பொழுது விடியும் முன்னே தூக்கம் களைந்திட, எழுந்தமர்ந்த சௌந்தரின் மனம் ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் தத்தளித்தது.
இன்று தனக்குத் திருமணம் என எண்ணும் போதே, உள்ளுக்குள் அவனை அறியாமல் ஒரு பயம் தோன்றியது. எந்தத் தடங்கலும் இல்லாமல் இந்தக் கல்யாணம் நடந்திடுமா? என்ற புரியாத பயமே அது.
அவனது முற்பொழுது ஒற்றை அனுபவத்தினால் அதுவும் ஆழமான வலியின் அடையாளமே இந்தப் பயம்.
நேற்றைய இரவு மீரா பேசியது நினைவில் ஏறியது. மனமோ’அதான் அவ அவ்ளோ சொன்னாளடா, நீ சீக்கிரம் எழுந்திரிச்சி கிளம்பி முறையான சடங்குகளுக்குப் போடா!’ என்றது.
‘ஆமா! அவ சொன்னா நான் கேக்கனுமா?’ என மனமிடம் முரண்டுப் பிடித்தான்.
‘அதான் முகத்தில் அடிச்சாப்ல கேட்டாள?’ என அவனை நக்கலாக பார்த்தது.
‘யார் முகத்தில்? நல்லா யோசி, உன் முகத்தில் தான் அடிச்சா, உன்னுள்ள தான் அவ இல்லையே! பின்ன எனக்கு என்ன வந்துச்சு’ எனச் சாதரணமாக கூறினான்.
‘ம்ம்! எது எப்படியோ, நீ போய் அப்பா, அம்மா சந்தோஷத்துக்காக இன்னைய பொழுதை போக்கு, கிளம்புடா’ என அவனை உசுப்பியது.
அந்த நேரத்தில் பிரேமா கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
“தம்பி! எழுந்திட்டீயா?”
“ம்ம்ம்! சொல்லுங்கம்மா”
“நல்லதுப்பா, நாங்க பொண்ணு அழைக்கப் போறோம், நீ சம்பத் கூட நம்ம அம்மன் கோயிலுக்குப் போய் தேங்காய் உடைச்சுட்டு, அப்படியே போய் பட்டவன் சாமிக்கு ஒரு தேங்காய் போட்டுடைச்சுட்டு, நேரா மண்டபத்துக்கு வந்துடுப்பா, அங்க மாப்பிள்ளைச் சடங்கு எல்லாம் இருக்கு” என விளக்கமாக கூறினார்.
மகன் மறுப்பேதும் சொல்வான் என எதிர்பார்த்த தாயிற்கு ஆச்சரியத்தை அளித்தவனோ, “சரிம்மா! நீங்கப் போங்க” என்றான்.
“என் தங்கம், இன்னையில் இருந்து உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும் பாரு” என மகனை கைகளால் சுற்றி திருஷ்டி கழித்து விரல்களை சொடக்கியவர், “நாங்க கிளம்புறோம் தம்பி!” என வெளியேறினார்.
*
மீரா எழுந்ததும் முதலில் கைகளை தான் நோக்கினாள், மருதாணி எந்தளவு சிவந்திருக்கிறது என்று காண, அவளின் நிறத்திற்கு ஏற்ப குங்குமத்தின் வண்ணமாக காட்சியளித்தது.
ஜனனி”மீரா! என்ன நல்லா செவந்திருக்கா?” எனக் கேட்டப்படி அவளின் கையைப் பற்றினாள்.
“ம்ம்ம்! மாப்பிள்ளை மனசுல நீ ரொம்ப இருக்கீயோ? இந்தளவு செவந்திருக்கு” எனக் கிண்டல் செய்தாள்.
‘ஆமா! மனசுல இருக்கேன், மண்ணாங்கட்டி மனசுல…” என நொந்தவள், “மாமி! இது கொஞ்சம் ஓவரா இல்ல, எப்ப நான் மருதாணி வச்சாலும் இப்டி தான் செவக்கும், ஏனா எனக்கு ஹீட் பாடி, இது தெரிஞ்சும் கிண்டலா?” என முறைத்தாள்.
“ஏய்! இந்த மாதிரி எல்லாம் ரொமான்ஸ் மூமென்ட் சொல்லும் போது, ரசிக்கனும் அத விட்டுட்டு, படிச்ச அறிவாளினு சீன் போடக் கூடாது. போடி! போய் குளிச்சுட்டு ரெடியாகு, மாப்பிள்ளை வீட்டில் இருந்துப் பொண்ணு அழைக்க வரப்போறாங்க” எனக் கடுப்புடன், ஆனால் சிரித்தப்படியே விரட்டி விட்டாள்.
“ம்ம்ம்! உங்க ரொமான்ஸ் சீன் எல்லாம் இங்க அப்ளிகேபெல் இல்ல மாமி, எங்கக் கதையே வேற, அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல” எனச் சிரித்தவிட்டு பாத் ரூம் நோக்கி ஓடினாள்.
“ஆமாடி! இப்ப இப்டி தான் சொல்லுவ, அப்புறம் தானே தெரியும், ரொமான்ஸ்கே வட்டிக்கு குட்டினு மிஞ்சப் போறீங்கனு, பாப்போம்!” எனக் கத்தி கூறினாள்.
பாத் ரூமிற்குள் சென்ற மீராவிற்கு அது காதில் நன்றாக விழுந்தது.
அதைக் கேட்டுச் சிரித்தவள், தலையைக் குலுக்கிவிட்டுக் குளிக்க சென்றாள்.
விருமாவும் சௌந்தரின் இந்த ரூபத்தைக் கண்டுச் சந்தோஷப்பட்டாலும் தன் சின்ன மகனிடம் அவன் நிதானத்தில் இருக்கிறானா? என விசாரித்துக் கொண்டார்.
சம்பத், சுந்தர் இருவரும் சௌந்தரின் எஸ் கார்டாவே மாறியிருந்தனர். அவன் ரெஸ்ட் ரூம் போவெதன்றால் கூட அனுமதிக் கேட்க வேண்டும் என்பது போல் சூழ்ந்து நின்றனர்.
காலையில் இருந்து அதைக் கவனித்தாலும் முதலில் கண்டுக் கொள்ளாத சௌந்தர், மண்டபத்திலும் அது தொடர, “டேய்! நான் ஒன்னும் உங்களுக்குப் பயந்துட்டு இந்த மண்டபத்திற்குக் கிளம்பி வரல, எனக்கு எல்லாம் தெரியும், நீங்க ரொம்ப போறீங்க, நான் பாட்டுக்கும் மண்டபத்தை விட்டு வெளியில் போயிட்டே இருப்பேன், லீவ் மீ அலோன்.” என முறைத்துக் கொண்டே சீறினான்.
“சௌந்தர்! நான் மாப்பிள்ளை தோழன், இவன் உன் தம்பி, கூடவே வந்து தான் ஆகனும், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் நண்பா, நாளையில் இருந்து மீரா கூடவே இருப்பா” எனச் சிரித்தான் சம்பத்.
“ஆமா அண்ணா!” எனக் கூடவே சுந்தர் ஜால்ரா அடிக்க, சௌந்தர் கடுப்பாகி, “டேய்! நான் ஏதோ ஒரு மூடில் சீக்கிரம் கிளம்பி வந்திருக்கேன், அது தப்புனு யோசிக்க வச்சுடாதீங்க, ஃபர்ஸ்ட் இங்கிருந்து போங்க, இரிரேட் பண்ணாம” எனக் கத்தினான்.
அந்த நேரம் பார்த்து ஒருவர் வந்து, “சார்! மாப்பிள்ளை அழைப்புக்குக் குதிரை வந்தாச்சு, வந்துப் பாக்கிறீங்களா?” எனக் கேட்டான்.
“வாட்!” என அதிர்ச்சியாய் சௌந்தர், மற்றவர்களைப் பார்க்க, அவர்களும் புரியாமல் நோக்கினர்.
“யாரு குதிரை புக் பண்ணா தம்பி.?” எனக் கேட்டான் சம்பத்.
“வீரனார் ஐயா வீட்டில் இருந்து தான் புக் பண்ணாங்க சார், அவங்க யாரையும் காணும், என் ஃபோனை வேற நான் வந்த வண்டியில் போட்டுட்டேன்”
சௌந்தர்”என்னடா இது எல்லாம்? என் கிட்ட யாருமே இதைப் பத்தி சொல்லவே இல்ல” எனக் கோபமாக கேட்டான்.
“அண்ணா! எங்களுக்குமே தெரியாது, இருங்க அசோக் அண்ணாக்கு ஃபோன் பண்ணிக் கேக்குறேன்” என உடனே அசோக் நம்பருக்கு அழைத்தான்.
*
பைரவி, பெண் அழைக்க வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்து உபசரித்துக் கொண்டு இருந்தார்.
வீரனார், அசோக் இருவரும் மண்டபத்திற்கு தயார் ஆகிட, ஜனனி இருவரையும் பெண் அழைத்துச் சென்றதும் கிளம்பலாம் எனக் கூறி தடுத்திருந்தாள்.
பிரேமா, மீராவிற்குப் புடவையை வைத்துக் கொடுத்ததும், மீரா அதை அணிந்து தயார் ஆகிக் கொண்டு இருந்தாள்.
மணப்பெண் தயார் ஆகி வரவும், பிரேமா மாலையை அணிவித்த பிறகு மண்டபத்திற்கு செல்ல பைரவியிடம் அனுமதிக் கேட்டார்.
“கிளம்பலாம் சம்பந்தி, ஒரு நிமிஷம்” எனக் கணவனையும், தம்பியையும் அழைத்தார்.
இருவரும் வர, “மீரா! அப்பா, மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுக் கிளம்புடா” எனக் கண்கள் கலங்கிட கூறினார்.
இப்பொழுது கிளம்பினால் இனி இந்த வீட்டுப் பெண் இல்லை எனத் தோன்றவே,”ம்ம்ம்!” என்றவளிற்கு கண்களில் தானாக நீர் வழிந்தது.
ஜனனி”அத்தாச்சி! நீங்கப் போய் சித்தப்பா பக்கத்தில் நில்லுங்க” என்றாள்.
அவள் மனமும் மீராவின் பிரிவை எண்ணி வருந்தியது.
சேரா”அக்கா! இனிமே நீ நம்ம வீட்டில் இருக்க மாட்டீயா?” எனப் பாவமாக கேட்டான்.
அவன் கேட்டதும் அழுகை அதிகமாகிட தன் தம்பியைக் கட்டிப் பிடித்து அழுதாள்.
அதைக் கண்ட வீரனார், அசோக் மனமும் ஆதங்கமாகியது.
“உன் அக்கா எங்கப் போறா தம்பி, நம்ம வீட்டுக்குத் தானே, நீ எப்ப வேணாலும் அக்காவ வந்துப் பாத்துட்டுப் போ!” என ஆறுதல் கூறினார் பிரேமா.
மீரா, பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட, பைரவிக் கட்டிப் பிடித்து அழுதார், வீரனார் மகளின் தலையில் கைவைத்து உதடுகள் அழுந்த அழுகையை அடக்கியவாறு ஆசிர்வதித்தார்.
பிறகு அசோக், ஜனனி காலில் விழப் போக, இருவரும் தடுத்து அவளை தோளுடன் அணைத்துக் கொண்டுத் தேற்றினர்.
ஒரு வழியாக கண்ணீர் போராட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப, ஜனனி மட்டும் மீராவுடன் கூடவே சென்றாள்.
அந்தச் சமயத்தில் தான் அசோக் ஃபோன் அடித்தது.
அக்கா மகள் பிரிந்துச் செல்கிற வருத்தத்துடன் ஃபோனை அட்டென்ட் செய்து காதில் வைத்திட, மறுமுனையில் சுந்தர் தான் பேசினான்.
“ஹலோ அண்ணா! நான் சுந்தர் பேசுறேன்”
“ஆ! சொல்லுப்பா”
“நான் மண்டபத்தில் தான் இருக்கேன். இங்க மாப்பிள்ளை அழைப்புக்குனு குதிரையை கூட்டிட்டு வந்திருக்காங்க, உங்கப் பக்கம் வரச்சொன்னாதா சொன்னாங்க, அதான்…” என இழுத்தான்.
“அப்படியா! நான் எதும் சொல்லலையே, இரு! மாமா கிட்ட கேக்குறேன்” எனச் சற்றே தொலைவில் நின்ற வீரனாரிடம் சென்றுக் கேட்டான் அசோக்.
“ஆ! உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு, நேத்து தான் நம்ம பயல்க சொன்னாங்க, நம்ம வடக்கால் ஏரியா எம் எல் ஏ வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்கு கல்யாணத்தின் காலையில் குதிரையில் அமர்களப் படுத்தினாங்கனு, அதான் நானும் நல்ல குதிரையா ஒன்னு வரச் சொன்னேன்.” என்றார் சாதரணமாக.
“மாமா! மாப்பிள்ளை வீட்டில் சொன்னீங்களா? மண்டபத்தில் இருந்து தான் ஃபோன் வருது…” எனச் சுந்தர் லைனில் இருப்பதைக் கூறினான். சுந்தருக்கும் அவர் பேசியதுக் கேட்டது.
“சொல்லல, அதுக்கு என்னா இப்ப போய் நேரில் சொல்லலாம், நீ காரில் ஏறு” எனக் காரில் ஏறி அமர்ந்தார்.
அசோக், சுந்தரிடம்”அங்க தான் வரோம், வந்துப் பேசிக்கலாம்” எனக் கூறி ஃபோனை கட் செய்தாலும், மனதில் ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
உடனே சம்பத் நம்பருக்கு மெசேஜ் செய்து விட்டான்.
“எனக்குமே அதுப் பத்தி தெரியாது, நான் வரும்வரை சமாளி, வந்துப் பாத்துக்கலாம்” என மெசேஜ் அனுப்பினான்.
கார் சீரான வேகத்தில் செல்ல, அசோக் “மாமா! என்ன இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் ஒரு வார்த்தைக் கேட்டுட்டு குதிரை ஏற்பாடு செஞ்சிருக்கலாம்” என்றான்.
பைரவிக்கும் அது புதுச்செய்தி, “என்னடா சொல்ற.?” எனக் கேட்டார்.
“ஆமாக்கா!” என நடந்ததைக் கூறினான்.
“அசோக்! சொன்னா மட்டும் என்னச் சொல்ல போறானுங்க, எங்கப் பக்கம் பழக்கமில்லைனு ஏதாவது கதைச் சொல்வானுங்க, அதான் நான் எதுவும் சொல்லல, எல்லாருக்கும் முன்னாடி குதிரையை ரெடிப் பண்ணி உட்கார சொன்னா உட்காந்து தானே ஆகனும்.” எனச் சிரித்தார் வீரனார்.
“ஏங்க! நீங்கப் பாட்டுக்கும் உங்க விருப்பத்துக்குச் செய்ய நம்ம ஒன்னும் மாப்பிள்ளை வீடு இல்லை, பொண்ணு வீட்டுக் காரவங்க” எனப் பதறினார் பைரவி.
“பொண்ணு வீடுனா எல்லா ஆசைகளையும் மூடிட்டா இருக்க முடியும்? நமக்குனு ஆசை இருக்காதா? அந்தாளு பையனுக்கு மொத தடவை நடக்கப் போன வெளங்காத கல்யாணத்துக்குத் தடங்கல் வந்ததால் நம்ம வீட்டுப் பொண்ணை அடக்கமா யாருக்கும் தெரியாம, நலியாம அனுப்ப முடியுமா? எனக்குனு ஒரு அந்தஸ்து, மரியாதை இருக்கு. ஒருத்தி ஓடிப்போய் மானத்தை வாங்கிட்டா அதை எல்லாம் மீரா கல்யாணத்தில் தான் திருப்பனும். என் பொண்ணுக் கல்யாணத்தை சிறப்பா பண்ணனும். அதுக்காக எல்லாத்தையும் நான் செய்வேன், நீங்க அமைதியா இருங்க” என்றார்.
மற்றவர்கள் வாயடைந்தாலும், மீரா கல்யாணத்தைச் சிறப்பாக தானே செய்ய நினைக்கிறார் என பொறுமையாகினர்.
*
சுந்தர், குதிரையைக் கூட்டிட்டு வந்த பையனை அனுப்பி வைத்தான், “காத்திரு அசோக் வந்திடுவார்” எனக் கூறிட, அவனும் நகர்ந்தான்.
சம்பத், மெசேஜ் படித்தமையால் அதற்கு தலையை அசைத்தான்.
“என்னங்கடா நடக்குது? குதிரையில் மாப்பிள்ளை அழைப்பா?” எனச் சௌந்தர் குதித்திட, “இல்ல! அவங்க வராங்க, கொஞ்சம் வெயிட் பண்ணு” என இருவரும் சமாதானம் செய்து அறைக்குள் அமர வைத்துவிட்டு, விருமாவைத் தேடிச் சென்றனர்.
அவரோ சமையலறையில் மெனுவிற்கு எல்லாம் வந்துவிட்டதா எனச் சரிப்பார்த்து நின்றுக் கொண்டு இருந்தார்.
சுந்தர் சென்று விசயத்தைக் கூற, விருமா புருவத்தை உயர்த்தி”குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் கௌரவம் தான், ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கேக்காம எப்படி ஏற்பாடு செய்தான் அந்த வீரனார்?” எனக் கொந்தளித்தார்.
“எனக்கே டென்சன் ஆகுது, வரட்டும்” என மீசையை முறுக்கியவர், மண்டபத்தின் வாயிலை நோக்கிச் சென்றார்.
*
முதலில் பெண் அழைப்பிற்குச் சென்ற கார் வந்து நின்றது. விருமா அக்காரில் இருந்து இறங்கிய மீராவை வரவேற்றார்.
கேமரா பதிவில் அனைத்தும் பதிவாகிட, பிரேமா குங்குமம், சந்தனம் வைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.
ஜனனி, மீராவை மணமகள் அறைக்குள் அழைத்துச் சென்றிட, சுந்தர் அவசரமாக பிரேமாவிடம் விசயத்தைத் தனியாக கூட்டிச் சென்றுக் கூறினான்.
“என்ன சின்னதம்பி சொல்ற?”
“ஆமாம்மா!”
“அவன் குதிப்பானே, தாலி கட்டுற நேரத்தில் வருவேனு சொன்னவன், இவ்ளோ சீக்கிரம் வந்ததே பெருசு, இதுல இந்தக் கூத்து எல்லாம் ஒத்துப்பானோ?” எனப் புலம்பினார்.
“அது எல்லாம் அண்ணனுக்குத் தெரியும், அவரும் தாம் தூம்னு குதிச்சார், நானும் சமபத் அண்ணாவும் ஏதோ சொல்லி சமாதானம் செஞ்சுட்டு வந்தோம், இன்னும் அந்தப் பக்கம் போகல”
*
வீரனார் கார் வந்து நிற்க, அனைவரும் இறங்கினர்.
பைரவி இறங்கி வரவேற்பில் சென்று பிரேமாவுடன் நின்றுக் கொண்டார்.
விருமா எதுவும் கண்டுக் கொள்ளாமல் நிற்க, வீரனாரோ”என்னச் சம்பந்தி சீக்கிரம் வந்தாச்சா? பொண்ணு அழைப்பு முடிஞ்சு வர நேரமாகிட்டு” எனப் பற்களைக் காட்டியவாறு அருகில் வந்து நின்றார்.
கூடவே உறவுகளும் சிலர் வரிசைக் கட்டினர்.
“அது எல்லாம் இருக்கட்டும் வீரனார், மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரை ஏற்பாடு செஞ்ச நீ, என் கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லனுமுல” என முகத்தைச் சுளித்தார்.
“அய்யோ சம்பந்தி! நேத்து தான் நம்ம பயல்க அந்த யோசனைச் சொன்னானுக, நானும் பல வேலையில மறந்துட்டேன். இப்ப என்ன நம்ம மாப்பிள்ளைக்கு இல்லாததா, அது எல்லாம் ராஜா மாதிரி குதிரையில் உட்கார வச்சுக் கூட்டிட்டு வந்துடலாம், அந்த ட்ரஸ் எல்லாம் கூட ரெடியாகிட்டு, அசோக்!” என மச்சானை நோக்கினார்.
அசோக் தான் அந்த உடையை வாங்கியது, ஆனால் அது குதிரையில் அமர்ந்து வரப் போடுவதற்கு எனத் தெரியாது.
“ரெடியா இருக்கு மாமா!” என்றான் அவன்.
சம்பத், சுந்தர் ஒருவர் ஒருவரைப் பார்த்து முழிக்க, விருமா”வீரனார்!” என அதட்டினார்.
“என்ன சம்பந்தி! வர வர நான் உங்களுக்குச் சம்பந்தி ஆகப் போறதே மறந்துட்டீங்க, சரி விடுங்க, மாப்பிள்ளை ரெடியா?” எனச் சாதரணமாக கேட்டார்.
“என்னைய கேக்காம ஏற்பாடு ஏன் பண்ணினனு கேட்டா, நீ சாதரணமா பேசிட்டு இருக்க” என முறைத்தார்.
பைரவி, பிரேமாவைப் பார்க்க, அவரோ “கொஞ்சம் கேட்டு இருக்கலாம், சரிவிடுங்க, நீங்கப் பொறுமையா இருங்க சம்பந்தி, எல்லாம் பேசிக்கலாம்” என ஆறுதல் கூறினார்.
அருகில் நின்ற உறவினர்களோ “விருமாண்டி! இப்ப என்ன வீரனார் தப்பா என்ன பண்ணிட்டார்? ஆடம்பரமா மாப்பிள்ளை அழைப்பை வைக்க ஏற்பாடு பண்ணி இருக்கார். எல்லாம் உன் அந்தஸ்துக்கு ஏத்தது தானே. சீக்கிரம் ஆரம்பிங்கப்பா, நல்ல நேரம் தொடங்கிட்டு” என்றார்.
இன்னும் சிலரும் கூற, விருமா மனதில் கோபத்தை அடக்கி வைத்துவிட்டு, சுந்தரிடம்”போய் சௌந்தரை கிளம்பி வரச்சொல்லு” என்றார்.
வீரனார்”அசோக்! அந்த உடையைக் கொடுத்தனுப்பு” என்றார்.
‘அச்சசோ! கண்டிப்பா அவர் ஒத்துக்க மாட்டார்’ என மனதில் புலம்பினாள்.
*
சௌந்தர், சுந்தர் கொடுத்த உடையைத் தூக்கி எறிந்தது மட்டுமில்லாமல் இருவரையும் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தான்.
இருவரும் ஏததோ சமாதானம் சொல்லியும் அவன் காதில் வாங்கவில்லை.
சௌந்தருக்கு உடனே மீரா நினைவு வர, அவள் எண்ணிற்கு ஃபோன் செய்தான்.
நல்ல வேளை ஜனனி வெளியில் சென்றிருக்க, மேக்அப் செய்யும் பெண் மட்டுமே இருக்க, அவளை வெளியில் நிற்க சொல்லிவிட்டு, ஃபோனை அட்டென்ட் செய்தாள்.
ஃபோனை எடுத்த வேகத்தில் மீரா, “சாரி! சாரி! எனக்கும் இப்ப என் தம்பிச் சொல்லி தான் தெரியும்” எனத் தானாக சரணடைந்தாள்.
“தெரிஞ்சுட்டுல, உன் அப்பாவைக் கூப்புட்டு எனக்கு விருப்பமில்லைனு சொல்லு, இல்லைனா நானே போய் நேரா சாதரணமான மாப்பிள்ளை அழைப்புக்கு வேணா ஓகே, இந்தக் குதிரையில் ஏறி வரது எல்லாம் எனக்கு புடிக்காதுனு சொல்லிடுறேன். அதை விட பெஸ்டா ஒன்னு செய்யவா? தாலி கட்ட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு, நான் மண்டபத்தை விட்டுப்போயிட்டு சரியா அந்த நேரத்துக்கு வரேன், எப்படி வசதி?” எனக் கடுப்புடன் கூறினான்.
“அச்சசோ! அப்படி போயிடாதீங்க, ரிலேசன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. ப்ளீஸ்! எனக்காக இத ஒத்துக்கோங்க, உங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்க என்னச் சொன்னாலும் கேக்குறேன். ஏனா! அப்பா கிட்ட நான் பேசுறது கஷ்டம், கண்டிப்பா கேக்க மாட்டார். அப்புறம் பிரச்சனையாகிடும்.”
“பிரச்சனையான எனக்கு என்னா?”
“ஒரு வேளை கல்யாணம் நின்னுட்டா?”
“என்ன பிளாக்மெயிலா? அப்பாவும் பொண்ணும் திட்டம் போட்டு எங்களை பிளாக்மெயில் பண்றீங்களா? உன் அப்பா க்ளெவர் தான், முன்னாடியே சொன்னா நான் ஒத்துக்க மாட்டேனு ஸ்பாட்ல வந்துச் சொல்றார். நான் கூட நீ பாவமுனு நெனச்சேன். பட்…” என நிறுத்தினான்.
“உண்மையில் எனக்கு தெரியாதுங்க, ஆனா இப்ப நீங்க ஏதாச்சும் முடியாதுனு சொன்னா பிரச்சனையாகிடும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க. ப்ளீஸ்! என்னைய நம்புங்க” என்றாள்.
“உன்னைய நம்புறதா? நீயும் உன் அப்பா மாதிரி தானே யோசிப்ப, நைட் அந்தளவுப் பேசினப்பவே புரிஞ்சிருக்கனும், நீ ஏதோ சின்னப் பொண்ணுனு தப்பா கணக்குப் போட்டுட்டேன், ஆனா நீ வெவரம் தான். பேசியே காரியம் சாதிச்சுப்ப போல, நீ என்னச் சொன்னாலும், ஐ கான்ட்” என்றான் அழுத்தமாக.
“அப்புறம் உங்க இஷ்டம், கல்யாணம் நின்னா எனக்கு முதல் தடவை, உங்களுக்கு செகண்ட் டைம்” என ஃபோனை வைத்தாள்.
“டேமிட்!” என ஃபோனை தூக்கிப் போட்டான். அதுவரை வேடிக்கைப் பார்த்த சம்பத், சுந்தர் அமைதியாக நின்றிட, வெளியில்”மாப்பிள்ளை ரெடியா?” என யாரோ அழைத்தார்.
சௌந்தர், கோபமாகிட கண்களை இறுக மூடித் திறந்தான்.
“சுந்தர், அந்த ட்ரஸ் எடு”
அவனோ புரியாமல் ட்ரஸை எடுத்துக் கொடுக்க, “நீங்கப் போங்க மாத்திட்டு வரேன்” என்றான்.
அவர்கள் வெளியில் நிற்க, சௌந்தர் உடையை அணிந்தான்.
மனதில் மீரா மேல் மொத்தக் கோபத்தையும் அழுத்தி வைத்தான். வீரனார் மேல் உள்ள கோபமும் மீரா மேலே திரும்பியது.
*
குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு சிறப்பாக நடந்து முடிந்தது, மறந்தும் கூட சௌந்தர் முகத்தில் சிரிப்பு இல்லை.
சேரா மச்சான் முறையைச் செய்திட, அந்தப் பொழுதுக் கூட அவனிடம் முகத்தைச் சுளித்தப்படியே வைத்திருந்தான். ஆனால் சேராவிற்கு சௌந்தர் ஹீரோவாக தான் தெரிந்தான்.
“மாமா! வெல்கம், உங்களை ரொம்ப புடிக்கும்” எனச் சிரித்தப் படியே கூறினான்.
சௌந்தர் வேண்டா வெறுப்பாக அவனிடம் தலையை அசைத்தான்.
மேடையில் பொதுவான கன்னிகாதானம் நடைப்பெற, முதலில் மீராவிற்கு முடிந்து கல்யாணப் புடவை மாற்ற கொடுத்தார்கள்.
அடுத்து சௌந்தருக்கு பெற்றவர்களின் நலுங்கு முடிந்து மாப்பிள்ளை உடையைக் கொடுத்தார்கள்.
இருவரும் மாற்றிக் கொண்டு வந்து மேடையில் அமர்ந்தார்கள்.
மாங்கல்யம் அணிவிக்கிற நேரம் வந்தது. அடுத்தப் பிரச்சனை உருவாகியது.
கல்யாணப் பத்திரிக்கையில் பெயர் போட்ட தலைவர் வரவில்லை, அதனால் ஐயரைத் தாலி எடுத்துக் கொடுக்குமாறு விருமா கூறிட, அடுத்த தலைவர் கேட்டகரியில் உள்ளவரை தாலி எடுத்துக் கொடுக்க வீரனார் கூறினார்.
அந்தத் துணைத் தலைவர் விருமாவை விட இளையவர், பிடிக்காத லிஸ்டில் இருப்பவர். ஆனால் வீரனாருக்கு அரசியல் வாழ்க்கைக்கு உதவிய குரு ஆவார் அவர்.