நள்ளிரவிற்கு மேல் தான் உறங்கவே முடிந்தது ஸ்பூர்த்தியால். அதுவரை அவள் பேச அஷ்வின் கேட்டுக்கொண்டே தான் இருந்தான்.
தூங்கிவிட்டானோ என நினைத்து சில நொடிகள் மௌனமாக இருந்தால் கூட உடனே,
“ஸ்பீக் அவுட் ஸ்பூர்த்தி…”என்பான் திடுமென்று.
இவனின் இப்படியாகப்பட்ட அலும்பல்கள், பிடிவாதம் எல்லாமே புதிது தான் ஸ்பூர்த்திக்கு.
தங்களுக்கே பிடிவாதம் பிடிக்க கூடாது, வேண்டியதை அமைதியாக கேட்டு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவன்.
இப்படி அவளிடம் பிடிவாதமாய் இருக்க ஸ்பூர்த்திக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் இருந்தது.
அதே நேரம் இதை எல்லாம் தன்னால் சமாளிக்க முடியுமா என்றும் சற்று அச்சமாகவும் இருந்தது.
தயக்கம், அச்சம், பயம், பிடிவாதம், முரண்டு, தவிப்பு, சஞ்சலம், கலக்கம் என எல்லாமே அவள் கடைபிடிப்பதும், இன்றுவரை அவள் தொடர்வதும் அஷ்வின் ஒருவனிடத்திலே.
அவனை பிடித்து, எங்கே அவனுக்கு பிடிக்காமல் போகுமோ என அச்சப்பட்டதும், அவனை மட்டும் தான் பிடிக்குது என பிடிவாதமாய் இருந்ததும், அவன் இல்லை என்றால் என்னாவாமோ என கலங்கி தவித்ததும் என ஒவ்வொன்றாய் தான் நிகழ்த்தி முடித்திருக்க அவனின் ஆரம்பமோ இது?
இந்த அஷ்வின் அந்த கண்டிப்பான அஷ்வின் அல்லவே. அவள் அறிந்ததெல்லாம் கண்ணியமும், கட்டுப்பாடும், வழிகாட்டலும் என்று இருந்தவனை மட்டுமே.
இப்போது இவளை இரண்டு நாட்களால் ஒருவழியாக்கிக்கொண்டு இருந்தான் அவனின் மனதை உணர்த்தியதில் இருந்தே.
காதல் என்று சொல்லாத போதே, அதனை உணராத உரிமையில் அவன் ஆட, அவனுக்கு இசைவாய் இவளும் சென்றுகொண்டிருந்தாள்.
இரவு நேர பேச்சுக்களில் நள்ளிரவு தாண்டவிருக்க சீரான மூச்சு சப்தம் மட்டுமே அவள் மெல்லிய குரலின் இடைவெளிகளில் நுழைந்தது.
உறங்கிவிட்டானோ என்று நினைத்தவள் மேலும் சில நொடிகள் மௌனமாகி பின் அவளே அஷ்வினை அழைத்தாள்.
“எப்பவும் வேகம் தான் இவளுக்கு…” என சொல்லிக்கொண்டவன் பேப்பரை மூடி வைத்துவிட்டு,
“பாட்டி பை…” என்று ஹாலில் இருந்தே சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.
“நானும் போய் சொல்லிட்டு வரேன் மாமா…”
“நான் சொல்லிட்டேன். நீ வா…”
“ப்ளீஸ் ரெண்டே நிமிஷம்…” என்று ஓடிவிட்டாள் கிட்சனை நோக்கி.
அஷ்வின் ஒரு தலையசைப்புடன் மொபைலை எடுத்து மேகாவிற்கு தாங்கள் கிளம்புவதாய் மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்பி வாசலுக்கு வந்து காரில் அமர்ந்தான்.
காரை கிளப்பிய நொடி ஸ்பூர்த்தியும் வந்து முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
எப்போதுமே தந்தையுடன் செல்வதை விட அஷ்வினுடனான பயணம் நிரம்ப பிடிக்கும்.
பாதுகாவலர்கள் இன்றி அவனே அவனின் காரை செலுத்துபவனுடன் பயண நேரம் அத்தனை இதமாய் இருக்கும்.
அதை அதிகமாய் விரும்புவாள். இப்போதும் அவனும் அவளும் மட்டுமே அந்த காரில்.
“கையில என்ன?…” அவள் கையில் சிறிய பாட்டில் இருக்க,
“ஜூஸ் மாமா. உங்களுக்கு வேணுமா?…” என்றாள்.
“ம்ஹூம், போய் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுவோம்…”
“எங்க ஸ்டூடியோவுக்கு தானே?…” என்று அவள் சிரிக்க அஷ்வின் முகத்தில் செல்லமாய் ஒரு முறைப்பு.
“பின்ன வேற எங்க போக போறோம்?…”
“சரி எங்க போகனும்? சொல்லு போகலாம்…” என அஷ்வின் கேட்க விளையாடுகிறானோ என்று,
“போகலாமே? பீச் போகலாம். சும்மா ஒரு வாக் கடற்கரை பக்கமா. அங்கயே லைட்டா ஏதாவது சாப்பிடலாம். அதை முடிச்சுட்டு லஞ்ச் ஏதாவது ஒரு ரெஸ்டாரென்ட்ல. அப்படியே ஒரு மேட்னி ஷோ மூவி பக்கத்துல ஏதாவது ஒரு தியேட்டர்ல…”
வரிசையாய் ஸ்பூர்த்தி அடுக்கிக்கொண்டு வர தலையாட்டியபடி சிறு புன்னகையுடன் காரை ஓட்டியவன் முகத்தில் தீவிரமும் கூட.
“அதெல்லாம் சும்மா. தி கிரேட் ம்யூசிக் டைரக்டர் அஷ்வின். நீங்க பப்ளிக்ல பப்ளிக்கோட பப்ளிக்கா? சான்சே இல்லை…”
கிண்டல் செய்துகொண்டே அவள் வர அஷ்வினுக்கு அதனை எப்படியாகினும் அவளுக்கு செய்துவிடவேண்டும் என்று தீவிரம் பிறந்தது.
“ஐ வில்…” என்று சொல்லிக்கொண்டவன் காரை இன்னும் வேகமெடுக்க பின்னால் வந்துகொண்டிருந்த பாதுகாவலன் வசந்த் அஷ்வினுக்கு அழைத்துவிட்டான்.
“அஷ்வின் ஸார், இவ்வளோ வேகம் வேண்டாம். ஸ்டூடியோக்கு தானே போறதா ப்ளான். இப்ப எங்க போய்ட்டிருக்கீங்க?…” என்று கேட்க,
“எப்ப இருந்து எனக்கு நீங்க பாடிகார்டா மாறினீங்க?…” என்றவன் குரலில் ஏகத்திற்கும் கண்டிப்பு.
இப்போது தான் அஷ்வின் முகத்தின் பாவனையை கவனித்த ஸ்பூர்த்திக்கு திக்கென்றானது.
முன்பானால் அஷ்வின் இதை பெரிதுபடுத்தியிருக்கமாட்டான். முன்பொருமுறை நந்துவிடம் பேசியபொழுதும் கூட,
“நாம இருக்கற இடம் அறிஞ்சு அதுக்கேத்தது மாதிரி தான் வாழனும். இதுதான் பாதுகாப்புன்னா அப்படித்தான் இருக்கனும்…” என்று அவர்களை அன்று கண்டித்திருந்தான் அஷ்வின்.
இப்போது அதனை அவனை மீற செய்துவிட்டது தனது பேச்சும், கேலியும் தானோ என்று ஸ்பூர்த்தி அவனை பார்த்துக்கொண்டிருக்க அதிரன் அழைத்துவிட்டான்.