ராயல் என்பீல்டு புல்லட் அதற்குரிய மிடுக்கோடு ‘டொட், டொட்’என்ற ஒலியை எழுப்பிக் கொண்டு சாலையில் பயணித்தது.
“அவளுக்கு உண்மையில் என்ன வயசுடா…?”
“யாருக்குடா…?”
“அதான் புதுசா எங்க வீட்டுக்கு வந்திருக்க உன் தங்கச்சிக்கு தான்”
“யாரு…? தமயந்தியை கேக்குறீயா மச்சான்”
“ம்ம்ம்!”
“அவளுக்கு தான் முப்பது…”என ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்தியவன், “தர்மா! உண்மையான வயசை சொல்லு” என்றான் அழுத்தமாக.
“தமயந்தி எதும் சொன்னுச்சாட..?”
“ம்ம்ம்!”
“நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அந்த புள்ள புரிஞ்சுகாம அடம் புடிக்குது”என முகத்தை சுளித்தான்.
புல்லட்டை ஓரமாக நிறுத்திய நளன், “ஏன்டா! இப்பிடி பண்ணீங்க..? அவளுக்கு கூடுதலான வயசை சொல்லி என்னைய நம்ப வச்ச, அப்பிடியும் நான் உன் கிட்ட கேட்டேன்ல, பொண்ணு பாத்த அன்னைக்கு வயசு குறைச்சலா தெரியுதேனு, நீ அவங்க வகையறா அப்பிடி தான் வயசே தெரியாதுடானு என்னமோ கதை சொன்னிய தர்மா” என்றான் அவனை குற்றப்பார்வையோடு.
“மச்சான்! இப்ப என்ன ஊரில் நடக்காதது உனக்கும், அவளுக்கும் நடக்கல, அவனவன் வயசை மறைச்சி டை அடிச்சு ஏமாத்துறான், நீ உன் அடையாளத்தை மாத்தமா இருக்க இப்பவரை, தமயந்தி குடும்பத்துக்கு உண்மை தெரியும், அவளுக்கும் தான். அவ ஒத்துக்கல ஆனா சித்தி அதான் அவ அம்மா கட்டாயாப்படுத்தி சம்மதிக்க வச்சாங்க, நானும் பேசினேன் அவ கிட்ட நீ ரொம்ப நல்லவனு, ஆனாலும் அடம்புடிச்சா அப்புறம் சித்தி எப்பிடியோ சமாளிச்சு கல்யாணத்தை முடிச்சுட்டாங்க, நீ அதை எல்லாம் விட்டு தள்ளுடா, அவளுக்கு உன் கூட இருக்கும் போது உன் நல்ல மனசு புரியாம போயிடாது”
“இவ்வளவு வயசு வித்தியாசத்தில் கல்யாணம் பண்ணினதே எனக்கு மனசுக்கு சரியா படல, இதுல அவளுக்கு புடிக்காம வேற இருக்கும் போது எப்பிடிடா நாங்க சந்தோஷமா வாழ முடியும்..?”என வெறுத்துக் கூறினான் நளன்.
“என்னடா வயசு, பொல்லாத வயசு அது எல்லாம் பொருத்தமா மாறிடும், ரெண்டுப் பிள்ளை பொறந்தா போதும் மச்சான், அந்த வயசு எல்லாம் மாயமாய் போயிடும்”
நளன் அமைதியாக நின்றான்.
“என்னடா..? நானும் அத்தையும் உனக்கும் ஒரு நல்லது நடக்கனுமுனு ஆசைப்பட்டோம், அது கெடுதலா இருக்காது நம்புடா”
“நீங்க எனக்காக யோசித்து நல்லது செய்றேனு, எனக்கு பாவக்கணக்கை தான் சேர்த்து வச்சு இருக்கீங்க தர்மா” என்று அடுத்த வார்த்தை பேசாமல் புல்லட்டை கிளப்பினான்.
தர்மன் அமைதியாய் நண்பன் முதுகில் கைவைத்து பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.
****
தமயாவிற்கு பகல் பொழுது விரட்டியப்படி ஓடியது, ஆனாலும் இன்னும் முடியவில்லை.
நளனும் வரவில்லை, வந்தால் மட்டும் என்ன புது ஜோடி புதிய தேசம் பார்க்கப் போகின்றார்களா என்ன…?
அப்பிடி இப்பிடி இரவு எட்டு மணி ஆனது, ஒவ்வொருவராக சாப்பிடத் தொடங்கினர்.
லலிதா புருசனுக்கு பரிமாறிவிட்டு, பிள்ளைகள் சாப்பிட்டதும் தூங்க சென்று விட்டாள்.
மரகதமும் சாப்பிட்டு, பெண் பிள்ளைகளோடு சீரியல் பார்க்க அமர்ந்தாள்.
“ம்ம்ம்!”என்றாள் தமயந்தி, யாரு சொல்வார்கள் என காத்திருந்தாள், சொல்லும் போது சாப்பிட்டு மாடிக்குப் போய் படுத்துவிடலாம் என்று எண்ணியவாறு.
ஆனால் சரசு “ஏட்டி! உன் மாமனுக்கு யாரு சோறுப் போடுறது, இத்தன நாளு தான் அவன் தனி ஆளா கெடந்தான், நான் முழிச்சுட்டு சோறுப் போட்டேன். இப்ப பொண்டாட்டி வந்துமா நான் கண்ணு முழிக்கனும். ஏம்மா மருமகளே! உம் புருசன் வந்ததும் சாப்பாடு போட்டு நீயும் சாப்புடு”என கூறியப்படி வெளியில் வராண்டாவில் பாய் போட்டுப் படுத்தார்.
கணவரோ ஒரு பக்கம் தெக்க தெளிவு இல்லாமல் கிடந்தார்.
தமயா மனதில்’அந்தாளு வர வரைக்கும் கண்ணு முழிச்சு சோறுப் போட தான் என்னைய கொண்டு வந்த மாதிரி பேசுறாங்க, நேரம் எல்லாம், சாப்பாடு டேபிளில் இருந்தா தொரை போட்டு சாப்புடு மாட்டாரோ…?’என நக்கலாக வஞ்சித்து அவனை தூக்கு மேடையில் ஏற்றினாள்.
மற்றவர்களோடு அமர்ந்து சீரியல் பார்க்க, அது ரொம்ப போர் அடித்தது.
அவளின் வீட்டில் சீரியல் பார்க்க எல்லாம் நேரமிருந்தது இல்லை, பகல், நைட் டியூட்டி என்று மாறி மாறி மருத்துவமனை போய் விடுவாள்.
மல்லிகா தன் மகனோடு மாமியார் வீட்டுக்குப் போய் விட்டாள்.
மற்றவர்களும் தூங்க சென்றுவிட, தமயா மட்டுமே தனியாக அமர்ந்து டிவி பார்த்தாள்.
சீரியலில் இருந்து சினிமா பாட்டிற்கு மாற்றியிருந்தாள்.
இரவு நேரம் என்பதால் அனைத்தும் காதல் ரசமாக நெடி ஏறியது.
‘கடவுளே! நான் இருக்க நிலையில் காதல் ஒரு கேடு’என எண்ணி அதை அணைத்தாள்.
பேப்பரை எடுத்து புரட்டிக் கொண்டு நேரத்தை கழிக்க, நளன் புல்லட் சத்தம் கேட்டது.
வீட்டின் முன் நிறுத்தியவன், தள்ளிட்டு வந்து உள்ளே ஸ்டான்ட் போட்டான்.
கையில் ஒரு பையோடு நுழைய, சரசு”நளனா! போ போய் சாப்புட்டு படு” என்றார் கண்களை முழிக்காமலே.
“சரி! சரி! நீ தூங்கு”என உள்ளே சென்றான்.
பொதுவாக நளனுக்கு சரசு முழித்திருந்து சாப்பாடு போடுவார், இல்லை என்றால் இப்பிடி படுத்துக் கொண்டே சாப்பிட்டு போக சொல்வார்.
அவனும் தூக்கம் முழிக்காதம்மா, நான் வந்தால் போட்டு சாப்பிடுகிறேன் என திட்டுவான் தன் தாயை.
அதே யோசனையோடு நுழைந்த நளன் தமயாவை ஹாலில் பார்த்ததும் புரியாமல்”நீ இன்னும் தூங்காம என்ன பண்ற…? மணி பதினொன்னு ஆச்சு..?” என கேள்விக் கேட்டவனை, பார்வையால் எரித்தாள்.
“நீங்க வந்ததும் உங்களுக்கு சாப்பாடு வச்சுட்டு தான் நான் சாப்புடனுமாம். ஏனா நான் உங்களுக்கு புது வேலைக்காரில இல்லல்ல மறந்துட்டேன் புதுப் பொண்டாட்டில” என்றாள் மெதுவாக.
நளனுக்கு புரிந்தது இது தாயின் வேலை என்று.
கவரை ஷோபாவில் வைத்தவன், வாஷ்பேஷன் சென்று கை கழுவிய பின் டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
தமயா அவனுக்கு முன் தட்டில் இட்லிகளை எடுத்து வைத்தாள் ஹாட் பேக்கில் இருந்து.
“பரவாயில்ல, ரொம்ப நன்றி சொன்னதுக்கு, அது எல்லாம் பசிச்சு சாப்புடாமயே செரிச்சுட்டு, போதும் வயிறு இதுக்கு மேல தாங்காது, ஏனா குடிச்ச தண்ணி அந்தளவு”என முகத்தைச் சுளித்தாள்.
“போய் தட்டை எடுத்துட்டு வா”என்றான் பொறுமையாக.
“எனக்கு பசிக்கல, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நான் சாப்புட முடியாது” என்றாள் பற்களை கடித்து மெல்ல.
“உட்காரு”என்றான் அவனுக்கு சற்றே தள்ளி இருந்த நாற்காலியை காட்டினான்.
அவளோ நின்றுக் கொண்டிருந்தாள்.
“இங்கரே! உட்காருனு சொன்னனேன்” என்றான் சற்று கடினக் குரலோடு.
தமயா அப்பிடியே அமர்ந்தாள்.
நளன் அடுப்படிற்குள் சென்று கண்ணில் தென்பட்ட தட்டினை எடுத்து வந்து அவள் முன் வைத்தான்.
அதில் இரு இட்லிகளை வைத்து, “சாப்புடு, இனிமே நீ காத்திருக்க வேணாம்” என்றவன் வேகமாக சாப்பிட்டு தன் அறைக்குள் சென்று விட்டான், ஷோபாவில் இருந்த கவரோடு.
***
அறைக்குள் வந்த நளன் உடைகளை மாற்றிவிட்டு, கட்டிலில் அமர்ந்தான்.
தமயாவும் அறைக்குள் நுழைந்தாள்.
“ஒரு நிமிஷம்!”
‘என்ன.?’என்பது போல் தமயா அவனை பார்த்தாள்.
“இங்கரே! எனக்கு உன் வயசு பத்தி தெரியாது, உன்னோட சம்மதம் இல்லைனும் தெரியாது, இப்ப ஒன்னும் வீணாப்போகலை. உனக்கு என் கூட இருக்க புடிக்கலைனா நீ போயிட்டு இருக்கலாம், நான் கட்டாயப்படுத்த மாட்டேன். நீ உன் அம்மா கிட்ட போராடியதை என் கிட்ட ஒரு வார்த்தை நேரடியாக சொல்லி இருந்தா நானே கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்”
என்றான் மெல்ல.
“அதுக்கு எனக்கு தான் வாய்ப்பே கிடைக்கல, கிடைச்சாலும் முடியல. ஏனா பொண்ணாவே பொறக்கக் கூடாது அப்பிடியே பொண்ணா பொறந்தா ஏழை வீட்டில் பொறக்க கூடாது, அதனால தானே இப்பிடி ஒரு வாழ்க்கையில் விழுந்தேன்.”
“சரி! இதுல என் தப்பு என்ன இருக்கு.?”
“ஏன் இல்ல.? இந்த வயசுல எதுக்கு உங்களுக்கு கல்யாணம்..? என் அம்மா மாதிரி ஏழை அம்மாக்களுக்கு உங்களை மாதிரி மாப்பிள்ளைங்க வரப்பிரசாதம், அவங்களுக்கு அந்த வாய்ப்புக் கொடுத்தது உங்க கல்யாண ஆசை தானே.”
நளன் அமைதியானான்.
பிறகு”இங்கரே! எனக்கு தெரியாம நடந்த விஷயம் இது, உனக்குனு ஒரு ஆசை இருக்கும் அத கெடுக்க நான் விரும்பல. இந்தா இந்த கவரில் டைவர்ஸ் பேப்பர் இருக்கு, இப்பவே கையெழுத்துப் போடு நான் இன்னைக்கு வக்கீலை தான் பாத்துட்டு வந்தேன். ஆறு மாசம் வேணுமாம். அதுவரை நீ உன் வீட்டில் போய் இரு, அதுக்குள்ள நானே உன் மனசுக்குப் புடிச்ச மாப்பிள்ளையை பாக்குறேன், ஆறு மாசம் முடிஞ்சதும் அந்த பையனுக்கு கட்டி வைக்குறேன்” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
“நான் சொல்றது புரியுதா உனக்கு..?”
“இது எல்லாம் என்ன நாடகம், இல்ல நம்ம சமுதாயத்தில் தான் சாத்தியமா…? இதுல கையெழுத்துப் போட்டு நான் போய் என் வீட்டில் ஆறு மாசம் இருந்தா என்னைய வாழாவெட்டினு சொல்லுவாங்க, இவ்வளவு ஏன் என் அம்மாவே தினமும் பேசி பேசியே சாவடிச்சுடும். அப்புறம் உங்க குடும்பத்தை எதிர்த்து நான் வேற கல்யாணம் பண்ணா அப்பிடியே எல்லாரும் வாழ்த்தி அனுப்புவாங்கனு நினைக்குறீங்களா..? இத்தனை கஷ்டத்தை அனுபவிச்சு ஒருத்தன் கூட நான் வாழப் போறதுக்கு இந்த வாழ்க்கையே மேல், இனியும் போய் நான் மறுபடியும் கல்யாணப் படுக்குழியில் விழ ஆசைப்படல, போதும்பா சாமி” என கட்டிலின் மறுப்பக்கம் பாயை எடுத்து விரித்தாள்.
நளனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“சரி! இப்ப இதுக்கு ஒரு முடிவு வேணாம..?”என்றான் நளன்.
“என்ன முடிவு வேணும்.? இப்ப என்ன கொஞ்ச நாளுல உங்கம்மா வாரிசு கேப்பாங்க அதானே, பெத்து தரேன், இதான் வாழ்க்கைனு வந்தாச்சு இனி படுத்தா என்ன படுக்கலைனா என்ன..? கேவலம் இந்த உடம்பு தானே, அது பரவாயில்ல”என்றாள் முகத்தைச் சுளித்து.
“இங்கரே! உன்ன மாதிரி எனக்கு பேச தெரியாது, எப்ப நீ உன் பேர சொல்லக் கூடாதுனு சொன்னியோ அப்பவே அதை நிறுத்திட்டேன். அதே மாதிரி உன்னைய தொடுறதும் நடக்காது, என் மனசறிஞ்சு நான் தப்பு பண்ணல, அதை சரிசெய்ய தான் இந்த விவாகரத்துப் பத்திரம் வாங்கிட்டு வந்தேன், ஆறு மாசமும் நீ இந்த வீட்டிலே இரு, அப்புறம் தனியா போயிக்கலாம், உனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழு, யாரு பேசப் போறா உன் வாழ்க்கையை நீ வாழப் போற.”
“இது எல்லாம் பேச தான் நல்லா இருக்கும். எனக்கு தம்பி, தங்கச்சி இருக்காங்க”
“அவங்க வாழ்க்கை ஒன்னும் ஆகாது, எல்லாம் நல்லா அமையும், இந்தா புடி, இப்பவே கையெழுத்துப் போடு, அது நடைமுறைக்கு வர ஆறு மாசம் சரியா இருக்கும்” என அந்த பேப்பரை நீட்டினான்.
தமயாவிற்கு முடிவாக அடுத்த கல்யாணம் பற்றிய எண்ணமே இல்லை.
ஆனால் நளன் நீட்டியதால் வாங்கியவள், “உங்களுக்கு வேணா இது ஈஸியா இருக்கலாம், என் அம்மா தனி ஆளா எவ்வளவு கஷ்டப்பட்டுச்சுனு எனக்கு தெரியும். நான் மறுபடியும் அதுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, என் தம்பி, தங்கச்சி வாழ்க்கைகக்கு முற்றுக்கட்டையா இருக்க மாட்டேன், இப்பவும் சொல்றேன் தாலிக் கட்டிட்டு வந்துட்டேன், பொண்டாட்டியா எல்லாம் செய்றேன்”என்று தன் தாலியை எடுத்துக் காட்டியவள்,
“இன்னைக்கு பசியை அடக்கி காத்திருந்த மாதிரி, ஆசையை அடக்க தெரியும். இந்த வாழ்க்கைக்கு பழகிக்குறேன். பிரச்சனையில்ல பொறந்ததில் கிடைச்சதை தான் அனுபவிக்குறேன் தனியா ஆசைப்பட்டது இல்லை அது பழகிட்டு, இப்ப இந்த வாழ்க்கை கிடைச்சு இருக்கு அனுபவிக்க பழகுறேன்”என அந்த விவாகரத்து காகிதங்களை கிழித்து அங்கு இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பாயில் படுத்தாள்.
நளன் ஒரு மாதிரி சங்கடமான மனநிலையில் தான் அந்த விவாகரத்து காகிதங்களை வாங்கிட்டு வந்தான்.
தமயா அதை கிழித்துப் போட்டதும், அவனுக்கு மனதில் பட்டாம் பூச்சி பறந்தது அது எதற்கென்று அவனுக்கே புரியவில்லை.
அவளை பார்த்து விட்டு, கட்டிலின் மறுப்பக்கம் அவன் பாயை எடுத்துப் போட்டுப் படுத்தான்.
தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஏனோ புதுவித உணர்வான அனுபவமாக இருந்தது.
அவனின் உணர்வை தடுத்தது மனையாளின் குரல்.
“ஒரு விஷயம்!”என்றாள் அவன் பக்கம் திரும்பி.
“என்ன…?”என்றான் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல்.
“நான் வேலைக்குப் போகனும் அதுக்கு மட்டும் முடிஞ்சா உங்க வீட்டில் பேசி உதவிப் பண்ணுங்க”என பதில் எதிர்ப்பார்க்காமல் திரும்பி படுத்தாள்.