“இன்னைக்கு எப்படியும் இந்த மோதிரத்தை நான் தரதா தான் ப்ளான். ஆனா அங்க இல்லை. வீட்டுல ஒரு சின்ன ப்ளான் வச்சிருந்தோம். ஆனா அங்க நீ என்கிட்ட வந்து நின்னதும், பேசினதும் என்னை உடைச்சு போட்டுடுச்சு….”
“அதை விட ஒரு பிரமாதமான இடம் வேற என்ன இருக்கும்ன்னு தோணிருச்சு? அதான் அங்கயே சொல்லிட்டேன். இப்ப சொல்லுங்க யட்சினி, இன்னும் பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே?…” என்றான் பார்த்திவ்.
மீண்டும் ஒரு உணர்வு குவியலாய் ஸ்ருதகீர்த்தி. அவனின் கனவாக தான். இதைவிட வேறு என்ன வேண்டும்?
கரைந்துகொண்டு தான் இருந்தாள் ஸ்ருதி அவனின் வார்த்தைகளில், அணுகல்களில், அர்த்தங்களில், ஆலாபனையில்.
பார்த்திவ்வின் பேச்சுக்கள் அவளிடம் அப்படி ஒரு தாக்கத்தை தந்துகொண்டிருக்க இத்தனை பேச்சிலும் நெகிழ்விலும் தன் கைகளை தாண்டிய ஒரு நெருக்கத்தையோ தொடுகையையோ அவளுக்கானவன் ஏற்படுத்தவில்லை.
இருவருக்குமான இடைவெளில சிறிதளவே இருந்தாலும் அது அப்படியே தான் இருந்தது.
மனங்களுக்கிடையே இதுவென்ன தூரம்? சிறு நூலிழை இல்லாதளவிற்கான நெருக்கம் அங்கே உறைந்திருக்க தேகங்கள் மட்டுமே விலகி நின்றது.
உணர்வு பரிமாற்றங்கள் இங்கே பார்வைகளிலேயே நடந்தேற மென் புன்னகையுடன் பார்த்திருந்தாள் ஸ்ருதி.
அவனிடம் அவளுக்கு எவ்வித பயமோ, தயக்கமோ, பதட்டமோ எதையும் தருவிக்க முன்வரவில்லை பார்த்திவ்.
அந்த தனிமையை இதமாய், மெல்லிய தாலாட்டாய், கண் வருடும் தென்றலாய், இதமான சாரலாய் உணர வைத்துக்கொண்டிருந்தான்.
இந்த அழுத்தம், விரல்களின் பிணைப்பு, தொடுகையின் வெம்மை, அவன் கன்னத்தின் ரோமங்களின் தாக்குதல் ஊசி போராய், எல்லாம் எல்லாம் அவளை சுற்றி வளைத்திருந்தாலும் உரிமையுடன் அதனை உள்வாங்கினாள் ஸ்ருதி.
மனது இன்னும் அவன் அருகாமையை தேடியது. அவனின் தோள் சாய்ந்துகொள்ள, தன் சந்தோஷத்தை தெரியப்படுத்த ஆவலில் அலைபாய்ந்ததென்னவோ உண்மை.
அதன் வெளிப்பாடு தன் விரல்களால் அவனின் கையை பற்றிக்கொண்டாள் ஸ்ருதி.
“சொல்லு ஸ்ருதி? எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?…” என பார்த்திவ் கேட்க அவள் இமைகள் பெரிதாய் அகன்றது.
“கல்யாணமா?…” ஸ்ருதி இந்நிகழ்வில் இருந்தே இன்னும் வெளிவரவில்லை.
அதற்குள் கல்யாணம் என்கிறான். அவளை அன்றொரு நாளில் இந்த சிலமணி நேரங்களில் மொத்தமாய் சுருட்டிக்கொண்டிருந்தான்.
சித்தம் கலங்கிடும் அளவிற்கு தடுமாறி அவனை பார்த்தவளை கண்டு இளம்புன்னகையை இதமாய் சிந்தியவன்,
“ரொம்ப நாள் எல்லாம் தள்ளி போட வேண்டாம். சீக்கிரமே…” என சொல்ல,
“சீக்கிரமேன்னா?…” என்றாள் ஸ்ருதியும் அவனின் சொல்லில் தலைசாய்த்து குறும்பாய்.
“சீக்கிரமேன்னா இன்னும் ஒன் வீக்ல…” என்றான் பார்த்திவ் கண் சிமிட்டி.
“என்ன?…” ஸ்ருதி திகைக்க,
“இல்லையா? அப்போ ஒரு நாலஞ்சு நாள்…”
“போதுமா?…”
“ம்ஹூம், ரெண்டு மூணு நாள்…”
“ரொம்ப தூரமில்ல…”
“ஒரு நாள். ம்ஹூம், ஒரு மணி நேரம். வேண்டாம். இப்போ இந்த நிமிஷம்…” என்றவன் வார்த்தைகளில் சத்தமின்றி சிரித்தவள்,
“அவ்வளோ ஈஸியா கல்யாணம் பண்ணிப்பேனா?…” என இப்போது முழுவதும் அவள் குறும்பை மீட்டிருந்தாள்.
“ஸ்ருதி?…” பார்த்திவ் எழுந்து நின்றான்.
“நான் லவ் சொல்லியும் என்னை இவ்வளோ நாள் தவிக்க விட்டீங்க தானே? அவ்வளோ ஈஸியா ஸ்ருதி ஓகே சொல்லிடுவேனா?…” என சொல்ல,
“வாவ், ரிவென்ச்…” என சிரித்தபடி அங்கிருந்த பாட்டிலில் தண்ணீரை எடுத்து பருகியவன் சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.
“நீ சொன்னதுக்கு பேர் லவ்வா? எந்த டிக்ஷனரில?…” என கேலியாய் கேட்டவன்,
“நிஜமாவே சொல்றேன். உனக்கு எப்போ ஓகே சொல்ல தோணுதோ அப்போ சொல்லு ஸ்ருதி. கம்பல்ஷன் எதுவும் இல்லை….” என இலகுவாய் சொல்லிவிட்டான்.
இத்தனை நேரமும் பித்து பிடிக்க வைப்பதை போல பேசியவனா இவன் என்று ஸ்ருதி வியந்து பார்க்க,
“கூல் ஸ்ருதி. அதுவரை நாம கிளாஸ் கண்டின்யூ பண்ணுவோம்…” என்று சொல்லிவிட உண்மையை தான் சொல்கிறானா என பார்த்தாள் ஸ்ருதி.
அவளின் பார்வையில் தன் விழிகளை கலக்கவிட்டவன் தன்னிரு கைகளை பின் தலையில் கோர்த்து நாற்காலியில் அசைந்துகொண்டே ஸ்ருதியை பார்த்து பாட ஆரம்பித்தான்.
இவள் தேடிடும் காதலன்
இதழ் மேல் ஒரு பாடகன்
சரசம் புது சரசம் கொண்டு
உரசும் தலைவன்
ஒன்றா? இரண்டா? ஒவ்வொரு பாடலயும் குறிப்பிட்ட வரிகள் ரசனை கொஞ்ச, காதல் பொங்க, அவளை விட்டு அசையாத பார்வை.
அவளை பார்த்தும், பாடியும், புன்னகைத்தும் திணறடிக்க ஸ்ருதி தான் மீண்டும் திண்டாட ஆரம்பித்தாள்.
“க்ளாஸ்ன்னு சொல்லிட்டு இப்படி பாடறீங்க?…”
“ஓகே, நீ வந்து உட்கார். நீ பாடு. நான் கேட்கறேன். அவ்வளோ தானே?…” என்று சொல்லி மீண்டும் தோளை குலுக்க,
“நான் கிளம்பனும்…” என்றாள் ஸ்ருதி.
அதற்கு மேல் அங்கே நிற்கவும் முடியவில்லை. அவனை எதிர்கொள்ளவும் முடியவில்லை.
“எங்க கிளம்பற ஸ்ருதி? இன்னைக்கு நீ என்னோட தான். ஓகே எப்போ ட்ரீட்?…” என்றவன் அவளின் அவஸ்தையான முறைப்பில்,
“கல்யாணம் தான் இல்லைன்னு சொல்லிட்ட. ஒரு ட்ரீட் கூடவா?…” என விஷமத்துடன் புன்னகைத்து அடுத்த பாடலை பாட வேகமாய் வந்து அவனின் இதழ்களை தன் கரம் கொண்டு மூடினாள் ஸ்ருதி.
“படுத்தறீங்க நீங்க? பத்திரம்ன்னு சொல்லியும் பயமில்லாம போச்சு. இனி பாடினீங்க அவ்வளோ தான்…” என அவள் மிரட்டவும், தன் விழி தளர்த்தி குனிந்து பார்த்தான் பார்த்திவ்.
ஸ்ருதியின் ஒரு கரம் அவன் சட்டையின் கழுத்து கீழ் சுருட்டி பிடித்திருக்க இன்னொரு கரம் அவனின் இதழ்களை மூடியிருந்தது.
“புரிஞ்சதா? இனிமே கிளாஸ் கூட சாதாரணமா எடுக்கனும். இப்படி எல்லாம் எடுக்க கூடாது. என்னை ட்ரிகர் பண்ண ட்ரை பண்ணினா…” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் அவனின் கண் சிமிட்டலில் அப்படியே உறைந்தாள்.
கண்கள் மட்டுமே அவனின் உணர்வுகளை சிந்திக்கொண்டிருக்க கையை எடுக்காமல் அந்த பார்வையை கண்டவள் கைகள் தாமாக கீழே இறங்கியது.
“உன்னை லேசா கொஞ்சமா கட்டிக்கவா ஸ்ருதி…” என்றவன் கேள்வியில், காதலில் முற்றிலும் தொலைந்தவள் தலை அவன் மார்பில் பதிய இதழ்களில் அவன் உயிர் வாங்கும் புன்னகை.