மீராவின் வீட்டு வாசலில் காரை நிறுத்திய சுந்தர்”அண்ணி! நீ போங்க, நான் இப்டியே கெளம்புறேன். இப்ப நான் உங்கள இங்க கொண்டு வந்து விட்டது, ஒரு மன அமைதிக்காக மட்டும் தான் இங்கயே இருக்க இல்ல, சீக்கிரம் எல்லாம் சரியாகும், அண்ணனே வந்துக் கூட்டிட்டுப் போவார்” என்றான்.
“சுந்தர்! இப்ப நான் எதையுமே யோசிக்கல, நீங்க கெளம்புங்க உங்கள உள்ள கூப்புடலைனு நெனக்க வேணாம், அப்பா பத்தி தெரியும்ல, அவங்க மேல உள்ள கோபத்தை உங்க மேல காட்டுவார், அதான்…”
“புரியுது அண்ணி! அம்மா கிட்ட மறக்காம ஃபோன்ல பேசிடுங்க” எனக் கூறிட, “ம்ம்ம்!” என இறங்கி கொண்டாள்.
அசோக் மற்றும் ஜனனி தூங்கும் மகனுடன் வெளியில் வந்தனர்.
ஒரு நிச்சயதார்த்த விசேஷத்திற்கு வீரனார் குடும்பத்துடன் ஒன்றாக சென்றுவிட்டு அவர்கள் வீட்டிற்குச் செல்ல வந்தவர்கள், மீரா, சுந்தரைக் கண்டு வரவேற்றனர்.
மீரா எதுவும் சொல்லாமல் பெட்டியுடன் வீட்டிற்குள் நுழைய, அசோக் மற்றும் ஜனனி சுந்தரிடம் விசாரித்தனர்.
சுந்தர் சுருக்கமாக நடந்ததை தெளிவுடன் கூறினான்.
“நீங்க வருத்தப்படாதீங்க, சீக்கிரம் எல்லாமே சரியாகும்” எனக் கூறியவாறு காரை கிளப்பினான்.
“என்னங்க இது.?” எனக் கேட்ட மனைவியிடம், “மொதல உள்ள வா!” என கணவன் உள்ளே சென்றான்.
ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த மீராவை பைரவி முதலில் வரவேற்றாலும் கையில் பெட்டி இருந்திட புரியாமல் என்னவென்று விசாரித்தார்.
வீரனாரும் உடையை மாற்றிக் கொண்டு வர, ஹாலில் அமர்ந்திருந்த மகளைக் கண்டு அதிர்ச்சியாக, “என்ன பைரவி, இந்த நேரத்தில் வந்து இருக்கா, யார் கூட வந்தா.?” எனக் கேட்டுக் கொண்டு இருக்க, அசோக், ஜனனி நுழைந்தனர்.
“மாமா! சுந்தர் கொண்டு வந்து விட்டுப் போறார்” என்றான் அசோக்.
“ஏய்! என்னடி ஆச்சு.? நீ மட்டும் அதும் பொட்டியோட வந்து இருக்க…” எனக் கத்த ஆரம்பித்தார் பைரவி.
“அக்கா! கத்தாத…”
“என்னடா கத்தாத.? இந்த நேரத்துல கட்டிக் கொடுத்தப் பொண்ணு வீட்டுக்கு வந்தா கேக்க மாட்டாங்களா.?” என எகிறினார் வீரனார்.
“அப்பா! இந்த வீடு எனக்கு இருக்குனு நம்பி வந்துட்டேன், இப்ப இருக்கவா போகவா.?” எனக் கேட்டாள் மீரா.
“என்ன மாமி நீங்களே இப்டி பேசுறீங்க, அப்ப நான் அந்த வீட்டு ஆள் இல்லையா.?”
“அய்யோ மீரா! நீ அந்த வீட்டு ஆள் தான், ஆனா உன் புருசனுக்குப் புடிக்கலைனா நீ அமைதியா தான் இருக்கனும், இப்ப நீ நியாயம் கேக்க போய், எங்க வந்து உட்காந்து இருக்க பாரு…” எனப் புரிய வைத்தாள் ஜனனி.
பைரவி”ஜனனி! என்ன நடந்துச்சு.? புரியுற மாதிரி சொல்லு…” என்றார்.
அசோக், சுந்தர் மூலம் அறிந்ததைக் கூறினான்.
பெண் தன் பேச்சுக் கேட்காமல் மணமேடையில் தாலி கட்டிக் கொண்டதால் உண்டான கோபம் எல்லாம் மறந்த வீரனார்”எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா, அந்த பய என் பொண்ணு மேல கை வச்சு இருப்பான், அதுவும் இந்த ராத்திரியில் ஒரு பொண்ணை வீட்டை விட்டு அனுப்புறதை வேடிக்கைப் பாத்து இருப்பான் அந்த விருமா… இப்பவே போய் அவனுங்கள என்ன செய்றேனு பாரு, எங்க அந்த சின்னப்பய கொண்டு வந்து விட்டுட்டு ஓடிட்டானா.?” எனக் குதித்தார் வீரனார்.
அப்பாவின் சத்தம் கேட்டு, தன் அறையில் இருந்து ஓடிவந்த சேரா, அக்காவைப் பார்த்துவிட்டு”அக்கா! எப்ப வந்த.? மாமா வரலையா.?” என ஆசையாக கேட்டான்.
“மாமாவ அவன், பொல்லாத மாமா, உன் அக்காவ வீட்டை விட்டு அனுப்பி இருக்கான், மாமானு கொஞ்சுற…” என மகனைத் திட்டினார்.
ஜனனி மெல்ல மீராவிடம்”அறிவு கெட்டவளே! என்ன நடந்து இருந்தாலும் நீ அந்த வீட்டுலயே இருந்து இருக்கனும், இங்க வந்து பிரச்சனையை பெருசாக்கிட்ட, உன் அப்பா சும்மாவே ஆடுவார், இப்ப நல்ல வாய்ப்பு கெடைச்சுட்டு காலில் சலங்கைக் கட்டி ஆடப் போறார்” என உண்மையை உரைத்தாள்.
பைரவியும்”ஏன்டி! இப்டி உன் வாழ்க்கையை யாருக்காகவோ அடமானம் வச்சுட்டு வந்து இருக்க” எனப் புலம்பினார்.
வீரனார் இன்னும் ஏததோ கூறி விருமா, சௌந்தர், சுந்தர், பிரேமா எனத் திட்டிக் கொண்டு இருந்தார்.
“அசோக்! வா போய் என்னனு கேட்டு வரலாம்” என்றார்.
“மாமா! பொறுமையா இருங்க”
“இல்லல்ல! என் பொண்ணுக்கு யாரும் இல்லனு நெனச்சுட்டானுங்களா.? நான் இருக்கேன்… எப்டி அவளை அடிக்கலாம், நானே வாழ்க்கையில ஒரு தடவை தான் அடிச்சேன் அதும் இத்தன வருசம் கழிச்சு, ஆனா கட்டிக்கிட்டுப் போய் ரெண்டே மாசத்துல மேல கைவைச்சு வெளியில் அனுப்பிட்டான், அவனை…” என எகிறினார்.
“அது எப்டி நான் சும்மா இருப்பேன், நீ என் பொண்ணு… உனக்காக யாருமில்லைனு நெனச்சாங்களா.?” எனக் குதித்தவரின் முன்னே சென்ற மீரா, “அப்பா! என்னைய எதுக்கு வந்தனு கேக்காம, எனக்காக நீங்க இருக்கீங்கனு சொன்னதே எனக்கு சந்தோஷமா இருக்கு, தயவு செஞ்சு இந்த விசயத்துல நான் நிம்மதியா இருக்கனும் உண்மையிலே நீங்க ஆசைப்பட்டா கொஞ்சம் அமைதியா போய் தூங்குங்க, இதுக்கு மேல பேசாதீங்க” எனக் கை எடுத்து கும்மிட்டு அசதியாகி வேண்டினாள்.
அசோக்”மாமா! அவளே நொந்துப் போய் வந்து இருக்கா, போய் ரெஸ்ட் எடுக்கட்டும், விடிஞ்சு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.” என்க, வீரனார் தலையைக் குலுக்கிவிட்டு, “அவனுங்களுக்கு பாடம் கத்து தரேன்” என அறைக்குள் புகுந்தார்.
அசோக்”அக்கா! நீயும் போய் படு” என்றார்.
பைரவி”என்னடா பேசிட்டு இருக்க.? இப்டி ராத்திரியில் வந்து தலையில் கல்லை தூக்கிப் போட்டு, போய் தூங்க சொன்னா எப்டி தூக்கம் வரும்.” எனப் புலம்பினார்.
“அத்தாச்சி! இப்ப பேசி என்ன ஆகப்போது, போங்க காலையில பாத்துப்போம்.” என்றாள் ஜனனி.
மீரா அறைக்குள் சென்றுக் கதவைச் சாத்திக் கொண்டாள்.
பின்னாடியே சென்ற ஜனனி கதவைத் தட்ட, சில நிமிடங்களில் கதவைத் திறந்த மீரா”மாமி! நான் ஒன்னும் கோழை இல்லை, பயப்புடாம போய் தூங்குங்க” எனக் கதவைச் சாத்தினாள்.
அதுவரை சுற்றிலும் நடந்தவை யாவும் ஏதோ ஒரு மந்திரம் போல் தோன்றியது, மனமோ நிலையான இடத்தை தேடி அமைதியடைய, ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டாள்.
தான் பிறந்த வீட்டில் இருக்கிறோம், புகுந்த வீட்டில் இல்லை, முக்கியமாக சௌந்தரைப் பிரிந்து வந்து விட்டோம் என மனம் நினைவுப்படுத்தியது.
தோளில் கிடந்த ஷாலை எடுத்து வீசியவள், கட்டிலின் மெத்தையில் பொத்தென்று குப்புற விழுந்தாள்.
கண்களில் உருவாகிய நீர் அவளின் பேச்சைக் கேட்காமலே வழிந்தது.
தேம்பி தேம்பி அழுதாள், எதற்கு அழுகை வருகிறது என்று புரியவில்லை, அவ்வளவு தைரியமாக பேசியவள் எதற்காக அழுக வேண்டும்.? அது அவளுக்கே தெரியாத ஒன்று.
சௌந்தர் நினைவு வர, அவன் அடித்த அடியும் கூடவே நினைவில் ஏறியது.
அவன் அடித்த கன்னத்தைத் தடவினாள்…
*
சௌந்தர் மனம் கோபத்தில் மட்டும் சுழன்றது.
இன்று குடும்பம் சுக்கு நூறாக சிதறிவிட்டதே என்ற உணர்வு கோபத்தை தர, அதை அமைதிப்படுத்த வீட்டு வாசலில் நடைப்பயிற்சியில் இருந்தான்.
அது முடிந்து அவன் அறைக்குள் நுழைய, அவன் அனுமதியின்றி உணர்வுகளாக வாசம் வீசினாள் மீரா.
அறை முழுவதும் அவளின்றி அவளின் வாசம் பரவிக் கிடந்தது.
சௌந்தருக்கோ அந்த வாசம் தாங்க முடியாதளவு மூச்சை முட்டியது. கட்டிலை நோக்கிட அவளின் புத்தகங்கள் எதுவுமில்லை.
எப்பொழுதும் அங்கு மீராவின் புத்தகங்கள் தான் அவள் பக்கம் குவிந்துக் கிடக்கும். ஏதோ தோன்ற திரும்பி டேபிளைக் கவனித்தான். அங்கும் இல்லை…
உடனே கப்போர்ட் சென்று திறந்துப் பார்க்க, அவளின் உடைகள் அப்படியே இருந்தது.
‘ஓ! புக்ஸ் மட்டும் எடுத்துட்டுப் போய் இருக்கா’ என எண்ணியவன், கட்டிலில் வந்து சாய்ந்திட, அந்த நேரத்தில் கண்களை மூடினான்.
அந்தப் படுக்கையில் தனியாக படுத்தவன் தான், ஆனால் குறுகிய நாள்களாக தன் அணைப்பில் மட்டுமே அவளை அடக்கி தூங்கப் பழகியவன் கை தானாக மீராவின் படுக்கையைத் தடவியது.
அழுகையின் ஊடே கண்களை மூடி மீராவிற்கு தன் மேல் விழும் கை, தன்னவன் என்றதும் அவன் மார்பில் ஏறி படுக்கப் போனவள் அங்கு மார்பு தாங்கிய உடல் இல்லாததால் சட்டென்றுக் கண்களை முழித்தாள்.
கையில் தென்படாத மனைவியை தேடி திரும்பிக் கண்களைத் திறந்தான்.
இருவருமே ஏமாந்து தங்கள் துணையை தேடியவாறு ஏங்கினர்.
ஆனால் இருவருக்குமே கோபமும் சமமாக இருக்க, மெத்தையை ஓங்கி அடித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டனர்.
*
அடுத்த நாள் காலையில் எழுந்த மீரா, அவசரமாக குளித்து முடித்துக் கிளம்பினாள்.
மீரா எழுந்ததுமே கதவைத் திறந்து வைத்து தான் சென்றிருந்தாள்.
ஜனனி காலையிலே அவளைத் தேடி வந்திட அவள் குளிக்கும் சத்தம் கேட்டு திரும்பிச் சென்று விட்டாள்.
அசோக்விற்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு, வீரனார் வர அவருக்கும் பைரவி எடுத்து வந்து தந்தார்.
“ஜனனி! எழுந்திரிச்சுட்டளா.?”
“பாத் ரூம்ல இருக்கா அத்தாச்சி, குளிக்குறா போல”
“சரி! நீ காஃபி குடி, அவ வரட்டும்” என்றார் பைரவி.
அனைவரும் காஃபி குடிக்க, தலையில் துண்டுக் கட்டிக் கொண்டு வெளியில் வந்தாள் மீரா.
பைரவி”என்னடா குளிக்குற டைமா” என காஃபியை நீட்டியப்படி மெதுவாக கேட்டார்.
“ம்ம்ம்! ஆமாம்மா” என்றாள் மகள்.
மீராவின் மாதாந்திர நாள்கள் தான், ஆனால் அதிகமான அழுத்தம், மனச்சோர்வு, அழுகையின் காரணமாக சில நாள்கள் முன்பே வந்துவிட்டது.
“அம்மா! எனக்கு மதியத்துக்கு தயிர் சாதம் வச்சுடுங்க, நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் காலேஜ் கிளம்பிடுவேன்” என்றாள்.
மற்றவர்கள் அவளைத் திரும்பி பார்க்க, அசோக்”மீரா! நேத்து திடீருனு நைட் டைம் வந்த, இப்ப எதுவுமே நடக்காத மாதிரி இன்னைக்கு காலேஜ் கெளம்புற, அடுத்து என்னனு பேச வேணாமா” என்றான்.
“என்ன மாமா பேசனும்.? சரி! பேசுங்க, அதுக்கும், நான் காலேஜ் போறதுக்கும் என்ன சம்பந்தம்.?”
“என்னடி உளரிட்டு இருக்க.? புருசன் வீட்டுல இருந்து கோச்சுட்டு வந்த, இப்ப அடுத்து என்னனு பேசனும் அதுக்குள்ள காலேஜ் போறேனு நிக்கிற… நாளைக்கு தாலி பிரிச்சுப் போடுற விசேஷம் வச்சு இருக்கோம், அது நினைவு இருக்கா.?” எனக் கேட்டார் பைரவி.
“ஏன்மா! நீங்க எல்லாம் புரிஞ்சு தான் பேசுறீங்களா.? அந்த வீட்டுல நான் மருமகளாவே இல்லனு வந்துட்டேன், நீங்க என்னனா தாலி மாத்துறத பத்தி பேசுறீங்க” என இதழ்களைச் சுளித்தாள்.
“என்ன மீரா இப்டி பேசுற.? அப்டி எல்லாம் நீ வந்துட முடியாது” என்றாள் ஜனனி.
வீரனார்”ஏம்மா! நீ கெளம்பு, அந்த வீட்டுல இருக்கவனுங்க கிட்ட நல்லா நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டு உன்னைய அங்க விட்டு வரேன்” என்றார்.
“நீங்க இருங்க மாமா, நானும் ஜனனியும் போய் விட்டுட்டு வரோம்” என்றான் அசோக்.
“ஏன்டா! நான் வந்தா என்ன.? நான் வந்தா தான் அந்த விருமாண்டிய வெளுத்து வாங்கிட்டு வருவேன், சுத்த துப்புக்கெட்டவன்… பேச்சப்பாரு அந்த ஐயனாரு சாமி மாதிரி பேசுவான், புள்ளையா பெத்து வச்சு இருக்கான், காளிப்பயல பெத்து வச்சு இருக்கான்… என்ன செய்றது நான் அன்னைக்கே சொன்னேன் அவன் வேணானு இந்தப் பொண்ணு கேக்காம கழுத்தை நீட்டுனுச்சு, இந்தா கட்டுன தாலி கயிறு மாத்துறதுக்குள்ள வீட்டுக்கு அடிச்சு அனுப்பிட்டானுங்க” எனத் திட்டினார்.
“நீங்கக் கொஞ்சம் பொறுமையா இருங்க, இவ வாழ்க்கையை சரிப் பண்ண நாங்க யோசிக்கிறோம் நீங்கப் போனா மொத்தமா பிரிச்சி கூட்டியாந்துடுவீங்க, தம்பியும் ஜனனியும் போகட்டும்.” என்றார் பைரவி.
“அதுக்காக அவன் காலுல விழுந்து பொண்ணை விட்டு வரச்சொல்றீயா.?” என வீரனார் எகிற,
“அய்யோ! எல்லாரும் நிறுத்துறீங்களா, இது என் வாழ்க்கை, எனக்கு என்ன வேணுமுனு நான் முடிவுப் பண்ணிக்கிறேன். போதும்! நீங்க எல்லாம் எனக்கு செஞ்சது…” என்றாள் மீரா.
“என்ன பேசுற நீ.? உனக்கு என்ன தெரியும்.? பெத்தவங்க இருக்கோம்… நீ வாயை மூடிட்டுப் போய் கெளம்பி வா, நானும் வரேன்” என்றார் வீரனார்.
“ஆமாப்பா! எனக்கு ஓரளவு தெரியும், அப்டியே தெரியலைனா பட்டுத் தெரிஞ்சுகிறேன். ஆனா! நீங்க மட்டும் என் வாழ்க்கையில் வராதீங்க…” என்றுக் கத்தினாள்.
“என்ன வாய் ஓவராச்சு, அந்த வீட்டுப் பேச்சா இது…”
“ஆமாப்பா! அந்த வீட்டுக்குப் போனதுல நடந்த பல நல்ல விசயங்களில் ஒன்னு, நான் மனசுல இருப்பதை வெளிப்படையாக பேச கத்துக்கிட்டது தான்.
கல்யாணதுக்கு முன்னாடியே நான் இப்டி பேசி இருந்தா நல்லா இருந்து இருக்கும், ஆனா அப்ப பேசி இருந்தா அந்த சூழ்நிலையில என் மனசுல எவன் இருக்கானு கேட்டு டார்ச்சர் பண்ணி இருப்பீங்க.
ஏன்பா! ஒருத்தனை விரும்பி ஓடினவ நெனச்சது கெடச்சுட்டுனு எங்கயோ போய் சந்தோஷமா வாழுறா, ஆனா எந்தப் பாவமும் பண்ணாத நானு உங்க விருப்பத்துக்கு தலை ஆட்டி, நீங்க ஆடுன பக்கம் எல்லாம் திரும்பி பாத்து இந்த நெலமையில இருக்கேன்.
நான் பாட்டுக்கும் தானே படிச்சுட்டு இருந்தேன்…
என் புருசன் நானா பாத்த மாப்பிள்ளையா அப்பா, நீங்க பாத்து மணமேடையில போய் உட்கார வச்ச மாப்பிள்ளை. உங்க வீம்புக்குச் சண்டைப் போட்டு கல்யாணம் வேணாம் வானு கூப்புட்டீங்க ஆனா நீங்கப் பாத்த மாப்பிள்ளை காளிப்பய இல்லப்பா புத்திசாலி, தனியா கூப்புட்டுப் போய் படிக்க வைக்கிறேன் தாலி கட்டிக்கோனு சொன்னார், நானும் கட்டிக்கிட்டேன். அப்பவாச்சும் கொஞ்சம் புத்தி வந்துச்சே எனக்கு.
ஏனா! எப்டியும் உங்கக் கூட வந்தா இன்னொரு காளிப்பயலை பாக்கப் போறீங்கனு தான் ஒத்துக்கிட்டு ஒரு வாய்ப்பா பயன்படுத்தினேன். சொன்னபடியே அந்த மனுசன் படிக்க அனுப்பிட்டார். அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் தான்பா.
அப்பா! என்னைய படிக்க வச்சது நீங்க, இந்தளவு வரை நான் முன்னேறி வந்தது உங்களால தான், நீங்க ஒன்னும் என்னைய சாதரண பள்ளிக்கூடத்தில் சேக்கலையே, எல்லாமே கான்வென்ட் ஸ்கூல், நம்பர் ஒன் காலேஜ்னு சேத்து இருக்கீங்க, என்னைய படிக்க வைக்க கூடாதுனு உங்க எண்ணம் இல்ல, அவ போயிட்டாள்னு கோபம், சமூகத்துல உங்க மரியாதையைக் காப்பாத்திக்க ஓடிப்போனவ கதையை மறக்க என் வாழ்க்கைக் கதையை ஆரம்பிச்சு வச்சீங்க அவ்ளோ தானே…
நீங்க ஆரம்பிச்சு வச்சுட்டீங்க, இனி நான் பாத்துகிறேன்.
இப்பவும் என் மனசுல படிப்பு இருக்கு, அந்தக் குடும்பத்து மேல மரியாதையும் பாசமும் இருக்கு, அதையும் மீறி கோபம் இருக்கு. எப்பவுமே அவர் தான் என் புருசன்.
எனக்காக போய் அந்த வீட்டுல சண்டைப் போடுற ஐடியா எல்லாம் வச்சுகாதீங்க, அது என் குடும்பம். உங்களுக்கு நான் மகளா இங்க இருக்கேன் அதுப் புடிக்கலைனா சொல்லுங்க நான் போய் பார்ட் டைம் வேலைப் பாத்துட்டு படிச்சிகிறேன்” என்றாள் முடிவாக.
“என்னடி பேசுற.? எனக்கு ஒன்னுமே புரியல” என அழுதார் பைரவி.
“சரி மீரா! சௌந்தர் தம்பி கூட வாழுற ஆசை இருக்கா இல்லையா அதை சொல்லு” எனக் கேட்டாள் ஜனனி.
“தப்பு அவரு மேல மாமி, எனக்கு அந்த எண்ணம் இல்ல… இப்ப நீங்க கேட்டா வெறுப்பு மட்டும் தான் இருக்கு… ஆசை எல்லாம் இல்ல” என்றாள் கோபமாக…
பிறந்தது முதல் மீரா அடம் பிடித்தது இல்லை, அடம்பிடிக்க விட்டதில்லை அவர்.
இப்பொழுது பேசும் தன் பெண்ணைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
“மீரா! இது உன் வீடு, இங்க உன்னைய யாரும் வெளியில போக சொல்ல மாட்டோம், இப்ப தான் எனக்கும் புரியுது… உன் வாழ்க்கையை நானே அவசரப்பட்டு கெடுத்துட்டேன். ஒருத்திப் போயிட்டாளேனு கோபம் தான் இருந்துச்சு… ஆனா இப்ப நீ எடுத்த முடிவு தான் நல்லது.
நீ போய் அவனுங்க காலுல விழ வேணாம், என் பொண்ணு தேவைனா அவனுங்க வரட்டும்… பைரவி! போ புள்ளைக்கு புடிச்சத செஞ்சி காலேஜ்க்கு எடுத்து வை, நீ போய் கெளம்புடா நானே உன்னைய காலேஜ்ல கொண்டுப் போய் விடுறேன்…” என அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ஜனனி”மீரா! நீ பேறது எல்லாம் சரி தான், ஆனா சௌந்தர் தம்பி நல்ல பையன்… நீ பொறுமையா இரு, சித்தப்பா இப்பவும் உன் மாமனார் குடும்பத்த உன் கிட்ட கெஞ்ச வைக்க தான் நெனக்கிறார்… அவரு எப்ப எப்டி மாறுவாருனு தெரியாது. அவர் பேச்சைக் கேட்டு உன் வீட்டு ஆளுங்களை எதித்துடாத…” என்றாள்.
“மாமி! நான் எல்லாத்தையும் மறந்துடுறேன், என்னைய நீங்க எல்லாம் சமாதானம் செய்றேனு அந்த வீட்டைப் பத்தி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ்… நான் படிக்கனும்… அது தான் இப்ப எனக்கு வேணும்…” என விலகினாள்.
“என்ன ஜனனி இது.?”
“அத்தாச்சி! உடனே எதுவும் சரியாகாது… நம்ம அவ மாமியார் கிட்ட பேசுவோம், ஏங்க! நீங்க போய் சௌந்தர் தம்பி கிட்ட பேசிப் பாருங்க” என்றாள்.
“இல்ல ஜனனி! கொஞ்சம் கோபம் குறையட்டும்… வெயிட் பண்ணுவோம்”
அந்த நேரம் அவ்வழியே ஆஃபிஸ் சென்ற சௌந்தர், தந்தையுடன் காரில் வந்து இருந்து இறங்கும் மனைவியை நோக்கியவாறு கடந்தான்.
ஆனால் மீரா அவனை கவனிக்கவில்லை.
சௌந்தர் மனம் கோபத்தின் உச்சிற்கே சென்றது, ‘என் வீட்டையே ரெண்டாக்கிட்டு அவ மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி அப்பாவோட காலேஜ் வந்து இருக்கா, ஆனா வீட்டுல…’ என வீட்டைப் பற்றி யோசித்தான்.