அன்று சென்னையின் பிரபல கல்லூரியின் அறுபதாவது ஆண்டின் நிறைவு விழாவுக்காக சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ஆவுடையப்பனும், பசுமை அரண் அறக்கட்டளை நிர்வாக தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்பூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு சிறப்புரைக்காகவும், அறக்கட்டளை சார்பாக லட்சம் மரக்கன்றுகளையும் தர வந்திருந்தாள் ஸ்பூர்த்தி.
விழா ஆரம்பிக்கப்பட சிறப்பானதொரு பேச்சாளரை போல இருந்தது அவளின் உரை.
வனத்தை பற்றியும் அதன் பெருமிதங்கள், அதனால் காக்கப்படும் வன உயிரினங்கள், நீர் வளம் என்று அத்தனையும் சேர்த்து கேட்பவர்களுக்கு அலுத்துவிடாமல் சுவாரசியம் குறையாமல் சொல்லி முடித்தாள்.
தன்னுடைய பணியையும், படிப்பையும் குறிப்பிட்டவள், மாணவர்களிடம் அந்த துறையை பற்றியும் எடுத்துரைத்தாள்.
பணி வெறும் பணியாக மட்டுமல்லாது அங்கே இருப்பவற்றை எவ்விதத்தில் எல்லாம் மேன்படுத்தலாம் என்றும் விளக்கி கூறினாள்.
விழா சிறப்பாக முடிய மதிய உணவு நேரத்தை கடந்துவிட்டது. முடியும் வரை பொறுமையாக அமர்ந்திருந்தவள் தான் கிளம்ப வேண்டிய நேரம் வரவும் ஆவுடையப்பனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப முற்பட்டாள்.
“வெல் ஸ்பீச் ஸ்பூர்த்தி. நல்லா பேசினீங்க. பேசாம அரசியலுக்கு வரலாம்….” என்று பாராட்ட,
“தேங்க் யூ ஸார். அவ்வளோ எல்லாம் வேண்டாம். அதான் நீங்க இருக்கீங்களே? உங்களை மாதிரி இன்னும் சிலர் அரசியல்ல இருந்தா போதுமே. அடுத்த தலைமுறைக்கு சிறந்த ஆட்சியை தர முடியும். எடுத்துக்காட்டாகவும் இருக்க முடியும்…”
“வித் ப்ளஷர் ம்மா. என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் எப்பவும் பண்ணுவேன், கிளம்புங்க. அப்படியே உங்க வீட்டுல எல்லாருக்கும் என் வாழ்த்தை சொன்னதா சொல்லிருங்க…” என்று அவன் கை குவிக்க,
“தேங்க் யூ ஸார்…” என்று கிளம்பிவிட்டாள்.
ஆவுடையப்பன் மேல் அத்தனை மரியாதை. அஷ்வினை விட ஓரிரு வயது தான் மூத்தவனாக இருப்பான் என்பது கணிப்பு.
கமிஷனரின் மேல் சந்தேகம் என்றதும், அதற்கான ஆதாரங்களின் நகலை காண்பித்ததும் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுக்க செய்ததோடு கைதாகவும் செய்திருக்க விளைவு பதவி பறிக்கப்பட்டு, இப்போது காவல்துறை ஆணையர் காவல் சிறையில்.
கடுமையான தண்டனை வழங்கப்பட்டு அந்த வழக்கின் பல்வேறு குற்றவாளிகளை பிடித்தும், சங்கிலி தொடரான அந்த வலையில் ஈடுபட்டிருப்பவர்களை பிடிக்கும் தீவிரம் இன்னுமே மும்மரப்படுத்தப்பட்டது.
இதை போன்ற அரசியலில் ஒருசிலர் இருந்தால் கூட நாட்டின் நிலைமை மோசமாகாமல் முன்னேற்ற பாதைக்கு இலகுவாய் இட்டு செல்ல வழிவகுக்கும் என்பதில் அத்தனை நம்பிக்கை.
ஸ்பூர்த்திக்காக பாதுகாவலன் வசந்த் காத்திருக்க அங்கிருந்து வெளியேறும் வரை அவளின் நடையில் இருந்த ஒருவித அமைதி அதன் பின் வேகமெடுத்தது.
காரை அவள் நெருங்கும் முன்பே வசந்திடம் விவரங்களை கேட்டு பேசியபடி வந்துகொண்டிருந்தாள்
“கால் எதுவும் வந்ததா அங்கிள்?…” அவனிடம் கேட்க,
“அஷ்வின் ஸார் பேசினார். பங்க்ஷன் முடிஞ்சிருச்சாம்…” என்னும் பொழுதே புன்னகையும், கூடவே சிறு வருத்தமும்.
அன்று டெல்லியில் இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால், குடியரசு தலைவர் கையினால் வழங்கப்படும் விருதுகள் வழங்கும் விழா.
சிறந்த இயக்குனருக்கான விருதை நந்தன் தேவராஜ் பெறுகிறான். சிறந்த இசையமைப்பாளர் விருது அஷ்வினுக்கும், சிறந்த நடிகருக்கான விருது அதிரன் தேவராஜுக்கும் கிடைக்கப்பெற்றது.
இதில் கலந்துகொள்ளமுடியாமல் ஸ்பூர்த்தி இங்கே ஒப்புக்கொண்ட விழாவில் பங்கேற்றுவிட்டாள்.
தேவராஜ் தான் கூட ஸ்பூர்த்திக்கு பதிலாக செல்கிறேன் என்றதற்கு மறுத்துவிட்டாள்.
இது அவளுக்காக உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம். அவளின் ஆசையை, கனவை கையாள குடும்பமாய் மட்டுமல்லாது, அவளுக்காக அரசாங்கத்திலும் உறுதுணையாக ஆட்கள் இருக்க அதில் சின்ன பிசிறலும் ஏற்படுவதை அவள் விரும்பவில்லை.
“என்னோட ரிஸைனிங்க்கு அப்பறம் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு. இதுல நான் எப்பவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன்…” என உறுதியாய் சொல்லிவிட்டாள்.
அந்த NGO ஆரம்பிக்க சட்டப்படி அரசாங்கத்திடம் பதிவு செய்ததோடு தேவையான உதவிகலை செய்து அமைச்சர் ஆவுடையப்பன் பெரிதும் துணையாய் நிற்க, அந்த பணியில், சேவையில் தானும் பங்கேற்றுக்கொண்டான்.
அறக்கட்டளை வெறும் வனத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, காடு சார்ந்த மக்களின் வசதிகளையும் மேம்படுத்த பெரிதும் உதவியாய் இருந்தது.
முன்பே பணியில் இருக்கையில் தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் மலைவாழ் மக்களின் உயர்வுக்கு தன்னால் முடிந்தளவு ஸ்பூர்த்தி செயல்பட்டிருக்க அதற்கான பாராட்டுதல்களும் அவளுக்கு கிடைக்கபெற்றிருந்தது.
இந்த NGO ஆரம்பிப்பதற்கு அது பெரிதும் துணையாக இருந்தது. அவளின் பணிகள் மேலும் சிறக்க செயல்பட அனேகம் பேர் தாங்களாகவே முன்வந்து கைகோர்த்தனர்.
அதில் காடுகளை பாதுகாப்பதும், அங்கிருக்கும் மக்களுக்கு படிப்பு, வாழ்வியல், அடிப்படை வசதி என்று கவனிப்பதாகவும் எல்லாமே அடக்கமாக குறுகிய காலத்தில் இன்னும் பேசப்பட்டது பசுமை அரண்.
இப்போது கல்லூரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏர்போர்ட் நோக்கி சென்றவள் தனது மொபைலில் விருது விழாவை பார்த்துக்கொண்டிருந்தாள்.
மோனிகாவும், பல்லவனும் இதனை அவளுக்கு வீடியோவாக எடுத்து அனுப்பியிருந்தனர்.
அதில் சிறு மனத்தாங்கலும் கூட இருந்தது. இதற்கு நீ வந்திருக்க வேண்டாமா என்று.
லேசாய் சந்தோஷத்தில் கண்கள் கலங்கிவிட்டது. இது நந்தனின் முதல் படம். கன்னி முயற்சி.
அவனின் பெரிய கனவு. முதல் படத்திலேயே விருதை பெற்றிருக்க அது அவனின் முகத்தில் பூரிப்பாய் வெளிப்பட்டிருந்தது.
இந்த ஒரு வருடத்தில் எத்தனை விஷயங்கள்? முன்பு பணியில் இருந்த பகுதிக்கு அவ்வப்போது செல்லவும் மறப்பதில்லை அவள்.
மீண்டும் அடுத்த வாரம் அங்கே செல்லவேண்டும் என்பதை ஞாபகப்படுத்திகொண்டாள்.
ஏர்போர்ட் நுழையவும் காரிலிருந்து இறங்கியவள் நேரத்தை பார்த்துக்கொண்டே விரைவாக நடந்தாள்.
டெல்லி செல்லும் விமானம் தயாராக இருந்தது. அன்று இரவு அங்கே இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடாகி இருக்க அதற்காகவேனும் செல்லவேண்டுமே.
சரியாய் உள்ளே சென்று அமர்ந்த பின்னர் தான் ஆசுவாசமானாள். உடையை மாற்ற கூட நேரமில்லை.
தனது மொபைலில் இருந்து அழைக்க முற்பட அதற்குள் போனை வைக்கும்படி சொல்ல வைத்துவிட்டு அமர்ந்துகொண்டாள்.
கண்களை மூடிக்கொண்டவள் சிறிது நேரம் உறங்க நினைக்க தூக்கம் வருவேனா என்றது.
மனதிற்குள் விருது விழாவிற்கு சென்றிருக்க வேண்டுமோ என்னும் உணர்வு அவளை பந்தாடியபடி இருக்க முடிவெடுத்து, முடிந்த பின்பு இதென்ன இப்படி என தன்னையே கடிந்துகொண்டாள்.
முகத்தில் லேசாய் புன்னகை. காதில் ப்ளூடூத்தை மாட்டியவள் பாடலை ஓடவிட பட்டியலில் முதலில் இருந்தது அஷ்வினும், ஸ்பூர்த்தியும் இணைந்து பாடிய பாடல்.
தன்னை அவனுடன் பாட வைத்து நினைத்ததை சாதித்தவன் அதன் பின் அதனை தொடர்கதையாக்கிவிட்டான்.
வாக்குகள் பரிமாறப்பட்டதை போல சொன்ன வார்த்தைகளும் சிந்தாமல் சிதறாமல் கடைபிடிக்கப்பட்டது.
அஷ்வினின் பாடல் ஒன்று ஸ்பூர்த்தியுடன் வெற்றிபெற்றதை போல, சமீபமாய் அதிரனுடன் இணைந்து அஷ்வின் பாடிய பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதிரனின் குரலை போல கவர்ந்திழுக்கும் காந்த குரலாய் அஷ்வினதும் இருக்க அவனை அவன் இசையமைக்கும் படங்களில் மட்டுமல்லாது, மற்ற படங்களிலும் பாடும்படி கேட்டுக்கொள்ள மறுக்கமுடியாமல் செய்தும் தந்தான்.
அதுவும் ஸ்பூர்த்தி, அதிரனின் சொல்லுக்குடன்பட்டு. அதை மாற்ற முடியவில்லை.
“திறமை இருக்கும் போது பூட்டி வச்சுக்க கூடாது சேம்ப். வாய்ப்புகள் தேடி வரும் போது எட்டி உதைக்கிற மாதிரி இருக்கும் மறுப்பு சொல்றது. வாழ்க்கை வாழறது ஒருமுறை. நம்மோட இருப்பை அழுத்தமா பதிவு பண்ணனும். நமக்கு பிறகு இங்க நம்மை ஞாபகம் வச்சுக்க சொந்தங்கள் மட்டுமில்லை…”
“இந்த மாதிரி இசை, பாடல் மூலமா நம்மோட தொழில் நிறைய முகமறியா சொந்தங்களை நமக்கு தந்திருக்கு. நம்ம மூச்சுக்கு பின்னாலும் நம்மோட ஞாபகங்கள் அவங்களோட கலந்திருக்கும். அது கடவுள் நமக்கு குடுத்த வரம்….”
“உன் இசை எந்தளவுக்கு காற்றோடு நிரம்பி இருக்கோ, அதுக்கு உன் குரல் உயிர் குடுக்கும் போது இன்னுமே ஸ்பெஷல். பாடு சேம்ப்….” என்று தன்னோடு சேர்ந்து பாட வைத்தவன் பின் தனியாக பாடும்படி அஷ்வினை முடுக்கினான்.
அவனின் பாடல்கள் வரவேற்பை பெற பெற அஷ்வினுக்கும் அது அத்தனை பிடித்தமானது.
முன்பு என்னவோ இசையமைப்பது மட்டும் போதுமாக இருக்க தோன்றியது இப்போது பாடுவதையும் விரும்பியே செய்ய ஆரம்பித்தான்.
அதில் பெரும்பங்கு தேவராஜிற்கு என்றால் மிகையில்லை. அத்தனை தூரம் அஷ்வினை செதுக்கியிருந்தார் தேவராஜ்.
தனது மாணவன் என்னும் பெருமிதம் என்றைக்கும் அஷ்வினை பார்த்ததும் அவருள் ஊற்றெடுக்கும்.
இப்படி குடும்பம் மொத்தமும் கலைவானுலகில் சஞ்சரிக்க, அதை பற்றிய எண்ணங்களில் பாடல்களோடு ஸ்பூர்த்தி சஞ்சரிக்க டெல்லி வந்து இறங்கினாள்.
வந்ததும் தனது மொபைலை எடுக்க அஷ்வினை தவிர அத்தனைபேரும் அவளுக்கு செய்தி அனுப்பியிருந்தனர்.
“கொழுப்பு, எப்பவும் நான் தான் தேடனும் இவங்களுக்கு…” என்று அஷ்வினின் புகைப்படத்தில் குத்தியவள்,