“பைத்தியமாடி உனக்கு. என்மேல ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லைல. என்னை பார்த்துக்க எனக்கு தெரியாதா? கூப்பிட்டா கூட போயிருவேனா நான்? அவ்வளோ தானா என்னை நீ புரிஞ்சிருக்கறது?….” என்று சொல்லியேவிட்டான்.
அவள் உயிரை கொள்ளும் வார்த்தைகள். அவளை அடியோடு வேரறுக்கும் அந்த வார்த்தைகளில் அனலில் இட்ட புழுவாய் துடிதுடித்து விக்கித்து பார்த்தவளை கண்டு நெற்றியில் அறைந்துகொண்டான் ஆரோன்.
“சத்தியமா உங்களை நான் சந்தேகப்படலை ரிஷி…” என்று உயிரை கண்களில் தேக்கியபடி மொழிந்தவள் உடலோடு மனதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஆரோனுக்கும் தான் விட்ட வார்த்தையின் வீரியம் உரைக்க செயலற்று போனான் மனைவியின் நிலை கண்டு.
“ஷிட், ஷிட்…” என்று காலை உதைத்தவன் செய்வதறியாமல் அவளை பார்க்க அதற்குள் உஷா வந்துவிட்டாள்.
“என்ன மேம், சொல்லிட்டு வந்திருக்கலாமே?…” என்று வந்ததும் தான் அந்த மெல்லிய வெளிச்சத்தில் என்னவோ அசம்பாவிதம் என்று புரிந்தது.
“உஷா நீ முதல்ல சௌபர்ணிகாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ. இங்க நடந்தது வெளில தெரியவேண்டாம். நான் நடாஷாவை பார்த்துக்கறேன்…” என்று மனைவியின் பக்கம் திரும்ப அவள் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.
தான் பேசியது அதிகம் என்று தெரிந்தாலும் இப்போது சமாதானம் செய்யும் நிலையில் அவனில்லை.
முதலில் நடாஷாவை பார்க்கவேண்டும். இந்த பிரச்சனையின் வீரியத்தை குறைக்க வேண்டும்.
“க்விக், உஷா கிளம்புங்க…” என்றவன்,
“இந்த பேச்சையும் கேட்க கூடாதா நீ?…” என்றான் அதே ஆவேசத்துடன் சௌபர்ணிகாவிடம்.
எதுவுமே சொல்லாமல் அவன் திரும்பி சென்ற விதத்தில் பாதி மரித்துவிட்டான் ஆரோன்.
அதன்பின் நடாஷாவின் பிஏவை அழைத்தவன் தான் வந்து பார்க்கையில் மயங்கி கிடந்ததாக சொல்ல ஓரிருவர் தவிர அங்கிருந்த அனைவரும் போதையின் முழு பிடியில்.
நடாஷாவின் காரியத்தரசி என்ன நடந்ததென கேட்க அவனுக்கே தெரியாதென்றான்.
“வாஷ்ரூம் போய்ட்டு வரும் போது கீழ விழுந்து கிடந்தாங்க. போதைல தடுமாறி விழுந்திருப்பாங்க போல. கிளாஸ் வேற உடைஞ்சு கிடந்ததா கன்னத்துல பட்டிருக்கு…” என்றான் கனன்ற உள்ளத்துடன்.
தன்னிடம் அவள் இப்படி அணுகுமுறை காண்பிப்பாள் என எதிர்பாராதவன் மனமெல்லாம் அவள் பேச்சினால் அருவருப்பில் சுளித்தது.
அவன் கிளம்பும் முன்னரே அவ்விடத்தை ஆராய மெல்லிய இருட்டும், கேமரா எதுவும் அந்த திசையில் இல்லாததும் நல்லதுக்கென்றானது.
நடாஷா விழித்ததும் சொல்லுமாறு சொல்லி கிளம்பி அறைக்கு வந்தவன் அறையில் சௌபர்ணிகா படுக்கையில் படுத்திருக்க பெருமூச்சுடன் திரும்பியவன்,
“அதை சொல்ல தான் கால் பண்ணேன். நீங்க எடுக்கலை பாஸ். மேம் ஹெல்ப் பண்ண விடமாட்டேன்றாங்க. கையில கண்ணாடி குத்திருக்கு. அதோட ரத்தம் போகுதேன்னு கட்டு போட்டிருக்கேன். நீங்க சொல்லுங்க…” என்று உஷா சொல்ல,
“ஓஹ் ஷிட்…” என சௌபர்ணிகாவிடம் விரைந்தான் ஆரோன்.
“என்னடி உன் பிரச்சனை?…” என்று அவளை எழுப்ப கண் திறக்கவே இல்லை.
“உஷா, இங்க மெடிக்கல் எமர்ஜென்ஸி இருக்காங்களா பாரு. மயக்கத்துல இருக்கா போல…” என்று பதறி அங்கிருந்த நர்ஸ் ஒருவரை வரவழைத்து காயத்திற்கு மருந்திட்டு ஊசி போட்டுவிட்டு கிளம்பினார்.
“நான் பார்த்துக்கறேன். நீ போ…” என்று உஷாவை அனுப்பியவன் மனது சொல்லொண்ணா வேதனையில் உழன்றது.
நிச்சயம் தன் வார்த்தைகள் அவளை எத்தனை தூரம் காயப்படுத்தியிருக்கும் என்பது அவனும் உணர்ந்திருந்தான்.
கொட்டிவிட்ட வார்த்தைகளை முடியாதது போல நிகழ்ந்துவிட்ட சம்பவத்தையும் மாற்ற முடியாதே.
பயப்பட எதுவுமில்லை என்று சொல்லி சென்றிருக்க ஆரோன் உறக்கமின்றி சௌபர்ணிகா முகத்தையே தான் பார்த்தான்.
விடியும் வரை அவளருகில் அவளின் தலையை கோதியபடி அமர்ந்திருந்தவன் விழித்ததும் எப்படி அவளை எதிர்கொள்ள போகிறோம் என்று பரிதவிக்க விடியலில் விளம்பர படப்பிடிப்பு நடத்திய தயாரிப்பளரிடமிருந்து அழைப்பு.
வரமுடியாதென மறுக்கமுடியாத சூழ்நிலை. உஷாவை அழைத்தவன் சௌபர்ணிகாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பி சென்றிருக்க அவன் வரும் முன் அவள் கிளம்பியிருந்தாள்.
“உங்க பாஸ்க்கு நான் சொல்லிடறேன் உஷா. நான் இப்பவே கிளம்பனும்…” என்று எழுந்தவள் கையில் கட்டை பார்த்துவிட்டு,
“தேங்க்ஸ்…” என்றாள் அவளிடம்.
“மேம், எதுவானாலும் பேசி சரி பண்ணிக்கலாம். ப்ளீஸ், பாஸ் வரட்டுமே? இப்படி தனித்தனியா போகவேண்டாமே?…” என அவளை நிறுத்த பார்க்க,
“நான் எப்பவும் தனியா இல்லை உஷா. ரிஷிக்கு புரியும். நான் கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
ஆரோன் உஷாவின் மூலம் தகவலறிந்து அயர்ந்து போனான். அறைக்கு வந்து பார்க்க அவளின் கையப்பமிட்ட வெள்ளை தாள்.
‘ஐ க்னோ ரிஷபன். இதுக்கு தான் ரொம்ப பயந்தேன். உங்களை காயப்படுத்தினதுக்கு ஸாரி. தேங்க் யூ சோ மச்’ என்று அதில் நிரப்பியிருக்க படித்தவன் முகம் இறுக அதனை கசக்கி வீசி எறிந்தவன் மடிந்து அமர்ந்துவிட்டான்.
‘தன்னால் முடியும். தன்னைவிட அவளை யார் புரிந்துகொள்ள முடியும்’ என்று நினைத்து இறுமாந்திருந்தவன் இன்றைக்கு மொத்தமாய் உடைத்துவிட்டிருந்தான் அவளின் மனதை.
மீண்டும் அமர்ந்தவாக்கிலேயே நகர்ந்து சென்று அந்த காகிதத்தை பிரித்தவன் அதில் சொட்டியிருந்த அவளின் கண்ணீர் துளிகளில் இதழ் பதித்தான்.
துவண்டு அமர்ந்திருக்க நேரமில்லை. அவனின் அடுத்த பணி அவனை அழைக்க இடையில் நடாஷா வேறு.
“என்னவோ நடந்ததே. யாரோ பேசினாங்க ஆரோன்…” என்று பேச,
“இங்க பாருங்க மேம். என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியலை. முடிஞ்சா நீங்க ஞாபகப்படுத்தி பாருங்க. கன்ட்ரோல் இல்லாம ட்ரிங் பண்ணினது நீங்க. நான் ஜஸ்ட் ஹெல்ப் தான் பண்ணேன். லீவ் மீ…” என்று கடுமையாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
“உஷா இனி நடாஷாவோட எந்த டீலிங்கும் வேண்டாம். எந்த ப்ரோக்ராம்க்கும் அவங்களுக்கு நாம வொர்க் பண்ண வேண்டாம். காட் இட்…” என்று எச்சரிக்கை வேறு விடுத்துவிட்டான்.
அங்கிருந்து மும்பை சென்றவன் செல்லும்முன் சபர்மதிக்கு அழைத்து மொத்த விஷயத்தையும் சொல்லியவன்,
“கொஞ்சநாள் அங்க இருக்கட்டும். நீங்க எதுவும் கேட்கவேண்டாம். நான் இந்த ஈவன்டை முடிச்சிட்டு வரேன். நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டான்.
இஷாந்த் அழைத்து என்ன ஏதேன கேட்க பெரிதாய் இல்லை என்றாலும் சபர்மதிக்கு சொல்லியதை போலில்லாமல் மேலோட்டமாய் சொல்ல,
“ஆரோன், சௌபி ரொம்ப உடைஞ்சு போய்…”
“உடைச்சது, உடைஞ்சதை எல்லாம் நான் ஒட்டிக்கறேன். இந்த பேம்பரிங் எல்லாம் நான் வரதுக்குள்ளவே முடிச்சுக்கோ மேன். விட்டா தொட்டில் கட்டி தூளி ஆட்ட சொல்லுவீங்க…” என்று மச்சானின் மேல் பாய்ந்துவிட்டான் அவன்.
“சரி எப்போ வரீங்க?…”
“வருவேன். வரும்போது பேசிக்கறேன்…” என்று வைத்துவிட்டான் ஆரோன்.
மும்பை சென்றதில் இருந்து எத்தனை அழைப்பு. அவள் கைபேசியை அணைத்து வைத்திருக்க தொடர்புகொள்ள முடியாமல் திண்டாடி போனான்.
அவனின் மொத்தத்திலும் ஆட்சி செய்பவளின் ஒதுக்கம் அவனால் தாளமுடியாததாய் இருந்தது.
கண்களை மூடினாலும் மீண்டும் மீண்டும் அவள் துடித்து நின்ற காட்சியே அவனை இம்சிக்க துவண்டு போனான் ஆரோன் ரிஷபன்.