“ஒரு ஆக்ஸிடென்ட் மீரா, ட்ராபிக் க்ளியர் பண்ண லேட் ஆச்சு, எங்கள ஆட்டோல போக சொல்லி இறக்கி விட்டாங்க, இப்ப வந்துடுவாங்க, நீங்க எங்கப் போனீங்க.? இது யாரு.?” என ஜனனி அட்சுவை பார்த்துக் கேட்டாள்.
“மாமி! சௌந்தர்யா மேடமோட பொண்ணு, அட்சு…” எனக் கூறினாள்.
“ஓ!”
சௌந்தர்”நீ பேசிட்டு வா மீரா, நான் உள்ள போறேன்” என நகர்ந்தான்.
“என்னடி! உன் நாத்தனார் வந்தாச்சு போல…”
“ஆமாம்மா! எல்லாரும் சேத்துக்கிட்டாங்க இவரு மட்டும் இன்னும் ஏத்துக்கல… அட்சு சின்னப்புள்ளனு நான் தான் பேச வச்சுக் கூட்டிட்டு வரேன்… சரி! நீங்க வெயிட் பண்ணுங்க நான் உள்ள போய் பாத்துட்டு வரேன்” எனக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
சௌந்தர் உள்ளே நுழைய, பிரேமாவும் சௌந்தர்யா மட்டுமே நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
சௌந்தர்யா மகிழ்ச்சியாக பேச போக, அவளை கண்டுக்கொள்ளாத சௌந்தர், “அப்பா! சாப்புட்டாச்சா” எனக் கேட்டான்.
“இப்ப தான் சாப்புட்டு முடிச்சேன்பா”
“சரி! நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன்” என அட்சுவை பிரேமாவிடம் நீட்டினான்.
அவர் பேத்தியை வாங்கிக் கொள்ளவும் வீரனார், அசோக் நுழையவும் சரியாக இருந்தது.
கூடவே பைரவி, ஜனனி வந்தனர்.
“வாங்க!” என போதுவாக வரவேற்றான் சௌந்தர்.
பிரேமாவும் அழைக்க, விருமா ‘ம்ம்ம்!’ எனத் தலையை மட்டுமே அசைத்தார்.
“நல்லா இருக்கீங்களா.? இப்ப உடம்புக்கு பரவாயில்லையா.?” என அசோக் விசாரிக்க, விருமா”தேவலாம்பா!” என்றார்.
“ம்ம்ம்! வயசாச்சுனா உடம்பையும் பாத்துக்கனும், இன்னும் ஒரு புள்ளைக்கு நல்லது பண்ண வேண்டிருக்கு” எனப் பொதுவாக கூறினார் வீரனார்.
“ஆமா! எனக்கு வயசாச்சு, அங்க எளம ஊஞ்சலாடுது… எல்லாம் விதி வந்தா தானா வரும்” எனப் பதில் அளித்தார் விருமா.
அசோக், பதில் பேச வந்த வீரனாரை அடக்கிட, வீரனார் அப்பொழுது தான் சௌந்தர்யாவை கவனித்தார்.
‘இது யாரு.?’ என யோசனையாக நோக்கிட, பைரவி பக்கத்தில் சாய்ந்து “மீரா நாத்தனாருங்க” என்றார்.
“ஓ!” என்றவர், சௌந்தர்யாவிடம் “என்னம்மா! அப்பா முடியலனதும் பாக்க வந்துட்டீயா.? எங்க உன் புருசன காணும்.?” எனக் கேட்டார்.
“அவரும் சுந்தரும் வெளியில போய் இருக்காங்க” என்றாள் அவள்.
“ம்ம்ம்! உன் மாமனாரு எனக்கு நல்ல பழக்கம், எனக்கு ஆசான் அவரு தான்…” எனப் பெருமைப் பேசினார் வீரனார்.
மீரா”அப்பா! பேசாம இருங்க” எனப் பற்களை கடிக்க, விருமா”ஆமா! உன்ன மாதிரி ஆளுங்கள உருவாக்குற ஆசான் தான் அந்தாளு…” என்றார்.
“என்னா சம்பந்தி! மகள சேத்துகிட்டாச்சு போல, அன்னைக்கு இந்தப் பொண்ணு மாமனாரு தாலி எடுத்துக் குடுக்க அந்த தாவு தாவுனீங்க, இன்னைக்கு அந்தாளு பையன் வந்து நிக்கிறான்” என நக்கலாக கேட்டார்.
மீரா பயத்துடன் சௌந்தரை நோக்க, அவனோ அவளை தான் முறைத்துக் கொண்டு இருந்தான்.
“சுடுகாடு வாசல போய் பாத்துட்டு வந்து பக்கத்துல பெட்ல படுத்துக்கோ, உன் மூத்த மகளும், மருமவனும் வந்து இப்டி நிப்பாங்க, அப்ப நானும் உன்ன மாதிரி கேக்குறேன்.” என்றார் விருமா.
வீரனாரை அதற்கு மேல் பேசாதவாறு அசோக் அடக்கினான். மீரா தான் மாமாவிடம் கண் காட்டியது.
சிறிது நேரம் செல்ல, வீரனார் குடும்பம் புறப்பட்டது.
சௌந்தர்”அப்பா! நான் கெளம்புறேன், மீராவ மதியத்துக்கு ஏதாச்சும் சமைச்சு எடுத்து வர சொல்றேன். அம்மா இங்கயே இருக்கட்டும்” என்றான்.
“ம்ம்ம்! சரிப்பா” என்றார் அவர்.
“மீரா கண்ணு என்னதுக்கு சமைக்க கஷ்டப்படனும், நான் வந்து சமைச்சு எடுத்துட்டு வரேன் தம்பி” என்றார் பிரேமா.
“இல்லம்மா! அப்பா கூட நீங்க இருந்தா தான் சரியா இருக்கும்.”
“இல்ல பெரியதம்பி! கண்ணுக்கு சமைக்க…” என இழுத்தார் மாமியார்.
“அம்மா! நீங்க அப்பா கூட இருங்க, நான் போய் எல்லாருக்கும் சமைச்சு எடுத்துட்டு வரேன்” என்றாள் சௌந்தர்யா.
“அதுவும் சரி தான், பெரியதம்பி! பாப்பா சமைச்சு எடுத்துட்டு வரட்டும்.” என்றார் பிரேமா.
சௌந்தர் உடனே”அது உங்க விருப்பம் அம்மா, நான் கிளம்புறேன் மீரா இங்க இருந்து என்ன பண்ண போறா, நான் கூட்டிட்டுப் போறேன்.” என்றான்.
“உங்களுக்கு சாப்பாடு.?” எனக் கேட்ட தாயிடம்,
“மீரா சமைக்க சொல்லி நான் சாப்புட்டுகிறேன், அப்பா! சாயங்காலம் வரேன், மீரா வா போகலாம்” என்றான்.
மீராவும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு, சௌந்தர்யாவை மட்டும் கண்டுக் கொள்ளாமல் கணவனுடன் சென்றாள்.
அட்சு இருவருக்கும் ‘டாட்டா’ காட்டியது.
“பாருங்கம்மா! நான் சமைச்சத சாப்புட கூடாதுனு, பொண்டாட்டியை சேத்துக் கூட்டிட்டுப் போறான்.”
“விடு பாப்பா! அவன் கோபம் தெரிஞ்சது தானே, பவுனு கூட பேசிட்டான் பாத்தீயா.?” என மகிழ்ந்தார் பிரேமா.
“ம்ம்ம்! ஆனா என் கூட பேசலையே”
“நீ பண்ணிட்டுப்போனது அப்டி, எப்டி பேசுவான்…” என அதட்டினார் விருமா.
“அப்பா!”
“என்ன அப்பா, நான் பேசுறனா அதுக்கு காரணம், நான் பாத்தவன் சரியானவன் இல்ல, நானே குற்றவாளி ஆன மாதிரி தோணுது. அதான் எப்டியோ ஓடிப்போய் நீயாச்சு சந்தோஷமா வாழுறனு ஏத்துக்க தோணுச்சு, உம் மவள பாத்ததும் இருந்த கோபம் போய் விட்டுக் குடுக்க மனசு அடிச்சுகிட்டு… விட்டுக்குடுத்தேன்… ஆனா என் புள்ள மனசு அவ்ளோ சீக்கிரம் இறங்காது.
நீ காத்து இரு, அவனும் மாறுவான், எல்லாத்துக்கும் நேரம் வரனும்” என்றார் விருமா.
“ஆமா பாப்பா! உங்கப்பா சாமி இறங்கிட்டு, உன் தம்பி சாமி இறங்க நேரம் ஆகும் தான்… எல்லாம் மலையேறி ஆடுற சாமிங்க தானே…” என்றார் நக்கலாக பிரேமா.
“ஆமா! நாங்க மலையேறி ஆடுறோம்டி, அது கெடக்கட்டும், இத்தன நாளா மருமவளுக்கு அடுப்படியில என்னத்த சொல்லிக் குடுத்த, ஒரு அவசரத்துக்கு சமைக்க தெரிய வேணாமா.? அவங்க வீட்டுலயும் சமைக்க சொல்லி தராமாயா கட்டி வச்சானுங்க” எனக் கேட்டார் விருமா.
“ஆமா! படிச்சுட்டு இருந்த புள்ளய புடிச்சு கட்டிக்கிட்டு வந்தா அதுக்கு எப்டி சமைக்க தெரியும்.? இங்க வந்த உடனே சமையல் கட்டுல நொழச்சுடனுமா என்ன.? அவங்க வீட்டுலயும் கண்ணுக்கு சொல்லி தரல, நானும் சொல்லிக் குடுக்கல தான்… அவசரத்துக்கு பொம்பள தான் சமைக்கனுமா என்ன.? ஏன் ஆம்பள சமைக்க கூடாதா.? உங்க மகனுக்கு ஏன் சொல்லி தரலனு நீங்கக் கேக்கவே இல்ல.?” எனப் பட்டென்றுக் கேட்டார் பிரேமா.
“அம்மா! அப்பா கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க.? அவரு ஏதாச்சு வேகமாக சொல்ல போய் உடம்புக்கு முடியாம போயிடப் போகுது” எனப் பதறினாள் சௌந்தர்யா.
“விடு பாப்பா! அவ பேச ஆரம்பிச்சுட்டா, எனக்கும் பழக ஆரம்பிச்சுட்டு… இனிமே இதயம் பலமா ஆகிடும்…” எனக் கூறிய விருமா, பேத்தியிடம் பேசத் தொடங்கினார்.
“மகனுக்கு ஏன் சமையல் சொல்லி தரலனு கேக்காம, மருமகளுக்கு கேக்குறாரு… நான் வளத்தது அவருக்கு பெத்த மகனை தானே… மருமகளையா வளத்தேன்.? நல்லா இருக்கே கதை…” எனப் புலம்பினார் பிரேமா.
“அய்யோ சாமி! நான் கிளம்புறேன். போய் சமைச்சுக் கொண்டு வரேன், நீங்கப் பேசிட்டு இருந்தாலும் சரி, இல்ல சண்டைப் போட்டுக்கிட்டாலும் சரி…” என மகளைத் தூக்கியவள் கிளம்பினாள்.
இருவர் மட்டுமே இருக்க, பிரேமா மெல்ல “பாப்பா மொகத்துல சந்தோஷமே இப்ப தான் வருது, என்ன தான் என் கிட்ட பேசிட்டு இருந்தாலும், அப்பன் கிட்ட பேசலைனு ஏக்கம் இருந்துட்டே இருந்துச்சு…” என்றார்.
விருமா காதில் விழ, அமைதியாக இருந்தார்.
“ஏன் நான் பேசுறது காதுல விழலையா.?” என அழுத்திக் கேட்டார்.
“விழுது, விழுது, என் மூத்த ஆம்புள புள்ளைக்கு இந்த அப்பன் மேல வருத்தம் போல… ஏதோ! நான் இங்கப் படுத்து இருக்கதால மொகம் குடுத்துப் பேசிட்டுப் போறான்… அவனுக்கு மவள ஏத்துக்கிட்டதுல விருப்பம் இல்ல பிரேமா.” என்றார்.
“அவன் அப்டி தாங்க, உடனே மாற மாட்டான். சின்ன வயசுல இருந்தே வீம்பு புடிச்சவன், வேணுனா வேணும் வேணான வேணாம்… “
“ஆனா! மருமவ கூட நல்லா பாசமா ஆகிட்டான் போல, சண்டப் போட்டுக்கிட்டாலும் விட்டுக் குடுக்காம பேசுறான். அந்தளவு உசுரா இருக்கானோ”
“அந்தளவு உசுரா என் கண்ணு மாத்தி வச்சு இருக்கா, மீரா வந்ததும் தான் என் குடும்பமே மாறிட்டு வருது, பெரிய தம்பியும் மாறி என் பொண்ணு, மகனுங்க அவங்க புள்ளைங்கனு வீடே கலகலனு இருக்கனும், நீங்களும் நானும் அத பாத்து சந்தோஷமா கண்ண மூடனும்… பாருங்க எல்லா நடக்கும்…” என மனதார கணவனிடம் கூறினார் பிரேமா.
மனைவியே பார்த்த விருமா, “உனக்கு இவ்ளோ ஆசை இருக்கா.? எனக்கு இத எல்லாம் நெனக்க தோணல… மானம், மரியாதை, சமூகம், சொந்தம், பந்தம், அரசியல்னு இப்டியே யோசிச்சுட்டு கெடப்பேன்…
இந்த பவுனு குரலை மொத மொதலா ‘அம்மும்மா!’ கேட்டதும் அப்டியே உடம்புல இருந்த ஒட்டுமொத்த அழுத்தமும் கொறஞ்சுப் போச்சு…” எனக் கூறி சிலாகித்தார்.
“அம்மும்மா… ஆமா நீங்க தூங்கவே இல்லையா.? எப்ப முழிச்சீங்க.? பாப்பா வரும் போதா.?” என எதையோ அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்டார்.
“நான் முழிச்சதா… என் பக்கத்துல பொண்டாட்டி தலை வச்சுப்படுத்து இருந்தா, அவ முழிச்சதுமே நான் முழிச்சுட்டேன்…” எனக் கையை காட்டிச் சிரித்தார்.
பிரேமாவிற்கு வெட்கம் வர, கழுத்தை நொடித்து திரும்பிக் கொண்டார்.
அவருக்குமே இளமையில் காணாத கணவனின் காதல் சிரிப்பை இப்பொழுது கண்டதும், வந்த வெட்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
புடவையின் முந்தானையில் முகத்தை அழுந்த துடைத்தவர், சிரிப்பையும் வெட்கத்தையும் அதை வைத்தே மறைத்துக் கொண்டார்.
விருமா மனைவியை கண்டு “ஹாஹாஹா” என வேகமாக சிரித்தார்.
சட்டென்றுத் திரும்பிய பிரேமா”ஏங்க! மெதுவா சிரிங்க, உடம்புக்கு ஏதாச்சும் பண்ண போது…” எனப் பதறினார்.
“அடியேய்! இனி ஒன்னும் பண்ணாது… நீ ஏன் பயப்புடுற.? உன் தாலிக்கு கெட்டி ஆயுசுடி” என்றார்.
“ஆமா! கெழவனுக்கு நேத்து மூச்சு இல்லாம படுத்து கிடந்தது மறந்துட்டுப் போல… கொஞ்சம் அடக்கமா துள்ளும், உள்ள வச்சு இருக்க மெசினு வேலைச் செய்யாம போயிட போது…” என அக்கறையுடன் மிரட்டினார்.
“அதான் இப்ப சொன்னேன்ல, எல்லா புள்ளைங்களும்…” என ஆரம்பிக்க,
“அடியேய்! நீ நான் மட்டும் இருக்க ஆச பத்தி சொல்லு…”
“ஆமா! இனிமே சொல்லி என்ன ஆகப்போது…”
“சொல்லுடி, என்னைய என்ன எதுக்கும் ஆவாதவனு நெனச்சீயா.? எனக்கு வயசானாலும்…”
“யோவ்! வயசுக்கு ஏத்த மாதிரி பேசுய்யா, அப்டி எல்லாம் எதுவும் இல்ல, ஆனா! என் அம்மா எல்லாம் டெல்லிக்கு போய் இருக்கு, என் அப்பா மிலிட்டரியில இருந்தப்ப, அப்ப நிறைய சொல்லும்… அப்டி இருந்துச்சு, இப்டி இருந்துச்சுனு எனக்கு அந்த வாய்ப்பு இல்ல, அப்பா செத்ததும் எல்லாமே மாறிப் போச்சு, அம்மா டிவியில வரும் போது எல்லாம் அந்த தாஜ்மஹால காட்டும்…
அத பாக்குறப்ப, நானும் ஒரு நாள் போய் பாக்கனும்னு நெனப்பேன்… எங்க உங்கள கட்டிக்கிட்டு உங்க அம்மா, அடுப்படி, கோயில், உறவு, புள்ளைங்கனு இப்டியே போச்சு…” எனச் சலிப்பாக கூறினார்.
“அவ்ளோ தானே, நான் உடம்பு சரியாகி வந்ததும், நம்ம டெல்லி போய் தாஜ்மஹால் பாப்போம்… நீ உன் பேத்திக் கிட்ட சொல்லு…”
“நெசமாவாங்க!”
“ஆமா! உண்மையா தான் சொல்றேன்… போவோம்” எனச் சிரித்தார்.
“இது நடக்கும்னு கனவுல கூட நெனக்கல… நடக்கப் போகுதே” என மகிழ்ச்சியை முகத்தில் காட்டினார்.
“இப்டி சிரிச்சா அம்சமா இருக்க பிரேமா” என்றார் விருமா.
“ம்ம்ம்! இருக்கும், இருக்கும்… யாரோ வராங்க, பேசாம படுங்க” என அவரின் போர்வையைச் சரிச்செய்துவிட்டார்.
அவர் கூறியது போல் சுந்தர் தான் வந்தான்.
*
மருத்துவமனையை விட்டு சௌந்தரும், மீராவும் வெளியே வர, வாசலில் அவளின் காலேஜ் ஏ ஹெச் ஓ டி மதன் எதிரில் வந்தான்.
“சார்!” என அழைத்தாள் மீரா.
சௌந்தரும் அவரை நிமிர்ந்து நோக்கினான்.
“மீரா! நீயாம்மா, காலேஜ் போகலையா.? இங்க எங்க.?” எனக் கேட்டவாறு சௌந்தரை பார்த்தான்.
“ஆமா சார்! மாமாக்கு கொஞ்சம் உடம்பு முடியல, இப்ப ஓகே…” என்றாள்.
சௌந்தர் புருவத்தைச் சுளித்து, “நீங்க!” என இழுத்தான்.
“ஞாபகம் இருக்கா சௌந்தர், நான் மதன் தான், மீரா காலேஜில் வொர்க் பண்றேன்…”
“சார தெரியுமா.?” எனக் கணவனிடம் கேட்டாள்.
“ம்ம்ம்! தெரியும், மதன் நம்ம தூரத்து சொந்தம் தான், என்ன மதன் ஹாஸ்பிடல் பக்கம்.? நீங்க காலேஜ் போகலையா.?”
“சௌந்தர்! அம்மாக்கு முடியல, கொஞ்சம் சீரியஸ் தான்… எப்ப வேணாலும் முடியலாம், அதான் கூடவே இருக்கேன்.” என மெல்ல வருத்ததுடன் இழுத்தான்.
“என்ன ஆச்சு.?”
“அவங்களுக்கு கிட்னி பெயிலியர், நிறைய ட்ரீட்மென்ட் பண்ணி, டயாலிஸ் கூட மூணு வருசம் போனுச்சு… இப்ப லாஸ்ட் ஸ்டேஜ்…”
“ஓ! ரூம் நம்பர் என்ன.? வாங்க பாத்துட்டு வருவோம்” என்றான் சௌந்தர்.
“இருக்கட்டும் சௌந்தர்! அப்பா எப்டி இருக்காங்க, அவர போய் பாருங்க”