“நீ ஏன் உங்கப்பாவுக்கு போட்டோஸ் அனுப்பின?…” என்று கேட்க அவனை முறைத்துவிட்டு திரும்பியவள்,
“இந்த சாங் பாட கூடாது. அவ்வளோதான். யாரோடையாச்சும் பேர் பண்ணுனீங்க இருக்கு உங்களுக்கு…” என்று கோபமாய் சொல்லிவிட்டு அவள் செல்ல அஷ்வின் முகத்தில் மத்தாப்பூக்கள்.
“எங்க சேம்ப்? ஸ்பூர்த்தி அதுக்குள்ளே போயாச்சா?…”
“ஹ்ம்ம், ஆமா, நான் யாரோடையும் பேர் பண்ணி பாட கூடாதாம். மிரட்டிட்டு போறா…”
“இதென்னடா? ம்யூஸிக்ல இப்படி சொல்ல கூடாதே? ஸ்பூர்த்திக்கு தெரியுமே?…” என்ற அதிரன்,
“இப்படியெல்லாம் மேகா சொன்னதே இல்லை…” என்றும் சொல்ல,
இசை இசைக்க அதிரனும், அஷ்வினும் பாடலை பாட ஆரம்பிக்க மெல்லிய நடனமும் பாட்டிற்கேயான துள்ளலுடன் இருவரும் பாட, பார்ப்பவர்களுக்கு இருவரும் இரட்டையர் போல காட்சியளித்தனர்.
அவர்கள் இருவரும் பாடிய பாடலுடன் சேர்ந்து காண்பவர்களும் சேர்ந்தே பாட ஒருவரும் இருக்கையில் இல்லை.
ஒருபக்கம் எழுந்து ஆட்டமாட, இன்னொருபக்கம் அதனை உற்சாகப்படுத்த என்று அத்தனை குதூகலம்.
பாடல் முடியும் வரை அனைவருமே மிதக்கத்தான் செய்தனர். பாடி முடித்ததும் அதிரனும் அஷ்வினும் ஹைபை கொடுத்துக்கொள்ள இருவரையும் இன்னொரு பாடல் பாடும்படி எல்லோரும் சப்தமெழுப்பி வேண்டுகோள் வைக்க,
“என்ன மாமா?…” என்றான் அஷ்வின்.
“ஹ்ம்ம், இதே சாங் பாட முடியாது. திடீர்ன்னு இன்னொன்னா?…” என்று அதிரன் யோசிக்க,
“அதி…” என அழைத்தார் தேவராஜ்.
“அப்பா சாங் புடிச்சுட்டாங்க…” என்று தேவராஜின் அருகே சென்று கேட்டுவிட்டு வந்து அஷ்வினின் காதில் சொல்ல,
“அந்த சாங் எப்படி ரெண்டுபேரும்?…” அஷ்வின் யோசிக்க,
“பாடலாம்….” என்ற அதிரன் பின்னால் இருந்த இசை கலைஞர்களுக்கு பாடலை சொல்ல ட்யூன் ரெடியானது.
“மெட்டு போடு, மெட்டு போடு…” என்று அதிரன் துவக்கிவைக்க அஷ்வின் பிடித்துக்கொண்டான்.
ஒரு வரி அதிரனும், இன்னொரு வரி அஷ்வினும் சில இடங்களில் இருவருமே சேர்ந்து பாட என்று பாடல் முடியும் வரை ஆட்டம் தான் அரங்கத்தில்.
அனைவரின் கரவொலியை நெஞ்சில் கைவைத்து சிரம் தழைத்து ஏற்றுக்கொண்டவனின் புன்னகையுடன் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடந்தேற நேரம் சென்றதே தெரியவில்லை.
நள்ளிரவிற்கு மேல் தான் அறைக்கே வந்தனர். அதிகாலை விமானம். சென்னை கிளம்பவேண்டும்.
வந்ததுமே அஷ்வின் படுத்துவிட்டான். ஸ்பூர்த்தியிடம் எதுவும் பேசாமல் முத்தமிட்டு அணைத்துக்கொண்டவன் அவள் தோளில் தலை சாய்த்து படுத்துக்கொள்ள,
“இப்படி எதையாச்சும் பண்ணி என்னை கூல் பண்ணிட்டா நான் எங்க சண்டை போட மாமா?…” என புலம்பியபடி உறங்கி போனாள்.
மறுநாள் காலை கிளம்பி சென்றதும் அஷ்வின் ஸ்டோடியோவிற்கு செல்ல ஸ்பூர்த்தி மீண்டும் எழும் பொழுது அவனில்லை.
அவனுக்கு போன் செய்ய பிஸி என்று சொல்லி பதில் அனுப்பியதும் வீட்டில் அவளின் அன்றாட வேலைகளை பார்த்துகொண்டிருந்தாள்.
“நாங்க ரெடி, போய்ட்டு வரோம்…” என்று மோனிகா வர,
“எங்க ரெடி? சொல்லவே இல்லை?…” ஸ்பூர்த்தி கேட்க,
“என்ன சொல்லலையா? கோவிலுக்கு போறோம்ன்னு சொன்னோம்ல?…” மலர் சொல்லவும் தான் ஞாபகம் வந்தது.
“ஆமா, நான் தான் மறந்துட்டேன்….” என ஸ்பூர்த்தி தலையில் தட்டிக்கொண்டாள்.
“நீ வரலைன்னு சொல்லிட்ட. அஷ்வின் வேலை இருக்குன்னுட்டான். வேண்டுதலை தள்ளி போட முடியாதுல…” என்று மோனிகா சொல்லிவிட்டு கிளம்பினாள் வீட்டினருடன்.
“நீ தனியா போரடிச்சா அம்மா வீட்டுக்கு போய்ட்டு வா ஸ்பூர்த்தி. அவன் எப்போ வருவானோ?…” என்று மலர் சொல்ல,
“இருக்கட்டும் பாட்டி. போரடிச்சா போக போறேன்….” என பாட்டியை கட்டியணைத்து அனுப்பி வைத்தாள்.
விருது கிடைத்த மகிழ்ச்சியை வேண்டுதலாக நிறைவேற்ற கோவிலுக்கு கிளம்பிவிட்டனர்.
அவர்களுடன் சுபத்ராவும் இணைந்துகொள்வதாக சொல்ல இப்போது யாருமற்ற வீடு வெறிச்சென்று இருந்தது.
மீண்டும் நன்றாக உறங்கி எழுந்தவள் முகத்தில் பெரும் களைப்பு. அப்படியே படுத்துக்கொண்டாள்.
வீட்டில் ஆட்கள் இருந்தாலாவது கலகலப்பாய் வளைய வரும் பெண். தனியாய் அங்கே என்ன செய்ய?
மேகாவிற்கு அழைக்க வேலையில் இருப்பதாக சொல்லிவிட்டாள். அதன் பின் அழைக்கவில்லை. அங்கே செல்லவும் தோன்றவில்லை.
சாப்பிட்டுவிட்டு சோபாவில் படுத்துக்கொண்டவள் மீண்டும் ஒரு உறக்கம். தொடர் அலைச்சல், உழைப்பு என்று ஓய்வுக்கு உடல் கெஞ்சும் அளவிற்கு தான் சுற்றி வந்தாள்.
இப்போது உறங்கிக்கொண்டிருக்க தலையை யாரோ தூக்கி வைப்பதை போலிருக்க லேசாய் கண்விழித்தவள் அங்கே அஷ்வினை பார்க்கவும் அவனின் வயிற்றுப்பக்கம் திரும்பி அணைத்துக்கொண்டாள்.