“ஓகே சிஸ்டர்!” என்றவன், நினைவு வர “உங்கப் பேரு.?” எனக் கேட்டான்.
“தீபிகா!
“நீங்க தான் அர்ச்சனா நோன் பெர்சனா.?”
“ம்ம்ம்! ஆமா சார், சுந்தர் சாரை நான் பாத்து இருக்கேன், அதான்…” என இழுத்தாள்.
“இட்ஸ் ஓகே!”
தீபிகா சுந்தரை நோக்கிவிட்டு நகர்ந்தாள்.
சௌந்தர்”அம்மா நான் போய் பாத்துட்டு வரேன், அப்புறம் நீங்கப் போகலாம்” என்றான்.
“ம்ம்ம்!” என்றார்.
சௌந்தர், விருமாவை வைத்திருந்த அறைக்குள் செல்ல, அவரோ பல வொயர்கள் சூழ்ந்திடப் படுத்திருந்தார்.
கண்களை மூடி இருந்தவர் முன் சென்றவன், அவர் கையைப் பிடித்தப் படி அருகில் சென்று அமர்ந்தான்.
மெல்ல கண்களை விழித்தவர், மெதுவாக”சௌந்தர்…” என அழைத்தார்.
குரல் வரவே யோசித்தது, “அப்பா! நீங்க ஆல்ரைட், சும்மா சாப்புடாம இருந்ததால மயங்கிட்டீங்க” என ஆறுதல் கூறினான்.
ஹார்ட்ல ஸ்டென்ட் வைத்திருக்கு என திடீரென்று கூறினால் அவரின் மனம் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணும் என எண்ணிய சௌந்தர் சாதரணமாக பேசினான்.
“எப்ப வீட்டுக்குப் போவோம் தம்பி.?” என மெல்ல கேட்டார்.
“ஒரு வாரத்துல போயிடலாம்”
“ஒரு வாரமா.? ஏன்பா, எனக்கு என்ன வியாதி இருக்கு.? எதும் பிரச்சனையா…” என சற்று தெம்பு வர விடாமல் கேட்டார்.
“அப்பா! நீங்க வீக்கா இருக்கீங்க, நான் தான் ஒரு வாரம் இருந்துப் பாத்துட்டு போறோம்னு சொல்லி இருக்கேன்.”
“வீட்டுல நாய் மாதிரி கெடக்க வேணானு இங்கக் கொண்டு வந்துச் சேத்துட்டீயா தம்பி…” என மனம் நொந்திட கேட்டார்.
“அப்பா! நீங்களா ஒன்ன கற்பனைப் பண்ணி பேசாதீங்க, அம்மா ஏதோ உங்க மேல உள்ள கோபத்துல பேசிட்டாங்க. ஏன்! கோபத்துல நீங்க எவ்ளோ பேசி இருக்கீங்க.? அம்மா பொறுத்துக் கிட்டாங்கள, அந்த மாதிரி நீங்களும் அத விட்டுத் தள்ளுங்க.
இப்ப தான் உங்கள நார்மல் வார்டுக்கு மாத்தினாங்க, நைட் ஃபுல்லா நான், அம்மா, சுந்தர், மீரா தான் வெளியில உட்காந்து இருந்தோம். நாங்க எல்லாம் உங்களுக்காக தான் இருக்கோம், நீங்க எத பத்தியும் யோசிக்காம நிம்மதியா இருங்க” என்றான்.
“மீரா எப்ப வந்துச்சு.?” எனக் கேட்டுக் கொண்டே மெல்ல எழுந்து அமர போக, சௌந்தர் உதவினான்.
ஒரு நர்ஸ் வந்து சில வொயர்களை கழட்டி அவரை ப்ரீ பண்ணிவிட்டு சென்றார்.
“நான் போய் மீராவ கூப்புட்டு வீட்டுக்கு வரும்போது தான் நீங்க மயங்கி படுத்து இருந்தீங்கப்பா”
“ம்ம்ம்! வீட்டுல ஆள் இருந்தும் அனாதையா கிடந்து இருக்கேன்.”
“அப்பா! ப்ளீஸ், பழசை நெனச்சி அப்டியே இருக்காம, நீங்களும் கொஞ்சம் மாறி அம்மாவ புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க… அவங்க மேல உங்களுக்கு உண்மையான அன்பு இருக்குனா அத அன்பாவே காட்டுங்க, அத தான் அவங்களும் எதிர்பாக்குறாங்க”
“எனக்கு வெவரம் தெரிஞ்சு அப்டியே இருந்து பழகிட்டன்டா, உன் பாட்டியோட அன்பு இப்டி தான் இருக்கும், அதையே பாத்து பழக நானும் மொரட்டுதனமாவே இருந்துட்டேன்.
உன் அம்மாவும் வந்த நாள்ல இருந்து எதிர்த்தே பேச மாட்டா, அதனால நான் பண்றது எல்லாம் அவளுக்குப் புடிக்கும்னு நம்பி வாழ்ந்துட்டேன் சௌந்தர், அது தப்பா ரைட்டானு கூட எனக்கு தெரியல…”
“சரிப்பா! நீங்க அதிகம் பேச வேணாம். அமைதியா இருங்க”
“எனக்கு நெஞ்சுகிட்ட ஏதோ வித்தியாசமா இருக்கு, கை எல்லாம் கூட மரத்துப் போய் இருக்கு தம்பி, என்ன பிரச்சனை தம்பி.?” என ஒரு மாதிரி தன்னை தடவிப் பார்த்தார்.
“ஒன்னுமில்லப்பா! நீங்க மயங்கி விழுந்தது சாதரணம் தான், ஆனா செக் பண்ணினதுல உங்க இதயத்துல ரெண்டு அடைப்பு இருந்துச்சு, இப்ப அதுக்கு ஸ்டென்ட் வச்சாச்சு.. அவ்ளோ தான், நீங்க நல்லா ஆகிட்டீங்க.”
“ஓ! அத ஏன்பா வச்சீங்க.?”
“இல்லனா அடைப்பு அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்துடும்பா…”
“இருந்து மட்டும் என்ன பண்ணப் போறேன்… கட்டுன பொண்டாட்டிக்கே நாய விட கேவலமா ஆகிட்டேன்…”
“அப்பா! நீங்க அமைதியா இருங்க… நான் போயிட்டு மத்தவங்கள வர சொல்றேன்.” என எழுந்தான்.
“அப்பா! மீரா என் பொண்டாட்டி அவ கூட சண்டைப் போட்டாலும், அவளும் நானும் ஒரே வீட்டிலே இருக்கனும்னு முடிவுப் பண்ணி தான் போய் கூப்புட்டு வந்தேன். அவ பேச்சு வேணா கொஞ்சம் அதிகமா இருக்கும், ஆனா நல்லவ அப்பா புரிஞ்சுப்பீங்கனு நம்புறேன். எனக்கான மரியாதை அவளுக்கும் நம்ம வீட்டுல கிடைக்கனும்பா…” எனக் கூறிவிட்டு வெளியேறினான்.
அதை கேட்ட விருமாவிற்கு புத்தியில் சுளீரென்று உரைத்தது.
‘நம்ம எப்பவுமே பிரேமாவுக்காக இப்டி நம்ம அம்மா கிட்ட பேசினதே இல்லையே!’ என்ற உண்மை மெல்ல அவரைச் சுட தொடங்கியது.
அடுத்து அறைக்குள் வந்தது சுந்தர் தான்.
அவனோ வந்ததும்”அப்பா! என்னைய மன்னிச்சுடுங்க, நான் அம்மாவுக்காக பேசுறேனு உங்களை மறந்துட்டேன். நீங்க எப்பவுமே எனக்கு நல்ல அப்பா தான்…” என மன்னிப்புக் கேட்டான்.
அவரோ மனதின் சுய பரிசோதனையில் இருக்க, மகனை அருகே அழைத்து அணைத்துக் கொண்டார்.
சுந்தருக்கு அதுவே நிம்மதியை அளிக்க வெளியேறினான்.
மீரா தனியாக செல்ல ஒரு மாதிரி இருக்கு என, சௌந்தரை இழுத்துக் கொண்டே சென்றாள்.
“ரொம்ப தைரியசாலினு நெனச்சேன்…”
“தைரியம் தான், ஆனாலும் மாமா முன்னாடி கொஞ்சம் ஜர்க் ஆகுது, அதுவும் இப்ப இருக்க சூழ்நிலையில் நான் ஏதாச்சும் பேசிடக் கூடாதுல, அதான் உங்கத்துணை… ரொம்ப சீன் போடாம வாங்க” என உள்ளே நுழைந்தார்கள்.
“மாமா! இப்ப உடம்பு பரவாயில்லையா.?”
“ம்ம்ம்! பரவாயில்லம்மா” என்றார்.
மீராவிற்கே ஆச்சரியம், அந்தப் பழைய அதிகார, கர்வ தோரணை இல்லை.
“சரி மாமா! எதையும் பத்தி யோசிக்காதீங்க, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம். நான் போய் அம்மாவ வர சொல்றேன். அவங்க உங்கக் கூட இருப்பாங்க, நாங்க வீட்டுக்குப் போயிட்டு வரோம்…” என்றாள்.
“சரிம்மா! அவன் என்னத்த சொல்ல போறான், அதான் நீ சொல்லிட்டீயமா, போயிட்டு வாங்க” என்றார் அவர்.
அவளோ சௌந்தரை வெளியில் இழுத்து வர, “ஹேய்! நான் எப்ப வரனு சொன்னேன், நீ வேணா அவன் கூட போ” என்றான்.
“லூசாங்க நீங்க, நம்ம போவோம் உங்க அம்மா, அப்பாவும் தனியா இருந்தா தான் பேசிப்பாங்க, இல்லனா உங்கள தான் ட்ரான்ஸ்லேட்டரா யூஸ் பண்ணுவாங்க” என்றாள்.
“ஓ! பெரிய அறிவாளி தான்…” என்றவன் பிரேமா முன் சென்று, “அம்மா! நீங்கப் போய் அப்பா கூட இருங்க, நாங்க வீட்டுக்குப் போயிட்டு வரோம்” என்றான்.
“நான் இருக்கேன் அண்ணி!” என்றான் சுந்தர்.
“இப்ப தான் உங்க அண்ணனை லூசானு கேட்டேன், இப்டி குடும்பமே லூசா இருக்கீங்களே…” என மெல்ல கூறி நொந்தவள், “கொழுந்தநாரே! நம்ம போயிட்டு லேட்டா வருவோமா, காலை டிபன் பண்ணிட்டு…” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்!” என்றான் அவன் புரியாமல்…
பிரேமா கணவனைக் காண உள்ளே சென்றார்.
“ஹப்பா! லூசுங்களா… சாரி! சாரி! வாங்க ரெண்டுப் பேரும், போவோம்” என முன்னே நடந்தாள்.
“ம்ம்ம்! அடுத்த பேரு வைக்குறதுக்குள்ள கெளம்பு மொதல” என அவள் பின்னே நடந்தான் சௌந்தர்.
சுந்தரும் கிளம்ப, நினைவு வந்தவன் நார்மல் வார்டுக்கு சற்றுத் தள்ளி இருந்த இருந்த அறை முன் சென்று நின்றான்.
சரியாக தீபிகா டியூட்டி முடிந்து வீட்டிற்குப் போக வெளியில் வந்தாள்.
அவன் மேல் மோத போய் அப்படியே நின்றவள், “சாரி!” என்றாள்.
“இட்ஸ் ஓகே தீபி, தேங்க்ஸ்”
“எதுக்கு.?”
“நைட் சாப்பிட வச்சதுக்கு”
“ஓ! பரவாயில்ல, எங்க யாரையும் காணும்.?”
“அம்மா உள்ள போயிட்டாங்க, நாங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு கிளம்பிட்டோம்.”
“ஓகே சார்! அப்பாக்கு இனிமே சரியாகிடும், கொஞ்சம் ஃபுட் மட்டும் பாத்துக் குடுங்க…”
“ஒரு வாரம் அப்பா இங்க தானே இருப்பாரு, இப்பவே சொல்றீங்க”
“நான் ஒன் வீக் லீவ்…”
“ஓ! ஏன்.?”
“அம்மா, அப்பா கூட சொந்த ஊர் போறேன். அதான்…”
“ம்ம்ம்! ஓகே தீபி”
“ஓகே சார்!” என அவள் கிளம்பினாள்.
சுந்தருக்கு ஏனோ அவள் வெகுதூரம் போறது போல் தோன்றியது.
*
பிரேமா அறைக்குள் செல்லும் போது விருமா படுக்கையில் அமர்ந்தப்படி இருந்தார்.
சட்டென்று பின்னால் வந்த தீபிகா, “உள்ள வரலாமா.?” எனக் கேட்டாள்.
விருமா யார் என்று திரும்பி பார்க்க, அப்பொழுது தான் மனைவியையும், பின்னால் நின்ற தீபிகாவையும் கவனித்தார்.
பிரேமா திரும்பி”வாம்மா!” என்க, உள்ளே வந்தாள் தீபிகா.
தீபிகா கிளம்பி அவள் சீனியரிடம் வீட்டிற்கு கிளம்புவதை சொல்ல போக, அவளோ விருமாவிற்கும் மட்டும் மெடிசன்ஸ் செக் பண்ணிட்டு, ட்ரிப்ஸ்ல மருந்தை செலுத்திவிட்டு அவரின் அட்டென்ரிடம் சொல்லி விட்டுச் செல்ல சொன்னாள்.
அதனால் தான் தீபிகா இப்பொழுது வந்தது.
“என்ன ஐயா! இப்ப உடம்புக்கு எப்டி இருக்கு.?” எனக் கேட்டுக் கொண்டே அவரின் கைகளை எடுத்து பிரஷர் ஆராய்ந்தாள்.
பிரேமா வந்த படுக்கையின் ஓரமாக நிற்க, “பரவாயில்லம்மா!” என்றார்.
அந்தப் பதில் பிரேமாவிற்கும் சேர்த்துச் சொன்னது போல் இருந்தது.
“இல்ல! ஒன்னு ஓவரா டென்சன் ஆனா பிபி எகிறிட்டே இருக்கும், இல்ல! எல்லாத்துக்கும் அமைதியா போய் மனசுக்குள்ள அழுத்திட்டே இருந்தாலும் அழுத்தம் அதிகமாகி இப்டி தான் அடைப்பு வரும்… அப்பப்ப கோப படனும், அப்பப்ப அன்பா இருக்கனும்… அப்ப தான் லைஃப் பேலன்ஸா போகும் ஐயா” என்றாள்.
“எல்லாம் காலம் போன கடைசில தான் தெரியுது கண்ணு!” என்றார் விருமா.
பிரேமா சட்டென்று அவரைத் திரும்பி பார்த்தார்.
அந்தக் கண்ணு மீராவிற்கான அழைப்பு என தோன்ற, லேசாக கணவரை முறைத்தார்.
ட்ரிப்ஸ்ல மருந்தை ஏற்றியவள் பார்வை பிரேமா மேல் விழ, “ஏன்மா! ஐயாவை முறைக்குறீங்க.? பாவம் அவரே பேஷண்டா இருக்காரு…” எனச் சிரித்தாள்.
“ஆமா! ஆமா! பக்கத்துல ஒரு கட்டில் படுக்கையைப் போட்டு போம்மா, நானும் பேஷண்டா படுத்துக்கிறேன். ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி ஆஸ்பத்திரி படுக்கையில் விழுந்தா ஆட்டம் ஆடுனது ஆருனு கேள்விக்குறி ஆகிடுது, ஆட்டத்துல இடையில அடிப்பட்டவங்க எழுந்திரிச்சு தொடைச்சுட்டுப் போயிடனும், ஏனா ஆஸ்பத்திரில படுத்தா தானே மதிப்பு…” என இழுத்தார் பிரேமா.
தீபிகா சிரிக்க, மெல்ல விருமாவிடம் “ஐயாவோட ஆட்டம் அதிகமோ.?” எனக் கேட்டாள்.
“அதான் மொத்ததுக்கும் சேத்து ஒரே நாளுல படுக்க வச்சுட்டாளே கண்ணு!” என்றார்.
விருமா தீபிகாவின் கேள்வியில் பட்டென்று கண்ணு என அழைத்துவிட்டார். அது வசதியாக இருக்க அப்படியே அழைத்தார்.
“அம்மாவோட சொல் அடி பலம் தானு புரிஞ்சுகிட்டீங்களா.? திஸ் இஸ் பவர் ஆப் வுமன் ஐயா…” எனச் சிரித்தாள்.
“உனக்கு என்ன கண்ணு தெரியும், நீ சொல் அடி எல்லாம் பேசுற…” எனக் கேட்டார் விருமா.
பிரேமா அப்படியே நிற்க, “உங்கக் குடும்பமே நைட்ல இருந்து வெளியில தான் இருந்தாங்க ஐயா, நிறைய பாசப் போராட்டங்கள் நடந்துச்சு, எல்லாத்தையும் பாத்தேன்… ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன், நீங்க எல்லாருமே நல்லவங்க தான், மனசு விட்டுப் பேசி பாசமா இருந்தீங்கனா, ஊரு கண்ணே உங்கக் குடும்பத்து மேல தான்…
அம்மா! உள்ள வந்தும் ஐயாவ முறைச்சுட்டே இருக்காம, பாவம் பேசுங்க… உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ, ஆனா அவருக்கு இந்த நேரத்துல உங்க சப்போர்ட் தேவை, உங்க சப்போர்ட் இருந்தா போதும் ஸ்டாங் ஆகிடுவாரு… சரியா! நான் கிளம்புறேன்மா டியூட்டி முடிஞ்சுட்டு” என்றாள்.
பிரேமாவிற்கு உள்ள வந்து எப்படி பேச போகிறோம் எனப் புரியாமல் தான் வந்தார், ஆனால் கடவுள் அனுப்பிய தூது போல தீபிகா வந்தது அவருக்கு எளிதாக இருந்தது. மற்றவர்கள் யார் இருந்தாலும் இந்தளவு நிம்மதி கிடைத்திருக்குமா எனத் தெரியவில்லை.
“உன் பேரு என்னடா.?” எனக் கேட்டார் பிரேமா.
“தீபிகா!”
“நல்ல பேரு, போயிட்டு வாடா, உன் ஐயாவுக்கு என்னைய விட்டா யாரு இருக்கா.? அடிச்சாலும் புடிச்சாலும் என் கையில தான் வாங்கிப் போட்டுக்கனும் விதி இருக்கு” எனக் கூறியவர், கணவரை ஓரப்பார்வைப் பார்த்து வாயைச் சுளித்தார்.
“ஹஹஹ! ஐயா வரேன்…” எனக் கூறிவிட்டு தீபிகா வெளியேறினாள்.
பிரேமா பேசியதைக் கேட்ட விருமாவிற்கு இந்த முறை கோபம் வரவில்லை, மனதிற்கு இதமாக இருந்தது.
காலம் பூராவும் கூடவே இருப்பேன் என மறைமுகமாக அவர் கூறியது புரிந்தமையால் வந்த நிம்மதி அது.
இருவருமே நேரடியாக பேசிக்கொள்ளவில்லை…
விருமா படுக்க முயற்சிக்க, பிரேமா தலையணையைச் சரிசெய்து விட்டார்.
பேசிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் ஆறுதல் செய்துக் கொண்டனர், அனுபவம் வாய்ந்த மனங்கள் அவ்வளவு சீக்கிரம் பாசத்தை வெளியிட்டு அன்பை வெளிப்படையாக்கி விடாது.