“இதுவரை நீ என் மாமா பொண்ணு மட்டும் தான். சோ லிமிட்டட் ஸ்பீச் தான் இருக்கும். ஆனா இனி அப்படி இல்லையே? எந்த என்டிங்கும் இல்லை…” என்றவன் எண்ணங்கள் கூட மீற ஆரம்பித்திருந்தது அவளிடம்.
இருவருக்குமே இந்த பேச்சுக்கள் சற்று கூச்சத்தையும், தயக்கத்தையும் தருவித்திருக்க சில நொடிகள் அமைதியில் கழிந்தது.
“என்ன ஸ்பூர்த்தி சைலன்டாகிட்ட?…” என்றான் கப்பை கீழே வைத்துவிட்டு.
“நத்திங் மாமா, யோசிச்சிட்டிருந்தேன்…”
“என்னன்னு சொல்லு…”
“ரெண்டுபேரும் ஒரு கட்டத்தை தாண்டி பேசவே இவ்வளோ யோசனை, இவ்வளோ தயக்கம். அதான்…”
“ஓஹ், என்ன பண்ணலாம்?…” என்றான்.
இவன் என்ன இத்தனை இலகுவாய் கேட்கிறான் என்றிருந்தது ஸ்பூர்த்திக்கு.
இந்த தன்மையை கண்டு தான் அவனின் மேல் விருப்பமே துளிர்த்திருக்க இப்போது அளந்து அளந்து பேசும் இவனின் பேச்சுக்கள் சிந்திக்க வைத்தது.
இருவரின் வாழ்க்கையும் இணையும் நேரம் எப்படி கணவன் மனைவியாய் வாழ்கையை வாழ போகிறோம் என்று எதிர்பார்ப்பை தாண்டிய சஞ்சலம்.
“மெதுவா, மாமா எவ்வளோ சத்தம்?…” என்று அவனின் முன்னால் கையாட்டி மெதுவாக என்னும் விதமாய் சொல்லியவள் இன்னும் அவன் சிரித்தபடியே இருக்க அவன் வாயை மூடிவிட்டாள்.
“சொல்லிட்டே இருக்கேன். இப்படி சிரிக்கறீங்க?…” என்றவள் அவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட அஷ்வின் விழிகள் இப்போது குறும்புடன் புன்னகைத்தது.
அதில் ஸ்பூர்த்தியின் கரங்களுக்குள் அஷ்வினின் இதழ்களும் புன்னகைக்க விரிந்திருக்கும் போலும்.
அவனின் மீசைமுடிகள் அந்த அசைவில் குறுகுறுக்க பட்டென்று எடுத்துவிட்டாள்.
“நான் போறேன்…” என எழுந்துகொள்ள அஷ்வின் பார்வைகள் அவளை துளைக்கும் விதமாய் இருந்தது.
எவ்வளவு பேச்சுக்கள் பேச்சுக்கள் பேசியிருக்கிறாள்? கோபமாய் கூட பேசியிருக்கிறாள் அவனின் முன்னால்.
ஆனால் என்றும் இப்படி நாணம் கொண்டு பார்த்ததும், பதறியதும் இருந்ததே இல்லை.
முதல்முறை முகம் சிவக்க அவள் பதட்டமாய் எழுந்துகொண்டத்தில் அஷ்வின் முகத்தில் ரசனை கோலங்கள்.
“நைஸ்…” என்றான் அவளிடம்.
“என்ன?…”
“கிட்ட வா சொல்றேன்…” என்றதும் அவள் நின்றிருக்க எழுந்துகொண்டான் தானும்.
தன் மொபைலை எடுத்தவன் அவளிடம் காண்பிக்க வாங்காமல் அவனையும் மொபைலையும் மாறி மாறி பார்த்தாள்.
“கேமரா ஓபன் பண்ணி பாரு ஸ்பூர்த்தி…” என்று சொல்லியவன் தானே எடுத்து அவளுக்கு காண்பித்தான்.
“உன் முகம் தான். க்யூட்ல…” அவளின் பின்னால் நின்றவாறு அவளோடு தானும் தொடுதிரையில் அவள் முகம் பார்த்து சொல்ல அவனிடம் இந்த பரிமாணம் மூச்சடைக்க வைத்தது ஸ்பூர்த்தியை.
“பர்ஸ்ட் டைம் பார்க்கறேன் ஸ்பூர்த்தி…”
ரகசிய சிரிப்பொன்று அவனிடத்தில் பூக்க அந்த நொடியை அவனின் முன்னால் எப்படி கையாள்வது என தெரியாமல் விழி பிதுங்கியது ஸ்பூர்த்திக்கு.
“மாமா என்ன இதெல்லாம்?…” வார்த்தைகள் தந்தியடிக்க அவனின் அருகமையை விட்டு விலகி நின்றாள்.