“என்ன கஷ்டமா? சும்மா இல்லாம பிரச்சனைகளை இழுத்துவிட்டுட்டு எப்ப என்ன ஆகுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பதட்டமாவே வச்சிருக்கா அஷ்வின்…”
“அப்பா நம்ம ஆளுங்க ஸ்பூர்த்திக்கு காவலா அங்க இருக்காங்களே? அதை மீறி எதுவும் நடக்காது. எதுக்கு இத்தனை பயம்?…” அஷ்வின் புரியவைக்க முயன்றான்.
“அதைத்தான் தேவையில்லைன்னு சொல்றேன். பக்கத்துல ஒன்னும் இல்லை அவ. காட்டுக்குள்ள எப்ப என்ன நடக்குமோன்னு இருக்கு. திடீர்ன்னு காடு பத்திக்கிட்டு எரிஞ்சது. இங்க என்ன பாடுபட்டோம் நாம எல்லாம்?…” என்ற பல்லவன்,
“இப்பவும் என் உயிரா தான் என் தங்கச்சி பொண்ணை நினைக்கறேன். அவ வேற, நீ வேற இல்லைப்பா அஷ்வின். அதை புரிஞ்சுக்கோ. ஆனா இந்த வேலை, வருஷமெல்லாம் அவ பின்னாடியே ஓடறது, அவளுக்கு அவளால உனக்கு ஏதாவது. இப்படி யோசிக்கவே முடியலை என்னால…”
பல்லவனின் பேச்சுக்கள் அஷ்வின் மனதை இந்தவிதத்தில் காயப்படுத்தும் என தெரிந்தே தான் பேசினான் பல்லவன்.
பல்லவனுக்கு தேவை கண் முன்னால் மகன், மருமகள் குடும்பம் என்று நிறைவாக எந்தவித சங்கடங்களும், ஆபத்துகளும் இன்றி நிம்மதியாக வாழவேண்டும் என்ற பிரயாசை மட்டுமே.
ஸ்பூர்த்தி படிப்பென்று ஆரம்பிக்கவும் தன்னால் முடிந்தளவு பேசி பார்த்த பல்லவன் பின் மகனையும், ஸ்பூர்த்தியையும் கவனிக்க ஆரம்பித்தான்.
இருவரிடமும் ஆசையான பார்வைகள் என்று எதுவுமே இல்லை என ஓரளவு அனுமானம்.
அதிலும் மகனின் கண்டிப்பும், அதற்கு ஸ்பூர்த்தி, நந்தனின் மரியாதையான பணிவும், அன்பும் மனஅமைதியை தந்தது.
பல்லவனின் அமைதி எல்லாம் ஸ்பூர்த்தி தன்னிடம் கண்ணீருடன் பேசி சென்ற வார்த்தைகள் மூலம் சுக்குநூறாய் உடைந்திருந்தது.
அதை, அந்த திருப்பத்தை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவன். அப்படி ஒன்று நடந்துவிட வேண்டாம் என்று தான் மகனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தது.
அஷ்வினின் திருமணம் பேச்சை முதலில் அதிரனிடம் எடுத்திருக்க அவன் சொல்லிவிட்டான் அஷ்வினிடம் பேசுங்கள் என்று.
அதன் பின்னரே திருமணத்தின் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்க பெண் வரன்கள் அத்தனை ஆர்வமாய் வந்து சேர்ந்தது.
வரன் என்று வந்து சேர்ந்த அன்று ஸ்பூர்த்தியும் வந்து சேர பிரச்சனை பெரிதாக மனதில் உள்ளதை சொல்லிவிட்டு அவள் கிளம்பிவிட ஆட்டம் கண்டது பல்லவனே.
மகனின் அமைதியும், திருமணத்தை தள்ளி போடவேண்டிமென்ற பேச்சும் என்று மொத்தமாய் நிலைகுலைய ஓரளவு மனதை தேற்றினால் அடுத்த பிரச்சனை.
அதிலும் அமைச்சரின் நேரடி எதிர்ப்பாய் ஸ்பூர்த்தி நிற்க இதனால் அவளுக்கு ஆபத்தோடு, எத்தனை பிரச்சனைகள், இடைஞ்சல்கள் வர கூடும் என்று பல்லவன் தவித்து போனான்.
இப்போதும் மகனிடம் பல்லவன் மன்றாடும் குரலில் கேட்டுவைக்க அஷ்வின் மனதில் மாற்றமில்லை என்பதை போல நின்றான்.
“அஷ்வின் அப்பா பேச்சை கேளு. நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்ப்பா…” மீண்டும் பல்லவன் மகனிடம் ஆரம்பிக்க,
“நான் இல்லைன்னு எப்பவும் சொல்லலைப்பா. அதே நேரம் என்னோட மனசு. என் விருப்பம்…” என்றான் அஷ்வின்.
“அந்த விருப்பமே ஸ்பூர்த்தி சொன்னதால ஆரம்பிச்சது தானே? அதுக்கு முன்னாடி அப்படி எதுவும் நினைச்சியா நீ? சொல்லு…” என்றான் பல்லவன்.
“ஏன் அவன்கிட்ட இப்ப இவ்வளவு பிரச்சனை பன்றீங்க?…” மோனிகா பல்லவனை நிறுத்த பார்க்க,
“மோனி நீ பேசாம இரு. இது ஒன்னும் அதிரன், வரு விஷயம் மாதிரி இல்லை. ஸ்பூர்த்தி பன்றது குடும்பத்தோட நிம்மதியை கெடுத்துடும். யாரோ என்னவோ பண்ணிட்டு போகட்டும். இவளுக்கு ஏன் இந்த வேலை?…” என்றவன்,
“தலையெழுத்தா என்ன? ஆசைக்கு படிச்சோமா, ரெண்டுவருஷம் வேலை பார்த்தோமான்னு வரவேண்டியது தானே? இவ தான் எல்லாத்தையும் காப்பாத்த போறாளா? சர்வீஸ் பண்ணவா பிறந்தா?…” பல்லவன் பேசிக்கொண்டே செல்ல,
“அப்பா ப்ளீஸ்…” என்று சத்தமாய் மிக சத்தமாய் கத்திவிட்டான் அஷ்வின்.
மூவரும் திடுக்கிட்டு பார்க்க அஷ்வின் முகத்தில் நிதானமெல்லாம் எங்கோ சென்றிருக்க அத்தனை கோபத்தையும் அடக்கிய பார்வை அவன் பார்த்தது.
“நல்லா பேசறீங்க? இப்படி ஒவ்வொருத்தரும் நினைச்சா ஊருக்குள்ள ஒருத்தரும் நிம்மதியா வாழ முடியாது. மத்தவங்க வீட்டுல சர்வீஸ் பண்ண கிளம்பினா வாட் எ ஃபேமிலின்னு கொண்டாடுவீங்க. இதுவே உங்க குடும்பம்ன்னா கூடாதா?…” என்றான்.
“அஷ்வின்…” பல்லவன் பேச வர கையமர்த்தி தடுத்தவன்,
“நீங்க உங்க மகனுக்காக எவ்வளோவேணா யோசிக்கலாம். ஆனா இதை செய், செய்யாதன்னு அதிகாரமா சொல்ல கூடாதுப்பா…” என்ற அஷ்வின்,
“நான் இப்ப ஸ்பூர்த்தி தான் எனக்குன்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு. அதை மாத்திக்க நிச்சயம் மாட்டேன். எப்பவும், எப்பவுமே. நீங்க இனி இதைபத்தி பேசக்கூடாது. முக்கியமா மாமாகிட்ட…” என்றான் அஷ்வின்.
“அஷ்வின், அப்பா…”
“எனக்கு தெரியும்ப்பா, நான் முடியாதுன்னா நீங்க அடுத்து மாமாவை தான் பார்ப்பீங்க…”
“இப்பவும் நீ அப்பாவை தப்பா தான் புரிஞ்சுக்கிட்ட. நம்ம பொண்ணு அந்த வேலையை…”
“ம்ஹூம், நான் சரியான முடிவுல இருக்கேன்னு உங்களுக்கு புரிய வைக்கறேன். நீங்க அமைதியா இருந்தீங்கன்னா கல்யாணம் இங்க நடக்கும். இல்லைன்னா…” என்றவன் மோனிகாவை பார்த்துவிட்டு தண்ணீரை கூட எடுக்காமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
“பார்த்தியா எப்படி பேசிட்டு போறான்னு…” என பல்லவன் மோனிகாவிடம் எகிற,
“நான் உள்ள போறேன்ம்மா…” என அமுதன் சென்றுவிட்டார்.
“என்ன? என்ன ஒன்னும் சொல்லாம போறாங்க?…” பல்லவன் அதற்கும் கோபப்பட,
“உங்களுக்கு இதே வேலையா போச்சு. இதுல நம்ம லவ் பண்ணி கல்யாணம் பண்ணோம்ன்னு வெளில எப்பவும் சொல்லிக்கவே கூடாது…” என்று மோனிகா தலையிலடித்துவிட்டு சென்றுவிட்டாள்.
பல்லவன் ஹாலிலேயே அமர்ந்துவிட்டான் நிம்மதியின்றி. பொறுமையாய் பேசியிருக்கவேண்டுமோ என்று யோசனையுடன் இருந்தான்.
எத்தனை பொறுமையாய் பேசினாலும் அஷ்வின் முடிவு மாற போவதில்லை என பல்லவனுக்கு தெரியாமலே போனது.
அறைக்குள் வந்த அஷ்வின் மனது சமன்பட மறுத்தது. என்னதான் தந்தையின் பேச்சில் தன் மீதான பாசமே மிகுந்திருந்தாலும் அதில் வந்துவிழுந்த வார்த்தைகள் அவன் நினைத்தும் பாராதது.
எப்படி ஸ்பூர்த்தியை அப்படி சொல்லமுடிந்தது? அதிரனை பேச முடிந்தது என்று மனது விண்டுபோனது.
இரண்டு வருடம் முன்பு இருந்த அந்த மனநிலைக்கு செல்வதை போலிருக்க முற்றிலும் அமைதியிழந்தான்.
“ஓஹ் காட்…” என தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டவன் அதிரனுக்கு அழைப்போமா என்று போனை எடுக்க ஸ்பூர்த்தியின் எண்ணில் கவனம் பதிந்தது.
“ஸ்பூர்த்தி…” என சொல்லிப்பார்த்தவன் அவளுக்கு அழைப்பு விடுத்துவிட்டான்.
“மாமா என்ன இந்த நேரம்?…” அவனின் அழைப்பை உடனே எடுத்ததும் கேட்க,
“சொல்லுங்க மாமா, வாய்ஸ் ஏன் ஒருமாதிரி இருக்கு?….” என கண்டுகொண்டாள்.
“தெரியலை. கொஞ்சம் கரகரப்பா இருக்கு. தூங்கி எழுந்தா சரியாகிடும்…” என்றவன் அவள் என்ன பார்க்கிறாள், என்ன செய்திகள் என்று பேச்சுக்கொடுக்க ஸ்பூர்த்தி ஒவ்வொன்றாய் சொல்ல என்று நேரம் சென்றது.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுள் ஆழமாய் இறங்க கண்களை மூடி கேட்டபடி சாய்ந்திருந்தான்.
பேச்சினூடே உறக்கம் சுழற்ற அவன் அழைப்பில் இருக்கிறானே என முயன்று தூக்கத்தை விரட்டி அவள் பேச அஷ்வினிடம் வெறும் ஹ்ம்ம் மட்டுமே.
“தூங்கறீங்களா மாமா?…” என மீண்டும் உறுதிப்படுத்த கேட்டாள்.
“இல்லடா, நீ பேச. கேட்டுட்டிருக்கேன்…” என்றான் அஷ்வின்.
“வீட்டுல எதுவும் பிரச்சனையா?…” என அவள் கேட்கவும் சுதாரித்தவன்,
“ஏன் உன்கூட பேசனும்னு நான் கூப்பிட மாட்டேனா?…” என்றான் உடனே.
“இல்லை எப்பவும் நேரத்துக்கு தூங்க சொல்லுவீங்க…”
“இனிமே நேரத்துக்கு தூங்க கூடாதுன்னு சொல்றேன். என்கிட்டே மட்டும். புரியுதா? நீ பேசு. நான் கேட்கறேன்…” என்றதும் ஸ்பூர்த்தி இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை.
“ஏன் நீ தூங்கனுமா ஸ்பூர்த்தி?…” என அஷ்வின் கேட்க,
“ஹ்ம்ம், அது…”
“கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கலாம். பேசு பேசு…” என்று அவளை உறக்கமிழக்க வைத்தான் அஷ்வின்.