நிஜமோ, கனவோ என்னும் விதமாய் ஸ்பூர்த்தி அஷ்வினை பார்த்தபடி கேட்க மனதிற்குள் மின்னலாய் ஒரு வலி.
“ஸ்பூர்த்தி…” அஷ்வினுக்கு அவன் அழைப்பே கேட்கவில்லை.
எத்தனை முறை தான் இதனை சொல்லுவோம் என்று நினைத்திருந்திருப்பாளோ என்று அவளையே சஞ்சலம் பொங்க பார்த்தான்.
“நிஜமாவே தெரியலை மாமா. கனவோன்னு தான் தோணுது. நீங்க எப்பவும் இப்படி இல்லையே எங்கக்கிட்ட, ம்ஹூம் என்கிட்ட…” என்றவள் அருகில் அமர்ந்து அணைத்துக்கொள்ளவேண்டுமென தோன்றினாலும் கையை கோர்த்தபடி அவளை பார்த்தான்.
“இதுதான் நிஜம். வேற எப்படி உன்கிட்ட நான் சொல்ல?…” முகத்தை தேய்த்துக்கொண்டான் அஷ்வின்.
அன்றைக்கு கோபமும், ஆத்திரமுமாய் தெரிந்ததெல்லாம் இன்றைக்கு தவிப்பும், அலைப்புறுதலுமாய் தான் தெரிந்தது.
‘இந்த பெண்ணுக்கு என்னவாகிற்று?’ என அன்று ஆதங்கப்பட்டவன் இன்றைக்கு அவளின் வலியை உணர துவங்கினான்.
அவள் கேட்க நினைத்த வார்த்தை, இதோ அவன் வாயிலிருந்தே வந்துவிட மனதை இன்னும் திடப்படுத்தினாள்.
சில விஷயங்கள், மாறாது. மறையாது. அதுபோலவே அவன் அன்று பார்த்த பார்வை.
தன் மனதிலிருந்து என்றுமே அது மறைய போவதில்லை. நிச்சயம் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே தான் இருக்கும்.
அதனை விரும்புவதும் இல்லை. இப்போதும் இவனின் இந்த முடிவு எதனால் என தெரியாமல் குழப்பமும், தவிப்புமாய் பார்த்தாள்.
“திடீர்ன்னு எதுக்காக இந்த மாற்றம் மாமா? நிஜமாவே இப்பவும் நீங்க சொன்னதை என்னால நம்ப முடியலை…”
“ஸ்பூர்த்தி நான் சொல்றதை முதல்ல புரிஞ்சுக்கோ. அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை வேற. அதோட…”
“எனக்கு தெரியாதா மாமா உங்க சூழ்நிலை? ஆனாலும் நீங்க பார்த்தது…”
“என்ன பார்த்தேன்? பார்த்தேன்னு சொல்ற? அது எனக்கான ஒரு அதிர்ச்சி. உனக்கு அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி உன்கிட்ட நான் எந்தவிதத்திலையாச்சும் நடந்துட்டேனோன்னு என்னையே நான் நினைச்சு கோவப்பட்டுக்கிட்ட நேரம்…”
“இதுல உன்னை பார்த்தது, சத்தியமா அந்த நிமிஷம் எனக்கு நீ வேற எப்படியும் தெரியலை. நான் எப்படி பழகினேனோன்னு தான் ஒரு தாட். அது புரியாம நீ பேசற?…” கோபமாய் அவன் சொல்ல ஸ்பூர்த்தியிடம் மௌனம்.
“ஓகே, லீவ் இட். எல்லாம் பாஸ்ட் இஸ் பாஸ்ட். இப்ப உனக்கு க்ளியரா?…”
“இல்லை மாமா, எனக்கு சரின்னு தோணலை…”
“ஏன்?…”
“ஏன்னா? நிஜமா வீட்டுல எதுவும் பேசி, அதான் நீங்க…”
“ஷிட்…” எழுந்துவிட்டான் சட்டென்று.
“மாமா…” அவளும் எழுந்து நிற்க,
“உட்கார் ஸ்பூர்த்தி…” என்றவன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.
“ஓகே ஓகே. காம்டவுன் அஷ்வின்…” என தனக்கு தானே சொல்லிக்கொள்ள ஸ்பூர்த்தி அமைதியாய் பார்த்தாள்.
என்றாவது இப்படியான கோபங்கள் அவனிடம் கண்டதுண்டு வேறு வேறு விஷயங்களில்.
அப்போதெல்லாம் அவளின் அப்பா வந்து அவனை ஆற்றுப்படுத்துவான். இப்போதும் உடனே தந்தையை அழைத்துவந்துவிடுவோமா என்று தான் கால்கள் பரபரத்தது ஸ்பூர்த்திக்கு.
“ஊஃப்…” என்று காற்றை உள்ளிழுத்து வெளியிட்டவன்,
“என்ன பார்க்கற?…” என சிரித்துக்கொண்டே அமர்ந்தான் இப்போது.
சட்டென வானிலை மாற்றம். முகத்தில் வந்துபோன அந்த கோபம் இருந்த இடம் தெரியவில்லை.
“பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?…”
“அப்போ இதை பேச தான் என்னை அம்மா வர சொன்னாங்களா?…”
“உன்கிட்ட இப்ப பேசினா சரியா வரும்ன்னு தோணுச்சு. அதான் வர சொல்லி சொல்ல சொன்னேன்…”
“உங்க விருப்பமா மாமா எல்லாம்? ஏன் இத்தனை நாள் எங்க போச்சு உங்களோட…”
“என்னோட?…” என்று அவளுக்கருகே அதற்கடுத்த இருக்கைக்கு மாறினான்.
அவளருகே அவளின் தோள் உரசும் இடைவெளியில் காற்று ஊடுருவ பட்டும் படாமல் ஒரு நெருக்கம்.
“இப்ப மட்டும் எப்படி? எனக்கு அதுதான் புரியலை. அன்னைக்கு இருந்த என்னை பத்தின எண்ணம் மாறிடுச்சா என்ன?…”
“எனக்கு யோசிக்கவேண்டியதிருந்தது ஸ்பூர்த்தி…”
“ஓஹ்…” என்றவள் மௌனத்தில் அவளின் கை விரல்களை பற்றினான்.
அவன் பரிசளித்த மோதிரம் விரலோடு சில்லிட்டிருந்தது இந்த குளுமையில். அதனை மெல்ல வருட,
“விடுங்க…” என விரலை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“ஹ்ம்ம், விடலாம். சும்மா பார்த்தேன்…” அஷ்வின் பேச்சில் தெளிவும், தடுமாற்றமும் மாறி மாறி மெட்டமைக்க அதனை ஸ்பூர்த்தியால் உணர முடிந்தது.
அதுவே இன்னும் அவளை அவனிடமிருந்து விலக செய்தது. வீட்டினர் எதுவும் பேசி அதனால் தன் மனதை மாற்றி இருப்பானோ?
முயன்று தன்னை நெருங்க முயற்சிக்கிறான். ஆனால் இலகுவாய் அதை செயல்படுக்த்த முடியாமல் தடுமாறுகிறான் என நினைத்தாள்.
“வீட்ல சொல்றாங்கன்றதுக்காக எல்லாம் நீங்க உங்க முடிவை மாத்திக்க வேண்டாம். எனக்காகவும் வேண்டாம்…” திரும்பவும் ஸ்பூர்த்தி அவள் சொல்லியதையே சொல்ல,
“புரிஞ்சுக்கவே மாட்டியா நீ? அப்படி ஒரு பார்வைல நான் உன்னை பார்த்ததே இல்லை. அப்போ அந்த நிமிஷம் நீ பேசவும் யோசிக்க முடியலை. ஆனா நீ சொல்லிட்டு போன அந்த நிமிஷத்துல இருந்து ஏன் இதை நாம யோசிக்காம போனோம்ன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்….”
“அப்போ நான் பேசவே இல்லைன்னு நினைச்சுக்கோங்க…” என்று அவள் எழுந்துகொள்ள,
“சொல்லிட்டே இருக்கேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ…” என்று கையை பிடித்து அமரவைத்தவன் கைகள் அவள் தோளை சுற்றிக்கொண்டது.
“மாமா…” என அவள் திகைத்து பார்க்க,
“மாமா தான். சும்மா இருந்தவன்கிட்ட என்னை பார்த்தா கல்யாணம் பண்ணிக்க தோணலையா? இல்லை உங்களுக்கு பிடிச்சமாதிரி இல்லையான்னு என்கிட்டே கேட்டு என்னை ஸ்லிப்பாக்கிட்டு இப்ப போனா என்ன அர்த்தம் ஸ்பூர்த்தி?…”
சிறுப்பிள்ளை போல அவன் கேட்டவிதத்தில் ஸ்பூர்த்திக்கு லேசாய் சிரிக்க கூட தோன்றிவிட்டது அவனின் இந்த கோபத்தில்.
“எங்க ஸ்லிப்பானீங்கலாம்? அதெல்லாம் சும்மா…”
“நிஜம்டா ஸ்பூர்த்தி…” என்றவன் அவளுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.
தன் மாற்றத்தை ஸ்பூர்த்தி உணரவேண்டும் என நினைத்தான். அவளை திருமணம் செய்துகொள்ள தனக்கு பிடிக்கும் என்பதை அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
இப்போதோ அதனை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை. விருப்பம் என்று சொல்லாமல் வேறுவகையாக சொல்லியவனுக்கு அவளிடம் வார்த்தைகளில் கூட அத்துமீற முடியவில்லை.
தடுமாற்றமே பெரிதாய் இருந்தது. தான் பார்க்க வளர்ந்தவள். அவளிடம் இப்படியான எண்ணங்களை வெளிப்படுத்துவதில் இன்னுமே தயக்கம்.
மனதின் ஆசைகள் இப்போது நெஞ்சை முட்டி நின்றாலும் அவளிடம் பகிரும் பொழுது அந்த எண்ணங்கள் எல்லாம் தேங்கி தேம்பிக்கொண்டு நின்றது.
சற்று முன் சொல்லிய வார்த்தை அவனை மீறி அவளிடம் பகிர்ந்தது. இப்போது நினைக்கையில் லேசாய் சிலிர்த்தான்.
‘கண்ணை தாண்டி பார்க்க போறேன்’ ஆம், இனி அப்படித்தானே? இருவரின் உறவும் உறவை தாண்டி அவர்களுக்கான பிரத்தியோக உலகை எட்டிவிடும்.
“மாமா, எவ்வளோ நேரம் இங்கயே இருக்க?…”
“குளிருதா ஸ்பூர்த்தி?…” என்றான் அவனறியாமல் இன்னும் லேசாய் நெருங்கி அணைத்துக்கொண்டு.
“இல்லை, அதெல்லாமில்லை…” என்றவள் வார்த்தைகள் தந்தியடிக்க மெல்லிய புன்னகை அஷ்வினிடம்.
“சரி நாளைக்கு இதைபத்தி அப்பாவும், மாமாவும் பேச போறாங்க. நீ என்ன சொல்ல போற?…” என்றான்.
“என்ன சொல்றதுன்னா?…” அவனை பாராமல் வேறு பக்கம் பார்க்க,
“ஸ்பூர்த்தி இங்க என்னை பாரு…” என்றவன் அவளை கன்னம் பற்றி தன் புறம் திருப்பினான்.
“கல்யாணம் வேண்டாம்ன்றதை தவிர்த்து என்ன நினைக்கிற. அதை சொல்லு…” என்றான் அவளின் கையை இறுக்கமாய் பற்றியபடி.
‘நான்தான் சம்மதித்துவிட்டேனே? உனக்கு போதாதா?’ என்பதை போன்ற வார்த்தைகள் இன்னுமே ஸ்பூர்த்தியை வீறுகொள்ளவைக்கும்.
அதனை எப்போதுமே செய்ய விரும்பவில்லை அஷ்வின். காதல் இருக்கிறதா என்றால் தெரியவில்லை.
ஆனால் மனைவி என்ற ஒரு உணர்வை ஸ்பூர்த்தியால் தவிர வேறு யாரும் கொடுக்கமுடியாது என்பதை மனதில் இருத்தியிருந்தான்.
அவள் வார்த்தையால் உருவான உணர்வு, அவனின் உணர்வுகளில் ஊற்றெடுத்தது.
தான் அவளுக்கு சரியாய் வருவோமா என்ற சுய அலசலிலேயே இருந்தவன், அவள் தான் என ஸ்திரமாக, அதற்குள் விருப்பத்தை விதைத்தவள் தனியே விடும்படி அவனைவிட்டு சென்றிருந்தாள்.
இப்போது நினைக்கும் பொழுது கூட அவள் சென்றதில் கோபம் தான் அஷ்வினுக்கு.
ஏன் இருந்து பேச முடியாதா? அடித்தால் அதை கடந்து செல்வாளாமா? இதென்ன செயல்பாடு என்று அவள் மீது அதில் கூட அதிருப்தி.
“கொஞ்ச நாள் போகட்டும், அவளே வரட்டும். பேசிக்கலாம்…” என்றுவிட்டான் வீட்டினரிடம்.
இப்படி இரண்டுவருடமாக அவள் வரும் வழியை காணவில்லை. அடுத்த மாற்றுதல் கிடைத்த போதும் கூட அவளை தான் வீட்டினர் சென்று பார்த்தார்களே தவிர அவள் வரவில்லை.
தன்னை தவிர்க்கவே இப்படி இருக்க தானும் பார்க்கலாம் என்றிருக்க எவ்வளவு நாள்? பொறுமையும் பறந்திருந்தது.
இப்போதும் அவளுக்காக, அவள் என்ன நினைக்கிறாள் என்பதற்காக காத்திருக்க ஸ்பூர்த்தி அமைதியாகவே இருந்தாள்.
“உனக்கு என்னை தெரியும் தானே ஸ்பூர்த்தி? வீட்டுல செய்ன்னு சொல்லி செய்வேனா? எனக்கா தோணினா ஓகே சொல்லுவேனே தவிர்த்து…” என்றவன்,
“ப்ச், இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
“ஏன் மாமா அன்னைக்கு என்னை அவ்வளவு கேவலமா பார்த்தீங்க?…”
“ஸ்பூர்த்தி நான் நீ நினைக்கிற மாதிரி…”
“ஆனா எனக்கு அப்படி இல்லை. என்னவோ நான் செய்ய கூடாததை செஞ்சிட்ட மாதிரி பார்த்தீங்க. பெருசா தப்பு பண்ணிட்ட மாதிரி…”