ஆனால் நிகிதாவிற்கு வேதாவை புரியுமே? நிச்சயம் தான் செய்ததாக ஒப்புக்கொள்வார் என்று நினைத்தவள் உடனடியா பார்க்கவேண்டும் என்று அழைக்க அழைத்ததும் பதட்டத்தில் பேசும் முன் இப்படி சொல்லிவிட,
“என்ன நிகிதா, என்ன பொய்? எதுக்கு மேமை நான் அரஸ்ட் பண்ணனும்?…” என்றான் நெடுஞ்செழியன்.
அதன் பின்னரே தான் உளறிவிட்டது புரிய கண்ணீர் வடிந்தது அவளின் முகத்தில்.
“நிகிம்மா..” என வேதா அவளை தன் மார்பில் சாய்த்துக்கொள்ள,
“எனக்கு தெரியும் நீங்க சொல்லுவீங்க. வேண்டாம் ஆன்ட்டி. ப்ளீஸ். அவங்களுக்குள்ள சுட்டுக்கிட்டாங்கன்னு சொல்லுங்க ஆன்ட்டி. எனக்காக ப்ளீஸ்…” என்று இறைஞ்சும் விதமாய் கதற,
“நிகி என்ன பேசற நீ?…” என்றாள் சுபஷ்வினி.
“நீங்க சொல்லுங்க சுபாக்கா, வேண்டாம், இந்த கேஸ்ல அந்த கதிர் மாட்டியிருக்கானே. தனா மாமாவை கூட சொல்ல வேண்டாம். வேண்டாம். எனக்கு ஆன்ட்டி முக்கியம்…” என நிகிதா சொல்ல,
“தனாவை பத்தி தெரிஞ்சப்போ அவன் தப்பிச்சிட கூடாதுன்னு நீ தானே நிகிதா வாக்குமூலம் எல்லாம் முன்னாடியே குடுத்து, அவன் பாஸ்போர்ட்டை எல்லாம் எடுத்து வச்ச? இப்ப என்ன?…” என்றான் நெடுஞ்செழியன்.
சுரேந்திரனும், வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இத்தனை வேதனைகளுடன் தான் தங்களோடு இருந்தாளா இந்த பெண் என்று.
“ஆமா நான் தான். இப்பவும் அவனை நான் என் கையால கொன்னிருந்தா கூட இதுக்குத்தான் கொன்னேன்னு சொல்லி ஒத்துப்பேன். ஆனா ஆன்ட்டி? அவன் உயிரோட இருந்திருந்தா நிச்சயம் அவனை சரணடைய வச்சு தண்டனை வாங்கி கொடுத்து இருப்பாங்க….” என்ற நிகிதா,
“ஆனா இப்போ எந்த தாயும் செய்ய முடியாததை ஆன்ட்டி செஞ்சிருக்காங்க. பெத்தவங்களே பிள்ளையை கொல்றது. இதைவிட அவனுக்கு தண்டனை குடுத்துட முடியுமா? இதுக்கடுத்து வேதா ஆன்ட்டி எதை எல்லாம் பேஸ் பண்ணனும்?…” என சொல்ல,
“செழியன்…” என்றார் வேதா.
“புரியுது மேம். நிகிதா ரொம்ப எமோஷனலா டிஸ்டர்ப் ஆகியிருக்கா. கொஞ்சம் விடுங்க…” என சொல்லி அவளின் அருகில் அமர்ந்தான்.
“தனா மாமா செஞ்ச தப்புக்கு காலத்துக்கும் குட்டி பாப்பாவை எல்லாம் அதை பாயின்ட் அவுட் பண்ணியே பேசுவாங்களே? அந்த பாவத்தை குட்டி பாப்பா சுமக்கனும். அந்த குற்றம் பாப்பாவோட அடையாளமாகிட்டா? சங்கீதாக்கா பாவம். இப்பவும் அவங்க பாவம்…”
“ஆன்ட்டியை பெத்த பிள்ளையை வளர்க்க தெரியலைன்னு சொல்லும். மகனை கண்காணிக்காதவங்க மக்களை எப்படி பாதுகாப்பாங்கன்னு பேசும். இதுவரையான நல்லது, நேர்மையும் எல்லாம் கேள்விக்குறியாகிடும். இத்தனைவருஷ அர்ப்பணிப்பு வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிரும்…”
“இந்த மரணம் நீங்க குடுத்த தண்டனையா இருக்கட்டும். ப்ளீஸ் அண்ணா. அங்க இருந்தவங்களை தவிர வேற யாரும் மாத்தி சொல்லமாட்டோம். ஆன்ட்டியை அரஸ்ட் பண்ண வேண்டாம். ப்ளீஸ்…” என பேச பேச அவளின் மனநிலையை எப்படி மாற்ற என வேதா தவித்து போனார்.
“நிகிதா, அமைதியா இருடா. நாங்க பார்த்துக்கறோம்…” என சுரேந்திரனும் சொல்ல,
“அங்கிள் ப்ளீஸ், நான் ஆன்ட்டியை அரஸ்ட் பண்ண விடமாட்டேன்…” என அவரை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள் நிகிதா.
இதே நிகிதா தான் வேதா பிள்ளைக்காக மனம் மாறிவிடுவாரோ என்று எல்லாம் பயந்தது.
அப்போது இருந்த அந்த தைரியம் எங்கே என வேதனையுடன் அவளை பார்த்தான் நெடுஞ்செழியன்.
“சரி நிகிதா, இப்ப நீ சொல்ற மாதிரியே மத்தவங்களும் சொல்லுவாங்களா? சோபியாவை விடு. அவ கண்ணால பார்க்கலை. மயங்கிட்டா. அஷ்வினி, சங்கீதா?…” என்று நெடுஞ்செழியன் கேட்க நிகிதாவின் பார்வை சுபஷ்வினியிடம் திரும்பியது.
“அவ சொல்லமாட்டா. அவளால உண்மையையும் உனக்காக சொல்லமுடியாம, பொய்யும் சொல்லமுடியாம ரொம்ப ஸ்ட்ரெஸாகிட்டா. இப்ப கேளு. சொல்லமாட்டா…” என்று அவன் சொல்லவும் சுபஷ்வினியை பரிதாபமாய் பார்த்தாள் நிகிதா.
“நீ ரொம்ப குழப்பமா இருக்க நிகி. அதான் இப்படியெல்லாம் தோணுது. ஏன் நெகட்டிவா யோசிக்கிற? பாஸிட்டிவா பார். வேதா மேம் தப்புன்னு வரும்போது பெத்த பையனையே மன்னிக்காதவங்க. மக்களுக்கு எப்படி சந்தேகம் வரும்? அப்படியே சந்தேகப்பட்டா பட்டுட்டு போகட்டுமே?…” என்றவன்,
“நல்லது சொல்ல நாலுபேர்ன்னா கெட்டது சொல்ல நாற்பது பேர் இருக்கத்தான் செய்வாங்க. ஒவ்வொருத்தரும் இதை நினைப்பாங்கன்றதுக்காக வாழ முடியுமா? அப்போ நம்மோட எண்ணங்கள் எங்கே வாழும்? விமர்சனங்களை கடந்து தான் வாழ்க்கை. தைரியமா அவங்க இருப்பாங்க….” என்றான்.
“பாப்பாவுக்கு என்ன? வேதாம்மா மாதிரியே இதே தைரியத்தோட வளர்ப்பாங்க சங்கீதா. தப்பு செஞ்சது தனா தானே தவிர தவறு செய்யாத நாம ஏன் தலை குனிஞ்சு பேசறவங்க பேச்சுக்கு காது குடுக்கனும்? சொல்ல போனா இந்த உண்மையை மறைச்சா தான் வேதாம்மா மனசளவுல நொடிஞ்சு போவாங்க…” என்றாள் சுபஷ்வினி.
“எவன் என்ன பேசுவான்னு தான் பார்ப்போமே? நிறைய தாண்டி வந்தாச்சு. இதையும் தாண்டி வரவேண்டாமா? ஏன் நிகி உனக்கு போதை மருந்து குடுத்து அவங்க பயன்படுத்திக்கும் போதும், அதுக்கப்பறமும் எத்தனை துடிச்ச? அதுக்கு காரணமானவனை சம்ஹாரம் செஞ்சிருக்காங்க வேதாம்மா. சொல்ல போனா நாம செலிபரேட் பண்ணனும். சல்யூட் வைக்கனும்….” என்றும் கூறினாள் சுபஷ்வினி.
“அஷ்வினி சொல்றது கரெக்ட். ஏன் நிகி கோர்ட்ல பர்ஸ்ட் ஹியரிங் முடிஞ்சு அந்த ஆக்ஸிடன்ட் ஆனப்போ உன்னையும், அதுல பாதிக்கப்பட்ட பொண்ணுங்களையும் பத்தி நிறையவே பேசினாங்க இந்த மீடியா. இந்த காலத்து பொண்ணுங்களே இப்படித்தான், வான்டாடா போய் சிக்கிட்டு இப்ப கதறனுமான்னு எவ்வளோ பேசினாங்க. அதுக்கெல்லாம் நீ ஓய்ஞ்சு போகலையே?..”
“தைரியமா தானே பேஸ் பண்ணின? இப்போ என்ன குழப்பம்?…” என்ற கேள்விக்கு அங்கிருந்த நர்ஸை தவிப்புடன் பார்த்தாள் நிகிதா.
சற்று நேரத்திற்கு முன்னர் அங்கிருந்த செவிலிய பெண்ணின் பேச்சுக்கள் இன்னொரு பெண்ணிடம் ஆதங்கமாக வெளிப்பட்டதின் தாக்கம் நிகிதாவினுள்.
தனா தண்டிக்கப்படும் வரையில் இருந்த ஒரே குறிக்கோள் இப்போது சங்கீதா, அவளின் குழந்தை, வேதா, சுரேந்திரன் என்று தடுமாறி பாசத்திற்குள் சிக்கிக்கொண்டது.
“யார் என்ன சொன்னாலும் நிஜம்ன்னு ஒன்னு இருக்கு. அதுக்கு எந்த சூழ்நிலையிலும் பயப்பட கூடாது. துணிச்சலான நிகிதாவா நீ யோசி. உனக்கே புரியும் நான் என்ன சொல்றேன்னு…” என்ற நெடுஞ்செழியன் அந்த நர்ஸை பார்த்து,
“பேஷண்ட் மயக்கத்துல இருக்காங்களா, இல்லையான்னு தெரியாம என்ன பேசறீங்க? அதுவும் ட்யூட்டி டைம்ல….” என்றவன்,
“இந்த விஷயம் எப்படி உங்களுக்கு தெரியும்?…” என்றான் அவர்களை அருகில் அழைத்து.
“விமல் இவங்களை தனியா வாட்ச் பண்ண சொல்லு. யாரோடையும் பேசாம வெளில இருக்க சொல்லு….” என சொல்ல விமல் அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வரவும்,
“இவங்க உள்ள இருக்கறதையே கவனிக்காம பேசிருக்கோம். நீயாவது பார்த்திருக்க வேண்டாமா?..” என்று விமலிடம் சொல்ல அவனும் தலையை குனிந்தான்.
உள்ளே வந்ததில் இருந்து வேறு எதை பார்த்தான் அவன்? நிகிதாவின் கண்ணீர் முகம், வார்த்தைகளின் வலி என கலங்கி போய் பார்த்திருந்தான் மௌனமாக.
“செழியாண்ணா ஆன்ட்டியை அரஸ்ட் பண்ண போறீங்களா?….” என்றவளை திரும்பி மென்மையாய் பார்த்தவன்,
“ஆமா, இதை நீ யோசிக்காம சீக்கிரம் சரியாகற வழியை பார். உனக்காக நிறைய பேர் காத்துக்கிட்டிருக்கோம். நீ கொஞ்சம் ஒத்துழைச்சா தான் சீக்கிரம் எழுந்து நடக்க முடியும்…” என்றவன் விமலை பார்த்தான்.
“ஓகே மேம், நாங்க அடுத்த நடவடிக்கையை பார்க்கறோம். பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கனும்….” என்றான் நெடுஞ்செழியன்.
அமைச்சரை கைது செய்ய தேவையான நடவடிக்கை சம்பந்தமான வழிமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு வந்த நெடுஞ்செழியன்,
“ஸார் நாங்க…” என்றான் சுரேந்திரனிடம்.
“உங்க கடமையை நீங்க செய்ங்க செழியன்…” என்று அவரும் சொல்ல,
“விமல் லெஸ்ட் கோ…” என சொல்லி வேதாவுடன் வெளியே வந்தான்.
இரவு நேரம் வேதா கைது விஷயம் பரபரப்பாகியது. சட்ட அமைச்சர் கைது விவகாரமும், அதன் காரணமும் சரிவிகிதத்தில் பிரித்தாராயப்பட்டது மக்களின் மத்தியில்.
அதில் பெரும் பங்கு ஊடகத்துறைக்கே. தூக்கி வைத்து கொண்டாடி, அவரின் நேர்மையை சில்லாகித்த இடத்தில் சில சில்வண்டுகளின் நாராசமான இரைச்சலும் கேட்கத்தான் செய்தது.
எதிர்கட்சியினர் இதிலும் அரசியல் ஆதாயம் இருப்பதாக சாடி பேசவும் செய்தனர். சிலர் பாராட்டவும் செய்தனர்.
வேதா எந்த விமர்சனத்திற்கும் தடுமாறவில்லை. இதை எல்லாம் பாராமலா அவர் இவ்விடத்திற்கு வந்திருப்பார்?
கடவுளே வரம் தருகிறேன் என தானாக இறங்கி வந்தாலும் அதன் பின்னணி இப்படியும் இருக்குமா அப்படியும் இருக்குமா என சந்தேகிக்கும் சில சில்லரைகளிடம் வரும் வார்த்தைகள் அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
வழக்கு ஆரம்பமாகியது. கனுஷாந்த் களஞ்சியம் ராஜாங்கம், கதிரவன் ராஜாங்கத்திற்கு ஆதரவாக அத்தனை எதிர்ப்புகளை மீறி வழக்காட முன்வந்தார்.
ஜெயதனபாலன், மணிகண்டன், சரத் மீது அத்தனை குற்றசாட்டுகளையும் அடுக்கி இதில் களஞ்சியம், கதிரவன் இருவரையும் சிக்கவைத்திருப்பதாக சொல்லி வேதாவின் மீதே மொத்த பழியையும் இறக்கி வைத்தார்.
வழக்கின் திசையை மாற்றுவதற்காக பெற்ற மகனையே காவு கொடுத்தவர் என்னும் பழி சொல்லை அத்தனை உறுதியாக முன்வைத்தார்.
இரும்பு பெண்மணி எதையும் தாங்கி நின்றவர் அதையும் தாங்கி நிமிர்ந்து நின்றார் ஒரு போராளியாக.