“என்னம்மா சொல்றீங்க.? மாமாக்கு, உங்கப் பசங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.?” என அந்தக் கோபம் குறையாமல் கேட்டாள்.
“கண்ணு! உன் மாமா பத்தி உனக்குத் தெரியாதா.? அந்த மனுசனுக்குத் தெரிஞ்சா என்னைய பொண்டாட்டியே வேணானு ஒதுக்கிடுவார்.” என வருந்திக் கூறினார்.
“அம்மா! நீங்க கெளம்புங்க, சௌந்தர் வந்துடப் போறான்” என சௌந்தர்யா கூறியவாறு தன் மகளை வாங்க கை நீட்டினாள்.
“பாப்பா! புள்ளைய பத்தரமா பாத்துக்கோ, வரேன்டா பவுனு…” எனப் பேத்தியை மகளிடம் கொடுத்தவர், பின்னால் நின்ற மருமகனிடம் போய் வருவதாக தலையை அசைத்தார்.
சபரியும்”போயிட்டு வாங்கத்த!” என்றான்.
அனைத்தையும் புரியாத நிலையில் ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் நோக்கினாள் மீரா.
“பாப்பா! இதான் உன் தம்பி பொண்டாட்டி, நான் சொல்லி இருக்கேன்ல, நம்ம வீட்டுல நீ இல்லாத இடத்த இவ தான் நெரப்புறா” என மீராவைப் பார்த்துவிட்டு ஆசையாக கூறினார்.
“அம்மா! உங்க மருமகள பத்தி தெரியும், மீரா படிக்குற காலேஜ்ல தான் நான் வேலைக்குப் போறேன், அதும் மீராவுக்கு ஒரு சப்ஜெக்ட் கிளாஸ் எடுக்குறேன், மீராவுக்கும் என்னைய தெரியும். உங்கப் பையன் நான் யாருனு நேருல பாத்தனைக்கே சொல்லிட்டான் போல, கூடவே பாடம் எடுக்குற வாத்தியரா மட்டும் பாருனு சொல்லி இருக்கான், அதான் அவளுக்கு நான் நாத்தனாரா தெரியல…” எனத் தம்பியை மனைவியை பார்த்துச் சிரித்தவாறு கூறினாள்.
மூவரும் பில் போட்டு வெளியில் சென்ற சிறிது நேரம் கழித்தே சௌந்தர்யா குடும்பம் வெளியேறியது.
மீரா கடையில் நடந்தையே யோசித்து வர, சௌந்தர் அவளை கவனித்தாலும், ஏதோ அலுவலக முக்கிய விசயத்தை காதில் இருந்த வொயர்லெஸ்ஸில் பேசிக் கொண்டே கார் ஓட்டினான்.
வீடு வரவும், சௌந்தர் காரை நிறுத்திட பிரேமா இறங்கி வீட்டிற்குள் சென்றார்.
மீரா இறங்கப் போக, “ஏய் முட்டகோஸ்! ஏன் ஒரு மாதிரி இருக்க? எனி ப்ராப்ளம்… செயின் புடிச்சு தானே எடுத்த” எனக் கேட்டான் சௌந்தர்.
“நான் நல்லா தான் இருக்கேன்!” என வேறெதுவும் சொல்லாமல் இறங்கியவள் கையைப் பிடித்தவன், “சம்திங் ராங்! வில் ஃபைன்ட்” என்றான்.
‘அச்சச்சோ!’ எனப் பயந்தவள், “ஹலோ! நான் நல்லா தான் இருக்கேன், லேசா தலைவலி அதான் போய் கொஞ்சம் நேரம் தூங்கலாம்னு பாத்தேன்”
“ஓ! ஃபைன், போய் தூங்கு… நான் வர லேட் ஆகும்”
“லேட்னா! அன்னைக்கு மாதிரி பார்ட்டியா?”
“எஸ்! ஆனா அன்னைக்கு மாதிரி இல்ல, கிளைன்ட் ஒருத்தர் மும்பையில் இருந்து வந்து இருக்கார்… அவருக்காக ஜஸ்ட் கம்பேனி… அவ்ளோதான்.”
“ம்ம்ம்! ஓகே” என்றாள் அவள்.
“சரி போ!” எனக் காரினை கிளப்பிய நகர்ந்தான்.
*
மீரா தனது உடையை மாற்றிவிட்டு சமையலறை நோக்கி சென்றாள். அங்கு பிரேமா இட்லி ஊற்றிவிட்டு, சட்னிக்காக தயாரித்துக் கொண்டு இருந்தார்.
“குடுங்கம்மா! நான் ரெடிப் பண்றேன்” என வாங்கியவள், அதை தொடர்ந்தாள்.
பிரேமா மெல்ல ஆரம்பித்தார்”கண்ணு! என்னைய தப்பா நெனக்காத, பாப்பா கூட பேசிட்டு இருக்கேனு சௌந்தர் கிட்ட எதுவும் சொல்லிடாதம்மா”
“என்னம்மா இப்டி பேசுறீங்க.? அவரு கிட்ட நானும் சேந்து மறைச்சது தெரிஞ்சா, ரொம்ப கோபப்படுவார். இது நல்லதுக்கு இல்ல, ஒன்னு உங்க மக கூட பேசுறத நிறுத்துங்க, இல்லைனா வெளிப்படையா என் மக கூட நான் பேசுவேனு சொல்லிட்டுப் பேசுங்க, நீங்கப் பண்றது எப்ப வேணாலும் தெரியலாம், அப்டி தெரிஞ்சா மாமாவும் சரி, உங்கப் பசங்களும் சும்மா இருக்க மாட்டாங்க.” எனக் கொதித்தாள்.
“கண்ணு! உன் மாமனாருக்கும், உன் புருசனுக்கும் தான் தெரியாது, ஆனா சுந்தருக்குத் தெரியும்”
“சுந்தருமா.?” என ஆச்சரியமாக கேட்டாள்.
“ஆமாடா! அவனும், நானும் ஒரு சூழ்நிலையில் தான் பாப்பா கூட பேச ஆரம்பிச்சோம்.
பாப்பாக்கு குழந்தைப் பொறக்க சில வருசங்க ஆகி, கருவுற்று இருந்திருக்கா அதுவும் ஏழு மாசத்துல பிரசவ வலி வந்து எங்கத் தெரிஞ்ச டாக்டர் கிட்ட தான் அட்மிட் ஆனா, ரொம்ப மோசமான நெலமைக்குப் போகவும் அவ புருசன் தனியாளா நின்னு இருக்காரு, டாக்டரும்மா எனக்கு உடனே ஃபோன் பண்ணி விசயத்தைச் சொன்னாங்க.
எனக்குப் பெத்த வயிறும் மனசும் தாங்காம, இங்க அவரு, பெரியதம்பி கிட்ட சொன்னாலும் விட மாட்டாங்கனு, சுந்தர் கிட்ட சொல்லி அழுதேன். அவனும் முதலில் கோபமாக பேசினாலும், என் அழுகையைப் பாத்து கூட்டிட்டுப் போனான்.
அங்கப் போனா பாப்பாக்கு வலி வந்து கர்ப்பவாய் திறந்துட்டு, ஆனா குழந்தை குறை மாசம், அவளால தாங்க முடியாத வலியில் பெத்து எடுத்தா, குழந்தைப் பொழச்சதே பெரிய விசயமா இருந்துச்சு, அது மட்டுமில்ல பாப்பாக்கும் மூச்சு விடுறதுல பிரச்சனை ஆக அவள ஐசியூ விலும் புள்ளய தனியா பாக்ஸ்ல வச்சு இருந்தாங்க.
என்னால அங்கயும் இங்கயுமா சமாளிக்க முடியாம ஒடுங்கிட்டேன். கோயில நாப்பதெட்டு நாள் விரதம்னு தினமும் போயிடுவேன், சுந்தர் தான் என் கூட சேந்து சமாளிச்சான்.
அப்ப பேச ஆரம்பிச்சது தான் கண்ணு” எனக் கண்களில் நீர் வழியத் துடைத்தார்.
பிரேமா வெளியில் சென்று கணவன் இன்னும் வரவில்லை என உறுதிச் செய்துவிட்டு தொடர்ந்தார்.
“பாப்பா அந்தப் பையனை விரும்பினது எனக்கு தான் மொதல தெரியும், நான் தெரிஞ்சதும் அவரு கிட்ட லேசா சொன்னதும், அவரு பையன் யாரு என்னனு விசாரிச்சார், பொண்ணு மேல பாசம் ரொம்ப, அந்தப் பையனோட அம்மா முறையா தாலி கட்டாம வாழுறவங்க அதுவும் யாருக்கும் தெரியாமனு சேதி வந்ததும் அவரு கொதிச்சுப் போயிட்டாரு.
பாப்பாவ கூப்புட்டு அந்தப் பையன மறக்க சொல்லிட்டு வேற இடம் அதான் அர்ச்சனா அண்ணனை பாத்துட்டாரு. தம்பிங்க ரெண்டுப் பேருக்குகே விசயம் தெரியாது. சௌந்தர் அப்ப வெளிநாட்டிற்கு முக்கிய வேலையா போயிருந்தான்.
அர்ச்சனா அப்பாக்கு சௌந்தரை புடிக்கவும் பொண்ணுக்கு கேட்டாரு, எங்களுக்கும் சம்மதம் வர சரினு சொல்லிட்டோம். பாப்பாவும் அப்பா பேச்சைக் கேட்டு அந்தப் பையன் கிட்டா சொல்லி ஒதுங்கிட்டு தான் கல்யாணத்துக்கு தயார் ஆனாள்.
ஆனா சபரி மாப்புள்ள அவங்க அம்மா கிட்ட போய் உங்க ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை தான் என் மனசுக்கு எமனா வர காரணம்னு சொல்லி அழுது இருக்காரு. அந்தம்மா மகனோட வலி தாங்காம வந்து இவ கிட்ட கெஞ்சி காலுல விழ, அவளுக்குமே அப்பா கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைனு அந்தப் பையனையும் மறக்க முடியாம போயிட்டா.
நீயே சொல்லு கண்ணு உன் மாமனாரு மனசு மாறி சபரி மாப்புள்ளைக்கு கட்டி வைப்பாருனு நெனக்குற…”
“இல்ல தான்மா! ஆனா…
“ஆனாலும் அவ பண்ணது தப்பு தான்… என்ன செய்றது எல்லாம் நடந்து முடிஞ்சுட்டு, அவ மாமியாரும் அவங்க கல்யாணம் பண்ண ஒரு வருசத்துலேய செத்துட்டாங்க. மாப்புள்ள அவங்க அப்பா கூட தொடர்பே இல்லாம இருக்கார். அவருக்கு தான் மொத தாரத்து குடும்பம் இருக்கே.
அவங்களுக்கு யாருமே இல்ல, அதான் நான் அப்பப்ப தெரியாம பேசிட்டு வரது.”
“அவங்க சூழ்நிலைனு சொன்னாலும், இதுல பாதிக்கப்பட்டது தப்பே செய்யாதவங்கமா, உங்கப் புள்ள என்ன தப்பு செஞ்சார்.? உங்க மக ஆசைப்பட்டவங்கள கட்டிச் சந்தோஷமா சேந்துட்டாங்க. ஆனா அவரு.? அதே மாதிரி அந்த அர்ச்சனா.? அவங்க ஒன்னும் காதலிச்சு கல்யாணத்துக்கு வரலையே, கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி தானே காதலிச்சாங்க… இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க.?” எனச் சற்று வேகமாக கேட்டாள்.
இதில் அவளின் ஆதங்கமும் கூட இருந்தது, அவள் வீட்டிலும் பலியாடு அவள் தானே…
பிரேமா பேசாமல் அமைதியாக இருக்க, “அம்மா! நான் சொல்றேனு தப்பா நெனக்காதீங்க, அவங்க யாருமே வேணானு தானே போனாங்க, அப்படியே விடுங்க, சரி! பெத்த பாசத்துக்காக குழந்தைப்பேறு பாத்தீங்க, அதோட விடுங்க… இனியும் பேசுறேனு போனா அடுத்த பெரிய பிரச்சனையில் தான் முடியும்…”
“என்ன கண்ணு இப்டி சொல்ற… நீ தானே அன்னைக்கு சொன்ன, இந்த வீட்டுல எல்லாரோட புள்ளைங்களும் விளையாடும்னு… பாப்பாவ எப்டியாச்சும் இந்த வீட்டுல சேக்கனும்டா” என்றாள்.
“சொல்ல கூடாது தான் ஆனா சொல்றேன் அது கண்டிப்பா மாமா உயிரோடு இருக்கவரை நடக்காது, அடுத்து உங்க பெரிய மகன் கிட்ட வாய்ப்பே இல்ல” என்றாள் அழுத்தமாக.
“கண்ணு!” என இழுத்தார்.
“ஆமாம்மா! இதோட உங்க மகளோட சகவாசத்தை விட்டா நல்லது. இல்லைனா நானே அவரு கிட்ட சொல்ல வேண்டி வந்துடும்.” என மிக அழுத்தமாக கூறியவளை விசித்திரமாக பார்த்தார் பிரேமா.
அதுவரை அவர்கள் உரையாடல்களை கேட்டுக் கொண்டு இருந்த சுந்தர், “அண்ணி!” என அழைத்தான்.
விருமாவும், சௌந்தரும் தான் வீட்டில் இல்லை, சுந்தர் அவன் அறையில் இருந்தான். அவன் தண்ணீர் தேடி சமையலறை வர அவர்களின் உரையாடலுக்குள் நுழையாமல் அமைதியாக நின்றான்.
வாயிலைத் திரும்பி நோக்கியவள், “வாங்க கொழுந்தநாரே! இதுக்கு நீங்களும் கூட்டா.?” எனக் கேள்வியாக முறைத்தாள்.
உங்க அக்கா அவங்கப் பக்கம் நியாயத்துக்கு ஸ்டாங்கா நிக்கனும், இல்லையா கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கிட்டுப் போய் இருக்கனும். இந்த வீட்டுல உள்ளவங்க ஏமாத்திட்டு போயிட்டு, இப்ப அம்மா, தம்பி மேல மட்டும் ரகசியமா பாசம் காட்டி மறுபடியும் அவங்க அப்பா, என் புருசனையும் ஏமாத்துறாங்க, இது சரியில்ல சுந்தர்.
எனக்குமே இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல ஏனா! படிப்பு முக்கியமா இருந்துச்சு, என்னால அப்பாவ எதிர்த்து நிக்க முடியல கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன். அதே மணமேடையில் அப்பாவே வேணானு சொன்னப்ப என்னோட ஆசையை நிறைவேத்துறதா உங்கண்ணன் சொன்னார், அப்பாவை தைரியமா எதிர்த்து தாலியைக் கட்டிக்கிட்டேன்…
“அது உண்மை தான்… ஆனா உங்க அண்ணன் கிட்ட சொன்னா, அவரு ஏதாச்சும் செய்வாரு… அவரால மாமாவ சமாதானம் செய்ய முடியும், ஏன் அவரு கிட்ட பேசல.?”
“நாங்க பாத்த சௌந்தர் அண்ணா வேற அண்ணி, அவர் கிட்ட அக்காவ பத்தியே பேச முடியாது, அவருக்கு அந்த அர்ச்சனா போயிட்டாங்கனு தான் கோபம், அதுவும் அக்காவால… எப்டி அவர் கிட்ட போய் பேச முடியும்…”
“அவரோட கோபம் நியாயமானது தானே, அர்ச்சனா விட்டுப் போக உங்க அக்கா தானே காரணம்.”
“அய்யோ அண்ணி! எல்லாமே தப்பு தான். அதுக்காக இன்னுமா அந்த அர்ச்சனா பின்னாடி சுத்தனும்.?” எனக் கோபமாக கேட்டான் சுந்தர்.
“சின்னதம்பி என்ன சொல்ற.?” என அதிர்ச்சியாய் கேட்டார் பிரேமா.
“ஆமாம்மா! அண்ணி கிட்ட கேளுங்க, நாங்க ரெண்டுப் பேரும் தான் பாத்தோம், அவங்க ஒன்னா உட்காந்தி பேசிட்டு இருந்ததை, அது மட்டுமில்ல இவங்க காலேஜ்ல அர்ச்சனாக்கு வேலை வாங்கிக் குடுத்ததும் அண்ணன் தான், அவரு சரியில்ல அண்ணி, நீங்க மொதல அதைக் கவனிங்க” என்றான் அவனும், சௌந்தர்யா கூட பேச கூடாது என கூறியதும் அவனுக்கு அக்கா பாசமே வென்றது, ஏன் என்றால் சௌந்தர்யா மகள் குட்டியாக இருந்தது முதல் சுந்தர் மடியில் கிடப்பவள், அதிகளவு பாசத்தை வைத்துவிட்டான், எப்படி பேசாமல் இருக்க முடியும்.
“சுந்தர்! நீங்க தேவை இல்லாம உங்க அண்ணனைப் பத்தி தப்பா பேசுறீங்க, அவரு எப்படினு எனக்குத் தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடியே அர்ச்சனா பத்தி சொல்லிட்டு தான் என்னோட சம்மதத்தைக் கேட்டார். அது மட்டுமில்ல எனக்குத் தாலி கட்டிட்டு இன்னொரு பொண்ணுக் கூட போக எப்பவுமே நினைக்க மாட்டார்.
இங்க வந்த கொஞ்ச நாளிலே எனக்கு தெரிஞ்ச விசயம் உங்களுக்குப் புரியலையா.?”
“அண்ணன் மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு அண்ணி, ஆனா அந்தப் பொண்ணு அர்ச்சனா அண்ணன் கூடப் பேசுறது எனக்கு சரியா படல.”
“அர்ச்சனா மேடம் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா என் புருசனைப் பத்தி எனக்கு தெரியும். நான் கூட நீங்களும், உங்கம்மாவும் தான் எதார்த்தம், அவரும் மாமாவும் வேற குணம்னு நெனச்சேன். ஆனா! அவங்க எதையுமே வெளிப்படையா பண்றாங்க, பேசுறாங்க. சுந்தர்! என் புருசனை வேவு பாக்குறதை விட்டுட்டு, உங்க ரகசிய மீட்டிங்கை நிறுத்துங்க, நான் ரொம்ப நாள் சொல்லாம இருக்க முடியாது, என்னைய மன்னிச்சுடுங்கம்மா! அவரு கிட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இல்ல சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தா சொல்லிடுவேன். அப்ப என்னைய தப்பா நினைக்காதீங்க. இல்லைனா அவங்க ஓடிப்போனது அப்படியே இருக்கட்டும்” என்றவள், வெளியில் சென்று விட்டாள்.
பிரேமா மகனிடம்”கண்ணு! இந்தளவு பேசும்னு நான் நெனக்கவே இல்லப்பா…” என வருத்தப்பட்டார்.
“அமைதியானவங்கனு நம்ம தப்பா நெனச்சுட்டோம்மா, ஆனாலும் அவங்க பாயிண்ட் சரிதான் அதுக்காக அட்சயா கூட எல்லாம் பேசாம இருக்க முடியாதும்மா, நடப்பது நடக்கட்டும்” என அவனும் வெளியேறினான்.
பிரேமா யார் பக்கம் பேசுவது என அமைதிக்காத்தார்.
*
இரவு…
சௌந்தர் நேரம் கழித்தே வீடுத் திரும்பினான்.
மீரா, அறையின் விளக்கை அணைத்துவிட்டு, இரவு விளக்கைப் போட்டவாறு படுத்திருந்தாள்.
சௌந்தர் அந்த வெளிச்சத்திலே உடையை மாற்றிவிட்டு அவள் அருகில் படுத்திட, அவள் தூங்கிவிட்டாள் என எண்ணி, கண்களை மூடினான்.
அவளோ அவன் மார்பில் தலை வைத்து அணைத்தப்படி நெருங்கினாள்.
“நீ இன்னும் தூங்கலையா முட்டகோஸ்.”
“ம்ம்ம்! இல்ல, இப்டி தூங்கினா தூக்கம் வரும் போல”
“அது சரி! ஏதோ சின்னப்புள்ள மாதிரி மாறிட்ட போல”
“இருக்கட்டுமே! இதுவும் நல்லா தான் இருக்கு, நீங்க ஏன் இவ்ளோ நேரம், எனக்கு தூக்கம் வந்தாலும் தூங்க முடியல, அலோனா இருந்துச்சு”
“ம்ம்ம்! அவர கொண்ட ட்ராப் பண்ணிட்டு வந்தேன். டைம் ஆச்சு, சரி தூங்கு”
“ம்ம்ம்!”
“ஆமா! ஈவ்னிங் ஒரு மாதிரி இருந்தீயே ஓகே ஆகிட்டீயா.? தலைவலி சரியாச்சா”