“வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க. அதென்ன வீட்டோட மாப்பிள்ளை…” என்றவன்,
“ம்மா நான் காட்டோட மாப்பிள்ளையாவே போகலாம்ன்னு இருக்கேன்…” என்றான் அஷ்வின் கண்சிமிட்டி.
“நான் கேட்டா தான் தருவியா நீ?…” என்று மோனிகா அவன் கையிலிருந்ததை வாங்க வர,
“ம்ஹூம், இது அத்தைக்கு…” என்று மேகாவிற்கு தான் தந்தான்.
அடுத்ததாய் மோனிகாவிற்கு தர மகனிடம் வம்பு செய்தபடியே வாங்கிக்கொண்டவள் அவன் உண்டு முடிக்கும் வரை அங்கிருந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“பார்ரா, மாப்பிள்ளை ஸார்க்கு இப்பவே கவனிப்பை?…” என நந்தன் கிண்டலுடன் வர அவனருகே ஸ்பூர்த்தி.
சாப்பிட்டுக்கொண்டிருந்த அஷ்வின் ஒருநொடி அசையாமல் அவளை பார்த்துவிட்டு தட்டில் கவனம் வைத்து குனிந்துகொண்டான்.
“உன் மாமா காட்டோட மாப்பிள்ளையாக போறானாம். அதான் இப்பவே உன் அம்மா அவனுக்கு ஊட்டி வளர்க்கா…” மோனிகா நாதனிடம் சொல்ல ஸ்பூர்த்தி அஷ்வினை பார்த்தாள்.
காலை எழுந்து வந்ததும் தாயை வாழ்த்திவிட்டு குளித்து தயாராகி வர அப்பொழுதே வீட்டினர் இதை பற்றி பேசிக்கொண்டிருந்ததோடு ஆளாளுக்கு அவர்களின் சந்தோஷத்தை தெரிவித்தனர்.
பல்லவன் கூட ஆசிர்வதித்து நன்றாக பூரண ஆயுசுடன் இருக்கவேண்டும் என்று வாழ்த்திவிட்டு நகர்ந்துகொண்டான்.
இப்போது இங்கே நடக்கும் பேச்சுக்கள் என்னவோ அடுத்தவாரமே திருமணத்தை வைத்துக்கொள்வார்கள் போல இருந்தது.
அஷ்வின் வேறு தன்னை பார்த்ததும் குனிந்துகொள்ள ‘நீ மாறவே மாட்டாடா மாமா’ என்று மனதில் திட்டிக்கொண்டாள்.
பட்டுப்புடவையும், குட்டி குட்டியாய் தங்க நகைகளும், கொஞ்சமாய் பூவும் வைத்து சர்வலட்சணத்துடன் தாய் சொல்லியபடி தயாராகும் பொழுதே மனதிற்குள் ஆசை மின்னல்.
தன்னை இப்படி பார்க்கையில் அஷ்வின் என்ன சொல்லுவான், என்ன பேசுவான் என்று தோன்றியது.
காலை நடந்த நிகழ்விற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல பட்டென்று அவன் தலையை குனிந்துகொள்ள தான் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது.
அஷ்வின் சாப்பிட்டு முடித்து எழுந்துகொள்ள மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்புவதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
பெண்கள் எல்லாம் தங்களின் உடமைகளை பேக்கிங் செய்ய ஸ்பூர்த்தி வெளியே வந்து நின்றாள்.
அன்றே ஏன் கிளம்பவேண்டும் என அதிரன் சொன்னான் என்று தெரியவில்லை அவளுக்கு.
எப்படியும் இன்னும் இரண்டு நாட்களேனும் அங்கே இருக்கலாம் என நினைத்திருக்க கிளம்பியாகவேண்டும் என்று சொல்லிவிட்டான்.
ஓரளவு கணிப்பிற்குள் வந்துவிட்டது தான். ஆனாலும் அதற்கெல்லாமா கிளம்புவார்கள் என்று தான் தோன்றியது.
யோசனையுடன் வெளியே வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தவளின் தோளில் இடித்தபடி வந்து நின்றான் அஷ்வின்.
“நீ கிளம்பலையா ஸ்பூர்த்தி?…” என்று நின்றவனை திரும்பி பார்த்தவள்,
“ஏன் மாமா இப்பவே கிளம்பறோம்?…” என்றாள்.
ஸ்பூர்த்தியின் முகமே அவளுக்கு இதில் சுத்தமாய் விருப்பமில்லை என்பதை காண்பித்தது.
“நாளைக்கு எனக்கும் வொர்க் இருக்கு. ஸ்டூடியோ போகனும். உன் அப்பாவுக்கும் ஷூட்டிங் இருக்கு…”
“பொய் மாமா…”
“நம்பலைன்னா என்ன பண்ண?…” என்றவன்,
“ஹேய் நில்லு…” என்றான் அவள் அசட்டையாய் நின்றவிதத்தை பார்த்து.
“என்னாச்சு?….” என சுற்றிலும் பார்க்க,
“இல்லை இங்க இப்படி என்னை பார்த்து…” என்று சொல்லியவன் பின்னால் நகர்ந்து அவளை புகைப்படம் எடுக்க,
“ஊஃப், ஒரே நாள் எத்தனை ஷாக்? இப்படியெல்லாம் போட்டோ எடுக்க வருமா உங்களுக்கு?…”
“இப்படியெல்லாம் ட்ரெஸ் பண்ணினா வரும். நீ லாஸ்ட்டா எப்போ சேரி கட்டின?…”
“மாமா…”
“சூரா நான் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…” என கள்ளப்புன்னகையுடன் சொல்ல,
“ஞாபகமில்லை…” என்றாள் மீண்டும் நடந்துகொண்டே.
“அதான் நடக்க தெரியலை. கொஞ்சம் அப்பப்போ கட்டி பழகு. ஈஸியா இருக்கும்…” என்றவன்,
“இங்க வா ஸ்பூர்த்தி…” என்று அவளுடன் சேர்ந்து இன்னொரு புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
“உனக்கு வேணும்னா சொல்லு, அனுப்பறேன்…” என சொல்லியவன்,
“நான் போய் என் திங்க்ஸ் பேக் பன்றேன். நீ உள்ள வா…” என்று அழைத்துக்கொண்டான்.
அவர்கள் சென்னையை எட்டும் முன்னால் உள்கட்சி பூசலில் வேதநாயகத்தை அவர்கள் கட்சி உறுப்பினர்களே கட்சியை விட்டு நீக்கும்படி பிரச்சனையை துவங்கி இருந்தனர்.
சென்னையை எட்டியவர்கள் அன்று நேராக அதிரன் இல்லத்திற்கே வந்து சேர்ந்தனர்.
“உன்னை இதுக்கா அவன் படிக்க அனுப்பி, வேலைக்கு போக விட்டான்? இவ்வளோ பெரிய பிரச்சனையை கொண்டுவந்திருக்க நீ?…” என பேத்தி வந்ததுமே சுபத்ரா ஆரம்பித்துவிட்டார் அவளை கட்டிக்கொண்டு.
“பாட்டி இவ்வளோ நாள் கழிச்சு நான் வந்தா எப்பிடி இருக்கன்னு கேட்கனும். அதைவிட்டுட்டு…” என ஸ்பூர்த்தி கிண்டல் பேசினாள்.
“ஏன் சொல்லமாட்ட? இங்க உன்னை நினைச்சுட்டு நாங்க படற அவஸ்தை எங்களுக்கு தான தெரியும். இவ்வளவு நாள் இங்க வராமலே பிடிவாதம் பண்ணுன. இப்ப என்னடான்னா வரும் போதே பிரச்சனையை தூக்கி தோள்ல போட்டுட்டு வந்திருக்க…” என்றவர்,
“இந்த பொண்ணு இங்க…” என்று மேகாவை காண்பிக்க,
“ம்மா…” அதிரன் தாயை அழைக்கவும்,
“மேகா, மேகவர்ணா…” என்றனர் பிள்ளைகள் மூவருமே சிரிப்போடு.
“ம்மா கார்ல இருங்க…” என்று மோனியிடம் சொல்லிய அஷ்வின் ஸ்பூர்த்தியை கண்ணமர்த்தி தனியே அழைத்தான்.
“நந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு. நான் பேசிட்டு வரேன்…” என மேகாவுடன் மகனை அனுப்பிய அதிரன் மொபைலை எடுத்துக்கொண்டு தனியே செல்ல சுபத்ராவும் உள்ளே சென்றுவிட ஹாலில் அஷ்வினும், ஸ்பூர்த்தியும் தனியே.
“கிளம்பறேன். வெளில எங்கயும் போக கூடாது. நான் நாளைக்கு வந்திருவேன் ஸ்பூர்த்தி. நான் வந்து கூட்டிட்டு போறேன்…” என்று சொல்ல அவன் முகத்தில் கவலை ரேகைகள்.
“உங்க முகமே சரியில்லை மாமா, என்னாச்சு? வேற எதுவும் பிரச்சனை இல்லையே?…” என்றாள் அவள் பரிதவிப்புடன்.
வேதநாயகம் பெரிதாய் என்ன செய்துவிடமுடியும்? மிஞ்சிமிஞ்சி போனால் தனக்கு பணியிடமாற்றம் தருவித்து தரமுடியும்.
அதைப்பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. அதற்கு மேல் மிரட்டல்கள் என்ன செய்யும் என்று துணிச்சலாகவே அவளிருக்க அஷ்வினின் கவலைகள் அர்த்தமற்றதாக தெரிந்தது அவளுக்கு.
“நத்திங், உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுது. ஏன் என்கூட வரமாட்டியா?…” என கேட்க,
“நிஜமாவா?…”
“எஸ், இன்னும் ஒருவாரம் கூட இல்லை நீ திரும்ப ட்யூட்டில ஜாயின் பண்ண. அதுவரை உன் கூட இருக்கனும்னு நினைக்கறேன். ஏன்? உனக்கு இஷ்டமில்லையா?…” என்றான் நேரடியாக.
“மாமா எனக்கு ஒன்னுமாகாது…”
“அதேதான் நானும் சொல்றேன். என் கூட இரு. உனக்கு ஒன்னுமாகாது…” என்று சிரித்துவிட,
“மாமா, என்ன இது?…” என்று முகத்தை திருப்பினாள்.
“ஓகே ஈஸி, இப்ப கிளம்பறேன். நாளைக்கு வரேன். குட்நைட்…” என்றவன் விரல்கள் அவள் கன்னத்தில் லேசாய் தட்டிவிட்டு இறங்க வேகமாய் வீட்டினுள் பார்த்தாள்.
“சத்தியமா நீங்க தானா?…” என நம்பமுடியாமல் கேட்க,
“ஏன்? நம்பனும்னா என்ன பண்ணனும்?…” என்றவன்,
“ம்ஹூம், என்னை இப்பவே ரொம்ப பேச வைக்கிற ஸ்பூர்த்தி…” என்றான் புன்னகையுடன்.
“ஓகே, கிளம்புங்க…”
“பை டா. டேக் கேர்…” என்று கிளம்பிவிட அவன் செல்லும் திசையை பார்த்துக்கொண்டே நின்றாள் ஸ்பூர்த்தி.
அதுநாள்வரை முரண்டிக்கொண்டிருந்த மனதின் முரண்பாடுகள் எங்கோ ஒளிந்திருக்க தனித்து நிறுத்தி சென்றவனின் அருகாமையை தேடியது அவள் மனது.