ்ம்ம், உட்கார். எப்படி இருக்க?…” என்றான் புன்னகையுடன்.
“நல்லாயிருக்கேன் மாமா….” என்றவளுக்கு என்ன பேச என்று தெரியவில்லை.
வந்து பார்க்கும் வரை அத்தனை வாயாடிக்கொண்டிருந்தவள் அவனின் பார்வையில் மௌனியாகி போனாள்.
“எத்தனை நாள் லீவ்? நேத்தே வந்துட்டன்னு மாமா சொன்னாங்க…” என்று அவளின் வேலை பற்றிய விவரங்களை கேட்டு அதை பற்றிய பேச்சுக்கள் தான் இருந்தது அவனிடம்.
“ம்ஹூம், அதெல்லாம் இல்லை. கொஞ்சம் பிரஷர்…” என்றவன் முகம் எப்போதும் போலிருக்க,
“நானும் நியூஸ் பார்த்தேன். இதையெல்லாம் கண்டுக்காதீங்க…” சிறுபிள்ளை போல அவனுக்கு புத்தி சொல்ல புன்னகைத்து தலையசைத்தான்.
“அதெல்லாம் மேனேஜ் பண்ணிடலாம். இதுல இதையெல்லாம் தாண்டி தானே வரனும்…” என்று சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் அத்தனை கொதித்தது அஷ்வினுக்கு.
சமீபமாய் அவன் இசையமைத்த படங்கள் பெருமளவு வெற்றிபெறவில்லை. பாடல்கள் பாராட்டு பெற்றாலும் படம் சரியாக போகவில்லை என்பதால் அவனை ராசியில்லாத இசையமைப்பாளர் என்னும் வகையில் பேச ஆரம்பித்திருந்தனர்.