ஆனால் என்னவோ சொல்கிறான் என்று மட்டும் புரிந்தது. அவனிடம் இந்த நெகிழ்ந்த தன்மை, அதுவும் வித்தியாசமாக பட அதையும் கணிக்க முயன்றாள்.
அவன் தான் என்றோ அவர்கள் கணிப்பிற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டு சென்றிருந்தானே?
நந்தனிடம் என்றோ ஒருநாள் கேலியாக புலம்பியது இப்போது ஞாபகம் வந்தது ஸ்பூர்த்திக்கு.
“இந்த மாமாவுக்கு வொய்பா வரவங்க ரொம்ப பாவம். இப்படி இருந்தா மோனி அத்தைக்கு பல்லவன் மாமா கிடைச்ச மாதிரி தான் ஆகிடும் பாரு…” என தன் ஒட்டி பிறந்த இரட்டையிடம் பகிர்ந்திருந்தாள் அத்தனை சிரிப்பாக.
“பெருசா நம்ம அப்பா மாதிரி தான் எல்லாம்ன்னு சொல்றவருக்கு இந்த கண்டிப்பு மட்டும் எங்க இருந்து வந்துச்சோ?…” என இரட்டை ஜடையிட்டிருந்த நாட்களில் அவள் பேசியதை அஷ்வினுமே கவனித்திருந்தான்.
“இப்ப இதை பேசற வயசா உங்களுக்கு?…” என அஷ்வினும் பாடத்தினூடே அதற்கும் சேர்த்து கொட்டு வைத்திருந்தான் இருவருக்கும்.
அப்போதெல்லாம் பிடித்தம் என்ற ஒன்று அவளிடம் இருந்ததா என்றே தெரியவில்லையே?
இப்போது நினைக்கையில் மனதிற்கு என்னென்னவோ தோன்றியது. அதிலும் அஷ்வினிடம் இப்போது இந்த மாற்றங்கள்?
அது மாற்றங்களா என்றும் கூட தெரியவில்லை. இன்னும் கண்களை கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தாள்.
அவன் சற்றுமுன் சொல்லியதை போல இரண்டு வருடத்தில் எதையாவது மறந்துவிட்டேனோ? முன்பும் இப்படி பார்த்தானா?
இல்லையே? அவனின் மற்ற பார்வைகளை கூட படித்துவிடுபவளுக்கு இந்த பார்வையும் அழைப்பும் புரிந்தாலும் இருக்காது என்ற நம்பிக்கை.
‘இவனாவது என்னை அந்த பிடித்தத்தோட கூப்பிடறதாவது?’ என அத்தனை உறுதி.
மீண்டும் கண்களை நன்றாக மூடி பின் திறந்து பார்க்க அஷ்வினின் நிலை பழையபடி இருந்தது.
அதுவரை வா என அழைத்துக்கொண்டு நின்றவன் இப்போது மீண்டும் பழைய படி முதுகை காண்பித்து வெளியை வெறித்தபடி நின்றிருக்க இகழ்ச்சியாய் இதழ் வளைத்தாள் ஸ்பூர்த்தி.
“ம்க்கும், அதானே பார்த்தேன். ஆர்மோனியத்துக்கு அப்படியெல்லாம் பீலிங் வந்திருமா என்ன? எல்லாம் என் பிரம்மை…” என தன் தலையை தட்டிக்கொண்டவள்,
“எப்படி பளார்ன்னு என்னை அடிச்சுட்டு உன்கிட்ட எதிர்பார்க்கலைன்னு என்னை கேவலமா ஒரு லுக் விட்டான்? ம்ஹூம், வாய்ப்பே இல்லை…” இவளாக சொல்லிக்கொள்ள,
“என்ன வாய்ப்பில்லை. என்கிட்டே சொல்லேன்?…” என்று மோனி வந்து அமர்ந்தாள் அவளருகே.
“அத்தை….” என்று அவளின் தோளில் சலுகையாய் சாய,
“தனியா இருக்கியேன்னு வந்தா என் மேல தூங்கி வழியுற? உன் ரூம்க்கு போகவேண்டியது தானே?…” என்றாள் மோனிகா.
“ப்ச், அதை விடுங்க. மாமா எங்க? என்னை முறைச்சு பார்த்துட்டு போனவங்க தான். கூப்பிடுங்க பேசுவோம்…” ஸ்பூர்த்தி உற்சாகமாக சொல்ல,
“யார்? உன் மாமாவா? வந்துடுவார் உடனே?…” என்ற மோனி,
“என்னங்க…” என்றாள் சத்தமாக.
“இப்ப பாரேன்…” என ஸ்பூர்த்தியிடம் சொல்லிவிட்டு இருவரும் அந்த அறை வாசலை பார்த்தனர்.
“என்ன மோனி, அங்க வந்து சொல்லமாட்டியா?…” என பல்லவன் வேகமாய் வந்துவிட்டு இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்க,
“ஓஹ், சரி பேசிட்டிருங்க. ஒரு வேலையை முடிச்சுட்டு வரேன்…” என முகம் மாறாமல் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“பார்த்தியா நம்ம சேர்ந்து இருந்தா மனுஷன் தலையே குடுக்கமாட்டார்….” என மோனி சொல்லவும் இருவரும் ஹைபை அடித்துக்கொள்ள,
“சோ ஸ்வீட் அத்தை…” என்று அவளை அணைத்து முத்தமிட்ட ஸ்பூர்த்தி,
“நானும் அன்னைக்கு கொஞ்சம் கோபமா தான் பேசிட்டேன். அஷ்வின் மாமா அடிச்சிட்டாங்கன்ற கோவத்துல…” என்றாள்.
“அவனுக்கு ஒருநாள் இருக்கு வேடிக்கை. கோவம் வந்தா கை நீட்டுவானா இவன்?…” மோனிகா மகனை பேச,
“எல்லாத்துக்கும் காரணமே நீங்க தான்…” என உடனே அவளை குற்றம் சாட்டினாள் ஸ்பூர்த்தி.
“என்னோட கடமையை நான் செஞ்சேன். இதுல என்ன தப்பு? நாங்க உங்ககிட்ட அப்படி எந்த சேஞ்சஸும் பார்க்கலை. அதோட அஷ்வின்கிட்ட கேட்டு தானே செஞ்சேன்…”
“உங்க மகன்கிட்ட இப்ப கேட்டாலும் ஓகே தான் சொல்லுவார் போல…” என்ற ஸ்பூர்த்தி,
“எப்படியும் எனக்கு மாமா மேரேஜ் இன்விடேஷன் அனுப்புவீங்கன்னு நினைச்சேன். என்னன்னு ரெண்டுவருஷம் தள்ளி போட்டீங்க? பொண்ணு எதுவும் கிடைக்கலையா?…” என்றாள் கிண்டலுடன்.
மோனிக்கு புரிந்தது அவள் எத்தனை வலியை மறைத்துக்கொண்டு இப்படி பேசுகிறாள் என்று.
ஆனால் அதற்காக அவளை வைத்து ஆறுதலா சொல்லமுடியும் என அமைதியாக இருந்தாள்.
“பொண்ணு கிடைச்சு என்ன செய்ய? பையன் இப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டானே?…”
“ஒருவேளை…” என யோசித்தவள்,
“ம்ஹூம்…” என்றாள்.
“என்னன்னு சொல்லு பூரிக்குட்டி…” என மோனிகா மருமகளின் கன்னத்தை பிடித்து கேட்க,
“வலிக்குதுத்தை…” என்றாள்.
“ம்மா, அவளுக்கு கன்னத்திலையும் காயமிருக்கு. இப்படி பிடிக்கறீங்க?…” என்று வந்தமர்ந்தான் அஷ்வின்.
அவன் வரவும் ஸ்பூர்த்தியின் உடல்மொழி மாற மோனியும் அதனை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.
“இவனோட கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. உன்னையும், உன் அப்பாவையும் ஒருவீட்டுக்குள்ள விட்டு பூட்டிட்டு நான் நாலு நாள் எங்கியாச்சும் ஜாலியா என் மாமனார், மாமியாரோட கிளம்பிடுவேன்…”
கடுப்பாய் தாய் சொல்ல சின்ன சிரிப்புடன் மோனிகாவை பார்த்தவன் ஸ்பூர்த்தியை கவனித்தான்.
“ஒரு வீட்டுக்குள்ள விட்டா வீடு ஒரு நாளுக்கு நாலா தான் பிரிஞ்சு இருக்கும்….” என மோனிகாவிற்கு மட்டும் ஸ்பூர்த்தி சொல்ல,
“என்ன ரகசியமா? நான் கிளம்பிடவா?…” தாயை முறைத்துக்கொண்டே ஸ்பூர்த்தியிடம் கேட்க,
“உங்ககிட்ட சொன்னா இப்படித்தான் பேசுவியான்னு சத்தம் போடுவீங்க. அதான் அத்தைட்ட சொன்னேன்…” அவனிடம் விளக்கம் போல சொல்ல,
“அவளை ஏன்டா முறைக்கிற? என்னை கேளேன்…” மோனி ஸ்பூர்த்திக்கு பரிந்து வர,
“சரி நீங்க கிளம்புங்க. நான் ஸ்பூர்த்திட்ட பேசனும்…” என்றான்.
“திரும்பவும் சண்டையா?…” அஷ்வினிடம் கேட்க,
“ம்மா…” என்றதும் மோனி எழுந்துகொண்டாள்.
“அத்தையும், மாமாவும் கூப்பிடறேன்னு சொன்னாங்க. நான் பேசிட்டு உனக்கு தரேன்…” என கிளம்பி செல்ல அஷ்வின் ஸ்பூர்த்தி பக்கம் திரும்ப,
“ஹாய்டா…” என ஆர்ப்பாட்டமாய் உள்ளே வந்தான் நந்தன்.
“நந்து…” என ஆர்ப்பரித்தபடி ஸ்பூர்த்தி தன் கைகளை விரிக்க வந்த வேகத்தில் அவளை தூக்கி சுற்றி இறக்கினான் நந்தன்.
“குண்டு பூசணிக்கா. எந்த காட்டுக்குள்ள உனக்கு ட்யூட்டி போட்டாலும் இளைச்சிடாத…” என்று அவளின் தோளோடு இடித்துக்கொண்டு நந்தன் பேச,
“உனக்கேன்டா காண்டு? நீயும் சாப்பிடு. உன்னை யார் அப்பா மாதிரி பிட்னெஸ் ஃபாலோ பண்ண சொன்னா?…” என ஸ்பூர்த்தி நந்தனிடம் சரிக்கு சரி பேச இருவரும் அஷ்வினை மறந்தனர்.
அஷ்வினின் பார்வை பட்டும் படாமல் இப்போது ஸ்பூர்த்தியை இன்னும் ஆழ்ந்து பார்த்தது.
பிறந்ததிலிருந்து பார்த்து வருகிறானே? பிறந்தன்று இருந்ததை போல எப்போதுமே அவளின் கன்னங்கள் உப்பிய பூரியை போலத்தான் இருக்கும்.
“பூரிக்குட்டி…” என அவளை கன்னம் பற்றி கொஞ்சிய தருணங்கள் எல்லாம் அவனுள் பிரவாகமெடுத்தது.
உள்ளங்கை குறுகுறுக்க விரல்கள் அந்த மென்மையை மீண்டும் பரிசோதிக்க விழைந்தது.
அவள் காயத்திற்கு மருந்திட்ட பொழுதில் கூட தோன்றாத உணர்வு நொடி நேர பார்வையில் தோன்றிவிட முகத்தை திருப்பிக்கொண்டான் அஷ்வின்.
“உனக்கு வலிக்குதா?…” என தன் காலால் அவள் காலை தள்ளிவிட,
“நந்து…” என அதட்டினான் அஷ்வின்.
“சும்மா மாமா. அவளுக்கு இதெல்லாம் வலிக்காது…” என நந்தன் அசால்ட்டாய் சொல்ல,
“உனக்கு தெரியுமா வலிக்குமா இல்லையான்னு? நாமளா நினைக்க கூடாது நந்து….” அஷ்வின் அதை விடவில்லை.
“ஆமா, நாமளா இவங்க இப்படித்தான் இருப்பாங்க. இருக்கனும்னு நினைக்க கூடாது நந்து. எல்லாருமே நம்ம நினைக்கிற மாதிரி தான் இருக்கனும்னு எதிர்பார்க்கவும் கூடாது. நம்மோட எதிர்பார்ப்பு, ஆசை மாதிரி எதிர்ல இருக்கறவங்களுக்கும் எல்லாம் இருக்கும் தானே?…”
“நீ எனக்கொரு சாங் பாடி தா. உடனே பண்ணிடலாம்…” கிண்டலாய் சொன்னாலும் நந்தன் உறுதியாய் சொன்னான்.
முன்பு ஒருசில படங்களுக்கு சிறு பிள்ளையில் பாடியவள் தான். ஆனால் என்னவோ அதை தொடர முடியவில்லை ஸ்பூர்த்தியால்.
படிப்பு, படிப்பின் தேர்வு என்று அவளின் பாதை கலையுலகத்தை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது.
“எதாச்சும் நடக்கறதை பேசுடா. சும்மா தேவையில்லாம…” ஸ்பூர்த்தி நந்தனை முறைத்துக்கொண்டே பேச இப்போதும் அஷ்வின் அவளை பார்ப்பதும், அவர்கள் பேச்சை கேட்பதுமாகவே இருந்தான்.
இடையில் எதுவும் பேசிக்கொள்ளாமல் மௌனமாக இருக்க அறை கதவை திறந்துகொண்டு வந்தான் அதிரன்.
“ஸ்பூர்த்திப்பா, அப்பா பேசறாங்க…” என போனை நீட்டவும் அவள் தாத்தா தேவராஜுடன் பேச ஆரம்பித்தாள்.