ஜனா அந்த இடத்தில் தன்னிடம் உரிமையாக பேசியதைக் கண்டு முதலில் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு தன்னிலை உணர்விற்கு திரும்பினாள் விஜி.
“ஜனா! நீங்க கிளம்புங்க” என்றாள் ரெனி மற்றும் அமரிடம் அழைத்துச் செல்லும்படி கண்களால் சைகை செய்தவாறு.
“விஜி! நான் கிளம்ப தான் போறேன், பின்ன என்ன இந்த வீட்டில் உட்காந்து விருந்தா சாப்பிடப் போறேன், நீயே இந்த வீட்டு விருந்தாளி தான், இதுல நானுமா..? நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”
விஜி என்ன பதில் என்பது போல் அவனை பார்த்து முறைத்தாள்.
ஆனால் உடனே தர்மா”யாரு தம்பி நீங்க சம்பந்தமே இல்லாமல் இந்த இடத்தில் வந்து நிக்குறீங்க…? அது மட்டுமில்லாமல் எங்க வீட்டுப் பொண்ணை கேள்விக் கேட்டுட்டு இருக்கீங்க.. .? சுய நினைவோடு தான் பேசுறீங்களா..?” என நக்கலாக கேட்டார்.
“அம்மா செத்ததுக்கு நாலு சொட்டு கண்ணீர் வரலை உங்களுக்கு, நான் ஏன் சார் ப்ரண்டோட அம்மாச்சி செத்ததுக்கு ரெண்டுச் சொட்டு கண்ணீர் விடப் போறேன், அவங்க அழுததால் தான் நாங்களே துணைக்கு வந்தோம்”
சுந்தர் தர்மாவிடம்”விஜி சொன்ன அந்த ப்ரண்டுப் போல அண்ணே” என்றான் மெதுவாக.
“ஓ! அந்த முப்பது லட்சம் ப்ரண்டா நீ..? அதான் இப்படி வந்து நடுவில் துள்ளுறீயா…? போ! போ! உன் கணக்கு எல்லாம் செலவு லிஸ்ட், பின்னாடி பாக்கலாம்” என்றார் சாதரணமாக.
“அந்த மாமா மூன்னுப் பேரையும் பத்தி கேள்விப்பட்டேன், இப்ப தான் நேரில் பாக்குறேன் இந்த ஒரு கோடி மாமன்களை” என்றான் ஜனாவும் சாதரணமாக.
“ஏய்! யார் கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்க..? மரியாதையா இடத்தைக் காலிப் பண்ணு!” எனக் கத்தினார் ராமு.
“ஜனா! என்ன இது எல்லாம்..? கிளம்புங்க முதலில்” என எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள் விஜி.
முத்தையா ஜனாவை பார்வையில் அளந்தப்படி அமர்ந்திருந்தார்.
“விஜி! ஃபர்ஸ்ட் நான் சொல்றதை கேளு” என ஆரம்பித்த ஜனாவை வெளியில் போக சொல்லி பாய்ந்து வந்தனர் ராமு மற்றும் சுந்தர்.
“ஏய் இருங்கப்பா! அந்த புள்ள விஜியோட கூட்டாளினு சொல்லுது, விஜி புள்ளையும் மறுக்காம பேசிட்டு தானே இருக்கு, நீங்க என்னதுக்கு துள்ளிட்டு வரீங்க” என தடுத்தனர் அங்கிருந்தவர்கள்.
“ஏப்பா! இவங்க குடும்ப விசயத்தில் நீ ஏன் தலையிடுற..?” எனக் கேட்டார் ஒருவர்.
“எனக்கு விஜியை நல்லா தெரியும், அவளுக்கு எது நல்லதுனு எடுத்து சொல்வதில் அவங்களுக்கு சொந்தமா தான் இருக்கனுமாங்கய்யா, அப்ப நீங்க யாரு விஜிக்கு..?” எனத்திருப்பி அவரை கேட்டான்.
“நான் இந்த ஊருப்பா, நாங்க எல்லாம் சொந்தப்பந்தம் தான் தம்பி”
“என்ன இருந்தாலும் விஜி பிறந்த ஊர் வச்சு பார்த்தால் உங்களுக்கு அடுத்த ஊர்ப் பொண்ணு தானே”
“டேய்! நாங்களும் போனா போதுனு மரியாதைக் கொடுத்து பேசினால் நீ என்ன எல்லாருக்கும் கிளாஸ் எடுத்துட்டு இருக்க, கிளம்புடா முதலில்” என அதட்டினார் ராமு.
“ஹலோ! உங்க மரியாதையை எதிர்ப்பார்த்து எல்லாம் நான் இங்க பேச வரலை” என்றவன், பெரியவர்களிடம் திரும்பி”இங்க பாருங்க நான் விஜிக் கிட்ட ஒரு விசயத்தை புரிய வச்சுட்டுப் போறேன்” என்றான்.
“சரிப்பா! நீ என்ன பேசமுனு நினைக்குற பேசு” என்றார் அவர்.
தர்மா”என்ன சித்தப்பா! இவன் யாரு முதலில்? பெத்த அப்பனே வாயை மூடிட்டு உட்காந்திருக்கான், இவன் எல்லாம் பேச வாய்ப்புக் கொடுப்பதா…?” என சீறினான்.
முத்தையா”தர்மா! வார்த்தைகள் தடித்தால் அதுக்கான பலனை வாங்க வேண்டி வரும், அந்த பையனை நீ முப்பது லட்சமுனு சொல்ற, அந்த புள்ள உன்னை ஒரு கோடினு சொல்லுது, என்னனு ஊரும் தெரிஞ்சுக்குமுல, நம்ம குடும்பம் தான் ஊருக்கே கதையா இருக்கே” என்றார் வெறுப்பாக.
“விஜி! இப்ப நான் இப்படி பேசுவதால் உடனே உன் அப்பாக்கு சப்போர்ட் பண்ணி பேசுறேனு தப்பா நினைக்காத, அவரோட ப்ரண்டு அதோ நிக்குறாரே அவர் தான் இப்ப உங்க குடும்பக் கதையை பத்தி எங்க கிட்ட சொன்னார்.
எனக்கு தோன்றியது இது தான், ஆமா! உன் அப்பா ஒன்னும் உன் அம்மாவை டைவர்ஸ் பண்ணிட்டு செகண்ட் மேரெஜ் செய்யவில்லை, சோ! லீகலி உன் அம்மா தான் வைய்ப், அப்ப அந்த செகண்ட் மேரெஜ் இல்லீகல் தான்.” என நிறுத்த அனைவருமே ஜனாவை ஒரு விதமாகப் பார்த்தனர்.
ஜமுனா மனதில் கலக்கம் வந்தாலும், இந்த வயது எதையும் ஏற்க தயாராக இருந்தது.
“உன் மாமா எல்லாரும் உன்னைய படிக்க வச்சு, வளர்த்து இருக்காங்க, அதை நான் தப்பே சொல்லலை, அப்ரிசேட் பண்றேன். அது சாதரண விசயமில்லை, மனசு வேணும்.
ஆனால் கடைசியா அவங்க செய்ய இருப்பது எப்படி இருக்குனு தெரியுமா..? ஏதோ ஆட்டை குலசாமிக்காக வளர்த்து அதை நல்ல நாள் பார்த்து பலிக் கொடுத்து விருந்து வைப்பது போல தான் இருக்கு.
உனக்கு புரியுதா அது..? என்ன தான் நீயும், உன் அம்மாவும் இந்த வீட்டில் செல்வ செழிப்பாக இருந்தாலும் அவங்க எடுத்திருக்க முடிவு அவங்களோட அடிமைத் தனத்தை தான் காட்டுது.
இவ்வளோ அடிமையாக அவங்களுக்கு கீழ் இந்த வீட்டில் நீங்க வாழ்வதை விட, உங்களுக்கே உரிமையான வீட்டில் போய் ஃபுல் ரைட்ஸோடு வாழலாமே விஜி, உங்க அப்பா பண்ணியது ரைட் ஆர் ராங் அதை பத்தி பேசிட்டே இங்க உங்க வாழ்க்கையை தொலைக்காமல் அங்க போய் உங்க வாழ்க்கையை உரிமையாக வாழ்ந்தால் மத்தவங்க பார்வையில் உங்க மதிப்பு மாறும்.
இல்லைனா புருசன் இல்லாதவர், அப்பா இல்லாதவர், மாமான்களின் தயவில் வாழ்பவர்களுனு பட்டம் மட்டும் தான் கிடைக்கும்.
உன் அம்மாக்கு அப்ப போக விருப்பமில்லை, ஆனா இப்ப போறேனு சொல்றாங்கனா அவங்க ஆழ்மனதில் அந்த எண்ணம் இருக்குனு தான் அர்த்தம்.
நீ அப்ப சின்னப்பொண்ணு, ஆனால் இப்ப படிச்சு, வேலையில் இருப்பவள் கொஞ்சம் புத்திசாலியாக யோசி விஜி.
நீங்க ஏன் ஒதுங்கி வாழனும்..? அப்பவே உன் அம்மா இதை யோசிச்சு போயிருந்தால் இன்னேரம் உனக்கான வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் விஜி.
உன் அப்பா, சித்தி, அம்மா இவங்களுக்கு ஒரு சூழ்நிலை காரணங்கள் இருந்தாலும் உன்னைய கூட்டிட்டுப் போக உன் அப்பா உண்மையில் போராடி இருக்காரு தானே.
சரி! சிட்டி லைஃபில் நீ எத்தனை பேரை பாத்து இருக்க, கல்யாணம் ஆகியும் இல்லீகல் கான்டெக்ட், குழந்தையை பொண்டாட்டியோட விட்டு டைவர்ஸ் வாங்கிட்டு ஹாயாக போற கணவர்மார்கள், பொண்டாட்டிக்கு தெரியாமலே நெக்ஸ்ட் நெக்ஸ்ட்னு போற ஆண்கள், இவங்க மத்தியில் உன் அப்பா இப்ப வரை உன்னைய கூட்டிட்டுப் போகனுமுனு யோசிக்குறார்.
உன் அம்மா கடைசிக்காலம் அவரு வீட்டில் இருக்கட்டுமே, சுய உணர்வில் போகாதவங்க அட்லீஸ்ட் இப்ப போக ஆசைப்படுறாங்கனா அவங்களுக்காக யோசி” என முடித்தான்.
“பேசி முடிச்சுட்டீயா..? விஜி இந்த வீட்டில் இதுவரை என் அக்கா பொண்ணாக இருந்தாள், ஆனா இனிமே என் தம்பி பொண்டாட்டியா வாழப்போறாள், போதுமா..? அவளுக்கு இனி எல்லா உரிமையும் இங்க இருக்கு” என தர்மா அதிகாரமாக கூறினார்.
“தர்மா! என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண என் கிட்ட கேக்கனும்” என்றார் முத்தையா.
‘நீ யாரு…? நான் ஏன் உன்கிட்ட கேக்கனும்
கல்யாணம் பண்ணப் போற விஜியே ஒத்துக்கிட்டா, நீ எல்லாம் தேவையே இல்லை போ! அப்படியே இவனையும் கூட்டிட்டுப் போ” என்றார் தர்மா.
விஜி அப்படியே நின்றாள்.
“பாரு விஜி! இதான் உன் மாமா, உன்னைய ஒன்னும் இவங்க பாசமாக எல்லாம் வளர்க்கவில்லை, உன் அப்பாவை பழிவாங்கனும் அது தான் முக்கியம். உன்னைய வச்சு பழித்தீர்க்குறாங்க, இன்னும் அது குறையவில்லை. நீ இல்லைனு சொன்னாலும் அவர் தான் உன் அப்பா.. சரி! இவங்க உன்னைய பாசமா வளர்த்தவங்கனா உன் மனசுல உள்ள ஆசையை நிறைவேத்த சொல்லு” என்றான்.
விஜி முழிக்கவும், மற்றவர்கள் என்னவென்று புரியாமல் பார்த்தார்கள்.
“என்ன தம்பி ஆசை..? அதையும் நீயே சொல்லு..” என்றார் ஒருவர்.
“நானும் விஜியும் விரும்புறோம், எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க, அவங்க வளர்த்தப் பொண்ணுதானே, அவளோட ஆசையை நிறைவேத்தட்டும், ஓகே! விஜி அப்பாவோட அனுப்ப வேணாம், எனக்கு கல்யாணம் பண்ணி என் கூட அனுப்பி வைங்க”
விஜி அதிர்ச்சியாய் பார்த்தாள் ஜனாவை, இப்படி எல்லாருக்கும் முன் சொல்லிட்டான் என்று.
“டேய்! எனக்கு தெரியுமுடா நீ அங்க சுத்தி இங்க சுத்தி நடுவில் நிக்கும் போதே, அவ பெயரில் உள்ள இடத்தை வித்துட்டு அந்த முப்பது லட்சத்தை ஆட்டைப் போட தானே பாக்குற..?” என எகிறிக் கொண்டு எழுந்தார் தர்மா.
“யாரு..? நான்.. சும்மா கதை விடாதீங்க கோடி மாமா, அந்த இடத்தை ஒரு கோடிக்கு விலைப் பேசிட்டு அதும் பத்தாமல் இன்னும் போயிட்டு இருக்கீங்க, அது எதுக்கு…? உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சு அதை ஆட்டையப் போட தானே..?”
“விஜியை நாங்க வளர்த்தோம், எங்க அக்காவும் விஜியோட தங்க வெளியில் எவனையோ தேடி வைப்பதை காட்டிலும் என் தம்பினா அது இயற்கையான பாசத்தில் இருக்குமுனு யோசிச்சோம், நீ இடையில் வந்து விஜி மனசை களைச்சுவிடப் பாக்குறீயா..?”
“அவ என்னைய தான் விரும்புறா, உங்க தம்பியை இல்லை”
“டேய்! நீ போக மாட்டீயா..? விஜியை சொத்துக்காக ஏமாத்தி கூட்டிட்டுப் போகப் பாக்குறீயா..?” என சுந்தர் ஜனா மீது பாய்ந்தான்.
ஜனாவிற்காக அமர் வர, ராமுவும் தம்பிக்காக போக என தள்ளுமுள்ளு நடந்தது.
முத்தையா விஜியை தான் நோக்கினார். அவளோ விழிகளில் அவர்களை தடுக்க முடியாமல் தவித்தாள்.
பெரியவர்கள் சென்று அவர்களை விலக்கினர்.
சுந்தரும், ராமுவும் எகிறி துள்ளிக் குதித்தனர், ஜனாவிற்கு சில அடிகள் கிடைத்தாலும் பதிலிற்கு பல அடிகளை வழங்கினான் கோபத்தில்.
முத்தையா ஜனாவை சென்று தடுத்தார்.
“தம்பி! விடுங்க நீங்க” என தடுக்க, பெரியவர்களும் பேச, விலகினர்.
“உங்களுக்கு எதுக்கு முப்பது லட்சம் வேணும்…?” எனக் கேட்டார் முத்தையா.
“எனக்கு பணம் வேணாம், விஜியை கல்யாணம் பண்ணினால் போதும்” என்றான் இதழில் இரத்தம் வழிய.
“டேய்! நடிக்காதடா, அவளை கல்யாணம் பண்ணினால் சொத்து உனக்கு வந்துடுமுனு சும்மா வேசம் போடுறீயா..?” எனக் கேட்டான் சுந்தர்.
“அந்த பிளான் எல்லாம் உங்களோடது, அந்த சொத்தை வித்து நீங்க எதையோ பண்ணுங்க, விஜியை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் தைரியமாக.
அமர்”டேய்! வாடா போகலாம், எனக்கு இது எல்லாம் சரியா வருமுனு தோணலை” என்றான் நண்பனிடம்.
“சும்மா இரு அமர்! இவ்வளோ தூரம் எகிறிட்டு வராங்கனா, விஜி இவங்களை மீற மாட்டானு தைரியம், அவ அப்பாவை பேச விடாமல் அடக்கி அவர் தப்பினை சொல்லி இவளை டைவர்ட் பண்ணியே இத்தனை வருசங்களும் ஓட்டிட்டாங்க, அட்லீஸ்ட் நான் கேக்கனுமுல, ஏனா! எனக்கு விஜியை இப்படியொரு இடத்தில் விட்டுப் போக மனசில்லை, அவ வாழ்க்கை இதுக்கு பிறகு நல்லா இருக்கனுமுடா, நான் எந்த தப்பும் பண்ணவில்லை, காதலிக்குறோம் கல்யாணம் பண்ணி வைங்கனு உரிமையாக கேக்குறேன் பதில் சொல்லட்டும்” என்றான்.
சட்டென்று ஒரு பெரியவர்”ஏம்மா! இந்த தம்பி இவ்ளோ தூரம் பேசிட்டு இருக்கு நீ என்ன அமைதியா இருக்க…? ஆமா, இல்லைனு சொல்லு, சுந்தரை கல்யாணம் பண்ணிக்க தலை ஆட்டிட்டனு தர்மா சொல்றான், இந்த தம்பி என்னனா அவரை நீ விரும்புறேனு சொல்றார், வாயை தொறம்மா” என்றார் வேகமாக.
“என்ன பேசுறீங்க, அவ சின்னப்பொண்ணு ஒன்னும் தெரியாது, இவன் ஏதாவது மனசை களைக்கப் பார்த்திருப்பான், அது முடியலைனு எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குறான், நீங்களும் அவனிடம் பச்சப்புள்ள மாதிரி ங்கு கேட்டுட்டு இருக்கீங்க” என தர்மா எதிர்த்தார்.
“இருப்பா! அந்த பொண்ணு படிச்சுட்டு சென்னையில் வேலைப் பாக்குது, என்ன இன்னும் சின்னப் பொண்ணுனு பேசிட்டு இருக்க, பத்து வருசத்துக்கு முன்னாடி இதே சொன்ன கேட்டுக்கிட்டோம் இன்னுமா அதே சொல்லுவ, அது எல்லாம் அந்த புள்ளை பேசும், பேசட்டும்” என்றார் ஒருவர் முத்தையா ஊர்ப்பக்கம்.
ரெனி அமரின் காதில்”பத்து வருசமா இந்த குடும்பத்திற்கு பஞ்சாயத்து பண்றது தான் இவங்க வேலையோ..?” என முக்கிய கேள்வியைக் கேட்டாள்.
அவனோ”ம்ம்ம்! இருக்கும் போல பாரு எல்லாம் சுகர், பிரஷர் வந்த பெருசுகளாக இருக்கு, டைம் பாஸ் பண்ண வேண்டாமா..? எல்லாம் வருவாங்க இதோ இப்படி சேர் போட்டு பேசிட்டு, விஜி மாமன்கள் குடுக்குற மரியாதையில் சரி அடுத்த நிகழ்ச்சியில் பாத்து தீர்த்துக்கலாமுனு போயிடுறது போல, இப்ப என் நண்பன் இடையில் புகுந்து ஆட்டத்தைக் களைச்சுட்டு இருக்கான்”
“ஏன்! அவர் லவ்வருக்காக பேசுறாரு, அது பொறுக்கலையா உங்களுக்கு..?”
“யாரு உன் ப்ரண்ட் அந்த ஜிமிக்கிப் பொண்ணுக்காக தானே, ஜிமிக்கி ஏதாவது ஒரு பக்கட்டு ஆட்டனுமுல.. பாரு புடிச்ச வச்ச புள்ளையார் மாதிரி நிக்குது” என முகத்தை சுளித்தான்.
“ஹலோ வெயிட் மேன்! இப்படி உன் ப்ரண்டு லவ் பண்றோம், கல்யாணம் பண்ணி வைங்கனு பொட்டுனு கேட்டா அவ யோசிக்க வேண்டாமா..?”
“என்ன சுந்தரா..? ஜனாவா..? அப்படினா”
“அப்படி எல்லாம் அவ ஆப்சன் வைக்க மாட்டாள்..”
“அவங்க சொல்றதுக்குள்ள இங்க ஆப்சனே இல்லாமல் போயிடும் போல” என்றான் கடுப்பாக அமர்.
“என்னம்மா யோசிக்குற..? பதில் சொல்லு விஜி” என்றார் அதே ஊர்க்காரர்.
அங்கு இருந்த பெரியவர்களுக்கு இவங்க கதையை முடித்து விட்டால் போதுமென்று இருந்தது. எப்ப பாரு பிரச்சனையாக போய் கொண்டே இருக்கே என்ற சலிப்பு அவர்களுக்கு.
“ஆமா! நான் ஜனாவை தான் விரும்புறேன்” என்றாள் ஒரு முடிவாக.
ஜனா முகம் பிரகாசமானது, ஆனால் மாமான்கள் முகங்களோ கோபத்தில் விரிந்தது.
விஜியை சந்தோஷமாக பார்த்த ஜனாவை, அவளின் கோபப் பார்வைகள் தான் தாக்கியது.
அனைவர் முன்னிலையிலும் அவன் சொல்லியது ஏனோ அவளை சங்கடப்படுத்தியது, அதையும் மீறி ஜனாவா..? சுந்தரா…? என்ற கேள்வியில் ஆப்சனே இல்லாமல் ஜனா மட்டுமே மனதில் நின்றான், அதனால் “ஜனா” என்று கூறினாள். ஆனால் ஜனாவின் மேல் மொத்த கோபத்தையும் கொட்டுவதற்காக காத்திருந்தாள்.