“டேய்! இங்க அழுதுப் புலம்புறது நம்ம அம்மா, நீ என்னன்னா அண்ணிக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்க” என தன் தம்பியை முறைத்தான் சௌந்தர்.
“தம்பி! என்னப்பா இது, நான் அப்பவே சொன்னேன் தாலியைக் கட்டிய நாள் அதுமா வெளியில போகாதனு, பாரு! எப்படி அடிப்பட்டிருக்கு, நல்ல வேளை இத்தோட போனுச்சே, உள்ள வா” எனத் தாய் கண்ணீருடன் வீட்டிற்குள் நுழைந்தார்.
மீராவும் அமைதியாக கூடவே நடந்தாள்.
“சின்னதம்பி! டாக்டர் என்ன சொன்னாரு. சரியாக எவ்ளோ நாளாகுமா.?”
“அம்மா! நல்ல ப்ராக்ஜர் தான், சரியாகிடும் ஆனா இருபது நாள்கள் வெளியில் எங்கயும் போகாம, பெட் ரெஸ்ட் தான் எடுக்கனும்” என்றான் சுந்தர்.
“ம்ம்ம்! ஆமாம்மா, அசைவு ரொம்ப குடுக்காம இருந்தா சீக்கிரம் எலும்பு சேந்துடும்” என ஆறுதல் கூறினான் சம்பத்.
உடனே பிரேமா”நான் யாருக்கு என்ன பண்ணேன், என் புள்ளைக்கு மட்டும் ஏன் தான் கல்யாணமுனு ஆரம்பிச்சா ஏதாச்சும் கெட்டதா நடக்குதோ, ஆத்தா மங்கம்மா! என் புள்ளைக்கு சீக்கிரம் குணமாகட்டும், என் புள்ள, மருமக கையால சோறு ஆக்கி உனக்கு படையலும், ஊருக்கே சாப்பாடும் போடுறேன்.” என அவசரமாக வேண்டினார்.
சௌந்தர், தாயின் வேண்டுதலில் சற்றுக் கடுப்பாகி, “போதும்! போதும்! என்னைய கொண்ட ரூமுல விடுங்கடா, இருக்குற வலியில் இவங்க வேற” என எரிந்து விழுந்தான்.
“அண்ணா! என் ரூமுக்கு போகலாமா.? மாடி ஏறனுமே”
“இல்லல்ல! என்னைய புடிச்சுட்டே கொண்ட என் ரூமில் விடுங்க, அதான் எனக்கு கம்பர்ட்பிள்” என்றான்.
சம்பத், சுந்தரிடம் கண் காட்டிவிட்டு “சரிடா!” என சுந்தரிடம்”வா! அதான் நம்ம இருக்கமே மாடியில் விட்டு வரலாம். அப்புறம் இவனுக்கு ரெஸ்ட் தானே” என மாடியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
பிரேமா வேகமாக போய் சாமி அறையில் இருந்து விபூதியை எடுத்து வந்து சௌந்தர் நெற்றியில் பூசிவிட்டார்.
மீரா அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.
அவர்கள் மாடி நோக்கி செல்ல, பிரேமா மருமகளிடம்”கண்ணு! இங்க வா” என சாமி அறைக்கு முன் அழைத்துச் சென்று அவளுக்கு குங்குமத்தை வைத்தவாறு, “கண்ணு! நான் அப்ப சொன்னதுக்கு ஜனனி பொண்ணு நல்லா நாக்குப் புடுங்குற மாதிரி கேட்டுச்சு தான், ஆனாலும் நான் என்ன செய்ய! பெத்த மனசு பாரு, என் மகனுக்கு சொக்கதங்கமான மனசு, அதான் ஒரு தடவை மனசார நெனச்ச அந்தப் புள்ளய மறக்க முடியாம தவிக்கிறான்.
ஆனா எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு கண்ணு, நீ நெனச்சா அவனை மாத்தி உன் புருசனா உன்னோட நெனப்பும் மட்டும் அவன் மனசுல இருக்குற மாதிரி செய்யலாம்டா கண்ணு. நீ நெனப்ப, என்னடா இந்தப் பொம்பளை மகனுக்குப் புத்திமதி சொல்லாம நமக்கு சொல்லுதேனு.
என்ன செய்றது, தோளுக்கு மேல வளந்த புள்ளய என்னால கண்டிக்க முடியல, அப்படியே கண்டிக்கவும் அந்தப் பொண்ணு ஒன்னும் அவனா பாத்து மனசுக்குப் புடிச்சுக் கூட்டியாறலயே, எனக்கு புரியுது, அது விதினு. ஆனா அவனுக்குப் புரியலடா கண்ணு, அவ்ளோ ஆசை வச்சுட்டான் போல, உனக்கு இது தெரியுமானு எனக்கு தெரியல ” எனக் கண்களைத் துடைத்தார்.
மீரா முதலில் பதில் ஏதும் பேசாமல் மாமியாரையே பார்த்தப்படி நின்றாள். பிறகு”உங்கப் புள்ள என் கிட்ட அர்ச்சனா அவங்களைப் பத்தி சொல்லி இருக்காரும்மா!” என்றாள்.
“தப்பு தான்! இதை எல்லாம் உன் கிட்ட இந்த நேரத்தில் சொல்றது தப்பு தான். அவனுக்கு அப்பா குணம், சீக்கிரம் மாறாது. நான் ஒரு போக்கத்தவ எதையும் மனசுல வச்சுகாம கொட்டிடுவேன். சின்னதம்பி தான் என்னைய மாறி இருப்பான். ஆனா உன் புருசன் மனசுல ஒன்ன நெனச்சா அத புடியா புடிச்சுட்டு இருப்பான்.
இப்பவும் அந்த வீம்பு தான், ஒருத்தியை நெனச்ச மனசுல இன்னொருத்தியை வைக்க வீம்பா தடுத்து நிக்கிறான்.” என்றவரிடம்,
மீரா”ஏன்மா! நான் கேக்குறேனு தப்பா நெனக்காதீங்க, அவ்ளோ வீம்பா நிக்கிற உங்கப் புள்ளைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.?” என நறுக்கென்றுக் கேட்டாள்.
“வாஸ்தவம் தான் கண்ணு! நீ கேக்குறது சரி தான், ஆனா எங்கப் புள்ள வாழ்க்கைய அப்படியே விட்டுட முடியுமா? அதான் நானும், உன் மாமாவும் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம். நாளைக்கு சின்னவன் மட்டும் பொண்டாட்டி, புள்ளையோட வாழும் போது இவன் சந்நியாசியா வாழ்ந்தா எங்கப் பெத்த மனசு தாங்குமா.?”
“அதுக்காக! தெரிஞ்சே என்னைய மாதிரி ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பலியாக்குறீங்களே” என அழுத்தமாக கேட்டாள்.
“அச்சோ, கண்ணு! அப்டி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாத, அப்டி நான் நெனப்பனா, நீயும் என் புள்ளையும் பல வருசம் என் பேரப்புள்ளைகளோடு வாழனும், அதான் என் ஆசை. அதுக்காக உனக்குப் பக்கபலமா நான் இருப்பேன், என் ராசாத்தி! நீ தான்டா இந்த வீட்டு மகாலெட்சுமி, எங்க குலவிளக்கு.” என மீராவின் முகத்தில் கைகளால் சுற்றி நெட்டி முறித்து திருஷ்டிக் கழித்தார்.
அவரைக் கட்டி அணைத்த மீரா, “எனக்கு உங்க மகனோட மனசு பத்தி எல்லாம் கவலை இல்ல, நீங்க அதும் உங்க நல்ல மனசுக்கு இந்த வீட்டுலயே காலம் பூராவும் இருக்குறேன் அம்மா” என்றாள்.
அவளை தன்னோடு அணைத்துக் கொண்ட பிரேமா”அப்டி சொல்லாத கண்ணு! சீக்கிரம் என் மகனும் மனசு மாறி உன்னையே சுத்தி வருவான் பாரு. அது நடக்கும் நீ கவலைப்படாதடா, இந்த வீட்டுல தனி பொம்பளையா என் பேச்சு எடுபடாது, ஆனா உனக்கு நான் ஆதரவா இருப்பேன்” என்றார்.
மீராவிற்கு அது நடக்குமா.? நடக்காதா.? என்பதை தாண்டி, பிரேமாவின் இந்த வெள்ளந்தியான குணம் பிடித்தது.
“சரி விடுங்கம்மா! இனிமே உங்களுக்குத் துணையா இந்த வீட்டில் நான் இருக்கேன்.” எனச் சிரித்தாள்.
“சரி! சரி! நீ வா, அந்தப் பாலை சூடுப் பண்ணி தரேன். தம்பி ரூமுக்கு எடுத்துட்டுப் போகலாம்”
“எதுக்கு.? அதான் உங்கப் பையன் ஏற்கனவே சூடா இருக்காரேம்மா” எனச் சிரித்தாள்.
“அவன் கெடக்குறான் நீ வா, அவனுக்கு நம்ம சில நேரத்துல இடமே குடுக்க கூடாது கண்ணு, நீ மட்டும் அடங்கிப் போனனு வை, அப்புறம் என்னைய மாதிரி நீயும் புழுவாட்டம் சுருண்டு தான் கெடக்கனும்.”
“அப்ப நீங்க ஏன் அடங்கிப் போனீங்கம்மா.?”
“அப்ப வேற வழியில்ல கண்ணு, என் மாமியார் ம்ம்ம்! னு சொன்னா போதும் உன் மாமனார் என்னைய என்னனே கேக்காம அடி வெளுத்து வாங்கிடுவார். அப்படியே அடங்கிப் போயிட்டேன். இப்ப பேச நெனச்சாலும் முடியல, புள்ளக்குட்டி, குடும்பமுனு மனசு அடங்கிடுது.”
“மாமா அந்தளவு கொடுமை பண்ணுவாங்களா.?”
“அவருக்கு வெளிவேலையே சரியா இருக்கும் கண்ணு, என் மாமியாருக்கு நான் தொக்கா மாட்டிட்டேன், அதான் சொல்லுவாங்கள மருமக உடைச்சா பொன்குடமுனு, அந்த மாதிரி என் வாழ்க்கையில பாதி, உன் மாமனாரு கேட்பாரு பேச்சா அம்மா பேச்ச கேட்டே ஓட்டிட்டார். அவர் என்னைய புரிஞ்சு வரும் போது எங்க காலமும் ஓடிட்டு, அப்புறம் பெத்தப் பொண்ணு…” என நிறுத்திட, கண்கள் கலங்கினார்.
“அம்மா! அழுவாம அமைதியா இருங்க” என ஆறுதல் கூறினாள்.
“என்னத்த சொல்ல, உன் மாமனாருக்கு முசுடு குணம் ஆனா பொம்பளை விசயத்துல தங்கமானவரு. அப்படி பட்டவரு பொண்ணு போயும் போயும் தாலியே கட்டாம வாழுற ஒருத்திக்கு பொறந்த மகனை விரும்பி ஓடிப்போயிட்டா கண்ணு, அந்த மனுசன் எப்டி ஒடஞ்சி போனாரு தெரியுமா.?” எனப் புலம்பினார்.
“விடுங்கம்மா! அவங்க தான் போயிட்டாங்களே, இனி அத நெனச்சி நீங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க”
“என்னமோ போ! சரி இனி உன் வாழ்க்கையை பாரு, சரியா” எனப் பேசிக் கொண்டே பாலை சூடுப்பத்தி கிளாஸில் ஊற்றி மருமகளிடம் நீட்டி மாடிக்கு அனுப்பி வைத்தார்.
மீரா பல யோசனைகளுடன் மாடி ஏறினாள்.
சௌந்தரை மெல்ல அவன் அறைக்குள் கூட்டிச் சென்றனர்.
அறைக்குள் நுழைந்ததும் அங்கு கண்ட காட்சியின் பிறகே சௌந்தருக்கு இன்றைய தினமே நினைவில் ஏறியது.
“டேய்! இது உங்க வேலைனு தெரியும், மரியாதையா எல்லாத்தையும் க்ளீன் பண்ணி வெளியில் போடுங்க” என்றான்.
முதல் இரவிற்கான பூக்களின் அலங்காரத்துடன் அறை ஜொலித்தது.
சம்பத் இப்பொழுது தான் பார்க்கின்றான், ஆனால் சுந்தர் மூலம் அது அறிந்தது தான்.
“டேய்! உனக்குப் புடிக்கலைனா எல்லாத்தையும் க்ளீன் பண்ணிக்கோ, எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு, வா சுந்தர் நம்ம போகலாம்” என சௌந்தரை அப்படியே விட்டான்.
சௌந்தர் தடுமாற, பிறகு சம்பத் அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தபின், சௌந்தர்”எல்லாம் நேரம், என்னால இப்ப முடியாதுனு நீ நக்கல் அடிக்குற, உன்னைய நான், கால் சரியாயிட்டு வந்து பாத்துக்கிறேன்டா” என முறைத்தான்.
சுந்தரும் மெல்ல சிரித்தான், சம்பத்”அது எல்லாம் இருக்கட்டும், நீ மீரா கிட்ட நடந்த எதையும் சொல்லி வைக்காத, அவ சின்னப் பொண்ணு மனசு தாங்காதுடா, ப்ளீஸ்!” என்றான்.
“சின்ன பொண்ணுனா, உன் பங்காளி சித்தப்பன் அதான் அந்த வீரனார் ஏன்டா சின்னப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாரு”
“சௌந்தர்!” என சம்பத் முறைத்திட, சுந்தர்”அண்ணா! அண்ணி பாவம், எதையும் அவங்க கிட்ட சொல்லாதீங்க” என்றான்.
“நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற நிலமைல நான் இருக்கேன். என்னைய கடுப்பாக்காம கெளம்புங்கடா” எனக் கோபமாக கூறினான்.
இருவரும் வெளியேற, இடையில் மீரா வந்துக் கொண்டு இருந்தாள்.
சம்பத்”சுந்தர்! நீ போயிட்டு இரு, வரேன்” என நின்றான்.
மீரா சம்பத்திடம்”அண்ணா! அவருக்கு ஓகேவா, எப்டி அடிப்பட்டுச்சு?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! அவன் பைக்கில் போய் இருக்கான், ஏதோ ஹெல்மெட் போட்டதால் தலை தப்பிச்சுட்டு, ரோட்டின் வளைவில் கார் திரும்பும் போது மோதிட்டு, இப்ப ஓகே ரெஸ்ட் எடுத்தா போதும் மீரா, டேப்லெட்ஸ் அங்க வச்சு இருக்கேன், சாப்புட வச்சாச்சு டேப்லெட்ஸ் மட்டும் எடுத்துக் குடுத்துடு. அப்புறம்…” என நிறுத்தியவன், நண்பனின் குணம் அறிந்ததால், “அவன் ஏதாச்சும் சொன்னா மனசுல ஏத்தாத, நான் கிளம்புறேன்” எனப் படிகளில் இறங்க தொடங்கினான்.
மீரா அறையை நோக்கி நடந்தாள்.
அறைக்குள் சென்றவள், அதன் அலங்காரத்தையும், கட்டினவனின் கோலத்தையும் கண்டு பேச்சின்றி கதவைத் தாழிட்டு, பால் கிளாஸை அவன் அருகில் இருந்த டேபிளில் வைத்தாள்.
பிறகு சம்பத் கூறிய டேப்லெட்ஸை கையில் எடுத்துச் சென்று பால் கிளாஸ் அருகே வைத்தவள், “இந்த டேப்லெட்ஸை போடுங்க, சம்பத் அண்ணா சொல்லிட்டுப் போனாங்க” எனக் கூறினாள்.
அவளின் செய்கைகள் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டு இருந்தவன், அவளின் பேச்சில் “ஓ! உன் அண்ணா உன்னைய எனக்கு நர்ஸா அப்பாயின்மென்ட் பண்ணி இருக்கானா.?” என நக்கலாக கேட்டான்.
“மெடிசன்ஸ் எடுத்துக் கொடுத்தா அது நர்ஸ் டியூட்டினா, அதுல ஒன்னும் கேவலமில்லங்க அவங்களும் டாக்டருக்கு சமமானவங்க” என அவனின் நக்கலுக்குப் பதில் அளித்துவிட்டு கட்டிலின் மறுபக்கம் வந்துக் கட்டிலில் ஏறி பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.
“நல்லா தான் பேசுற, பட் என் கிட்ட பேசுறது வேஸ்ட். ஆமா! இன்னைய நாளுக்கு ஸ்பெஷலா கிளம்பி இருக்க போல, ஆனா என்ன செய்றது பாரு, எனக்கு தான் இந்த நாளைக் கொண்டாட முடியல, சோ சேட்!” என மீண்டும் வேண்டுமென்றே வெறுப்பேற்றினான்.
“ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, அதான் கால் சீக்கிரம் சரியாகிடுமுனு டாக்டர் சொல்லி இருக்காரே, உங்களுக்காக வேணுனா இதே மாதிரி பூ டெக்ரேசன் செட்டிங்க என் மாமா, சுந்தர் கிட்ட சொல்லி செய்ய சொல்றேன், இந்த நாளைக் கொண்டாடிடலாம்” என அவளும் சமமாக வெறுப்பேற்றியவாறு கூறினாள்.
“ஏய்! என்ன, என்னைய கடுப்பாக்குறீயா.? தொலைச்சுடுவேன்” எனக் கத்தினான்.
“எனக்கு தூக்கம் வருது!” என்றாள் மீரா.
“எனக்கு எப்டி அடிப்பட்டுச்சுனு நீ கேக்கவே இல்ல!”
“சம்பத் அண்ணா சொன்னாங்க, ஏதோ கார் இடிச்சது ஹெல்மெட் போட்டதால் தலை தப்பிச்சுட்டுனு, இனிமே பாத்துப் போங்க” எனப் பொதுவான அக்கறையில் கூறினாள்.
“ம்ம்ம்! அது உண்மை தான், ஆனா இடிச்ச கார் யார் தெரியுமா.?”
“யாரு.?”
“அர்ச்சனா!”
“யாரு.?” என மீண்டும் புரியாமல் ஆனால் பெயர் புரிய குழம்பியப்படி கேட்டாள்.
“நீ யோசிக்கிற அதே அர்ச்சனா தான்”
“ஓ!”
“என்ன ஓ! அவ தான் என்னைய ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணதும். அன்னைக்கு அப்புறம் அவளை இன்னைக்கு தான் பாத்தேன்.”
மீரா புரியாமல் பார்க்க,
“அவளுக்கு டைவர்ஸ் ஆச்சாம், அது மட்டுமில்ல அன்னைக்கு நடந்ததையும் சொன்னா”
“என்ன சொன்னாங்க.?”
அர்ச்சனா கார் வளையும் போது தான் சௌந்தர் பைக்கில் வேகமாக சென்றது. அதில் மோதி அவன் விழுந்த இடம் கட்டிட வேலைக்காக அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் மேல்.
அதில் அவனின் ஒரு கால் ப்ராக்ஜர் ஆனது. அவனை உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தது அர்ச்சனா தான்.
முதலில் அர்ச்சனாவிடம் முகம் கொடுத்துப் பேசாத சௌந்தர் பிறகு அவளின் கெஞ்சலில் பேசினான்.
“சௌந்தர்! என்னைய மன்னிச்சுடுங்க, நான் அன்னைக்கு அப்படி பட்ட சூழ்நிலையில் இருந்தேன். உங்க அக்கா பண்ண காரியத்தால தான் வீட்டுல பெத்தவங்க பேச்சைக் கேக்க கூடிய கட்டாயத்தில் இருந்தேன். ஒரு வேளை என் அண்ணன் ஓடிப்போய் இருந்தா நீங்க உங்க அக்காக்காக யோசிப்பீங்கள.? அத விடுங்க, என் பெத்தவங்க பேச்சை கேட்டு நான் ஒன்னும் ஒழுங்கா வாழலை, என் வாழ்க்கை முடிஞ்சுட்டு” என்றாள்.
“என்ன சொல்ற.?”
“எனக்கு டைவர்ஸ் ஆகிட்டு, ஆமா! வெளிநாட்டு மாப்பிள்ளைனு அப்பா ஆசைப்பட்டுக் கட்டி வச்சார். ஆனா அந்தாளுக்கு சந்தேகப்புத்தி தான் ஆட்டிப்படைச்சது, பொறந்தப் புள்ளை மேலயே சந்தேகம், அவருக்குப் பொறந்துச்சானு, நானும் பொறுத்துப் பாத்துட்டு வேற வழியில்லாம டைவர்ஸ் பண்ணி வந்துட்டேன். இப்ப நானும், என் புள்ளையும் தனியா வாழுந்துட்டு இருக்கோம். அப்பா, அம்மா கூட இருக்காங்க” என முடித்தாள்.
“அர்ச்சு!” என அதிர்ச்சியாக கேட்டான்.
“ஆமா! நீங்க அவ்ளோ கெஞ்சியும் உங்களை வேணானு போனல எனக்கு இது வேணும் சௌந்தர்” என அவள் முகத்தை மூடி அழுதாள்.
சௌந்தர் எதுவும் பேச முடியாமல் அமைதியானான், அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சௌந்தர் தான் சம்பத்க்கு தகவல் தெரிவித்து, சுந்தரும் அங்குச் சென்றது.
அர்ச்சனாவை அங்குப் பார்த்தவர்கள் எதுவும் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.
சௌந்தர் அவளிடம் இயல்பாக பேசிவிட்டு கிளம்பிட, சுந்தரும், சம்பத்தும் குழம்பினார்கள். ஆனால் சௌந்தரிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அனைத்தையும் மீராவிடம் கூறி முடித்தான்.
மீரா அதிர்ச்சியாய் அனைத்தையும் கேட்டிட, மேலும் தொடர்ந்த சௌந்தர்”அவ மட்டும் அன்னைக்கு அவ அப்பா பேச்சை கேக்காம என் கூட வந்திருந்தா இன்னேரம் ராணியாட்டம் வாழ வச்சு இருப்பேன். பாவி! அவ தலையில் அவளே மண்ணை அள்ளிப்போட்டுகிட்டு இப்ப வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கிறா” என அவனின் மனம் கவர்ந்தவளின் வாழ்க்கைகாக மருகி வருந்தினான்.
மீரா அவனை நோக்கினாள், அவனோ மனம் கலங்கி அவனின் தொலைத்த காதலுக்காக ஆம்! காதலியாக, மனைவியாக கற்பனையில் வாழ்ந்தவள் தானே அர்ச்சனா. அவளின் வாழ்க்கையை எண்ணி வருந்தியது அவன் முகத்தில் தெரிய அதை நோக்கிய மீராவிற்கு ஏதோ புரியாத உணர்வு.
பட்டென்று”உங்க மனசுல வேணா அவங்களை வச்சுக்கோங்க, ஆனா இந்த வாழ்க்கையில் நான் தான் உங்கப் பொண்டாட்டி” என்றாள் அழுத்தமாக.
அதுவரை அவனின் மனநிலையில் இருந்தவன், அவளின் அழுத்தமான பேச்சில் அவளைத் திரும்பி பார்த்தான்.