இரண்டு வாரம் என்று சென்றவளின் உடல் நிலை இன்னும் வருத்த அவளை பயணம் மேற்கொள்ள கூடாதென்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள்.
ஆதித்தனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. அனுராதா மகளுடன் சென்னை சென்றதும் அங்கிருந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தார் இன்னொரு கலந்தாய்வுக்காக.
அவர்கள் இப்படி சொல்லிவிட சுத்தமாய் நொந்துகொண்டான் ஆதித்தன். பிள்ளை உண்டான சமயத்தில் மனைவியுடன் இருக்க முடியாத சூழ்நிலை.
இருவாரங்களில் கொஞ்சம் தேறி அவளும் வருவாள், இங்கேயும் சூழ்நிலை ஓரளவு இலகுவாகிவிடும் என்று நினைத்திருக்க நடந்ததோ அப்படியே மாறாக.
சசிகலாவிடம் சொல்லிவிட்டு செந்தாவை அங்கேயே இருக்கும்படி சொல்லியவன் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தான்.
நிஷாந்தினி எந்தவித கோபத்தையும் காண்பிக்கவில்லை. காண்பிக்கும் சூழ்நிலையும் இல்லை என அமைதியாகிவிட்டாள்.
“இதை நான் எதிர்பார்க்கலை நிஷா…” என்றவன் அவளுடன் மருத்துவரையும் சென்று பார்க்க இப்போதைய பயணம் நிஷாவிற்கு உகந்ததல்ல என முடிவாய் சொல்லிவிட்டார் மருத்துவர்.
நிஷாந்தினியின் கர்ப்பவாய் லேசாய் திறந்திருக்க அலட்டிக்கொள்ளாமல் வெகு கவனத்துடன் இருக்கவேண்டிய சூழ்நிலை.
அதுவும் ஆறு மாதங்களுக்கு மேல் கண்ணை போல பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரித்திருந்தனர்.
தலையை பிய்த்துக்கொள்ளும் விதமான மனநிலை ஆதித்தனுக்கு. அவளில்லாத நாட்கள் அவனுக்கு சிரமமாகவே இருந்தது.
மனைவியிடம் காட்டிக்கொள்ளவில்லை. இருந்து பார்த்துவிட்டு வா என சொல்லியவன் இருவாரத்திற்கு ஒருமுறை என்று வந்து பார்ப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தான்.
வந்தாலும் ஒருநாள் இருப்பு மட்டுமே. கூடுதலாய் ஒருநாளும் இருப்பதில்லை மாமனார் வீட்டில்.
வளைகாப்பிற்குமே சொந்தங்களை அழைத்துக்கொண்டு சென்று நிஷாந்தினியின் பிறந்த வீட்டில் வைத்து தான் செய்ய முடிந்தது.
அத்தனைபேரையும் அழைக்காமல் தேர்ந்தேடுத்து சிலரை மட்டுமே அழைத்து சென்றனர்.
சசிகலாவிற்கு மனதளவில் அது பெரிய வருத்தமாகவே இருந்தது. வீட்டின் முதல் வாரிசு.
இப்படி சிறப்பாய் செய்யவேண்டியவை எல்லாம் செய்யமுடியாது போனதே என மறுகினார்.
அழகும், செழுமையுமாய் நிறைமாதமாய் நின்ற மனைவியின் மேலிருந்து பார்வையை திருப்பமுடியாமல் தடுமாறி ஆதித்தன் இமைகளை லேசாய் தாழ்த்திக்கொண்டான்.
அந்த முறை மட்டும் இருநாட்கள் இருந்தவன் கிளம்பி சென்றிருக்க இருவருக்குமிடையேயான உரையாடல்கள் எல்லாம் போனில் மட்டுமே.
நேரில் அத்தனை பேசுபவனின் பேச்சுக்கள் எல்லாம் போனில் இன்னும் அதிகமானதாய் இருக்கும்.
சில நேரங்களில் அவளின் ஓய்வை எண்ணி பேச்சுக்களை குறைத்ததுவும் உண்டு. ஒவ்வொன்றும் நிஷாவின் மனதில் ஆதங்கங்களாக சேர்ந்துகொண்டே இருந்தது.
எத்தனை இருந்தாலும் அவன் இருந்து பார்க்கவில்லையே என்னும் எண்ணங்கள் அவளிடம் அணிவகுத்திருக்க கண்ணை மூடி திறக்கும் முன் பிரசவ நிலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் நிஷா.
ஒன்பதாம் மாதமே நள்ளிரவில் வலி கண்டுவிட என்னவென பரிசோதனைக்கு சென்றவளின் கர்ப்பவாயில் பிள்ளையின் தலை தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஆதித்தனிடம் தகவல் சொல்லி அங்கிருப்பவர்களை கிளம்ப செய்து என பரபரப்பாகிவிட வீடியோ காலில் அழைத்துவிட்டான் ஆதித்தன்.
அழுகையும், கண்ணீருமாய் கீழுதட்டை கடித்தபடி நிஷா அவனை பார்த்த பார்வை அவன் உயிர் வரை ஊடுருவியது.
“வலிக்குதா நிஷா?…” என கேட்பதற்குள் அவன் தவித்து போக பதில் சொல்லாமல் பார்வையிலேயே கொன்றாள் மனைவி.
“பேசுடி. இப்பவே வலி வந்திரும்ன்னு தெரியாது நிஷா…” இத்தனை நாட்களில் பார்த்திராத ஒரு ஆதித்தன்.
கண்களில் மிதமிஞ்சிய வலியும், அவளுடன் இருக்க முடியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.
பார்த்தவள் பார்த்தபடி மட்டுமே இருந்தாள். கத்தவில்லை, கதறவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே இருக்க புருவங்கள் சுருங்கியும் விரிந்துமாய் அவளை வலியாய் சுருட்டிக்கொண்டிருந்தது.
அப்போதே காரில் கிளம்புவதென்றால் விரைவில் செல்ல முடியாதென விமானத்தில் பதிவு செய்தவன் பெற்றோரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
விமானநிலையம் சென்று சேர்ந்திருக்க ஆண் குழந்தை பிறந்துவிட்டதென செய்தி.
தன்னை தேடிய அவளின் அலைபாயும் விழிகள் இப்போதும் நெஞ்சை தைத்துக்கொண்டிருக்க மௌனமாய் தன்னுணர்வுகளை அடக்கியபடி வந்து சேர்ந்தான் ஆதித்தன்.
“பையன்…” என்று சுரேஷ் பேரனை கையில் தர வாங்கிகொண்டவன் முகத்தில் சொல்லொண்ணா சந்தோஷம்.
“நிஷா?…” என மனைவியை கேட்க,
“நல்லா இருக்கா மாப்பிள்ளை. தூங்கறா…” என்றார்.
பெற்றோரிடம் பிள்ளையை காண்பித்துவிட்டு நிஷாவை பார்க்க உள்ளே செல்ல முகத்தில் சோர்வுடன் வலியும் அவளிடமே தங்கி இருந்தது.
அது மனதின் வலியா, உடலின் வலியா என பிரித்தறியும் அளவிற்கு ஆதித்தனுக்கு தெரியவில்லை.
அமைதியாக குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு அருகே அமர்ந்தவன் அவள் தலையை வருடினான்.
சென்றமாதம் வந்தபொழுது பேசியவைகள் எல்லாம் ஞாபகத்தில் வர மனதெல்லாம் ரணப்பட்டு போனது.
“டெலிவரிக்கு உன் கூடவே இருப்பேன்…” என அவன் வாக்குறுதி தந்திருக்க,
“நடக்கும் போது பார்க்கலாம்…” என்றவளின் வார்த்தைகள் அவனை அறைந்தது.
தன்னிடம் சரிக்கு சரியாக வார்த்தையாடும் நிஷாவை வெகுவாகவே தேடினான் ஆதித்தன்.
அது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதையுமே அவன் உணர்ந்துகொண்டான்.
சசிகலாவும், சங்கரலிங்கமும் உள்ளே வந்து பார்த்துவிட்டு மேலும் ஒருமணி நேரம் கழித்தே நிஷாந்தினி விழிகளை மலர்த்தினாள்.
ஆதித்தனை பார்த்தவள் முகத்தில் கோடாய் சிறு புன்னகை. ‘எனக்கு தெரியும் அப்போதே’ என்னும் விதமாய்.
ஒன்றும் சொல்லாமல் ஆதித்தன் மௌனமாய் பார்த்திருக்க குழந்தையை திரும்பி பார்த்தாள்.
“எப்படி இருக்க நிஷா?…” என்றவனுக்கு தலையசைத்தவள் வாயை திறக்க முடியவில்லை.
லேசாய் அசைந்தாலே உடல் வலி தாளமுடியாததாய் இருந்தது. மூச்சை ஆழ்ந்து இழுத்தவள் மயக்கம் தெளிந்துவிட்டதை அறிந்து மற்றவர்களும் பார்த்துவிட்டு செல்ல ஆதித்தன் அங்கேயே தான் இருந்தான்.
தொட்டிலில் குழந்தை உறங்கிக்கொண்டிருக்க இருவருக்குமிடையில் அசாத்திய மௌனம் மட்டுமே நிலவியது.
அவனிடம் கேட்க, சண்டையிட ஆயிரம் விஷயங்கள் அவளுக்கிருந்தது. எதையாவது பேசி, கேட்டுவிடமாட்டாளா என்னும் எதிர்பார்ப்பு அவனுக்கிருந்தது.
சட்டென எழுந்துவிட்ட இடைவெளியை தாண்டமுடியாமல் ஒருவித அழுத்தத்தை தாங்கியபடி பார்த்துகொண்டிருந்தனர் இருவரும்.