சௌந்தர் வீட்டிற்குச் சென்றதும் படுக்கையில் சாய்ந்தான், முதல் நாள் முன் இரவும் சரியான நித்திரை இல்லை, நேற்றும் மருத்துவமனையில் உறக்கமே வரவில்லை, இரண்டும் சேர்ந்து அதிக சோர்வாகிட, அறைக்குள் நுழைந்ததும் படுத்துவிட்டான்.
மீராவும் பின்னாடி தான் வந்தாள், “மீரா! நான் கொஞ்ச நேரம் தூங்குறேன், ஒன் ஹவர் கழிச்சு எழுப்பி விடு, ஹாஸ்ப்பிட்டல் போகலாம்” என்றான் அவன்.
“ஓகே! நான் போய் பிரேக்ஃபாஸ்ட் செய்றேன்”
“ம்ம்ம்!”
“எனக்கும் தான் டயர்டா இருக்கு, பட்! என்ன செய்றது…” எனப் புலம்பிய படி ஃபோனை சார்ஜரில் மாட்டினாள்.
“உனக்கு டயர்டா இருக்குனா கொஞ்ச நேரம் தூங்கு, வேணுனா சாப்பாடு கடையில வாங்கிலாம்…”
“நோ! நோ! பாவம் மாமாவே பேஷண்ட், அவருக்கு போய் கடையில வாங்கி… வேணாம்” என்றாள்.
மீராவின் ஃபோன் அடித்திட, அதை எடுத்துப் பார்த்தாள்.
“ம்ம்ம்! என் அம்மாக்கு கொஞ்சம் மாப்புள்ள பைத்தியம் புடிச்சு இருக்கு, நான் கேட்டா ஒரு வேளை மாப்புள்ளைனு சொல்லிடுவாங்க, என்னதுக்கு அத கேட்டு கடுப்பாகிட்டு”
“ஹஹஹ! எல்லாம் மாப்புள்ள மவுசுமா, தெரிஞ்சுக்கோ”
“ரொம்ப சீன் போடாம தூங்குங்க, டைம் ஆகுது…” என அவன் எதிர்பக்கம் திரும்பி கண்களை மூடினாள்.
சௌந்தரும் நித்திரைக்குச் சென்றான்.
அரை மணி நேரம் சென்றிருக்கும், சௌந்தர் இயல்பாக மீராவின் அருகே நகர்ந்து அவளை அணைத்தான், அது நடந்தது என்னவோ நித்திரையில் தான். மீராவும் அந்த அணைப்பை ஏற்று, அவன் மார்பிற்குள் அடைக்கலம் ஆனாள்.
இருவருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
*
பிரேமா அமைதியாக விருமாவின் படுக்கை அருகே அமர்ந்திட, விருமாவோ கண்கள் சொக்கியதால் கண்களை மூடி அரை தூக்கத்தில் இருந்தார்.
பிரேமாவிற்கும் கண்கள் சுழற்றிட, தலையை மெத்தை மேல் வைத்தவாறு நாற்காலியில் அமர்ந்தப் படியே தூங்கினார்.
அரை தூக்கத்தால் கையை லேசாக அசைத்த விருமா, ஏதோ தட்டுபட கண்களை முழித்துப் பார்த்தார், அது மனைவியின் தலை என அறிந்ததும், அதே கைகளால் பிரேமாவின் தலையை லேசாக வருடி விட்டார்.
அவரின் முகம் கணவரை நோக்கியே இருந்தது, முதன் முறையாக மனைவியை மனைவியாக நோக்கினார் விருமா.
லேசான சுருக்கம் பெற்ற முகம், நெற்றியில் குங்குமம், நெற்றி வகிட்டில் குங்குமத்தின் நிறம் போகாமல் இருக்க, அங்கு சிவப்பு நிறமே பதிந்துவிட்டது. மூக்கின் இருப்பக்கமும் அழகான சிவப்பு, வெள்ளை கல் மூக்குத்தி, காதுகளில் அதே நிறங்களிலான கல் வைத்த வட்ட தோடு, கழுத்திலும் அதே நிறங்களிலான முகப்பு சங்கிலி மின்னியது…
இவை விருமா தேர்வுச் செய்துக் கொடுத்த நகைகள் கிடையாது, ஆனால் விருமாவின் பணத்தில் வாங்கியதே, மனைவி, சௌந்தர்யாவின் தேர்வில் தான் இவை அனைத்தும் வாங்கி அணிந்திருக்கிறார் என்பதை நன்கு அறிவார்.
சௌந்தர்யாவிற்கு கல் நகைகள் மீது அலாதி ப்ரியம், அதன் பயனாக தாயிற்குப் போட்டு அழகுப் பார்த்தாள், விருமாவும்’நீ வாங்கிப் போட்டுக்கோ பாப்பா!’ என்பார்.
ஆனால் சௌந்தர்யா ‘இல்லப்பா! நான் இதை போட்டு போனா கிண்டல் பண்ணுவாங்க, அதனால என்னோட கல்யாணத்துக்கு எல்லாமே கல் நகைகள் தான் வேணும்’ எனக் கல்லூரிப் படிக்கும் போதே கூறியிருந்தாள்.
மனைவியின் முகத்தைப் பார்த்து ரசிக்க தொடங்கியவருக்கு அழையாத விருந்தாளியாக மகளின் நினைவுகள் மோதியது.
‘பாவிமகள்! இப்டி ஏமாத்திட்டுப் போறனு, ஏமாந்துப் போயிட்டாளே’ என வருந்தினார்.
பிரேமாவின் தலையில் கை அப்படியே இருக்க, அவரின் தலைமுடி காற்றில் ஆடிட அவர் கையில் உரசியது.
மீண்டும் மனைவியை நோக்கியவர், “பிரேமா! உன் அருமை இப்ப தான் புரியுதோ!” என அவரையே பார்த்தார்.
அறுபதில் மனைவியை ரசிக்க என்னவிருக்கு என்ற மனநிலையில் இருந்தவர், இன்று மனைவியின் தலைத் தடவி, அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குவார் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை திரு விருமாண்டி அவர்கள்.
ஆனால் அது நடந்துக் கொண்டு இருக்கிறதே, அதை எப்படி மறுக்க முடியும்.
நேரம் செல்ல, அவரின் கையை எடுக்காமலே விருமாவும் கண் அயர்ந்தார்.
பிரேமாவிற்கு முழிப்பு வர, நிமிர போனவருக்கு ஏதோ தலையில் அழுத்த கண்களை மட்டுமே மேலே சுழற்றி நோக்கினார்.
விருமாவின் கை தன் தலையில் அழுந்திருக்க, அப்படியே அவரைத் திரும்பி பார்த்தார், கண்களை மூடி சோர்ந்து கிடந்தார்.
‘எப்டி கம்பீரமா இருப்பாரு, இப்டி ஒரே நாளுல ஒடுங்கிப் போயிட்டாரே, நான் தப்பு பண்ணிட்டனோ, இல்ல! சரியா தான் பேசுனேன் ஆனா காலம் கடந்துப் பேசிட்டேன், அப்பவே பேசி இருந்தா ஒரு வேளை இவருக்குப் புரிஞ்சு இருக்குமோ.? கடவுளே! என்னையும் ஊமையாக்கி, என் வாழ்க்கையும் அடிமையாக்கி, அவரையும் வில்லனாக்கிட்டீயே!’ என மனதில் குமுறினார்.
அவர் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவர், மெல்ல கையை எடுத்து நிமிர்ந்தார்.
கணவனின் கையை தன் கைக்களுக்குள் அழுத்தியவர், உழைப்பால் தேய்ந்துப் போன கையானது மரத்துப் போய் முரடாக தெரிய, முதன் முறையாக பிரேமாவாக கணவனை கையைப் பிடித்துள்ளார்.
கணவன் கைப் பிடித்த நொடியில் அத்தனை விதமான உணர்வுகள் தத்தளித்தது, அதற்குப் பெயர் தெரியாமல் கண்களில் கண்ணீர் அலை மோதியது, ஆனால் வெளிவரவில்லை, மாறாக இதழ்களில் சிரிப்பு மட்டுமே மிஞ்சியது.
பிரேமாவிற்கு விருமா மயங்கிப் பேச்சு மூச்சின்றி கிடந்ததும் சப்த நாடிகளும் அடங்கிவிட்டது, அவரை இழந்துவிட்டோம் என்று…
பிரேமாவிற்கு விருமாவை பிடிக்காமல் இல்லை, அவருக்கு தன் மேல் பிரேமம் இல்லையே என்ற கவலையும் ஏக்கம் தான் கூடுதலாக இருந்தது, அந்த ஏக்கமே சந்தர்ப்பம் கிடைத்தப் போது அனைத்தையும் பேச வைத்தது. தன்னை மனைவியாக மனதில் மரியாதைக் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் அவரை வெறுக்க செய்தது.
ஏக்கம், ஆதங்கம் எல்லாம் வெளிவந்ததும், அவரின் இந்த நிலை மனதைக் கொன்றது. அவர் மீண்டுவிட்டார் என்பதே பெரும் நிம்மதியடைந்தது, ஆனாலும் தன் மனதின் வலிகளைக் கொட்டிய நேரம் மயங்கியதால் தான் மட்டுமே பொறுப்பு என்பது போல் மாட்டிவிட்டுப் போயிட்டாரே என்ற கோபம் தான் இப்பொழுது மிஞ்சி அவரை வாட்டியது.
அதனையும் மீறி மகிழ்ச்சி வர, அவர் கையைத் திருப்பி மேற்புறத்தில் மெல்ல முத்தமிட்டார். இத்தனை வருடங்கள் கழித்து பிரேமா மனைவியாக அவதாரம் எடுத்து கணவனின் கையில் உரிமையாக இட்ட முத்தம் அது…
பிறகு அவரின் கையை விடுவித்து எழுந்துச் சென்று முகம் கழுவி வந்தார்.
அவர் வெளியில் வரவும், அந்த அறைக்குள் சௌந்தர்யா மகளுடன் நுழையவும் சரியாக இருந்தது.
“அம்மும்மா!” என்ற அழைப்பில் உருகியவர், “பவுனு!” என ஓடி குழந்தையை வாங்கிக் கொண்டார்.
“அம்மா! அப்பாக்கு என்ன ஆச்சு.? இப்ப கொஞ்ச முன்னாடி தான் சுந்தர் மெசேஜ் போட்டு இருந்தான். இப்ப எப்டிம்மா இருக்காரு.?” எனத் தந்தை அருகே சென்றாள்.
சபரியும் பின்னால் வந்து ஓரமாக நிற்க, பிரேமா”வாங்க மாப்புள்ள!” என்றார்.
“அப்பா பாக்க எவ்ளோ கம்பீரமா இருப்பாரு, இப்டி சோர்ந்து போய் கெடக்குறாரே, பாக்கவே முடியலம்மா” என அவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் மகள்.
“என்னமோ போ! இத்தோட விட்டுச்சேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான், நல்ல வேளை அவரு தூங்குற நேரம் வந்த, இல்லனா உள்ளார விட்டு இருக்க மாட்டாரு… அதோட பெரிய தம்பியும் இல்ல”
“என்னம்மா செய்றது, நான் பண்ண பாவம் அது நான் அனுபவிச்சு தானே ஆகனும், அப்பா திட்டுவாரு, தம்பி மதிக்க மாட்டானு தெரிஞ்சு தானே இவர பாக்க வந்தேன்.”
“டாக்டர் என்ன சொன்னாங்க அத்த, எப்ப வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்.?” எனக் கேட்டான் சபரி.
“ஒரு வாரம் இருக்க சொல்லிருக்காங்க மாப்புள்ள”
“அம்மும்மா! இது தாத்தா தான? ஏன் இங்க பட்து இக்காங்க.?” எனக் கேட்டாள் அட்சு.
“தாத்தாக்கு உடம்புக்கு சவுரியம் இல்ல பவுனு, அதான் டாக்டர் ஓய்வு எடுக்க சொல்லி இருக்காங்க, சரியானதும் வீட்டுக்குப் போயிடலாம்”
“தாத்தா நீ போட்டல காட்ட மாறி இல்ல”
“அது உங்கத் தாத்தா தெம்பா இருந்த போட்டோ, இப்ப உடம்பு முடியாம வேற ட்ரஸ் போட்டு இருக்காருல அதான் வித்தியாமா இருக்காங்க”
“தாத்தா என் கூட பேசுவரா.? நீ சொன்ன…”
“இப்ப இல்ல, இன்னொரு நாள் பேசுவாரு… தாத்தா கிட்ட நீ வேணா பேசு காதுல விழும்…” எனப் பேத்தியை இறக்கி விட்டார்.
விருமா அருகில் சென்ற அட்சு, பிஞ்சு விரலால் அவர் கையைத் தொட்டு “தாத்தா!” என அழைத்தது.
“நீங்க வேமா வீட்டுக்கு வாங்க, என்னோட வெளையாதலாம், ஜரியா…” என இழுத்தாள்.
சௌந்தர்யா”அப்பா! என்னைய மன்னிச்சுடுங்க, நான் பண்ணதுப் பெரிய தப்பு தான்… ஆனா உங்கள இந்த நெலமையில பாக்க முடியல… என் கூட பேசலைனாலும் பரவாயில்ல, நீங்க நல்லா ஆகி வாங்க போதும்” என்றாள்.
*
அலாரம் அடிக்க, இருவருமே கண் விழிக்கவில்லை…
நல்ல வேளை ஸ்னூஸில் இருக்க, மீண்டும் அலறியது.
இருவருமே கண் முழித்து எங்கு இருக்கின்றோம் எனப் புரியாமல் பார்த்தனர்.
சௌந்தரின் அணைப்பில் இருந்த மீரா, அவன் முகத்தை நோக்கினாள்.
அவனும் அவளையே பார்க்க, இருவருக்குமே அந்த அணைப்பு இதமாக இருந்தது.
மீண்டும் அலாரம் அடிக்க இருவருமே விலகி எழுந்தனர்.
மீரா எழுந்து அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு, பாத் ரூமிற்குள் குளிப்பதற்காக நுழைந்தாள்.
சௌந்தருக்கும் இதமான உணர்வாக இருந்திட, எழுந்து வேறு பாத் ரூமிற்கு குளிக்க சென்றான்.
காலை உணவை உண்டு மூவருமே மருத்துவமனைக்குப் புறப்பட்டனர்.
அசோக், ஜனனி, வீரனார், பைரவி என ஒரே காரில் கிளம்பிட ட்ராபிக் ஜாமில் சிக்கி கொண்டனர்.
அவர்களுக்கு முன்னே சௌந்தர், மீரா, சுந்தர் சென்றுவிட்டனர்.
*
சௌந்தர்யா தந்தையின் கையைப் பிடித்து கதறி அழுதுக் கொண்டு இருக்க, “அவர ஏமாத்திட்டுப் போனப்பவே அவர் மனசு பாதிக்கப்பட்டு இருந்திருக்கும், ஹார்ட்ல அடைப்பு எல்லாம் ஒரே நாளுல வந்துடாது… அன்னைக்கு ஏற்படுத்திட்டு போன வலி இப்ப தழும்பா மாறி இருக்கு” என்ற குரல் வந்தது.
அனைவருமே திரும்பி வாயிலை நோக்க, அங்கு அர்ச்சனா நின்றுக் கொண்டு இருந்தாள்.