சௌந்தர் கல்லூரியின் வாயிலில் காத்திருக்க, மீரா வகுப்புகள் முடிந்து வெளியேறினாள்.
நண்பர்களுடன் பேசிக் கொண்டே வந்தவள், கணவனின் கார் நிற்கின்றதா என நோட்டமிட்டாள்.
அவளுக்கு அதிக சிரமம் வைக்காமல் கண் படும் தூரத்தில் தான் சௌந்தர் கால் நின்றுக் கொண்டு இருந்தது.
அவனை நோக்கி வந்தவள், காரின் முன் பக்கம் ஏறிட, சௌந்தர் காரைக் கிளப்பினான்.
“தேங்க்ஸ் மீரா!”
“உங்க தேங்க்ஸ் எல்லாம் ஒன்னும் வேணாம், அதை நான் எதிர்பார்க்கவும் இல்ல, நேரா என் அப்பா வீட்டுக்குப் போங்க” என்றாள்.
“என்னதுக்கு அங்க.?” என்றான் அவள் பக்கம் திரும்பி…
“அங்க என் புக்ஸ் இருக்கு அதை எடுக்கனும், அப்புறம் அவங்க கிட்ட சொல்லிட்டு தான் உங்கக் கூட வரமுடியும்”
“என் கூட வரதுக்கு அவங்க கிட்ட எதுக்கு சொல்லனும், புக்ஸ் தானே புதுசு வாங்கித் தரேன் வா” என்றான் அசால்ட்டாக…
“ஹலோ! அவங்க என்னைய பெத்தவங்க, அவங்களுக்கு அப்புறம் தான் நீங்க எனக்கு… அதோட புதுசா புக்ஸ் வாங்க தேவையில்ல, அந்த புக்ஸ்ல தான் நோட்ஸ் எல்லாம் எடுத்து இருக்கேன்.”
“அப்பனா, நான் சம்பத் அனுப்பி வாங்கிட்டு வர சொல்றேன்” என்றான் மீண்டும்.
“என்ன விளையாடுறீங்களா.? அப்டி என்ன உங்களுக்கு வீம்பு, என் வீட்டுக்கு வரக் கூடாதுனு, நான் நேத்து அந்த நேரத்தில போனப்பவும் என் வீட்டுல சேத்துக்கிட்டு அரவணைச்சாங்க, அது யாருக்காக.? எனக்காக, நான் அவங்க பொண்ணுனு. அப்டியிருக்க இன்னைக்கு நீங்க வந்துக் கூப்புட்டதும் நான் சொல்ல கொள்ளாம வர முடியுமா?”
“இட்ஸ் ஓகே! கரெக்ட் தான், ஃபோன்ல சொல்லு!”
“இப்ப நீங்க என் வீட்டுக்கு வரமுடியுமா.? முடியாதா.? மொதல அதுக்கு பதில் சொல்லுங்க, அப்புறம் நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரதா, வேணாமானு முடிவுப் பண்ணிக்கிறேன்” என்றாள் அழுத்தமாக…
“என்ன மீரா, சமயம் பாத்து உன்னோட காரியங்கள சாதிக்குறீயா.?”
“அப்டி எல்லாம் எனக்கு தேவையில்ல, என் வீட்டுல போய் சொல்லாம நான் வரமுடியாதுனு உங்களுக்கு தெளிவுப்படுத்துறேன்”
“ஆல்ரைட்! நான் உன்னைய வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வெளியில வெயிட் பண்றேன், நீ போய் சொல்லிட்டு புக்ஸ் எடுத்துட்டு வா”
“ஓ, ஆல்ரைட்! நீங்கச் சொல்ற மாதிரியே செய்றேன், ஆனா நான் உள்ள போய் இப்டி அப்டி… மிஸ்டர் என் புருசன் அழைக்க வந்து இருக்கார்னு சொல்லி, நான் போறேன் சொல்லுவேன், என் அப்பா அவரு உள்ள வந்து கூப்புட்டு போனா தான் நீ வெளியில் போகனும் சொன்னா நான் வீட்டுக்குள்ளயே இருந்துடுவேன். மேக்சிமம் பதினைந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, அப்புறமும் நான் வரலனா யூ கோ” என்றாள் அவளும்.
சௌந்தர் கடுப்புடன் மீராவை நோக்கினான். ஆனால் இன்னும் அவன் வீட்டு வாசற்படியை மிதிக்கவில்லை.
“அப்பா! உங்களுக்குப் புடிக்கலைனாலும் அவரு தான் உங்க மாப்புள்ள… அவரு தான் என் புருசன்…” என்றாள் மீரா.
“உன் மேல கை வச்சு, உன்னைய அடிச்சு ராத்திரியில் வெளியில் அனுப்பினவன்டா அவன்”
“நான் அவர் கூட இப்ப காலேஜில் இருந்து வந்தேன், அவரு என்னைய கூட்டிட்டுப் போக வந்து இருக்கார். உங்கக் கிட்ட சொல்லிட்டு போக வந்தோம்பா, புரிஞ்சுகோங்க”
“அவன் காலேஜில உன்னைய பாத்து ஏதாச்சும் சொல்லி ஏமாத்தி வந்துக் கூப்புடுவான், நீ உடனே மண்டையை ஆட்டுவீயா மீரா, அப்பனும், மகனும் வந்து மன்னிப்புக் கேட்டு அழைச்சுட்டுப் போவானுங்க, நீ இரு” என்றார் வீரனார்.
“அப்பா! என்னப்பா ஆச்சு உங்களுக்கு.?” எனப் பாவமாக கேட்டாள் மீரா.
“மீரா! நீ இப்ப கெளம்புறீயா, இல்லையா.?” எனக் கேட்டான் சௌந்தர் வீட்டிற்கு வெளியில் நின்றவாறு…
“டேய்!” என ஆரம்பித்த வீரனாரிடம், “அப்பா! அவரு என் புருசன்… மொதல இப்டி மரியாதை இல்லாம பேசாதீங்க, சொல்லிட்டேன்… நீங்க உள்ள வாங்க” என வேகமாக சென்ற மீரா, அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்தாள்.
அதற்குள் வேகமாக வந்த ஜனனி, கையில் ஆரத்தியைக் கொண்டு இருவரையும் ஒன்றாக நிற்க வைத்துத் திருஷ்டி சுற்றினாள்.
அசோக், வீரனார் அருகே சென்று”மாமா! மீரா வாழ்க்கையில குழப்பத்தை உங்க வீம்புக்காக ஏற்படுத்தாதீங்க, அவரே வீடுத் தேடி வந்து இருக்கார்.” என்றான்.
பைரவியும் அதையே கூற, “அவனுங்க பொண்ணை அடிச்சு வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவாங்க, என்ன ஏதுனு கேக்கக் கூடாதா.?” என முறைத்தார் அவர்.
“மீராவே அவரை கூட்டிட்டு வந்து இருக்கா, போக ஆச இல்லாமயா கூட்டி வந்தா, நீங்கப் பேசாம இருங்க” என்ற மனைவியை முறைத்த கணவர்,
“இது என்ன பச்சப்புள்ள சண்டையா.? நேத்து அடிச்சுகிட்டு இன்னைக்கு சேந்துக்க…” எனக் கேட்டார் வீரனார்.
“அப்டியே இருக்கட்டும், அவங்க ஒன்னா சந்தோஷமா வாழனும் அவ்ளோதான் அப்படியே பச்சப்புள்ள சண்டையாவே முடியட்டுமே, நீங்க அவரு போற வரைக்கும் அமைதியா இருங்க, இல்லைனா நான் பொல்லாதவளா மாறிடுவேன்” என பைரவி மிரட்டினார்.
“உன் அக்கா மாப்புள்ள பாசத்துல துள்ளுறா.” என அசோக்விடம் கூறி முகத்தைச் சுளித்தார் வீரனார்.
வீரனாரை தவிர மற்ற அனைவரும் வாங்க என வரவேற்க, சௌந்தர் மீராவிற்காக மட்டுமே உள்ளே அடி எடுத்து வைத்தான்.
பதினைந்து நிமிடங்கள் நேரம் கொடுத்து இருந்தாலும், மீரா வராமல் இருந்து விடுவாளோ எனப் பயந்த சௌந்தர் வீட்டின் வாயிலிற்கு தயங்கிப் படியே வந்து நின்றான்.
அது மீராவிற்காக, மீராவிற்காக மட்டுமே எனலாம்…
இந்த வீட்டில் சௌந்தர் மாப்பிள்ளை உபசரிப்பை முதன் முறையாக ஏற்கின்றான்.
வீரனார் ஒரு பக்கம் அமைதியாக அமர்ந்திருக்க, மற்றவர்கள் விழுந்து கவனித்தனர்.
மீரா, அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
ஜனனி வேகமாக கொழுக்கட்டையை தட்டில் வைத்து எடுத்து வந்து சௌந்தரிடம் நீட்டி”எடுத்துச் சாப்புடுங்க தம்பி, மீராவுக்குப் புடிக்குமேனு செஞ்சோம் நல்ல வேளை நீங்களும் வந்துட்டீங்க” என்றாள்.
சௌந்தர் முதலில் தயங்கி உள்ளே வந்தாலும் இப்பொழுது கொஞ்சம் சாதரணமாக பேசினான்.
“பரவாயில்ல அக்கா! எனக்கு அவ்வளவா இது புடிக்காது… டேஸ்ட்க்கு ஒன்னு எடுத்துக்குறேன்…” என ஒன்றை எடுத்துக் கொண்டான்.
“வேற என்ன புடிக்கும் மாப்புள்ள.? சொன்னீங்கனா செய்ய முடிஞ்சதை இப்ப செஞ்சுடுறேன்.” என்றார் பைரவி.
“இல்ல…” என இழுத்தவன், “இல்லங்க அத்த! இப்ப எதுவும் வேணாம், இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுகிறேன்.”
“மாமா! நீங்கப் புடிச்சத சொல்லுங்க, நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றான் சேரா.
சௌந்தர் மனதில்’அடேய்! படுத்தாம உன் அக்காவ அனுப்பி வைடா நான் போறேன்’ என எண்ணியவன், ” நோ ப்ராப்ளம்! சேரா” என்றான்.
ஜனனி டீ போட்டு வர, அதை எடுத்துக் கொண்டவன், ‘இன்னும் என்ன பண்றா.?’ என மனதில் மனைவியைத் திட்டிக் கொண்டு இருந்தான்.
மீரா, அடுப்படிற்குள் நின்று கொழுக்கட்டையை ருசித்துக் கொண்டு இருந்தாள்.
சேராவும் அழைத்துச் செல்ல, “நீ போ! நான் கை கழுவிட்டு வரேன்” என அவனை அனுப்பியவன், என்ன தான் வீரனாரை தவிர அனைவரும் வரவேற்று மாப்பிள்ளை மரியாதைக் கொடுத்தாலும், ஏதோ கொஞ்ச நேரம் தப்பித்த உணர்வில் பொறுமையாக கை கழுவினான்.
அப்பொழுது தான் பக்கவாட்டில் இருந்த கிச்சனில் தன் பொண்டாட்டி வாயில் கொழுக்கட்டையை அமுக்கிக் கொண்டு இருந்ததைக் கவனித்தான்.
‘அடிப்பாவி!’ என எண்ணி அவளையே நோக்கினான்.
சாப்பிட்ட படியே மீரா”மாமி! நேத்து நீங்கச் சொன்னது சரி தான் போல, அப்பா எப்ப எப்டி மாறுவாருனு தெரியல, நேத்து என்ன சொன்னார் என்னைய கொண்ட அப்பவே விடுறேனு சொன்னார் தானே… இன்னைக்கு சௌந்தரே வந்துக் கூப்புடும் போது விட மாட்டேனு மல்லுக் கட்டுறார்…” எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள்.
“ஏய்! அது என்ன மாப்புள்ள பேர சொல்ற, மரியாதையா பேசுடி” என்றார் பைரவி.
“அட நீங்க சும்மா இருங்கம்மா” என அடுத்த கொழுக்கட்டையை எடுத்தாள்.
ஜனனி”ஏன் நீ கூட தான் நேத்து ஒன்னும் இன்னைக்கு ஒன்னும் பேசிட்டு திரியுற… அதுக்கு சித்தப்பாவே பரவாயில்ல போடி” என்றாள்.
“நான் என்ன மாமி பேசுறேன்…” என உண்பதை நிறுத்தாமல் கேட்டாள்.
“ம்ம்ம்! நேத்து நைட்டோட நைட்டா பொட்டியைத் தூக்கிட்டு வந்த, இப்ப என்னனா இந்தா ராத்தரி ஆகப்போற நேரத்துல மறுபடியும் பொட்டித் தூக்கிட்டு கெளம்ப போற, என்னடி சண்டை இது அட்லீஸ்ட் ஒரு நாள் முழுசாச்சும் வேணாமா.?” என நக்கல் அடித்தாள்.
“இப்ப நான் போறது உங்களுக்கு எல்லாம் புடிக்கலையோ!” என அவளும் நக்கலாக கேட்டாள்.
“ஜனனி! நீ சும்மா இரு, மாப்புள்ள கூப்புட வந்ததும் எனக்கு நிம்மதியா போச்சு, காலையில சம்பந்தி அம்மாவும் சொன்னாங்க, மீராவ சீக்கிரம் கூப்புட்டு போறேனு… இவ்வளவு சீக்கிரமே நடந்துச்சுனு நான் கடவுளுக்கு நன்றிச் சொல்லிட்டு இருக்கேன்” என்றார் பைரவி.
“அட நீங்க வேற அத்தாச்சி! இது புதுசா கட்டிக்கிட்ட புது ஜோடி லவ்ஸ்… நேத்து சண்டையாம் இன்னைக்கு சமாதானமாம்… கல்யாணமாகி கொஞ்ச நாள் தானே ஆகுது அதான் சௌந்தர் தம்பி அடுத்த நாளே உன்னைய தேடி வந்துட்டு, இது புதுஜோடிகளுக்கே உள்ள மோகமந்திரம் மீரா, பிரியவே மனசு வராது. இதுவே அடுத்த வருசம் சும்மா அம்மா வீட்டுக்கு வா, இன்னும் சேத்து ரெண்டு நாள் தங்கிட்டு வரச்சொல்லுவாங்க இந்த புருசன்மார்கள்…” என இழுத்தாள் ஜனனி.
“மாமி! ஏதாச்சும் உளராம போங்க, நான் ஒன்னும் சமாதானம் ஆகிப் போகல… ஆனா போறேன்…” எனத் தண்ணீரைக் குடித்தாள்.
பைரவி பதற, ஜனனி”நீங்கக் கண்டுக்காதீங்க அத்தாச்சி, அது எல்லாம் அவங்க நல்லா தான் இருக்காங்க…” என்றாள் மெல்ல…
அனைத்தையும் கேட்ட சௌந்தர் சிரித்தப்படி ஹாலிற்கு நகர்ந்தான்.
அவன் ரெஸ்ட் ரூம் சென்று வருகிறான் எனக் காத்திருந்த அசோக், மீண்டும் பேசத் தொடங்கினான்.
பைரவி வந்து”மாப்புள்ள! மொத மொத வந்து இருக்கீங்க, நைட் சாப்பாடு பண்றேன் சாப்புட்டு தான் போகனும், அசோக்…” எனக் கண்ணைக் காட்டினார், சாமான் வாங்க வேண்டும் என்று…
“இல்ல! நான் உடனே கெளம்பனும், இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்றவன், சேராவிடம்”போய் உன் அக்காவ கொழுக்கட்டை தின்னது போதும்னு சீக்கிரம் வரச்சொல்லு” என்றான் மெல்ல…
சேராவும் கிச்சனுக்குள் சென்று அப்படியே மீராவிடம் கூற, ஜனனி சிரிக்க மீரா முறைத்தாள்.
“போடா வரேன்!” என இதழ்களைச் சுளித்தப்படி வெளியே சென்றாள்.
ஜனனி ஒரு பாக்ஸில் கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து கவரில் அடக்கி, வெளியில் வந்த மீரா கையில் திணித்தாள்.
“மாமியார், மாமனார், சுந்தருக்கு கொண்ட குடு மீரா, இனிமே இத எல்லாம் சகஜம் தான்” என்றாள் ஜனனி.
பைரவி சில பழங்களை எடுத்துப் பையில் போட்டு நீட்டினார்.
“ஏன்ம்மா இது எல்லாம்.?”
“கொண்டுப் போ! பொறந்த வீட்டுக்கு வந்துட்டு சும்மா போக கூடாது.”
“ம்ம்ம்! சேரா, என் பெட்டி எடுத்து காருல வை, இந்தா இதையும் வைடா” எனத் தம்பியிடம் நீட்டினாள்.
“நீ வந்ததே ஒரு நாள் இதுல பெட்டி வேறயாக்கா…” என அலுத்துக் கொண்டுச் சென்றான் அவன்.
“மீராக்கா! எப்ப வருவ.?” என ஆதி அவளிடம் தாவிட,
“ம்ம்ம்! அக்காக்கு லீவ் விடும் போது வரேன்” என அவனைக் கொஞ்சினாள்.
பைரவி அவசரமாக ஓடிப்போய் மகளுக்காக மல்லிகைப் பூவை எடுத்து வந்தார்.
“மீரா! இந்தா இத வச்சுக்க” என அவள் திரும்பும் முன்னே தலையில் வைத்துவிட்டார்.
மல்லிகைப் பூ என்றதும் சௌந்தர், மீரா இருவரின் பார்வையும் ஒரே பொழுதில் சந்தித்து மீண்டது.
“அட ஆமாங்க!” என அறைக்குள் ஓடியவர், பிரிக்காத புடவை, பிளவுஸ் பிட் எடுத்துக் கொண்டு, வீரனார் பக்கம் கட்டாமல் இருக்கும் வேஷ்டி, சட்டையை எடுத்து, தாம்பாளத்தில் வைத்து, குங்குமம், பூ, பழம், வெற்றிலை அதன் மேல் இட்டு ஹாலுக்கு கொண்டு சென்றார்.
“என்னம்மா இது எல்லாம்.?”
“கல்யாணம் ஆகி மொத தடவை வரும் போது விருந்து வச்சு தரனும், இப்ப திடீருனு வந்ததால இத வாங்கிக்கோங்க, அடுத்த தடவை நல்ல விருந்தா வச்சு காஸ்ட்லியான புடவை, மாப்புள்ளைக்கு பேண்ட் சர்ட் எடுத்து வைக்கிறோம்டா” என இருவரையும் சாமி அறை முன்னே வரச்சொன்னார்.
சௌந்தர் அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்க்க, அசோக் அழைக்கவும் அங்கு சென்றான்.
பைரவி”ஏங்க! இங்க வாங்க” எனக் கணவனை அழைத்தார்.
இருவரும் சேர்ந்து நின்று புதுமண தம்பதிக்கு கொடுக்க, மீரா அவர்கள் காலில் விழப் போக, சௌந்தர் அப்படியே நின்றான், மீரா அவன் கையை சேர்த்து இழுத்து பெற்றவர்கள் காலில் விழச் செய்ய, அவளை முறைத்தான்.
ஆயிரமாகினும் சண்டை ஒரு பக்கட்டு இருக்க, கணவனிடம் கண்களால் கெஞ்சிட, ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவன் அரைகுறையாக காலில் விழுந்தான்.
இருவரும் தாம்பளத்தை வாங்கி கொண்டனர், வீரனார் இருவருக்கும் குங்குமம், திருநீறு வைத்திட சௌந்தர் அவர் வைக்கப் போக விலகினான்.
மீரா அவனை விலகாமல் பிடித்திருக்க, வீரனார் பட்டும் படாமலும் வைத்துவிட்டார்.
மாமனார், மருமகன் முறைப்பு கொஞ்சம் கூட குறைவில்லாமல் சென்றது.
மீரா, தாயைக் கட்டிப்பிடித்து விடைப்பெறவும், சௌந்தருக்கோ’ஒரு நாள் தானே ஆகுது’ என்பது போல் நோக்கினான்.
வீரனாரிடம் சென்ற மீரா, “அப்பா! போயிட்டு வரேன்” என்றாள்
“போயிட்டு வாம்மா! உனக்காக நீ ஆசைப்படுறனு தான் அனுப்புறேன், இல்லனா இங்கயே இருனு சொல்லிடுவேன். யாராச்சும் ஏதாவது பேசினாலோ, இல்ல இன்னொரு தடவ கை நீட்டினாலோ, ஒரு ஃபோன் போடு போதும், வந்து உண்டு இல்லைனு பண்ணிடுறேன்” என்றார் தந்தை.
மூத்த மகள் ஓடிப்போன பிறகு இப்பொழுது தான் மீராவிடமும் தான் பழைய தந்தையாக பேசுகிறோம் என உணர்ந்த வீரனார், மகள் தலையை தடவியவாறு முதுகில் தட்டி, “நான் இருக்கேன்டா! போயிட்டு வா” என்றார்.
அன்று மணமேடையில் செய்யாத அனைத்தையும் இன்று முறையாக செய்தார் வீரனார்.
சௌந்தர் காரை நோக்கி நடக்க, மீராவும் பின்னாடியே நடந்தாள்.
வாசலில் கிடந்த பலாபழத்தை கண்ட வீரனார், அங்கு நின்ற வேலையாளிடம் “அதை தூக்கி கார் டிக்கியில் போடு” என்றார்.
சௌந்தர் மீராவை கண்டு முறைக்க, அவளோ”அண்ணா! இருங்க டிக்கியை தொறக்குறேன்” என சௌந்தர் கையில் இருந்த சாவியை வாங்கி கார் டிக்கியை திறந்து விட்டாள்.
அதை வைத்ததும் இருவரும் ஏறி அமர்ந்தனர்.
சௌந்தர் மற்றவர்களிடம் பொதுவாக தலை அசைத்தான்.
மீரா அனைவரிடமும் விடைப்பெற, சௌந்தர் நக்கலாக”இன்னும் புளி, மிளகாய், தேங்காய்… இப்டி எதையும் மூட்டைக் கட்ட வேண்டியது தானே” எனக் கிண்டல் செய்தான்.
அந்த கிண்டலுடன் கார் புறப்பட்டது, “ம்ம்ம்! அடுத்த தடவை சொல்லி வச்சுடுறேன்… உங்க மாப்புள்ளைக்கு புளி, தேங்காய், மிளகாய், மாங்காய் வேணுமானு…” என்றாள் அவளும்.
“இந்த வாய் மட்டும் இல்லனா, உன் பொழப்பு ஓடுறது கஷ்டம் தான் மீரா…”
“ஆமா! பெரிய கண்டுப்பிடிப்பு…”
“கண்டுப்புடிச்சுட்டேன், அந்த வாய்… போதுமா! கொழுக்கட்டைய அந்த போடு போட்டீயே.?”
“நீங்க எங்கப் பாத்தீங்க.?” எனப் புருவத்தைச் சுளித்தாள்.
“ம்ம்ம்! கை கழுவ வந்தேன், அப்படியே பாத்தாச்சு…”
“ஓ!” என்றவள்…
“அப்ப நாங்க பேசிட்டு இருந்தத கேட்டீங்களா.?”
“கொஞ்சமா!”
“ஒட்டுக் கேட்டீங்களா.?” என முறைத்தாள்.
“அவ்ளோ ஒன்னும் மெதுவா பேசல நீங்க, என் காதுல தானா விழுந்துச்சு…”