அதனை ஆசையுடன் ஒருநொடி பார்த்த ஸ்பூர்த்தி தன்னை மீட்ட விதமாய் அஷ்வினை பார்த்தாள்.
அவனும் அவளை, அவளின் முகபாவனைகளை தான் கவனித்தபடி அமர்ந்திருந்தான்.
அவள் வெளியே அத்தனைபேரையும் கவனித்ததையும், முயன்று முகத்தை மாற்றிக்கொண்டதையும் கவனித்தவன்,
“மாஸ்க் போட்டுக்கலாமா?…” என்றான் அவளிடம்.
“ஒன்னும் வேண்டாம்…” என்று ஸ்பூர்த்தி சொல்லிய நொடி கதவை திறந்து இறங்க போனவன் கையை பிடித்து உள்ளே இழுத்து போட்டாள்.
“எப்ப இருந்து இவ்வளோ பிடிவாதம் மாமா? ஏன் இப்படி பன்றீங்க? எனக்கு படபடன்னு வந்திருச்சு….” என்று அவள் சொல்ல,
“ஏன்? என்னாகிரும்? முன்னமாதிரி இல்லை மக்கள்…” அஷ்வின் அவளிடம் பேச ஸ்பூர்த்தி இன்னும் கோபமானாள்.
“சிலவிஷயங்கள் எப்பவுமே மாறாது. இங்க முன்னமாதிரி இருந்தாலும் இல்லைனாலும் சினிமா சம்பந்தபட்டவங்க இவங்களுக்கு எப்பவும் காட்சி பொருட்கள் தான்…”
“ஸ்பூர்த்தி நான் பார்த்துக்கறேன்…”
“எதையும் பார்க்க வேண்டாம். எனக்கு ஆசையே போய்டுச்சு. இப்ப கிளம்புவோம் மாமா…” என்று சொல்லியவள்,
“இங்க நான் இருக்கற இந்த ரெண்டுமூணு நாள் பீஸ்ஃபுல்லா இருக்கனும். ரிஸ்க் எடுக்க வேண்டாம். எனக்கு ப்ரீயா நினைச்சமாதிரி இந்த ஃபேன் பேஸ் இல்லாம சுத்தனும்னு ஆசை தான். ஆனா அது முடியாது…” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்று அஷ்வின் காரை கிளப்ப அதுவரை ஸ்பூர்த்தி மனநிலை ஒரே படபடப்பு தான்.
“ஆனாலும் எவ்வளோ பன்றீங்க நீங்க?…” என்று சொல்ல அவள் முகத்தில் சின்ன சின்னதாய் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தது.
“ஆபீசர்க்கு என்ன ஒரு பயம்?…” என்றான் கிண்டலாக.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த ஜூஸை எடுத்து குடித்தாள் ஸ்பூர்த்தி.
பயம் தான். முதல்நாள் அவள் சேகரித்த தகவல்களின்படி ஏதாவது நடந்துவிடுமோ என்று உள்ளுணர்வு அறிவுறுத்திக்கொண்டே இருந்தது.
வேதநாயகத்தின் செல்வாக்குகள் எதுவும் எடுபடாதவிதத்தில் கைதாகியிருந்த அந்த பையன்கள் மேல் வழக்கு பதிவாகி இருந்தது.
இதில் அந்த இளைஞர்கள் வந்திருந்த வாகனத்தில் இருந்து ஸ்பூர்த்தி சேகரித்து தந்திருந்ததில் போதை பொருட்களும் அநேகம் இருக்க ஒவ்வொன்றாய் வெளிவந்தது.
தான் செய்துவைத்த அத்தனையும் வேதநாயகத்திற்கு கண்ணிவெடி தான். இப்படி ஒவ்வொன்றாய் கிளம்பும் என்று அவரே எதிர்பாராதது.
சாதாரண வழக்கு, அதுவும் வனத்தை சேதப்படுத்தியதாகவும், வனவிலங்கை காயப்படுத்தியதாகவும் இருக்க அவற்றை எப்படியும் முறியடித்துவிடலாம் என வேதநாயகம் அலட்சியமாக நினைத்தால் கிணறுவெட்ட பூதம் கிளம்பியது.
வழக்கு எங்கோ தொடங்கி எங்கோ சென்றுகொண்டிருந்தது. அங்கே பிள்ளைகள் விஷயத்தில் எதுவும் செய்யமுடியாமல் இருக்க மீண்டும் ஸ்பூர்த்தி பணிக்கு வந்தால் இன்னுமே பிரச்சனை என்று வேதநாயகம் அவளை சென்னையிலேயே முடக்க நினைத்தார்.
இதையும் முக்கியமான ஒருவரின் மூலம் அறிந்திருந்தவள் எவ்வகையில் செயல்படுத்துவார் என்று நினைத்து பலவித யோசனைகளில் இருக்க மனதிற்குள் சிறு சஞ்சலம்.
அவளது பணியில் சில இடைஞ்சல்கள் இருந்தாலும் இதுவரை இத்தனை பெரிதாய் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. இந்த வழக்கு அவளே எதிர்பாராதது.
இதன் பின்னணி அவளை அச்சமுற செய்வதாகவும் இருக்க இதனால் குடும்பத்தினர் யாருக்கும் எவ்வித பிரச்சனைகளும் வந்துவிட கூடாதென்று நினைத்தாள்.
தேவராஜ், அதிரன் செல்வாக்கு எந்தளவு அவளுக்கு பலமோ, அதுவே பலவீனமாகவும் இருந்தது.
இத்தனை பின்புலம் கொண்ட தன்னையே இவர்கள் இப்படி ஆட்டிப்படைக்கின்றனரே சாதாரணமானவர்கள் என்றால்?
நினைக்கவே கோபமும், ஆத்திரமும் வந்தது. தவறையும் செய்துவிட்டு அதனை கேட்டால் அடக்கி இருக்க செய்வார்களா?
கை முஷ்டி இறுக விரல்களை முறுக்கினாள். அவள் முறுக்கியதில் விரலில் சொடக்குகள் விழ,
“என்ன ஸ்பூர்த்தி? கோபமா?…” என்றான் அஷ்வின்.
“ஹாங், இல்ல மாமா. ஏன்?…”
“பின்ன ஸ்டூடியோ வந்தாச்சு. இன்னும் நீ இறங்கவே இலையே? எந்த உலகத்துல இருக்க?…” என கேலியாய் கேட்டாலும் அவள் முகத்தின் உணர்வுகளை படிக்க முயன்றான்.
எதையோ நினைத்து வருத்தப்படுகிறாள் என்பது வரை தெரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை அஷ்வினுக்கு.
“அதான் பீச்க்கு போகலையே? இன்னும் என்ன?…” என்று கார் கதவை திறந்து இறங்கினான்.
இரண்டு வருடம் கழித்து இவ்விடம். பெரும்பாலும் அதிகமாய் அவள் வருவதில்லை என்றாலும் அவளுக்கு மிகவும் அமைதியை தர கூடியதில் அவர்கள் ஸ்டூடியோவும் ஒன்று.
பார்த்தவர்கள், தெரிந்தவர்கள், வேலை செய்பவர்கள் என்று அனைவருமே அவளருகே வந்து நலம் விசாரித்து செல்ல அதிலேயே சோர்ந்து போனாள் ஸ்பூர்த்தி.
“எவ்வளோ கேட்கறாங்க?…” என பேசிக்கொண்டே அவள் அஷ்வினின் பிரத்யோக அறைக்குள் நுழைந்தாள்.
“இவ்வளோ நாள் உன்னை பார்க்காம இப்ப பார்க்கும் போது அவங்க எல்லாம் இது கூட கேட்கமாட்டாங்களா?…” என்றவன் கதவை திறந்துவைத்திருக்க கொண்டுவந்திருந்த உணவு அறைக்கே வந்தது.
“இங்க உள்ள டிபனா?…” என்று அவள் கேட்கவும்,
“ஆசை தான். பாட்டிட்ட சொல்லி பேக் பண்ண சொல்லிருந்தேன். சாப்பிடு. நான் இப்ப வந்திருவேன்…”
“மாமா இங்க கேண்டீன்ல இருந்து பொங்கல், கேசரி மட்டும் சொல்லுங்களேன். ப்ளீஸ்…” என கேட்டவள் தலையில் வலிக்காமல் குத்தியவன்,
“நோ, நோ. நீ இதை மட்டும் சாப்பிடு. வேணும்னா நைட் வீட்டுல அம்மாவை செய்ய சொல்றேன்…”
“சரி நீங்க சாப்பிடலை?…”
“நான் வரும் போதே வீட்டுல சாப்ட்டு தான் வந்தேன்…” என்று சொல்லி கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டான் அஷ்வின்.
அவன் கிளம்பவும் ஒரு பெருமூச்சுடன் அத்தனையும் எடுத்துவைத்து சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் ஒன்றுபோல அடுக்கி வைத்துவிட்டு அந்த அறைக்குள் வலம் வந்தாள்.
சாப்பிட்ட பையை எடுத்து செல்ல ஆள் வர அவர் செல்லவும் அங்கிருந்த வயலின், கீ போர்ட் என அந்த இசைக்கருவிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் தொட்டு பார்த்தாள்.
படிக்கும் பொழுதிலாவது கிடைத்த நேரத்தில் தன் தாத்தாவுடன் இந்த பயிற்சியில் இருப்பவள் கடந்த இரண்டு வருடமாக இவற்றை தொட்டு கூட பார்க்கவில்லை.
ரத்தத்திலேயே கலந்திருந்ததாலேயே என்னவோ இசை கருவிகள் அத்தனையும் தொட்டதும் உள்ளுக்குள் சிலிர்த்துக்கொண்டு வந்தது.
நாள்பட்டு போயிருந்தாலும் கற்றிருந்ததில் அதன் லயங்கள் எல்லாம் அவள் மனதில் ஸ்வரங்களாய் விரிய அங்கிருந்த வயலினை எடுத்தாள்.
மனதில் தோன்றிய ராகத்தில் ஸ்வரம் மீட்ட அந்த அறையில் அவளும், அந்த ஸ்வரமும்.
அவள் இசைத்தது அவளின் காதுக்கே இனிமை சேர்க்க இன்னுமின்னும் இசைத்தாள்.
ஒரு பாடலுக்கான அடிப்படை தாளத்தையே அவள் பிடித்துவிட்டிருக்க மீண்டும் வாசிக்க என்று முடித்தவள் முகத்தில் திருப்தியும், ஒருவித பூரிப்பும்.
“ஹ்ம்ம், நாட் பேட். டச் விட்டு போகலை….” என தனது ஷோட்ல்டரை தானே தட்டிக்கொடுத்துக்கொண்டாள்.
“வாவ் நைஸ்…” என்ற கைதட்டலில் ஸ்பூர்த்தி திரும்பி பார்க்க அங்கே அஷ்வின்.
அவனின் முகத்தில் மிதமிஞ்சிய சந்தோஷமும், ரசனையும் அவ்வளவு பொங்கியது.
“சூப்பர்ப் ஸ்பூர்த்திடா….” என்று அருகே வந்து அவளின் தோளை தட்டிக்கொடுத்தவன்,
“பேசாம இந்த டியூனை நான் எடுத்துக்கறேன். நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் அதி மாமா மூவிக்கு தான். பக்காவா யூஸாகும். அதுவும் மாமா வாய்ஸ்ல சாங் குடுத்தா அள்ளிரும். லவ்லி ட்யூன்…” என்று பாராட்ட,
“எடுத்துக்கோங்க…” என்றாள் ஸ்பூர்த்தி.
“சூர், ஆனா ராயல்டி கேட்கமாட்டியே?…”
“ம்ஹூம்…” என்றவள் எதையோ மீட்டுக்கொண்ட சந்தோஷம்.
மீண்டும் அந்த வயலினை ஆசையாய் வருடியவள் கைகள் வாசிக்க விழைய அஷ்வின் முன்னால் செய்யமுடியவில்லை.
“ஒன்மோர் ட்யூன் குடேன் ஸ்பூர்த்தி. ஒரு டூயட் சாங் போடலாம்….” என்றான் அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டு சலுகையும், உல்லாசமுமாய்.
“மாமா, இது சும்மா என்னவோ தோணுச்சேன்னு வாசிச்சேன். அதெல்லாம் முடியாது…” என மறுத்தவள் அவனுக்கெதிரே அமர்ந்துகொள்ள அஷ்வின் பார்வையில் வயலினை மீண்டும் பார்க்க ஆரம்பித்தாள்.
“ட்யூன் மட்டும் கேட்கலை. உன்னோட வாய்ஸ் கூட வேணும். சோலோ சாங் குடுத்தாலும் ஓகே…” அவளை விடாமல் இழுத்து பிடிக்க,
“என்ன இது? நான் பாடறதை விட்டு எவ்வளோ வருஷமாச்சு? சும்மா இருங்க…”
“பரவாயில்லை. இப்ப பாடேன். ஏன் உன் ட்யூட்டில இதெல்லாம் ரூல்ஸ் புக்ல போட்ருக்காங்களா என்ன? பாட கூடாதுன்னு…”
இருவருமாக பேசிக்கொண்டிருக்க சற்று நேரத்தில் நடக்க போவதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
பல்லவன் தன் முடிவு தான் சரி என்பதை போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கவிருக்க இங்கே அவற்றை பற்றிய சிந்தனை நெருங்காமல் இருவரும் அவர்களுக்கான உலகத்தில் ஆளுமை புரிய ஆரம்பித்திருந்தனர்.
இசை குடும்பத்தில், கலை வாரிசாய் பிறந்திருந்தவளும், சந்தர்ப்பவசத்தால் அதில் பிணைந்து இன்று அவனும் அந்த திரையுலகில் தனக்கென முத்திரை பதித்து வெற்றி பெற்றிருப்பவனும் சந்திக்கும் அடுத்த விஷயம் இரு குடும்பத்தின் நிம்மதியில் சிறு கல்லை எரியவிருந்தது.