ஜனா மனதில் தாயை நினைத்து, ‘அம்மா எப்படி எடுத்து இருப்பாங்களோ!’ என்ற எண்ணம் மேலோங்கியது.
முதலில் அவன் தான் நடந்தான் வீட்டை நோக்கி, விஜி ரெனியுடன் பின்னால் வந்தாள்.
அமர் அவர்களுக்கு பிறகு நடந்து வந்தான்.
“ஜனா! வெயிட், விஜியை அழைச்சுட்டுப் போடா, நீ பாட்டுக்கும் ஓடுற” என்றான் நண்பன்.
“சாரிடா! சாரி விஜி!” என அப்படியே நிற்க, அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றாள்.
அமர் வாயில் கைவைத்து சிரித்தான். ரெனி”அவரு சொல்றாருனு நீங்க ஏன் ஜனா…? அவ உங்களுக்காக எல்லாம் வெயிட் பண்ண மாட்டா, வாங்க” என அமரை கேவலமாக லுக் விட்டு தோழியோடு சென்று நடந்தாள்.
“ஏன்டா! நீ வேற” என ஜனாவும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.
வீட்டின் காலிங் பெல்லை அடித்தான் ஜனா. கார் அவர்கள் வீட்டின் சைடில் நிறுத்தி வந்ததால் அதன் சத்தம் கேட்கவில்லை உள்ளிருந்தவர்களுக்கு.
கதவு திறக்கப்பட அதன் பின்னே அப்பு நின்றுக் கொண்டு இருந்தான்.
“அம்மா!” என தொடங்கியவன், முத்து வரவும் அமைதியானான்.
“வாப்பா! வாம்மா! உள்ள வாங்க எல்லாரும்” என அழைத்தார் முத்து.
ஜனா உள்ளே வந்ததும் பார்வையால் தாயை தேடினான். ஆனால் அவர் அவனின் பார்வையில் தென்படவில்லை.
“அம்மா எங்கப்பா..?”
“அம்மாக்கு தலைவலினு படுத்திருக்கா, நீங்க உட்காருங்க” என்றவர், விஜியிடம்
“உட்காரும்மா! முறையா ஆழாத்தி எடுக்கனும் ஆனா சூழ்நிலை சரியில்லை, நீ வாம்மா உட்காரு, அப்பு போய் தண்ணி எடுத்துட்டு வா” என சின்ன மகனிடம் கண் காட்டினார்.
அவனும் சென்று தண்ணீர் எடுத்து வந்து விஜியிடம் நீட்டினான்.
“தேங்க்ஸ்!” என விஜி அதை வாங்கியதும் வேகமாக குடிக்கத் தொடங்கினாள், ஏனோ நாக்கு எல்லாம் வறண்டு இருந்தது.
பிறகு ரெனியிடம் கொடுக்க, அவளும் குடித்துவிட்டு அமரிடம் நீட்டினாள்.
ஜனா மனதில் அம்மாவிற்கு தான் செய்தது பிடிக்கவில்லை என தோன்ற,
“அப்பா! நான் போய் அம்மாவை பாத்துட்டு வரேன்” என நகர்ந்தான்.
“இருப்பா! அப்புறம் பாத்துக்கலாம், அவ தூங்கிட்டு இருக்கா, நீ முதலில் உட்காரு பாரு எல்லாருமே நின்னுட்டே இருக்காங்க”
அமர்”அங்கிள்! எனக்கு ஒரு பிரச்சனை இல்லை, நம்ம வீடு தானே” என அமர்ந்தான்.
பிறகு விஜி, ரெனியும் அமர்ந்தார்கள்.
சிறிது நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் முத்துவும், அமரும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள்.
ரெனி மெல்ல”நான் கிளம்புறேன்டி, டைம் ஆகுது” என்றாள் தோழியிடம்.
“அப்பு! அண்ணியை அழைச்சுட்டு போய் அண்ணன் அறையை காட்டு” என்று கூறிய முத்து, “போம்மா! போய் ரெஸ்ட் எடு மற்றதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.
விஜி எதுவுமே பதில் சொல்லவில்லை, அப்புவை பார்க்க, அவன் மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.
கூடவே நடந்தாள் அவன் பின்னே.
அவள் மாடிக்கு சென்று மறையும் வரை காத்திருந்த முத்து”ஜனா! அம்மா ரொம்ப கோபமா இருக்கா, அவளுக்கு இதை ஏத்துக்க முடியல, என்னோட உடல்நிலை கூட பாக்காமல் நீ கல்யாணம் பண்ணிட்டனு நினைக்குறா.. அவளை இப்ப சமாதானம் செய்ய முடியாது, நீ பொறுமையா இரு” என்றார்.
“புரியுதுப்பா! நான் போய் அம்மாவை பாத்துட்டு வரேன்” என அம்மா அறையை நோக்கி நடந்தான்.
ஜனாவின் அறையை காட்டிய அப்பு,
“அண்ணி! இதான் அண்ணா ரூம்” என்றான்.
உள்ளே சென்றவள் சட்டென்று திரும்பி
“அப்பு!” என அழைத்தாள்.
“சொல்லுங்க அண்ணி!”
“நீ என்ன படிக்குற…?”
“டுவெல்த் அண்ணி!”
புருவத்தை சுருக்கியவளை கண்டவன்,
சிரித்தவாறு”எல்லாருக்குமே வரக் கேள்வி தான், அண்ணன் பெரியவங்களா இருக்காங்க நான் இப்ப தான் டுவெல்த்னு, அதுக்கு காரணம் என் அப்பா இடையில் ஊருக்கு வரவே இல்லை ரொம்ப வருசமா” என்றான்.
“ஓ!” என்றவள், “சரி! உன் கிட்ட ஒன்னு கேக்கவா..?”
“ம்ம்ம்!”
“உன் அம்மாக்கு உண்மையில் தலை வலிக்குதா, இல்லை நான் வரது புடிக்கலையா..? உண்மையை மட்டும் சொல்லனும்” என்றாள் அழுத்தமாக.
“அண்ணி! அதுவந்து… அம்மாக்கு அண்ணா திடீருனு கல்யாணம் பண்ணியதில் சம்மதம் இல்லை, அது மட்டுமில்லை அண்ணன் தான் இப்ப இந்த குடும்பத்தின் பில்லர், அதான்….” என இழுத்தான்.
ஜனா வசந்தாவின் அறைக்குள் நுழைய,
அவரோ படுத்திருந்தார், அவரின் அசைவில் நன்கு தெரிந்தது முழித்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று.
“அம்மா!” என அழைத்தான்.
அவரிடம் பதிலில்லை. அவர் அருகில் சென்றமர்ந்தான்.
“சாரிம்மா!” என தாயின் கையைப் பிடித்தவன் கரத்தை தள்ளி விட்டவர் எழுந்தமர்ந்து,
“என் கிட்ட ஏன்டா மன்னிப்புக் கேக்குற இந்த குடும்பத்துக்கே ஆணிவேர் நீயினு நெனச்சேன் ஆனா நீ..? உன் இஷ்டத்துக்கு ஒருத்தியை கூட்டிட்டு வந்து பொண்டாட்டினு நிறுத்தி எங்க தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்ட.. இப்ப என்னதுக்கு மன்னிப்புக் கேக்குற..? ஓ! குடும்பத்தையே நீ தாங்குவதால் உன் வாழ்க்கை முடிவும் நீயே எடுக்க ஆரம்பிச்சுட்டீயா…?
ஆமா! இனிமே நாங்க எதுக்கு..? அந்தா அந்த மனுசன் நோயாளி ஆகிட்டார், நான் வேலைக்காரி ஆகிட்டேன், அப்பு சின்னப்புள்ள உன்னைய ஏன்னு கேக்க மாட்டான், உன்னைய போய் தங்கப் புள்ளைனு நம்பினேன் பாரு என்னைய சொல்லனும். நீ தகரமுனு நிரூபிச்சுட்டடா.
போடா! போய் புதுப் பொண்டாட்டியோட குடும்பத்தை நடத்து, நாங்க எக்கேடு கெட்டா என்ன..?” என மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் கோபமாக பொரிந்தார்.
“அம்மா! நானுமே பிளான் பண்ணி எல்லாம் விஜியை அழைச்சுட்டு வரலம்மா, ஏதோ ஒரு சூழ்நிலை இப்படி ஆகிட்டு, ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோங்க”
“என்னடா சூழ்நிலை…? உயிரோட இருக்கும் அப்பனையே அன்னைக்கு செத்துட்டாருனு சொன்ன பொண்ணுடா அவ, அது மட்டுமா..? அவ அப்பாக்கு ரெண்டுப் பொண்டாட்டியாம்… என்ன குடும்பமுடா அது…? போயிம் போயிம் உனக்கு அந்த பொண்ணு தான் கெடைச்சாலா…? சரி! அவங்க எப்படியோ போறாங்க உனக்கு என்னடா வந்துச்சு..?”
என கோபமாக கேட்டார்.
“விஜி என்னைய விரும்புறாம்மா, நானும் தான் அப்படி இருக்க எப்படிம்மா பாத்துட்டு சும்மா வர முடியும்..?”
“அதுக்காக தாலிக் கட்டி கூட்டிட்டு வருவீயா..? இங்க நம்ம குடும்பம் சூழ்நிலையை போய் யார் கிட்ட சொல்லி அழுவுறது..? உன் அப்பா இப்பவா எப்பவோனு இருக்கார், பாவி! பாவி! இந்த நிலையில் உனக்கு…” என நிறுத்தியவர் தலையில் அடித்துக் கொண்டதோடு, ஜனாவின் கன்னத்தில் அறைந்தார். மாறி மாறி இருப்பக்கமும் அடிகளை தாக்கினார்.
முத்து வந்து தடுத்துவிட்டு”வசந்தா! என்ன செய்ற…? தோளுக்கு மேல் வளர்ந்தப் பிள்ளையை போய் அடிக்குற..?” என முறைத்தார்.
“அவன் வானத்துயரம் வளர்ந்தாலும் என் புள்ளை. நான் பெத்தப் பிள்ளை அடிக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்குங்க” என கணவரை கண்ணீரோடுப் பார்த்தார்.
“விடுங்கப்பா! அம்மா அடிக்கட்டும் அவங்க கோபம் தீர அடிக்கட்டும்”
“டேய்! என் கோபம் தீராதுடா. என் கண் முன்னாடி நிக்காத போ, போய் புதுப் பொண்டாட்டியோட கூத்தடி. என்னவோ பண்ணு” எனக் கத்தினார்.
முத்து வரும் போதே கதவினை சாற்றிவிட்டு வந்திருந்தார்.
முத்து”ஜனா! நீ போ, பேச பேச கோபம் தான் அதிகமாகும். பொறுமையா பேசிக்கலாம் போ” என்றார்.
வசந்தா கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொண்டார்.
ஜனா எழுந்து வெளியில் சென்றான்.
முத்து சென்று கதவை சாற்றும் வரை அவர்கள் பேசியது காதில் விழுந்தது விஜிற்கு.
விஜி மனம் அனலாக கொதித்தது.. சிறு அமைதிக்குப் பின்.
விஜி அப்புவிடம்….
“பயப்புடாதீங்க! உங்க வீட்டுப் பில்லரை நான் புடுங்கிட்டு போயிட மாட்டேன், எனக்கே இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை அப்பு, உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு..? உன் அண்ணனை எனக்கு புடிக்கலை, புடிக்காம தான் இங்க வந்திருக்கேன், போய் உன் அம்மா கிட்ட சொல்லிடு, அவங்க தங்கப்புள்ளையை யாரும் இங்க அபகரிக்க வரவில்லைனு. எனக்கு வேணாம் அந்த தங்கமோ! தகரமோ!” என கண்களில் நீர் வழியக் கூறினாள்.
அப்புக்கு என்ன சொல்வதென்று புரியாமல்”அண்ணி!” என்றழைத்தான்.
அவள் பேசியதைக் கேட்டு கொண்டே வந்த ஜனா”அப்பும்மா! நீ போ, அம்மா கூட இரு” என்றான்.
“சரி அண்ணா!” என அப்பு அவ்விடத்தை விட்டு விலகினான்.
அறைக்குள் வந்தவன் கதவினைத் தாழிட்டு விட்டு திரும்பினான்.
விஜி நிமிர்ந்து அவனை முறைத்தாள், இப்ப என்னத்துக்கு கதவை தாழ் போடுற..? என்பது போல்.
“நம்ம பேசுறது வெளியில் கேக்க வேணானு தான் விஜி” என்றான் பொறுமையாக.
அவனும் சென்று கட்டிலின் மறு ஒரத்தில் அமர்ந்தான்.
“விஜி! எனக்கு புரியுது உன்னோட மனநிலை, அம்மாவோட மனநிலை எல்லாமே. ஆனா உன்னைய அவசரமா கல்யாணம் பண்ணினாலும் மனசுல உனக்கு நல்லது நடக்கனும், நீ சந்தோஷமா வாழனுமுனு மட்டும் தான் நெனச்சேன். நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும்.
அட்லீஸ்ட் எனக்கு கொஞ்சம் டைம் கொடு எல்லாத்தையும் சரிசெய்ய, நீ எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம், நான் உன்னோட ஹஸ்பண்ட்னு எந்த ரைட்ஸ் எடுத்துக்க மாட்டேன், பட்! அப்பா, அப்புக்கு நீ இங்க இருப்பதில் சந்தோஷம் தான்.
அம்மா மனசும் மாறும், அவங்க விசயத்துல ப்ளீஸ்! நீ கொஞ்சம் கண்டுக் கொள்ளாமல் இரு, நான் எப்படியாவது அம்மாவை சமாதானம் பண்ணிடுவேன்.” எனக் கெஞ்சிக் கேட்டான்.
“நான் எதுக்கு அப்படி இருக்கனும்…? இந்த வீட்டில் என்னைய சந்தோஷமா இருக்க வைக்குறேனு தானே கூட்டிட்டு வந்தீங்க..? பின்ன என்ன அம்மாக்கு புடிக்கல, அடங்கிப்போனு சொல்றீங்க மிஸ்டர் கோல்ட், அம்மாவுக்கு மட்டும் தங்கப்பிள்ளையா இருக்கனும் அப்படி தானே. ஏன் அவங்க கிட்ட போய் விஜி கிட்ட பொறுமையா போங்கனு சொல்ல வேண்டியது தானே..?”
“விஜி!” என்றான் பாவமாக.
“நானா இங்க வரேனு சொன்னேன், நீங்க தானே ஏதோ மாட்டுக்கு கயிறு மாட்டி இழுத்துட்டு வரது போல அழைச்சுட்டு வந்தீங்க, இப்ப என்ன என் கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க, நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன். அடங்கிப் போறதுனா என் மாமா வீட்டுலையே இருந்திருப்பேன்ல..?” என வெடுக்கென்று கூறினாள்.
ஜனா எதுவும் பதில் பேசவில்லை.
“எனக்கு தலைவலிக்குது, தூங்கப் போறேன் டிஸ்டர்ம் பண்ணாதீங்க, நைட் எப் எம் டியூட்டிக்கு போகனும்” என அந்த கட்டிலில் ஒரு பக்கம் சாய்ந்துப் படுத்தாள்.
அதே வேகத்தில் திரும்பியவள்”ஹலோ மிஸ்டர் கோல்ட்! எனக்கு வந்திருப்பது உண்மையான தலைவலி.. சரியா..? அப்புறம் உங்க பெயரை சொல்ல விருப்பமில்லை, அதுக்கு தான் இந்த அடைமொழி.. அது ஏதோ பாசமுனு நினைச்சுடாதீங்க, உங்க மேல இருந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் போச்சு.. அது இனி வராது” என திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
ஜனா அவளின் முதுகையே நோக்கிவிட்டு, எழுந்து கீழே சென்றான்.
ஹாலிற்கு சென்றமர்ந்தவனிடம் முத்து அவனின் முகத்தைப் பார்த்து விசாரித்தார்.
“அம்மா ஒரு பக்கம், விஜி மறுபக்கம் கோபமா இருக்காங்கப்பா”
அப்பு”நீங்க லவ் பண்ணி தான் மேரிடு அண்ணா, அப்புறம் ஏன் அண்ணி உங்களை புடிக்கலைனு சொன்னாங்க” எனக் கேட்டான்.
“ம்ம்ம்! அதான் என் விதி, வருசக்கணக்கா காதலிச்சு ஜாலியா இருக்கானுங்க, என் நேரம் அந்த காதலுக்கு ஆயுசு ரொம்ப கம்மியா இருக்கு” என நொந்தான்.
“ஜனா! எல்லாமே நினைப்பதற்குள் அடுத்தடுத்து நடந்துட்டு, அவங்கவங்களுக்கு ஒரு கவலை. எல்லாம் மாற காலம் தேவைப்படுது அது தான் சிறந்த மருந்து அனைத்திற்கும். நீ மனசை கெட்டியா வச்சுக்கோ, உன் மனசுக்கு எந்த கெடுதலும் நடக்காது” என்றார் தந்தை.
“அப்பா! உங்க உடம்பு இருக்குற நிலையில் இப்படி பண்ணிட்டேனு அம்மாவோட கோபம் நியாயம் தானே, எனக்குமே அது உறுத்துதுப்பா, ஐ ஆம் சாரிப்பா” என தந்தையின் கையைப் பிடித்தான்.
“ச்சே! ச்சே! என் உடம்பு, மருத்துவமனைனு மட்டுமே யோசித்து, நீயும் உன்னோட வயசு பசங்க அனுபவிப்பதை எல்லாம் விட்டுட்டு எங்க கூடவே கெடக்குற ஜனா, ஏதோ நான் செஞ்ச புண்ணியம் நீ புள்ளைய கெடச்சிருக்க.. எனக்காக உன் வாழ்க்கையை வாழாம இருக்கீயேனு நான் வருத்தப்படாத நாளில்லை.
இன்னைக்கு நீ அவசரமா தாலிக் கட்டி கூட்டிட்டு வந்தாலும் என் ஆசை நிறைவேறிட்டுப்பா, என் கதை எப்ப முடியுமுனு சொல்ல முடியாது, ஆனா கண்கூடா உங்களை தம்பதியா பாத்துட்டேன், இன்னைக்கு நைட்டே என்னைய எமன் கூப்புட்டாலும் சந்தோஷம் தான்” என்றவர் வாயை மூடினார்கள் பிள்ளைகள் இருவரும்.
“அப்பா! உங்களை அவ்வளவு சீக்கிரம் எமன் கூட்டிட்டுப் போக விட்டுட மாட்டேன் நீங்க தைரியமா இருங்க, இன்னும் அப்பும்மா இருக்கான், அவன் கல்யாணம் பாக்கனும்” என தந்தைக்கு ஆறுதல் கூறினான்.
“நெருப்புனு சொன்னா வாய் சுட்டுடாது ஜனா, ஆனா நெருப்பு எப்ப தொட்டாலும் சுடும் அது தெரிஞ்சா போதும்”
முத்து”ஜனா! சொல்ல மறந்துட்டேன், பேங்க் நோட்டிஸ் வந்துச்சு, ஏலம் விட டேட் அனுப்பிட்டாங்க, நம்ம அதுக்குள்ள காலிப் பண்ணி ஆகனும், அல்ரெடி அவங்க கொடுத்த டேட் முடிஞ்சுட்டுல” என்றார்.
“ம்ம்ம்! ஒரு வீடுப் பார்த்திருக்கேன்பா, ஆனா வாடகை கம்மியா இருப்பதால் வீடும் சின்னதா இருக்கு” என வருத்தமாக கூறினான்.
“அதுக்கு என்னப்பா, நம்ம என்ன இப்படி பட்ட வீட்டிலே பொறந்து வளர்ந்தமா என்ன..? எல்லா சூழ்நிலையிலும் வாழப் பழகனும் தான். நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன், நீ விஜி கிட்ட விசயத்தை சொல்லிடு, அப்புறம் அந்த வீட்டில் ரூம் தனியா இருக்குல..”