“ப்ச், உங்ககிட்ட, உங்க சேம்ப்கிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியுமா?…” என்றவள்,
“அம்மா தான் வர சொன்னாங்க. ஆனா அவங்களையே காணும். வரட்டும் கேட்கறேன்…”
“மேகா என்னடா பண்ணுவா?…” மனைவியை எதுவும் சொல்லிவிட கூடாதென்று அப்போதுமே அவன் மெனக்கெட,
“ஆமா, வர சொல்லிட்டு என்னை பார்க்க கூட இங்க இல்லை. நான் கேட்கமாட்டேனா? வா வான்னு மட்டும் சொல்ல முடியும்…”
“நீ வரதுக்குள்ள வந்திடனும்னு தான் கிளம்பினா. இங்க அந்த கோவில்ல விசேஷம் போல. அதான் காட்ஸ் கூட அனுப்பியிருக்கேன். வரட்டும். இப்போ என்ன அப்பா வந்துட்டேன்ல…”
“ஹ்ம்ம் ஓகே, அம்மாவை எதுவும் சொல்லலை. போதுமா?…” என்றவள்,
“உங்க சேம்ப் ரொம்ப பன்றான். எனக்கு புடிக்கவே இல்லை. நான் வேணா கிளம்பிடட்டுமா?…” மகளின் கேள்வியில் அதிரன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே.
“ப்பா, சொல்லுங்க. என்னால இங்க. நீங்க சரியா வளர்க்கலை அவன…” என்றவள் வாசலில் நின்றவனை பார்த்ததும் நாக்கு சுழல மறுத்து பின்,
“இல்லை அவங்களை….” என உடனே மரியாதையாய் மாற்றினாள்.
ஒரு வேகத்தில் தன் மனதிற்குள் பேசுவதை போலவே அவள் ஒருமையில் குறிப்பிட்டு பேசிவிட இப்போது நேராய் அவன் கேட்டிருக்க ‘ஐயோ’ என்றானது.
‘சும்மாவே என் மேல பெரிய மதிப்பு. இதுல போச்சு. கொஞ்சம் வாயை கட்டி வைக்கனும். முடியுதா?’ என மனதிற்குள் புலம்பியவள் அஷ்வினை பார்க்க மறுத்தாள்.
“ஹேய் சேம்ப். உள்ள வா…” என அதிரன் உற்சாகத்துடன் அழைக்க அஷ்வின் பிளாஸ்க்குடன் உள்ளே வந்தான்.
“கையில சிராய்ப்பு இருக்கு. இவ்வளோ டெண்ஷனாகற அளவுக்கு நான் ஒன்னும் கேட்கலையே?…” என்றவன்,
“நீ பயந்துட்டன்னும் நான் சொல்லலை. எனக்கு தெரியாதா உன்னை பத்தி?…” என்ற கேள்வியில் நெஞ்சமெல்லாம் ஒரு அழுத்தம்.
‘அதுக்குத்தானடா உன்னை அவ்வளவு புடிக்குது. என்னை தெரிஞ்ச, எனக்கு என்ன வேணும்னு தெரிஞ்ச நீ வேணும்னு நான் கேட்டேன்’ என அவனை பார்த்தாள்.
மனதின் ஓலம் அவள் விழிகளை எட்ட அஷ்வினிடம் அலுங்காமல் குலுங்காமல் அவளின் அந்த உணர்வு சென்று அடங்கியது.
“விலகி தூரமா போய்ட்டா எல்லாமே முடிஞ்சிருமா?…”
“இப்ப என்ன மாமா சொல்லனும்? இன்னும் நான் உங்களையே நினைச்சிட்டு இருக்கேனான்னு தெரியனுமா?…” என்றாள் வெடுக்கென்று.
“அதை நீ சொல்ல தேவையில்லை. சொல்லாமலே தெரியும்…” என சொல்லிய நிமிடம் வெடிக்க இருந்தவள் கோபத்தை வெளியே கேட்ட சத்தம் தடுத்து நிறுத்தியது.
“அம்மா வந்துட்டாங்க…” என்று அஷ்வின் எழுந்துகொள்ள ஸ்பூர்த்தியும் அவனுடன் வர,
“அவங்களே உள்ள வருவாங்க. உட்கார்…” என்று சொல்ல,
“நான் என்னோட அம்மாவை பார்க்கனும்…” என்று அவனை மீறி சென்றவள் நடை கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் நிதானத்தின் அருகில் வந்து நின்றது.
அவன் சொல்லியும் மீறி செல்ல முயன்றவள் தன்னை போல அஷ்வினை திரும்பி பார்க்க அந்த பார்வை சிறுபிள்ளை பிராயத்தை நினைவூட்ட அஷ்வினும் அதை தான் நினைவுகூர்ந்தான்.
“கையை பிடிச்சுக்கோ ஸ்பூர்த்தி…” என்று நீட்ட அவளுக்கு இன்னுமே ஆச்சர்யம்.
ஆனால் எதுவாக இருப்பினும் அதனை நினைக்க முடியவில்லை. மனதில் தடுமாற்றம் பெருமளவு இருக்க அவ்விடம் விட்டு நகராமல் ஹால் சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
அஷ்வினும் அவளுக்கெதிரே அமர்ந்துகொள்ள வீட்டினுள் வேக நடையுடன் வந்தாள் மேகவர்ணா.
“ஸ்பூர்த்திம்மா…” என வேகமாய் அவள் வர,
“மேகாடா…” அவளின் கையை பிடித்து நிறுத்தினான் அதிரன்.
“மெதுவா, இங்க தானே இருக்கா…” என்று சொல்லவும் அவனுக்கு தலையசைத்து நடந்தாலும் வேகமே அவளிடம்.
“உன் பொண்ணு என்ன கிண்டர் கார்டனா போறா? விழுந்து வச்சுட்டு வந்ததும் நீ பதற. ஒரு காட்டயே சமாளிக்கிறவ. அஷ்வின் இல்லைன்னாலும் தானா எழுந்து வந்திருக்கமாட்டாளா?…” மோனிகா சொல்ல,
பல்லவன் பார்வை மருமகளிடமே தான் இருந்தது. ஆராய்ச்சியாய் அவளை பார்த்துக்கொண்டு நிற்க,
“உங்கப்பா கனவு காண போய்ட்டாரு. கையோட கூட்டிட்டு போய் வெளில பனில நிப்பாட்டிட்டு வா. தானா தெளியட்டும்…” மோனிகா கிண்டலாய் சொல்ல ஸ்பூர்த்தி சிரித்துவிட்டாள் மோனிகாவின் பேச்சில்.
“சோ ஸ்வீட் அத்தை நீங்க…” என கை நீட்ட,
“நான் எப்பவும் ஸ்வீட் தான். உன் மாமாவுக்கு தவிர…” அப்போதும் பல்லவனை பேசியவள்,
“எப்படி நிக்கிறார் பாரு?…” என்று கிண்டலாய் சொல்ல,
“என்ன மாமா இவ்வளோ ஷாக்? இன்னும் என்கிட்டே எதுவுமே பேசலை?…” என்றாள் ஸ்பூர்த்தி.
“ஹ்ம்ம், எப்படி இருக்க?…” என பல்லவன் அஷ்வின் அருகே வந்து அமர்ந்தான்.
“ரெண்டு வருஷம் முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படி…” ஸ்பூர்த்தி சாதாரணமாக சொல்ல கேட்டவர்கள் அனைவருக்கும் பக்கென்றானது அதிரன், அஷ்வினை தவிர்த்து.
“ஸ்பூர்த்தி…” மேகா மகளை அதட்ட,
“நந்தன் எங்கப்பா?…” என்றாள் தன் சகோதரனை தேடி.
“வசந்த் கூட பைக் ட்ரைவ் போயிருக்கான். வருவான்…” என்ற அதிரன்,
“ஓகே ப்ரஷப்பாகிட்டு வாங்க. அப்பறம் பேசாலாம்…” என்று சொல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு கலைய அதிரன் மகளருகே வந்தமர்ந்தான்.
“ஸ்பூர்த்தி, ரெண்டு வருஷமானாலும் அப்படியே இருக்கறது எப்படி உனக்கு சரியோ, மத்தவங்களுக்கும் அதே தான். புரியுதா?…”
“ப்பா…”
“நான் உன்னை தப்பு சொல்லலை. அதே நேரம் எல்லாத்துக்கும் ஒரு டைம் வேணும். நம்ம விருப்பத்துக்கு நாம காத்திருக்கறதுல தப்பில்லை. அது நமக்கு கிடைச்சாலும், இல்லைனாலும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும்….”
மென்மையான புன்னகையுடன் அதிரன் சொல்லவும் தலையசைக்க அவளின் கன்னத்தை தட்டியவன்,
“அப்பா வந்திடறேன் ப்பா…” என எழுந்து சென்றான். அவன் நகரவும் ஹாலில் தனித்து அமர்ந்திருந்த ஸ்பூர்த்தியின் விழிகள் அஷ்வினை தேடியது.
கண்ணாடி தடுப்பின் வெளியே சுற்று கம்பியை இரு கைகளாலும் பிடித்தபடி அவன் நின்றிருப்பது தெரிய மனதிற்குள் பேரிரைச்சல்.
‘கிடைத்தாலும், இல்லைன்னாலும்’ என்ற வார்த்தைகள் அவளுள் பிரளயத்தை ஏற்படுத்த முயன்று மீட்டுக்கொண்டிருந்தாள் அவனிடமிருந்து தன் மனதை.
“எஸ், என்னால முடியும். எப்பவும் நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன்…” என சத்தமின்றி சொல்லிகொண்டவள்,
“நான் வேண்டாமா அஷ்வின் மாமா?…” என கேட்டாள் கூதல்காற்றில் வார்த்தைகளை கோர்த்து தூதாய் அனுப்பி அவனிடத்தில்.
அவள் வார்த்தைகள் காற்றின் அழைப்பில் அவனை அடைந்ததை போல மெதுவாய் தலையை மட்டும் திருப்பி ஸ்பூர்த்தியின் விழிகளை சந்தித்தான்.
சில்லென்ற சாரல் உடலை துளைக்க உள்ளுக்குள் மெல்லிய இன்பமாய் ஒரு நடுக்கம்.
அவன் எப்போதும் தன்னை பார்க்கும் பார்வையல்லவே இது. என்ன என்ன என அவ்விழிகளின் சிறையிலிருந்து தன்னை மீட்க முடியாமல் ஸ்தம்பித்து பார்த்திருந்தாள் அஷ்வினை.
வா என்னும் விதமாய் சிறு தலையசைப்பு அஷ்வினிடம். அவளை தான் அழைக்கிறான். அழைத்தான்.
ஆனால் கனவோ? தெரியவில்லையே? மலங்க மலங்க விழிப்பதாய் இவள் பார்த்திருக்க அவள் அதிர்ச்சியில் அஷ்வின் இதழோரம் சிறுபுன்னகை மெல்லமாய் விரிய துவங்கியது.
“உன்னை தான். வா…” என இதழசைத்து அவளை நோக்கி சுட்டுவிரல் காண்பித்து அழைத்தான்.
“நானா?…” என ஸ்பூர்த்தி தன் நெஞ்சில் கை வைத்து கேட்க நன்றாய் திரும்பி நின்றான் அவளை பார்த்து.
கம்பியில் சாய்ந்து நின்றவன் மீண்டும் தலையசைத்து அவளை பார்க்க எழுந்துகொள்ள தோன்றாமல் சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள் அவன் பார்வையில் நிலைகொண்டாள்.
இருவரும் அவர்களிடத்திலிருந்து நகரவில்லை. தூரங்கள் தூரங்களாய் இருப்பினும் மனதின் படபடப்பிற்கு அவையெல்லாம் பொருட்டே இல்லை என்பதை போல பார்வையால் பக்கமாகினர்.