“தட்ஸ் குட்…” என்று சொல்லி அவன் சென்றுவிட அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
“சரியான கல்லுளிமங்கன். கொஞ்சமாச்சும் மூஞ்சில ஒரு சிரிப்பு தெரியுதா? இல்லை கோவமாவது…” என்றவளுக்கு அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள்.
அன்றைய நாள் போல அவன் தன்னிடம் கொஞ்சமும் கோபத்தையோ, இல்லை ‘இப்படி பேசினாயே அன்று’ என்னும் உணர்வையோ காண்பிக்காதது புரிந்தது.
ஒரு வயதிற்கு மேல் அவளிடம் அவன் அணுகுமுறை விலகலாக தான் இருந்திருக்க, இன்றோ தன்னை தொட்டு தூக்கி வந்தது எல்லாம் சேர்ந்து அடுத்தடுத்து குழப்பத்தில் ஆழ்த்தியது.
அதனை நினைத்து சந்தோஷப்பட கூட முடியாமல் இதையும் முதலுதவி லிஸ்ட்டில் சேர்ப்பான் அவன் என கடுப்பாக நினைத்தாள்.
இதற்கு தான் நேரில் சந்திக்காமல் இருந்தது. தன்னை குறித்தான எண்ணம் இப்போது வலுப்பெற்றது.
அவனிடத்தில் என்றுமே தன்னால் எதிர்த்து நிற்க முடியாமல் போய்விடுமோ என்று தோற்றம் பயமுறுத்த தலையை தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஐந்து பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். வெளியே ஜீப் வந்து நின்ற சத்தம் கூட அவளுக்கு தெரியவில்லை.
இருட்ட துவங்கி இருந்தது வெளியே. சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று நினைக்க எழுந்தமர்ந்தாள்.
“ஸ்பூர்த்திப்பா…” குரல் மொத்தமும் வாஞ்சையுடன் மிளிர அவளின் தந்தை.
அதிரன் தேவராஜ். இன்றளவும் குறையாத பொலிவுடன், உருவத்தில் என்றும் இளமை என்று அதே நடையுடன். நிதானமும், புன்னகை முகமுமாய் வந்துவிட்டான்.
“ப்பா…” என கை விரித்தவளை அணைத்துக்கொண்டவன்,
“என்னப்பா, இப்படி விழுந்திருக்க?…” என்றான் மகளின் கால் காயத்தை பார்த்துவிட்டு.
“அதை விடுங்கப்பா. நத்திங் ப்பா…” என்றவள்,
“அம்மா எங்க?…” என்றாள்.
“வழில ஒரு கோவில் பார்த்ததும் உன் அத்தை போகனும்னு சொன்னாங்க. அம்மாவும் சாமி கும்பிட்டு வரேன்னாங்க…”
“நீங்களும் விட்டுட்டு வந்துட்டீங்க? இதை நான் நம்பனுமா?…” ஸ்பூர்த்தி கேட்க,
“நிஜமாடா. அம்மாவுக்கு இன்னும் உனக்கு அடிபட்டது தெரியாது. அதான் கும்பிட்டு வரட்டும்ன்னு நான் முன்னாடி வந்துட்டேன்…”
“உங்க சேம்ப் உங்ககிட்ட மட்டும் தான் சொன்னாராக்கும் எனக்கு அடி பட்டிருக்குன்னு?…” என தந்தையின் மடியில் சாய்ந்துகொண்டாள்.