விஜியிடம் பல அடிகளை வாங்கியவன்
முதலில் தடுத்து பயனில்லாமல், பிறகு சமாதானம் செய்வதற்கு முயற்சித்தான்.
ஆனால் அவளோ கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
“விஜி! ஜஸ்ட் காம்டி” என்றாள் ரெனி.
“ஆமாங்க! கொஞ்சம் பொறுமையா இருங்க, பாவம் அவன்” என நண்பனுக்காக பேசினான் அமர்.
விஜி அமைதியாகவில்லை. ஜனா மூச்சினை இழுத்துவிட்டு அதுவரை விட்டுக் கொடுத்தவன் பட்டென்று அவளின் இரு கைகளையும் பிடித்து மடக்கி தன் அருகே இழுத்தான்.
“விடுடா! விடுனு சொல்றேன்ல” என முண்டி முயற்சித்தாள் அவனிடமிருந்து விலகுவதற்கு.
“ஜிமிக்கி! ப்ளீஸ் அமைதியா இரு, கொஞ்சம் பொறுமையா யோசி” என சமாதானமாக கூறினான்.
“என்னத்த யோசிக்க சொல்றடா, அறிவு இருக்கா உனக்கு…? இப்படியா ஒரு காரியம் செய்வ..? நான் இருந்த சூழ்நிலை என்ன..? நீ, உன் வீட்டில் இருக்க சூழ்நிலை என்ன…? நம்ம கல்யாணப் பண்ணி குடும்பம் நடத்துற மனநிலையிலா இருக்கோம்…?” என்றாள் வேகமாக.
ஜனாவிற்கு அது சரியென புரிய, அவளின் கைகளை மெல்ல விடுவித்தான். அவன் விடுவித்த வேகத்தில்”அய்யோ! அய்யோ! இது என்ன சோதனை எனக்கு கடவுளே! என்னைய நிம்மதியாகவே இருக்க விட மாட்டீயா..?” என தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
“ஜிமிக்கி!” என்றான் மெல்ல அவள் கையைப் பிடித்தவாறு.
அவன் கையை தள்ளிவிட்டவள், “என்னைய தொடாத சொல்லிட்டேன், அப்புறம் நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என கத்தினாள்.
ஜனா அவளிடம் இருந்து விலகி அமர்ந்தான்.
அமர் கடுப்பாகி ஒரு ஓரமாக காரினை நிறுத்திவிட்டு,
“ஏங்க! அவன் என்ன வேணுமுனேவா தாலியை மாட்டினான், இல்ல உங்க கூட வந்ததே தாலிகக் கட்டனு நினைச்சீங்களா…? உங்களுக்கு அப்பா இருக்கார், இப்படி ஒரு ப்ளாஷ்பேக் இருக்குனு யாருக்கு தெரியும்..?” எனக் கேட்டான்.
“அதானே! கூடவே இருந்த எனக்கும் தெரியல, அங்க உன் மாமிங்க அப்படி பேசுறாங்க, மாமனுங்க என்னமோ உன்னைய சட்டப்படி அக்ரீமென்ட் போட்டு எழுதி வாங்கிட்ட மாதிரி ஃபுல் ரைட்ஸோட ஆர்டர் போடுறாங்க, நல்லவரோ, கெட்டவரோ உன் அப்பா பண்ணியது தான் சரி, இல்லைனா உன் மாமனுங்களை அடக்க முடியாது” என்றாள் ரெனி.
“நீங்க அப்பா கூட போக அடம் பண்ணீங்க, ஆனா உங்க அம்மா புருசன் கூட போக நிக்குறாங்க, அதான் நீங்க இவனை புடிச்சிருக்குனு சொன்னீங்கள பின்ன என்ன…? உரிமையா தாலிக் கட்டிட்டான் அதுக்கு இப்படி போட்டு அடிக்குறீங்க..? அவனுக்கு திருப்பி அடிக்க எவ்வளோ நேரம் ஆகும்..?” என வேகமாக பேசினான் அமர்.
“அமர்!” என நண்பனை அதட்டினான் ஜனா.
“நீ சும்மா இருடா, உனக்கு இருக்க பிரச்சனையில் இது எல்லாம் தேவையா.?
யாரு எப்படி போனா உனக்கு என்ன..? அப்படியே நீ தாலிக் கட்டுற அளவிற்கு உங்க காதல் என்ன காவியக் காதலா…? நீ இவங்களை பாத்து எத்தனை நாள் ஆகுது.? எனக்கு வர கோபத்திற்கு ஏதாவது சொல்லிடப் போறேன்” என அமர் வார்த்தைகளை பொரித்துத் தள்ளினான்.
ஜனாவிற்கு கோபம் வர”அமர்! நீ ரொம்ப பேசுற, அது என்ன காவியக் காதல்..? ஓவியக்காதல்…? காதலிச்சு கல்யாணம் பண்ணி பதினைந்து வருசங்கள் மேல் ஒன்னா வாழ்ந்தவங்களே பிரியிற காலம் இது. அப்ப அவங்க காதல் என்னனு சொல்லுவ, சரித்திரக் காதலா…? எங்க மனசுக்கு புடிச்சிருக்கு அவ்ளோ தான்.
எனக்கு இவளை தனியா விடக்கூடாதுனு மட்டும் தான் மனசுல பட்டுச்சு, அப்ப உரிமையா கூடவே வச்சுக்க ஒரே வழி தாலிக் கட்டி பொண்டாட்டி ஆக்குவது அதை தான் யோசிக்காமல் செஞ்சேன்.” என்றான்.
“ஹேய்! ஏதாவது பேசுடி, உனக்காக தானே இவ்வளவும் செஞ்சார் ஜனா, இல்லைனா நீ இன்னும் அந்த கூட்டத்தில் தான் மாட்டிக் கிடக்கனும், இல்லைனா உனக்கு புடிக்காத அப்பா வீட்டில்….” என முடிக்கவில்லை ரெனி,
“அதை சொல்லாத, அவர் தயவில் போகவே மாட்டேன் நான்..” என்றாள் பட்டென்று.
“சரிடி! உன் மாமா, மாமிங்க பேசியதை கேட்டிள, அவங்க எவ்வளவு செல்ஃபிஷ்ஷா இருந்து இருக்காங்க, ஆனா நீ கடைசிவரை அவங்க கிட்ட கெஞ்சிட்டு நிக்குற.. பாக்கவே சகிக்கலை. நீ எல்லாம் படிச்சு என்னதுக்கு பிரயோஜனம்.?” என மனதில் இருப்பதைக் கொட்டினாள் ரெனி.
விஜி அவளையும், மற்றவர்களையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,
“உங்களுக்கு எல்லாம் வளர்ந்து, நல்லா படிச்சு, வேலையில் இருக்க இந்த விஜியை தான் தெரியும்.. ரெனி! நீ சொல்ல வரது படிச்சு இருந்தும் முட்டாளா இருக்கீயேனு தானே..? ஆமா! இந்த படிப்பைக் கொடுத்தது அவங்க தான்டி, அதனால தான் முட்டாளா இருக்கேன் அவங்க முன்னாடி.
அன்னைக்கு சின்னப்பொண்ணா இருந்த எனக்கு சாப்பாடு, துணிமணிகள், படிப்புனு எந்த குறையும் வைக்காமல் பாத்துக்கிட்டாங்க என் மாமா மூன்னுப் பேரும், இதோ இப்ப நல்ல வேலையில் இருக்கேனா அது அவங்க கொடுத்த அடையாளம் தான்டி.
சுந்தர் மாமாவும் என்னைய அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப் போறமோனு எல்லாம் தப்பா பார்த்ததே இல்லை, ஏதோ அந்த இடம் விலைக்கு வந்த போது அவங்க யோசிச்சது எல்லாமே தப்பா போயிட்டு.
உண்மை தான் மாமிங்களுக்கு நாங்க அங்க இருப்பதில் விருப்பமே இல்லை தான், அவங்களுக்கு புடிக்கனுமுனு அவசியமே இல்லையே! அவங்களுக்கு இருந்த இத்தனை நாள் ஆதங்கத்தை இன்னைக்கு என் அம்மாவை வெளியில் தள்ளி ஆத்திக்கிட்டாங்க, பரவாயில்லை.
மாமிங்க வரதுக்கு முன்னாடி மாமாங்க எங்களை தாங்கினாங்க தான், அந்த உண்மை எனக்கு மறக்காது. எல்லா நேரமும் அதை எதிர்ப்பார்க்க முடியாது தான். மாமாங்களுக்கு கோபம் நான் இவரை புடிக்குதுனு சொன்னதுக்கு. அவங்க எல்லாருமே எங்களுக்கு செஞ்சாங்க சொல்லிக் காட்டிடாங்க.
ஆனா நாங்க அனுபவிச்சுட்டு பதில் எப்படி பேச முடியும்..? அவங்களை எதிர்த்துப் பேசுற இடத்தில் நான் இல்லை, என்னால அது முடியாது, ஏனா! அந்த வீட்டில் பல வருசங்களாக நல்லது, கெட்டது எல்லாத்தையும் அனுபவிச்சு இப்ப வளர்ந்து நிக்குறேன்.
நான் வளர்ந்ததில் நன்றிக்கடனே அதிகமாக இருக்கு, அவங்க என்னைய கொன்னுப் போட்டலாம் நான் இப்படி தான் அவங்க முன்னாடி, சின்ன வயசில் இருந்து அப்படி பழகிய மனசு, அவங்க தப்பே செஞ்சாலும் எதிர்த்துப் பேச வராது எனக்கு.
அப்ப இருந்தே எல்லாத்தையும் மனசுல போட்டு அடக்கியே பழகிட்டேன் ரெனி, அது ஒரு வித பழக்கமா மாறிட்டு உங்களுக்கு எல்லாம் சொன்னால் புரியாது.
நான் இப்படி ஒரு மனநிலையோடு வளர காரணம் யாரு…? அவருக்கு நல்ல மனசு தான் இல்லைனு சொல்லல, அம்மா, மாமா, சித்தி இவங்க எல்லாரையும் தாண்டி நான், நான் மட்டும் தான் சின்ன வயசில் இருந்து அந்த உறவை மிஸ் பண்ணி ஏங்கி ஏங்கி அது மரத்துப் போச்சு.. அதுல இனி அவர் மேல் பெத்தவருனு உணர்வு வராது” என கண்களில் நீர் வழிந்துக் கொண்டே இருக்க பேசி முடித்தாள்.
மற்ற மூவருக்குமே ஓரளவு புரிந்தது அவள் மனதில் ஆழமாக அவளோட மாமான்களின் நன்றிக்கடனை தாங்கிட்டு இருக்கிறாள் என்று.
ரெனி”விஜி! நான் கேக்குறேனு தப்பா நினைக்காத, அப்ப உன் மாமா கேட்டப் போது சுந்தர் மாமாவை புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லி இருந்தால், நீ ஆயுசு முழுக்க அவங்களுக்கு நன்றிக்கடன் செலுத்திட்டே இருக்கலாமுல. எதுக்கு ஜனாவை புடிச்சிருக்குனு சொன்ன…?” எனக் கேட்டாள்.
கார் கண்ணாடி வழியே வெளியில் பார்த்தவள், கண்களை துடைத்தவாறு
“அப்ப என்னோட மரத்த உணர்வுக்கு உயிர் கொடுக்க வந்த ஒருவருனு மனசு சொல்லுச்சு இவரை, சுந்தர் மாமா.? இவரா..? கேட்டப்ப, என்னால பொய் சொல்ல முடியல, அப்படி சொன்னா அது சுந்தர் மாமாவை தெரிஞ்சே ஏமாத்துற மாதிரி ஆகிடும். அதனால சொன்னேன் ஆனா அது இப்படி வந்து முடியுமுனு எதிர்ப்பார்க்கல.. இப்ப எனக்கு யாரையுமே புடிக்கலை… என் வாழ்க்கையை ஆளாளுக்கு பந்தாடுறாங்க” என மீண்டும் வெளியில் பார்வை செலுத்தினாள்.
“சாரிங்க!” என்ற அமர் காரை ஸ்டார்ட் பண்ணி வேகப்படுத்தினான்.
ஜனா அவளையே பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.
அவளோட அந்த வார்த்தைகள்’மரத்து உணர்வுக்கு உயிர் கொடுக்க வந்தவர்’ இவை தான் மண்டையில் ஓடியது.
ஏனோ! அவளை ரொம்ப பிடிக்கத் தொடங்கியது ஜனாவிற்கு. அவளின் அந்த எண்ணத்தை உண்மையாக்கிட துடித்தான்.
மனதில்’ஐ லவ் யூ டி ஜிமிக்கி!’ என அவனவளை நோக்கினான்.
அவளோ அவனின் பார்வையை உணராமல் அப்படியே கண்ணாடியில் சாய்ந்து கண்களை மூடினாள்.
****
ஓரிடத்தில் காரை நிறுத்தினான் அமர்.
“ஜனா! வா டீ குடிச்சுட்டுப் போகலாம். எனக்கு ரொம்ப பசிக்குதுடா”
ரெனி விஜியை எழுப்பி, ரொம்ப கட்டாயப்படுத்தி இறக்கினாள், நேற்றில் இருந்து சாப்பிடாததால்.
“டேய்! நீ போய் டீ சொல்லு, நான் அப்பா கிட்ட பேசிட்டு வரேன்”
“வீட்டுல எப்படி எடுத்துக்கப் போறாங்க ஜனா இதை..”
“அப்பா ஓரளவு புரிஞ்சுப்பாரு, அம்மா..? தெரியலடா, அப்பு பத்தி பிரச்சனை இல்லை. சமாளிச்சு தான் ஆகனும் அதான் அட்லீஸ்ட் அப்பா கிட்ட விசயத்தை சொல்லிட்டா வீட்டுக்குப் போகும் போது சமாளிக்க முடியும்”
“ம்ம்ம்! நீ பேசு” என அமர் விலகினான்.
மாரிமுத்துவிற்கு ஃபோன் ரிங் அடித்தது.
“ஹலோ! ஜனா, என்ன ஆச்சு..? தம்பி சொன்னான் எங்கயோ வெளியூர் போறேனு.. நானும் சரி நீயே கூப்புடுவனு பாத்தேன்.”
“ஆமாம்பா! அது…” என முதலில் விஜி அம்மாச்சி இறந்ததை பத்திக் கூறினான்.
“ஓ! சரி, சரி” என வருத்தப்பட்டார்.
பிறகு மெல்ல அனைத்தையும் வரிசையாக கூறினான்.
“என்னது முத்தையா சாகலையா..?” என அதிர்ச்சியாக கேட்டார் மாரி.
“ம்ம்ம்!” என்று, அவரின் கதையை கூறினான்.
“அடக்கடவுளே! குடும்பத்துக்காக தான் வெளிநாட்டில் இருந்தே வந்தார்”
“அப்பா!” என இழுத்தவன் இறுதியாக நடந்ததைக் கூறினான்.
“என்னப்பா சொல்ற, ஏன் இவ்வளவு அவசரப்பட்ட…? அப்படியே புடிச்சிருந்தாலும் நம்ம பேசிப் பண்ணி இருக்கலாமே”
“இல்லப்பா! அந்த சூழ்நிலையை விட்டால் விஜியை கன்வின்ஸ் செய்றது கஷ்டம், இப்ப கூடவே இருந்து ஏதாவது முயற்சி செய்யலாமே”
“அதான் அந்த பொண்ணுக்கும் உன்னைய புடிச்சிருக்குனு சொல்லிட்டுல”
“அம்மா பத்தி தான் உனக்கு தெரியுமுல, இந்த விசயத்தை எப்படி எடுத்துப்பானு தெரியல, எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் நீ இப்படி பண்ணிட்டேனு கோபப்படுவா, பாத்துக்கலாம் நீங்க வாங்க, நான் அம்மா, அப்பு கிட்ட சொல்லி புரிய வைக்குறேன்” என்றார்.
ஃபோன் பேசிட்டு வந்தவனிடம் அமர் டீயை நீட்டினான்.
அதை வாங்கியவன் திரும்பி பார்க்க, விஜி, ரெனி டீயை வைத்துக் கொண்டு நின்றனர்.
“குடிடா! அது எல்லாம் ப்ரண்டு இருக்காள பாத்துப்பா”
“ம்ம்ம்!”
“அப்பா என்ன சொன்னார்..?”
“ஓகே தான், போனால் தான் தெரியும்”
***
அமர் காரை சென்று நிறுத்தியது ஜனா வீட்டு வாயிலில்.
விஜி”ரெனி! நம்ம வீட்டுக்கே போகலாம்” என்றாள்.
“இறங்குடி, இனிமே இது தான் உன் வீடு வா” என்றாள், வரும் போது ஜனா காரில் முன்னால் போக, ரெனியும், விஜியும் பின்னால் ஏறினர்.
“எனக்கு புடிக்கல இங்க போக”
“விஜி! அப்பா கிட்ட பேசிட்டேன் வா” என்றான் ஜனா.
அவனை சட்டம் செய்யாதவள், “அமர்! ப்ளீஸ் காரை எடுங்க”
“ஏங்க! அவன் அப்பா கிட்ட பேசிட்டான். அவரும் கூட்டிட்டு வரச் சொல்லிட்டாரு. இப்ப நீங்க போகலைனா ஃபீல் பண்ணுவாரு, உடம்பு முடியாதவர் வேற. உங்களுக்கு இவனை புடிக்கலைனா உங்க பெட் ரூமில் வச்சுகோங்க, மத்தவங்க முன்னாடி காட்டி அவங்க வீட்டுச் சூழ்நிலையை கஷ்டமாக்கிடாதீங்க, இறங்குங்க சிஸ்..” என்றான் கொஞ்சம் கெஞ்சிய நிலையில்.
ஜனா’தேங்க்ஸ்டா’ என கண்களை காட்டினான், ஜனா சொல்லிக் கொடுத்தப் படி தான் அமர் பேசினான் நண்பனுக்காக.
ஜனாவிற்கு தெரியும் விஜி எப்படியும் அடம் பண்ணுவாள் என்று.