“இதான்பா நடந்தது, இது புரியாம ஆளாளுக்கு ஒரு கதையை திரிச்சி விட்டுருக்காங்க, பாவம் கடைசில முத்தையா” என்றார் முத்தையா நண்பர்.
“என்னங்க பேசுறீங்க…? விஜி அம்மா பக்கம் தப்பாவே இருக்கட்டும், அதுக்காக உங்க ப்ரண்ட் விஜி சித்தியை கூட்டிட்டு போயிடுவாரா..? அவங்களும் அக்கா, அக்கா மகளை நினைக்காம தன் சந்தோஷம் தான் முக்கியமுனு போயிருக்காங்க” என ரெனி முகத்தைச் சுளித்தாள்.
“இங்க பாரு அவங்க வயசுல வந்த ஈர்ப்பு அது, அதை சரியா பேசி அவங்களை மாத்தி இருக்கலாம், விஜி அம்மா கிட்ட அவங்க அப்பா சொன்னதை சரியா புரிஞ்சுகிட்டு புருசனோடு போய் இருந்தால் இப்படி நடந்திருக்காது” என்றான் அமர்.
“ஓ! அவங்க மனநிலை மாறும் வரை வெயிட் பண்ணி தான் ஆகனும், அதுக்காக ஆஃபர் மாதிரி தங்கச்சி வரேனு சொன்னா கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துவாரா.?”
“ஏம்மா! முத்தையாவும் மனுசன் தானே, ஒரு புள்ளைய பெத்துட்டா எல்லாம் முடிஞ்சுடுமா..? ஒழுங்கா பொண்டாட்டியா வந்து வாழாமல் அம்மா வீடே கதினு கெடந்தால், இது தான் பாடம், இப்ப வாழ்க்கையே போச்சா, அவங்க மனசு மாறும் வரை காத்திருக்கனுமுனா எப்போ நரைமுடி வரும் போதா..? ஆ! ஊனா! இதை ஒன்ன சொல்லுங்க பொண்டாட்டி, புள்ளையை பாக்காம போயிட்டானு…” என சீறினார் அவர்.
“உண்மை தானே சார், விஜி தான் இதில் பாதிக்கப்பட்டது” என்றான் அதுவரை அமைதியாக நின்ற ஜனா.
“தம்பி! நீங்க சொல்றது வாஸ்தவம் தான், பொண்டாட்டி, மச்சானுங்க மேல தான் கோபம் அவனுக்கு. அந்த பொண்ணு அன்னைக்கு பள்ளிக்கூடம் போகாம இருந்திருந்தா புள்ளை தூக்கிட்டு தான் வந்திருப்பான், அப்படியும் புள்ளையை கேட்டு அவன் அவ்வளவு போராடினான், ம்ம்ம்உகூம், மச்சானுங்க இவனை பழிவாங்குறதா நினைச்சு புள்ளையை அனுப்ப மாட்டேனு சொல்லிட்டாங்க, விஜி அம்மாவும் ஒத்த காலில் நின்னுச்சு புள்ளை என் கிட்ட தான் இருக்குமுனு.
ஒரு கட்டத்தில் பொண்டாட்டி, புள்ளை ரெண்டுப் பேரையும் சேர்த்து கூப்புட்டான், வரவே இல்லை, அப்புறம் அந்த பிள்ளை நிம்மதியா இருக்கட்டுமுனு அமைதியாகிட்டான், ஆனா கொழுந்தியாளை கூட்டிட்டு வந்துட்டாலும் உடனே எல்லாம் அவளை ஏத்துக்கலப்பா.
எனக்கு நல்லா தெரியும், அவன் பொண்டாட்டி, புள்ளை நெனப்பா தான் இருந்தான், ஜமுனாவும் அவன் கிட்ட எந்த உரிமையை எதிர்ப்பார்க்கல, அவனுக்கு சோறு ஆக்கிப் போட்டு தேவையானதை பாத்துட்டு வாழ்க்கையை ஓட்டுனாங்க.
பிறகு ஜமுனாவோட அன்பு அவனை கொஞ்சம் சங்கடமாக்கியது, மனசை மாத்திக்கிட்டான் அதுக்கு அப்புறம் பொறந்த பயல் தான் அந்தா நிக்குறான் ஜமுனா பக்கத்தில், எட்டாவது தான் படிக்குறான் பேரு விஜயந்திரன், ஆனாலும் முத்தையா மகளை இன்னும் மறக்கல தம்பி, அவன் உசுரு அந்த பொண்ணு” என்றார் அவர்.
மூவருக்குமே முத்தையா மீது ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றியது. காரணம் தவறாக முடிவு எடுத்து விஜியின் சித்தியை கூட்டிட்டு போய் இருந்தாலும் அதை சரிச் செய்ய முயற்சி செய்திருக்கார் என்ற கோணத்தில்.
தவறு செய்தமையால் அதனையே பேசி வீணாக்காமல், அதை சரிச்செய்ய முயன்றவருக்கு வாய்ப்பளிக்கவே இல்லை இன்றளவும் தர்மா குடும்பம்.
ஆளாளுக்கு பேசினார்களே தவிர ஒரு முடிவிற்கு வரவில்லை.
“அடடா! சவத்தை போட்டுட்டு என்னங்கடா அடிச்சுகிட்டு கெடக்குறீங்க..? இப்ப என்ன முத்தையாக்கு முழு உரிமையும் இருக்கு கோடிப்போட, அதான் ஒன்னுக்கு ரெண்டுப் பொண்ணையும் கட்டி இருக்கான், தர்மா! அமைதியா இருங்க நீயும் உன் தம்பிங்களும், இல்லைனா ஊரே கிளம்பி போயிடுவோம், கொஞ்சமாச்சும் ஊரோட ஒத்து வாழுங்க” என்றார் ஒரு பெரியவர்.
அதன் பின்னே அடுத்து சிலரும் பேச, தர்மா பிரதர்ஸ் அடங்கி, முத்தையா ஊருக்கு வழிவிட்டனர்.
“வந்தோமா, கோடியை போட்டோமானு போயிட்டேனு இருக்கனும் அடுத்தடுத்து காடாத்துக்கு வரேன், கருமாத்திக்கு வரேனு எவனும் என் வீட்டு வாசலுக்கு வரக்கூடாது” என எச்சரித்து தான் தர்மா அனுமதித்தார்.
ஜமுனா முதலில் தாய் பிணத்தை நோக்கி அழுதப்படி ஓடினார்.
பின்னால் மற்றவர்கள் சென்றார்கள்.
ஜனா, அமர், ரெனி மூவரும் அவர்களோடு சென்று ஓரமாக நின்றார்கள்.
அங்கு மங்கை, விஜி ஒரு பக்கமும், மருமகள்கள் ஒரு பக்கமும் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தனர்.
ஜமுனா தாயின் காலடியில் சென்று அமர்ந்து அழுது கத்தினார். அவரை கண்ட விஜி கண்டுக்கொள்ளாமல் திரும்பிக் கொண்டாள்.
ஆனால் அதுவரை மகளின் தோளில் கிடந்த மங்கை நிமிர்ந்து ஜமுனாவை பார்த்ததும்”என் புருசனை இழுத்துட்டுப் போனவ தான்டி நீ, எங்கடி வந்த..?” என தங்கையின் முன் வந்தவர், ஜமுனாவை அடிக்க ஆரம்பித்தார்.
சுற்றி இருந்தவர்கள் மங்கையை பிடித்தனர், விஜி அமைதியாக இருக்க, ஒருவர்”விஜி! நீ போய் அம்மாவை இழுத்துட்டு வா, இல்லைனா அவ கேக்க மாட்டா” என்றார்.
மங்கையை பிடித்தவர்களை அவர் உதறி தள்ளினார், “என்னை விடுங்க! இவ எதுக்கு வந்தா..?” எனக் கேட்டவாறு ஜமுனாவை அடித்தப்படியே.
விஜி முதலில் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும் பிறகு எழுந்து தாய் அருகே சென்றாள்.
பின்னால் மாலையோடு வந்த முத்தையா
இந்த காட்சியைக் கண்டு அப்படியே நின்றார் அவர்கள் முன்.
ஜெய்”அம்மா!” என தன் தாயை அடிக்காமல் தடுத்தான் இடையில் சென்று.
விஜி”அம்மா! அமைதியா இரு” என மங்கையின் கையைப் பிடித்தாள்.
“விடு விஜி!” என மங்கை முற்றிலும் மனநிலை மாறியிருந்தார் அப்போது.
ஜெய் நடுவில் மாட்டவும், முத்தையா அவனை பிடித்து இழுத்து நிற்க வைத்தார்.
“அப்பா! அம்மா பாவம்” என அவன் ஏதோ கூறவும், முத்தையா அருகில் இருந்தவரிடம் ஜெயை கைமாற்றினார்.
பிறகு மங்கை அருகே சென்று, அவரின் கையைப் பிடித்து, “நிறுத்து மங்கை, அடிக்குறதுனா என்னைய அடி” என்றார்.
அவரோ அப்பொழுது தான் நிமிர்ந்து கணவனை காண, விஜி தந்தையின் குரல் கேட்டும் திரும்பிப் பார்க்கவில்லை.
சட்டென்று அமைதியாகிய மங்கை “வந்துட்டீங்களா! நீங்க வந்துட்டீங்களா..? எனக்கு தெரியும் என்னைய கூட்டிட்டுப் போக வருவீங்கனு. தெரியுமுங்க போவோமா..? வாங்க போவோம்” என கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தார்.
முத்தையாவும், மங்கையும் நேரில் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றது.
மங்கை மனநிலை ஒரு நேரம் போல் இருக்காது என்பதால் அவரை வெளியில் எங்கும் விடுவதில்லை.
சில நேரங்களில் நல்லா பேசுவார், சில பொழுதுகளில் பச்சப்பிள்ளையாக மாறியிருப்பார், சில மணிகளில் பேசவே மாட்டார் இது பெரிய போராட்டமாக இருக்கும் அங்கு.
முதலில் கணவன் மீது கோபம் மட்டுமே இருந்தது, சில வருடங்கள் கடக்க அக்கம் பக்கத்தினர், விசேஷங்கள், துக்கங்கள் எங்கும் அவர் விமர்சிக்கும் பொருளாக பேசப்பட்டார் அதனால் வெளியில் செல்வதையே நிறுத்திக் கொண்டார்.
பிறகு வீட்டில் தன் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து தானாக பேச ஆரம்பித்தார், அது நாளடைவில் நோயாக மாறியது.
அவர் தன்னையே திட்டி தானாக பேசத் தொடங்கிய போது, கணவனோடு பேச வேண்டும் என தோன்றிய சுய உணர்வை மறந்து அதை தொலைத்திருந்தார்.
அவர் குழந்தையாக மாறும் போது தன் தாயிடம் சொல்வது தான் இது, ‘என் புருசன் வருவார் என்னைய கூட்டிட்டுப் போகம்மா’ என.
ஆனால் இன்று அவரை நேரில் பார்த்ததும் தன்னை தான் கூட்டிட்டுப் போக வந்ததாக எண்ணி பேசிக் கொண்டிருக்கார்.
விஜி திரும்பி”அம்மா! என்ன பண்ணிட்டு இருக்க” என முத்தையாவின் கையை தட்டிவிட்டு, தாயை தன்னோடு இழுத்து அணைத்தாள்.
“விஜி! அப்பா வந்து இருக்கார்டா, வா போவோம், வாடி” என்றார் சிரித்தவாறு.
அது இறந்து வீடு என்பதையும் மறந்து.
“அம்மா! உன் புருசன் செத்துட்டார், என் அப்பாவும் செத்துட்டார், இது யாரோ அம்மாச்சிக்காக துக்கம் விசாரிக்க வந்தவங்க, நீ வா உள்ள போகலாம் கொஞ்சம் நேரம் தூங்கு” என்றாள் முகத்தில் அத்தனை அழுத்தமாக.
முத்தையா மகளின் வாயில் இருந்து அதை கேட்டதும் கண்கள் கலங்கி நின்றார்.
ஜனாவிற்கு விஜியின் கோபம் புரிந்தது.
“இல்லடி! எனக்கு தெரியாதா உன் அப்பா யாருனு, இங்க பாருடி” என முத்தையா கையைப்பிடித்தார்.
“நீ வாம்மா” என தாயின் கையை உருவிய விஜியின் கையைப் பிடித்தார் முத்தையா.
“ஜிமிக்கி! அப்பாவை மன்னிச்சுடுடா” என்றார்.
இது முதல் மன்னிப்பில்லை, இதோடு எத்தனையோ மன்னிப்பைக் கேட்டு விட்டார் தந்தை, ஆனால் மகள் அசையவே இல்லை.
அவர் கையை விலக்கியவள் தாயை அழைத்துக் கொண்டு சென்றாள்.
மங்கையோ”என்னைய விட்டுட்டு போகாதீங்க, கூட்டிட்டுப் போங்க” என கூறிக் கொண்டே சென்றார்.
அடுத்தடுத்த காரியங்கள் நிறைவேறியது
சுடுகாடு வரை போய் பிணத்தை எரித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
அனைத்திலுமே ஓரமாக ஜனா குழு நின்றது.
வீடு வந்ததும் அவரவர் கிளம்புற நேரம் வர, பெரியவர் ஒருவர் தர்மா மற்றும் தம்பிகளை அழைத்தார்.
அவர்கள் வரவும், முத்தையா ஒரு பக்கம் நின்றுக் கொண்டிருந்தார்.
ஜனாவும் விஜியை பார்த்து சொல்லி விட்டுப் போகலாம் என நின்றான் மற்ற இருவருடன்.
பலர் கூடியிருந்தனர். “தர்மா! நான் பேசும் போது தாம் தூமுனு குதிக்காத, முத்தையா சொன்னதை சொல்லிடுறேன்” என்றார்.
தர்மா”என்ன….?” என்றார்.
“முத்தையா அவரோட பொண்டாட்டி, புள்ளையை கூட்டிட்டுப் போகனுமாம், அனுப்ப சொல்றார்” என்றார்.
“அதான் பல தடவை சொல்லியாச்சே, அனுப்ப முடியாது” என்றார்.
“என்னப்பா இது, வருச கணக்கா அவரும் கேட்டுட்டு இருக்கார், அப்ப தான் உன் அக்கா போக முடியாதுனு சொன்னுச்சு, இன்னைக்கு எல்லார் முன்னாடியும் கூட்டிட்டுப் போக சொல்லுதுல, அனுப்ப வேண்டியது தானே”
விஜி வரவும், பெரியவர்”இங்க பாரும்மா! உன் அப்பா கூப்புடுறார் அம்மாவை கூட்டிட்டுப் போம்மா” என்றார்.
“எனக்கு அப்பானு யாருமில்லை”
முத்தையா”எனக்கு பொண்ணு இருக்கா, இன்னைக்கு என் பொண்டாட்டி புள்ளை வராமல் நான் போக மாட்டேன் இங்கிருந்து” என அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
அனைவருமே புரியாமல் பார்த்தனர்.
“நானும் அம்மாவும் யாரு கூடவும் போக முடியாது” என்றாள் விஜி.
“ஏம்மா! என்ன புள்ள நீ, அப்ப சின்னதா இருந்த, இப்ப நாலு எழுத்து படிச்சு விவரமா யோசிக்க வேண்டாமா..?” என அதட்டினார் பெரியவர்.
“என்னதுக்கு அந்த புள்ளையை மிரட்டுறீங்க. அதான் சொல்லிட்டுல.. அந்த ஆளை கிளம்ப சொல்லுங்க, இல்லைனா என் தம்பிங்க தூக்கி வெளியில் போட்டுருவாங்க” என்றார் நக்கலாக தர்மா.
“விஜி! நீ போ உள்ள” என்றார் தர்மா.
விஜி திரும்பி வீட்டிற்குள் நடக்கப் போக,
“விஜி! நில்லு” என்றான் ஜனா.
விஜி அந்த குரலில் ஜனாவை உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
மற்றவர்களும் ஜனாவை பார்த்தனர் அதுவரை விஜியுடன் வந்தவர்கள் என மட்டுமே அறிந்தமையால்.
“ஜனா!” என்றாள் முழித்தவாறு.
“ஆமா! நானே தான்.. இப்ப நீ மறுபடியும் அடிமை வாழ்க்கை தான் வாழப்போற அதுக்கு உன் அப்பா கூடவே போகலாமுல” என்றான் நடுவே வந்து நின்று.
தர்மா, முத்தையா இருவருமே ஜனாவை யார் என்று யோசித்தார்கள்..