மணமக்களின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் அந்த வீட்டினர்.
நேரமானது மாலை நான்கு மணியை கடந்திருந்தது, சரசம்மா”இன்னுமா பொண்ணு வீட்டுல விருந்து நடக்குது, போனமா ரெண்டு வாழைப்பழத்தை தின்னுட்டு அந்த பாலைக் குடிச்சமானு கிளம்பமா, என்னத்த பெருசா அந்த மாளிகையை சுத்தி பாக்குறவோ கூடப் போன சிறுக்கிக..”என இழுத்து வசைப்பாடிக் கொண்டிருந்தார்.
மணமகனின் தாய். “கூடப் போனது யாரு உம் சின்ன மவள, உடனே கிளம்பிடுவாள, இருக்குறதை முழுங்கிட்டு கிளம்ப நேரம் ஆகும் தான் இரும்மா”என வெடுக்கென்று கூறினாள் மூத்த மகள் மரகதம்.
“ஏன், நீங்க போக வேண்டியது தானே அத்தாச்சி, நைசா மல்லிகா வை அனுப்பிட்டு கோயிலோட திரும்பிட்டிய..”என்றாள் நக்கலாக லலிதா.
“ம்ம்ம்! எல்லாரும் போனா அங்க விருந்து முடிஞ்சுடும் தான் போகல, நீ கொஞ்சம் அடங்கிட்டு இரு, என் வாயை கிளராம.”
கார் வந்து நின்றது, “எக்கா! அண்ணே வந்தாச்சு, சீக்கிரம் ஆழாத்தி தட்டை எடுத்து வை”என குரல் கொடுத்தான் மயில்சாமி.
காரில் இருந்து இறங்கினர் மணமக்கள்.
லலிதாவும், மரகதமும் வந்து ஆழாத்தி எடுக்க, சரசம்மா”ஏம்மா! மருமகளே வலது கால் எடுத்து வச்சு, உள்ளார போ தாயி”என்றார்.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
இருவரில் யார் மனநிலை சந்தோஷமாக இருந்தது, யார் மனநிலை துக்கமாக இருந்தது என போகப் போக தான் தெரியும்.
இருவரையும் ஹாலில் அமர வைத்தனர்.
மாடி வீடு அது, கீழ் இரண்டு அறைகள், மாடியில் ஒரு அறை என இருந்தது.
ஏற்கனவே கீழே உள்ள அறைகள் பயன்பாட்டில் இருந்தது, மேல உள்ள அறையும் பயன்பாட்டில் தான் உள்ளது ஆனால் இத்தனை நாள் ஆண் சம்சாரியாக இருந்தவன் இன்று குடும்பஸ்தனாக மாறியுள்ளான்.
மரகதம் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு கொடுத்தாள், சரசு”ஏட்டி! மொதல விளக்கை ஏத்தி சாமிக் கும்பிட சொல்லு அப்புறம் இதை குடுக்கலாம், வயசு தான் ஆகுத தவர ஒரு புத்தியும் இல்ல உங்களுக்கு, நீ என்ன வாயை பாக்குற, போ போய் விளக்குல எண்ணெய்யை ஊத்தி வை”என லலிதாவை அதட்டினார்.
அவளும் மனதில் ‘கெழவிக்கு புது மருமக வந்ததும், தலை கால் புரியல’என சொன்னதை செய்தாள்.
மணமகள் மட்டும் உள்ளே சென்று விளக்கை ஏற்றிவிட்டு, பிறகு இருவரும் சேர்ந்து தரையில் விழுந்து வணங்கினர்.
பிறகு பாலும், பழமும் உண்டனர். மணமகளை கீழ் இருந்த அறையினுள் அமர வைத்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க செல்ல, சுற்றிப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அவள்.
ஹாலில் அமர்ந்திருந்த மணமகனின் நண்பன் தர்மன்“ஹப்பாடா! ஒரு வழியா உன் கல்யாணம் முடிஞ்சுட்டுடா, நல்ல வச்சானுங்க உனக்கு பேரு மணவாளன் னு, பேருல மட்டும் தான் மணம் இருந்துச்சு வாழ்க்கையில் நடக்குமானு கேள்வி குறியாகிட்டு, இப்ப தான்டா ஏதோ பெரிய சாதனை பண்ண மாதிரி தோணுது மச்சான்”என்றான்.
“நீ கொஞ்சம் வாயை மூடு, என்னைய கடுப்பாக்காம, கல்யாணமுனு காலையில் இருந்து பண்ற அலப்பறைகள் தாங்கல இந்த வீட்டு ஆளுங்க, இன்னும் என்னடா இருக்கு முறைங்க, நான் பாட்டுக்கும் என் வேலையை பாத்துட்டு செவனேனு இருந்தேன்”என நொந்தான் நளன்(மணவாளன்).
“அவ்ளோ தான்டா இனி நீயும் உன் பொண்டாடியும் ஆக வேண்டிய வேலையை பாருங்க”என்றான் அவன் காதோரமாக சென்று.
அவன் மண்டையில் தட்டிய நளன் லேசாக சிரித்தான்.
“அண்ணி! புடவையை மாத்திக்க சொன்னுச்சு அம்மா, புடவை கொண்டு வந்தீங்கள..?”என்றாள் உள்ளே வந்த மல்லி, நளனின் தங்கை.
“ம்ம்ம்! காருல இருக்கு, நான் போய் எடுத்து வரவா..?”
“அய்யோ! இருங்க நானே போய் யாராச்சும் எடுத்துட்டு வர சொல்றேன்” என மல்லி தன் கணவனான தர்மனிடம் கூறினாள்.
“எந்த பைடி, நீயே போய் எடுத்துட்டு வா”
“ஏங்க! அண்ணியோட பைங்க, அவங்க டிரஸ் மாத்தனுமுல”
“ஓ! தங்கச்சி பையா, சரி, சரி இரு”என எழுந்து சென்று சிறிது நேரத்திலே திரும்பி வந்தவன், “நிறைய பைங்க இருக்கு போய் எந்த கலருனு கேட்டு வா” என்றான்.
“டேய்! அந்த ஊதா கலர் தான் போய் எடுத்துட்டு வா”என்றான் நளன்.
“பாருடா! மச்சானுக்கு பொண்டாட்டி பை எல்லாம் அடையாளம் தெரியுது”என கிண்டல் செய்தப்படி வெளியில் சென்று எடுத்து வந்தான்.
மல்லி பையை கொடுத்துவிட்டு, “பரவாயில்ல அண்ணி! அண்ணனுக்கு உங்க பையை எல்லாம் அடையாளம் தெரியுது, எப்பிடி வரும் போதே சொல்லிட்டீங்களா..?”என நக்கலாக கேட்டவள், அவள் பதிலை எதிர்ப்பாராமல்”புடவை மாத்துங்க”என வெளியில் சென்று விட்டாள்.
****
இரவு…
நளன் சாமி அறை முன் வந்து நின்றான், புடவை மாற்றிக் கொண்டு தலை நிறைய பூ வைத்தவாறு, புது மஞ்சள் தாலி ஜொலிக்க மெல்ல நடந்து வந்தாள் தமயந்தி.
இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து சரசு சாமி அறையில் விளக்கேற்றி சாமிக் கும்பிடுமாறு சொன்னார்.
மரகதம் தாயின் காலில் விழச் சொன்னதும் , அவர்கள் விழ குங்குமத்தை எடுத்து”நீண்ட வருசங்க புள்ளக் குட்டியோட வாழனும்”என நெற்றியில் வைத்துவிட்டார் சரசு.
“எங்கம்மா அப்பா..?”என கேட்டான் நளன்.
“அவரு இன்னேரம் குடிச்சுட்டு கெடையாகிருப்பார், நீ போ உன் அறைக்கு” என்றார் சரசு.
நளன் அவன் அறைக்கு சென்று விட்டான்.
சிறிது நேரம் செல்ல, லலிதா கொண்டு வந்த பால் சொம்பை டம்பளரோடு வாங்கி சரசு மருமகள் கையில் கொடுத்தார்.
“மல்லி! நீ போய் மேல அறையை காட்டிட்டு வா”என்றார்.
மல்லி தமயந்தியை அழைத்துக் கொண்டுப் போய் அறையின் வாயிலில் விட்டு”நான் போறேன்!”என திரும்பினாள்.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு பின் நிதானமாக உள்ளே சென்றாள் தமயா(தமயந்தி).
கட்டிலில் அமர்ந்திருந்த நளன், உள்ளே வந்த தமயா கதவைச் சாற்றி தாழிட்டு விட்டு அவன் முன்னே வர, எழுந்து நின்றான்.
கையில் இருந்த பால் சொம்பை டம்ளர் மூடி இருக்க நீட்டினாள் அவன் முன் அதுவரை குனிந்திருந்தவள், நிமிரிந்தவாறு.
அவளையே பார்த்துக் கொண்டு அதை வாங்க கையை நீட்டினான்.
ஆனால் அது பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தது, இல்லல்லை! தமயா அவன் கையில் கொடுக்காமல் கீழேப் போட்டாள்.
அவன் நகர்ந்து பின்னே செல்ல, தமயா”என்ன பால் சொம்பு கீழ விழுந்துட்டா, உங்களை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையும் இப்பிடி தான் சிதறிட்டு” என்றாள் சட்டென்று.
“தமயந்தி!”என்றான் புரியாமல்.
“தயவு செஞ்சு என் பேர மட்டும் சொல்லாதீங்க, வா, போ, இந்தா, ஏய் னு கூட சொல்லுங்க ஆனா என் பேரு மட்டும் சொல்ல வேணாம்..”
அவன் புருவத்தை சுளித்தான், “எனக்கு புரியல, ஏன் இப்பிடி நடந்துக்குற?”
“உங்களுக்கு புரியலையா..? எப்பிடி புரியும்..? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, உங்க வயசு என்ன..? என் வயசு என்ன..?”
அவன் அமைதியாக அவளை நோக்கினான்.
“உங்க வயசு நாற்பத்தைந்து, என் வயசு என்ன தெரியுமா…?”
“முப்பத்ததைந்து தானே..?”
“யாரு சொன்னா..? எனக்கு வயசு இருப்பத்தெட்டு தான் ஆகுது”என்றாள் அவனை எரித்துவிடும் பார்வையோடு.
“ம்ம்ம்! என் வீட்டு வறுமை, உங்க வீட்டுக்கு வசதியாப் போச்சு, அதனால விலைப் பேசினாங்க, என்ன செய்றது தங்கச்சி, தம்பி அடுத்தடுத்து விலைப் போகனுமே என் அம்மாக்கு, வயசை மாத்திட்டு உங்க தலையில் நான் வந்து விழ..”
“இதுல என் தப்பு எதுவுமில்ல தம…”என ஆரம்பித்தவன், பெயரை சொல்லாமல் தவிர்த்தான்.
“உங்க தப்பு என்ன இருக்கா.? இத்தனை வருசங்க நீங்க ஏன் தனியா இருந்தீங்கனு எனக்கு தேவையில்ல ஆனா இதுக்கு அப்புறமும் ஏன் கல்யாணம் பண்ண யோசிச்சீங்க, ஓ! உங்களுக்கு ஒருத்தி பிள்ளை பெத்துக் கொடுக்க வேணுமுல அதுக்கு தானே..?”
அவளையே பார்த்தான் பதிலில்லாமல்
“கவலைப்படாதீங்க! என்னைய வாங்கிட்டு வந்தது புள்ளை பெத்து உங்க பெயரை சொல்ல வாரிசை உருவாக்க தானே இந்த வயசிலும், அந்த வேலையை செஞ்சுடுறேன், அப்புறம் எப்பிடி.? இன்னும் பத்து மாசத்தில் உங்கம்மாக்கு பேரப்பிள்ளை வேணுமாம். வரும்போது சொல்லி அனுப்பினாங்க, எனக்கு பிரச்சனையில்ல, காசு கொடுத்து வாங்கின மெசின் மாதிரி தானே நான், அதுவும் புது தரம் எப்பிடி வேலை செய்யாம போகும்.” என சென்று லைட்டை ஆப் செய்தவள், லைட் லேம் எதுவென்று பார்த்துப் போட்டாள், வேகமாக தன் புடவையை உருவி வீசினாள்.. பாவாடை, ஜாக்கெட்டுடன் அவன் மிக அருகில் நின்றாள்.
“இந்தா உங்க எதிரில் தான் நிக்குறேன் முதல் ராத்திரியை கொண்டாடுங்க” என்றாள் அவன் முன் கைகளை விரித்து நெருக்கத்தில் நின்று.
நளனுக்கு அவளின் செயல் மூச்சு முட்டுமாறு செய்தது.
“ஏய்! என்ன செய்ற, போ தள்ளிப் போ” என்றான் திரும்பி நகர்ந்தவாறு.
“அய்யோ! சும்மா நடிக்காதீங்க, நான் ரெடி தான், என்னைய தொட்டுக்கோங்க என்ன வேணாலும் பண்ணுங்க, எனக்கு கவலையில்லை உணர்வுமில்லை” என்றாள்.
நளன் அவள் அவிழ்த்துப் போட்ட புடவையை எடுத்து அவள் மேல் திரும்பாமல் போட்டு விட்டு, “புடவையை மொதல கட்டு நீ”என்றான்.
அவளும் எடுத்து கோபத்தோடு கட்டி முடிக்க, நளன் லைட்டை போட்டான்.
தன் பழைய துணியை எடுத்து சிதறிய பாலை துடைத்தவன், பாயை எடுத்து கீழேப் போட்டு படுத்துக் கொண்டான்.
மனதில் ஏதோ ஒரு வலி..
தமயந்தி லைட்டை ஆப் செய்து விட்டு, அந்த கட்டிலில் படுக்கப் போனவள், அதில் கிடந்த தலையணையை மட்டும் எடுத்து கட்டிலின் மறுப்பக்கம் தரையில் போட்டுப் படுத்தாள்.
ஆளுக்கொரு பக்கம் தரையில் படுத்தும் மனதில் வெவ்வேறு வலிகள்.
இவர்களின் வாழ்வு எப்பிடி விடியும்.. விடியலை நோக்கி..
காதல் மழலைகள் அடுத்து..
வயதை தாண்டி காதல் மழலையானது என்பது இவர்களுக்கு புரியும் போது அந்த வலிகள் பூக்களின் மென்மையாக மாறும்.