“கரெக்ட்டா மட்டுமில்லை, நமக்கெதுக்கு அரசியல்வாதிங்க கூட பகை. அவங்கக்கிட்ட ஏன் திமிரா நிக்கனும்னு கேட்கறேன்? கொஞ்சமாவது அச்சமிருக்கா ஸ்பூர்த்திகிட்ட? எல்லாத்தையும் நான் செய்வேன்னு இவ்வளோ திமிர் வேணுமா?…”
“ப்பா என்ன பேசறீங்க நீங்க? அவ நிறைய பேஸ் பன்னிருக்காப்பா. அவ திமிரா இருக்கறதுல தப்பில்லையே? எனக்குமே அதுதான் பிடிச்சிருக்கு…” அஷ்வின் பல்லவனிடம் எடுத்து கூற,
“அது குடும்பம் நடத்த ஒத்துவராதுப்பா. வெளில நிம்மதி இருந்தா தான் வீட்டுல நிம்மதியும், சந்தோஷமும் இருக்கும். படுத்தா பயமில்லாம பதட்டமில்லாம தூக்கம் வரனும். நீ இப்ப எடுத்த முடிவை வச்சு சொல்ற. நான் எல்லாம் யோசிச்சு சொல்றேன்…”
“நோ ப்பா, நான் ஸ்பூர்த்தியை கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணாம இருந்தா கூட இதை தான் சொல்லிருப்பேன். இந்த படிப்பு, வேலை தான் வேணும்னு அவ நின்னப்போ நான் சொன்னதும் அதான். அவ வேலைக்கு இந்த திமிர் வேணும் ப்பா…”
இத்தனை தன்மையாய் எடுத்து சொல்லியும் கூட பல்லவன் இறுக்கமாக தான் அமர்ந்திருந்தான்.
“சொல்லபோனா எல்லாருக்குமே அந்த திமிர் இருக்கனும்ப்பா. தலைக்கனமா இல்லாம தன்னம்பிக்கையா. அது ஒரு அழகு. அந்த அழகு என்னை எப்பவும் இம்ப்ரெஸ் பண்ண கூடிய ஒன்னு. நானே எப்படி நீங்க சொல்றதை ஒத்துப்பேன்னு நினைக்கறீங்க?…” அஷ்வின் பின்வாங்கவே இல்லை.
“அஷ்வின் இப்ப பேச நல்லா இருக்கும்…”
“எப்பவும் இதே தான் பேசுவேன். நீங்க திமிர்ன்னு பார்க்கறீங்க. நான் நிமிர்வா பார்க்கறேன். ஏன் என் அம்மாக்கிட்ட இல்லாத திமிரா? இந்த வேலைக்கு போறவங்களுக்கு தான் அது இருக்கனும்னு இல்லை….”
“மோனியும் ஸ்பூர்த்தியும் ஒண்ணாடா? அதுவும் நான் நினைக்கிற மாதிரி மோனி வீட்டுக்குள்ளயே தான் இருக்கா…”
“என்ன வீட்டுக்குள்ளையேவா? என்ன கவனிச்சீங்க அம்மாவை? அவங்க அப்படி இருக்க போய்தான் எல்லாத்தையும் சமாளிச்சு…”
“உங்கப்பாவையும் சமாளிச்சு. அதையும் சொல்லு அஷ்வின்…” என்று தீபாராதனை தட்டுடன் வந்துவிட்டாள் மோனிகா.
“ப்ச்…” என பல்லவன் சலித்துக்கொள்ள,
“எந்திச்சு நின்னு கும்பிடுங்கன்னு சொல்லனுமா உங்களுக்கு?…” என அதட்டினாள் பல்லவனை.
“இவன் முன்னாடி என்னை அதட்டி பேசு, அப்பறம் இவன் ஏன் என் பேச்சை கேட்க போறான்?…” என்ற பல்லவன் நெற்றியில் மோனிகா பிரசாதம் இட்டபடி,
“ஏன் கேட்கனும்? ஒருகட்டத்துக்கு மேல என் பேச்சை கேட்டுத்தான் ஆகனும்னு சும்மா பிள்ளைங்களை போட்டு படுத்த கூடாது. நீங்க ஏன் இதை பாசிட்டிவா எடுக்க கூடாது?…” மோனிகா மகனுக்கும் எடுத்து வைக்க,
“எப்படி? எங்க சொல்லேன்?…” என்றான் பல்லவன்.
“இப்பவே வரபோற மருமகளுக்கு என் மகன் எப்படி முக்கியத்துவம் குடுக்கனும்னு கத்துப்பான் தானே? இதெல்லாம் குடும்ப வாழ்க்கையின் அனுபவம். என் பிள்ளை உங்களை மாதிரி நல்லது சொன்னா கேட்கனும்ல…” என்றாள்.
“அப்ப நான் அப்பா மாதிரி இருக்கனும்னு சொல்றீங்க இல்லையாம்மா?…” அஷ்வின் தாயிடம் கண்சிமிட்டி கேட்க,
“அப்கோர்ஸ் அஷ்வின். உன் அப்பா எங்க அப்பா வீட்டுல அவ்வளோ சண்டை போட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அந்த சமத்து யாருக்கும் வராது. அப்பலாம் அவர் அவ்வளோ பிரிலியன்ட் தெரியுமா?…”
மோனிகா பேச பேச பல்லவன் மனநிலை சற்றே மாறி இருக்க அஷ்வின் சிரித்தபடி ஸ்பூர்த்தியை பார்க்க சென்றான்.
அவள் இன்னும் நல்ல உறக்கத்தில் இருக்க கதவருகே நின்றபடி அவளின் நிர்மலமான முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தான்.
சொந்தத்தில் திருமணம், எல்லாம் இலகுவாய் அமைத்துவிடும் என்று எல்லாம் நினைத்தது எத்தனை பெரிய தவறு என இப்போது புரிந்தது அஷ்வினுக்கு.
இப்போது தன் மனநிலையை ஒத்ததா ஸ்பூர்த்தியின் மனது. பல்லவனின் அந்த அன்பு அவளை வெகுவாய் கலங்கடித்திருப்பதை கண்ணார கண்டுகொண்டானே.