“ஜிமிக்கி!” என்றழைத்தான் தன் தோளில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளை.
“ம்ம்ம்!”
“இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே உட்கார்ந்திருப்பது, நடுநிசியை தாண்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடியவே போகுது”
“ம்ம்ம்! என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க கோல்ட், நான் இன்னைக்கு தான் மனசுக்கு புடிச்சவரோடு தோளில் சாய்ந்து நிம்மதியா ஃபீல் பண்றேன்”
“புரியுதுடா! ஆனா நாளைக்கு வொர்க் இருக்கே”
“ம்ம்ம்!”
“போய் தூங்கலாமா..?”
“ம்ம்ம்! அதான் விடியப் போகுதே இனிமே எதுக்கு தூக்கம்” என முனகினாலும் அசையவே இல்லை அவள்.
ஜனாவும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாகினான்.
“நீங்க யாரோ, நான் யாரோ ஆனா எதுக்காக ஒன்னு சேந்தோமுனு தெரியலல, அதுவும் அப்படி ஒரு சூழ்நிலையில்!”
“ஜிமிக்கி! இது இயல்பு தான், புரோக்கர் கொண்டு வர எத்தனையோ பையன்கள் பொண்ணுங்க போட்டோகளில் ஒன்னே ஒன்னு தானே எல்லாம் பொருந்தி ஜோடி ஆகுறாங்க, அதே மாதிரி பொண்ணுங்க,
பசங்க பலர் மத்தியில் குறிப்பிட்ட பொண்ணும், பையனும் நம்ம மாதிரி ஏன் மனசு விரும்பி காதலிக்குறாங்க அப்படி தான் இது.”
“நீங்க எதுக்காக என் பின்னாடி வந்தீங்க ஜனா…? ஆனா அதை எல்லாம் மறந்து இப்ப நம்ம கணவன்- மனைவி ஆகிட்டோம். வாழ்க்கையில் நான் எதிர்ப்பார்க்காமல் நிறைய நடந்த மாதிரி தெரியுது”
“எதிர்ப்பார்ப்பில் அமையாத இந்த வாழ்க்கை இப்ப என் கூட அமைஞ்சுட்டு, புடிச்சு இருக்கு தானே ஜிமிக்கி.?” என்றான் கேள்வியாக.
“உங்களை புடிக்கலைனு முன்னாடி என் வாய் சொன்னாலும், மனசு உங்களை தவிர வேற யாரையும் நினைக்காதுனு புரிஞ்சுகிட்டேன் இப்ப, நீங்க என் கூட இருந்தா மட்டும் தான் எனக்கு வாழ்க்கைனு ஒன்னு இருக்குனு ஃபீல் ஆகுதுடா கோல்ட்” என நிமிர்ந்து அவன் முகத்தை கையில் ஏந்தி
இதழோடு இதழ் பதித்தாள்.
விழிகளை விரித்தவன் கணக்கில் அடங்காத ஆனந்தத்தில் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.
தாங்கள் மொட்டை மாடியில் இருப்பதை மறந்து இருவரும் முத்தத்தில் ஆழ்ந்திருந்தனர்.
பொத்தென்று ஏதோ பொருளை போட்டுடைத்த சத்தத்தில் இருவரும் பதறி பிரியவும், அங்கு வசந்தா திரும்பி நின்றுக் கொண்டு இருந்தார்.
எழுந்து நின்ற இருவரின் உடல்களும் நடுங்கிட, ஜனா”அம்மா!” என்றான் மெல்ல.
அவர்களை நோக்கி திரும்பிய வசந்தா
“அதான் கல்யாணம் பண்ணியாச்சுல, இந்த மாதிரி கருமத்தை எல்லாம் உங்க ரூமில் போய் வச்சுக்கோங்க, வயசு பையன் இன்னொருத்தன் இந்த வீட்டில் இருக்கான், நான் வந்த மாதிரி அவன் வந்திருந்தால்..?” என்றார் அருவருப்பாக.
அன்று நவராத்திரியின் கடைசி நாள் என்பதால் பஜனைக்கு செல்வதற்காக வசந்தா காலையில் மூன்று மணிக்கே எழுந்து குளித்து முடித்து மொட்டை மாடிக்கு துணி காய வைக்க வந்திருந்தார்.
ஒன்பது நாட்களாக வசந்தா தன் கணவருக்காக மனம் உருகி அவர் உடல்நிலை சரியாகி தன் தாலிப் பாக்கியம் நிலைக்க வேண்டும் என அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறார். தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுபவர் இரவு உறங்கவே மணி பதினொன்று ஆகிறது.
இந்த மாதிரியான நிலையில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்ததும் அவரால் கட்டுப்படுத்த முடியாத கோபம் பெருகியது.
“அப்பாக்கு எப்படி ஆனால் என்ன..? உனக்கு பொண்ணு, உடல் சுகம் தேவைப்படுது இல்லடா..? இப்ப குடும்பம் இருக்குற நிலையில் நீ கல்யாணம் பண்ணினதே என்னால ஜீரணிக்க முடியல.. இதுல இப்படி வெட்ட வெளியில் ச்சீ! ஆம்பளை அவனுக்கு தான் புத்தி இல்லை, பொண்ணு உனக்கு கூட வெட்கமில்லை.. அந்தளவு …..” என அவர் ஆரம்பிக்கும் முன்னே, ஜனா தடுத்தான்.
“அம்மா! ப்ளீஸ்” என்று.
விஜி கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் ஊற்றியது, இதை விட ஒரு அவமானம் அவள் வாழ்க்கையில் இனியுமா நடக்க வேண்டும்..? இதுவே போதுமென்று மனம் அலறியது.
“ஏன்மா இப்படி…” என ஜனா என்ன பேசுவதென்று தெரியாமல் கெஞ்சியப் படி நின்றான்.
“டேய்! நீ பேசாத சொல்லிட்டேன், போ! போய் அவ காலில் விழுந்து சமாதானம் பண்ணி அடுத்த வேலையை பாரு, வெட்கம் கெட்டவனே. அதுக்கு தானே கல்யாணம் பண்ணின..? இன்னும் கொஞ்ச நாளில் அவ மசக்கை ஆவா, நீ பொண்டாட்டி, புள்ளைனு போயிடுவ நான் உன் அப்பாவை பறிக்கொடுத்துட்டு உன் தம்பியோடு அனாதையா ஆகனும், அதானே..? அவர் சம்பாரிச்ச எல்லாமே அவர் கண் முன்னாடி அழிஞ்சுட்டுடா.
அவரோட தயவு உனக்கு வேணா தேவைப்படாம இருக்கலாம், ஆனா எனக்கும், அப்புக்கும் வேணும். நான் கூட நீ ஏதோ சூழ்நிலையில் கல்யாணம் பண்ணிட்டனு மனசை தேத்த முயற்சித்தேன் என்ன தான் இருந்தாலும் பெத்த புள்ளையா போயிட்டீயேனு. ஆனா நீ..? கல்யாணம் ஆனதும் பொண்டாட்டி வாசனை புடிக்க போயிட்ட… ச்சீ! போடா” என மகனை அருவருத்து திட்டிவிட்டு நகர்ந்தார்.
ஜனா மனமோ’கடவுளே! ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்த, அது அனுபவிச்சு முடிவதற்குள் இப்படியா சோதிப்ப’ என நொந்து விரக்தியானான்.
கட்டிலின் அந்த பக்கம் தரையில் அமர்ந்து முட்டிமேல் தலையை வைத்து தேம்பி அழுதவாறு அமர்ந்திருந்தாள்.
அவளை மெல்ல”ஜிமிக்கி!” என அழைத்து தொட போன ஜனாவின் கைகளை தட்டி விட்டாள் விஜி.
“விஜி!”
“இல்ல ஜனா! எனக்கு உங்க மேல கோபமில்லை, ஆனா உங்க அம்மா பேசிய வார்த்தைகளை என்னால ஜீரணிக்கவே முடியல, அவங்க மனசுல உங்க அப்பா இருக்க நிலையில் நம்ம சந்தோஷமா இருக்கமுனு எண்ணம். அதுவும் சரி தானே.. தப்பு தான்.. நம்ம அப்படி இருந்தது தப்பு தான்.. இனிமே கவனமா இருப்போம்..”
“ஜிமிக்கி! புரியல….”
“இனி நீங்களும், நானும் புருசன் பொண்டாட்டி தான், சத்தியமா நீங்க மட்டும் தான் என் கோல்ட். அதே மாதிரி உனக்கும் நான் தான் ஜிமிக்கி. இது நமக்கு தெரியும். ஆனா என்னைய இனிமே தொடாதீங்க. நானும் உங்களை தொட மாட்டேன். அப்படி மீறி தொட்டா எனக்கு உங்க அம்மா மட்டும் தான் கண் முன்னாடி வருவாங்க ஜனா, நீங்க உங்க அப்பாவை பத்தி மட்டும் யோசிங்க” எனக் கூறிவிட்டு எழுந்து பாத் ரூம் நோக்கி சென்றாள்.
“ஜிமிக்கி! மறுபடியும் நீ கோச்சுகிட்டீயா..?”
“ச்சே! இல்ல, நீங்க பாவம் ஜனா.. நான் இனிமே உங்க மேல கோபப் படவே மாட்டேன், சரியா..? அப்பா, அம்மா, தம்பினு யோசிங்க, நான் எப்பவும் உங்க ஜிமிக்கி தான். உங்களுக்காக மட்டும் தான்..”
“அம்மா மேல கோபமா…? அவங்க பேசினது தப்பு தான்.. ஆனா எனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுனு தெரியலடி, நான் அம்மா கிட்ட பேசுறேன்”
“உங்க அம்மா நியாயம் அவங்களுக்கு சரியா இருக்கு, நீங்க போய் எனக்காக பேசுறேனு அவங்க கோபத்தை இன்னும் அதிகமாக்காதீங்க, நான் புரிஞ்சுகிட்டேன் நம்ம தான் தப்பு பண்ணிட்டோம். நம்மோட சுய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கனும் ஜனா குடும்ப சூழ்நிலை சரியாகும் வரை.. புரியுமுனு நினைக்குறேன்.. நான் குளிச்சுட்டு வரேன்..” என பாத் ரூமுக்குள் சென்றாள்.
ஜனா மனம் இப்பொழுது ஓரளவிற்கு சாந்தமானது.
***
அந்த விடியல் இருவருக்குமே தூங்காத விடியலாக இருந்தாலும், வசந்தாவின் தப்பான பார்வை குற்றச்சாட்டில் வார்த்தைகளானது அவர்களை குதறினாலும், இருவரின் மனங்களும் புரிதலோடு இருந்தமையால் புத்துணர்வோடு தெரிந்தார்கள் எனலாம்.
விஜி குளித்து முடித்துவிட்டு வெளியில் வந்தவள், “ஜனா! நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, நான் கீழே போறேன்..” என்றாள்.
“அம்மா இருப்பாங்க விஜி, இங்கயே இரு ஏன் போய் அப்புறம் ஏதாவது சொல்லிடப் போறாங்க உன்னைய, அது மனசு கஷ்டமாகிடும்” என்றான் பாவமாக.
“அவங்க ஏதாவது சொல்வாங்கனு நான் இதுக்குள்ளயே இருந்தா இன்னும் கோபம் தான் வரும், மிஸ்டர் கோல்ட்.. நம்ம இப்படி இல்லை, வெறும் உடல் சுகத்துக்காக சேரலைனு அவங்க புரிஞ்சுக்கனும், சேம் டைம் எனக்கும் இந்த குடும்பத்தோடு அட்டாச் ஆக நான் தான் போய் அடாப்டு ஆகனும் ஜனா”
“நீ கோபப்படுவனு நினைச்சேன் ஆனா மாறாக, நீ வேற மாதிரி ரியாக்ட் பண்ற விஜி, நீ மூலையில் அமர்ந்து அழுததும் நான் பயந்துட்டேன், எப்படி சமாளிப்பேனு” என உண்மையை கூறி லேசாக புன்முறுவல் அளித்தான்.
“ம்ம்ம்! உங்க அம்மா பேசினது ஹார்டா தான் இருந்துச்சு ஜனா, ஆனா அவங்க பக்கம் யோசிச்சா அவங்க மனசுக்கு தப்பா தான் தெரியும். ஏற்கனவே அவங்களுக்கு உங்களை நான் அபகரிச்சுட்டேனு நெனப்பு இருக்கு, இதுல நம்மளை அப்படி பாத்தா..?” என சிவந்த கண்கள் லேசான சிரிப்பை சிந்தியவள், இதழினை சுளித்தாள்.
“சாரி ஜிமிக்கி!” என அவள் கையைப் பிடிக்க வந்தவனிடம் தலையை இடமிருந்து வலமாக ஆட்டி, “நோ! நம்ம விலகியே இருப்போம் மிஸ்டர் கோல்ட்.. தப்பில்லையே அதுல… ஓகேவா..?” என்றாள் கண்களில் நீர் வழிய..
“ஹேய் லூசு! நீ ரொம்ப பேசாத.. நீ என் பொண்டாட்டி, அம்மா கிட்ட அந்த இடத்தில் என்னால சொல்லிருக்க முடியும் ஆனா அது வேற மாதிரி ஆகிடுமுனு அமைதியா இருந்தேன். அதுக்காக உன்னைய விட்டுக் கொடுப்பேனு நினைக்காதடி பைத்தியம். இப்ப என்ன நமக்குள்ள தாம்பத்யம் இருந்தால் அது தப்பா தெரியும் அதானே! வேணாம்.. வேணாவே வேணாம். அதும் எனக்கும் புரியுது. பட் தொடக் கூடாதுனு சொல்லாத… நீ வேணா அப்படி இரு” என அவளை இழுத்து அணைத்தான்.
விஜிக்கு கண்ணீர் பெருகியது அவன் அணைப்பில்.
“எனக்கு பயமா இருக்கு ஜனா” என விஜியின் உடல் நடுங்கியது.
அவளை சமாதானம் செய்தவன், “ஜிமிக்கி! நீ அம்மா பேசியதை மனசுல ஏத்தாத, அவங்க பேசியதை உணர்ந்து பேரப்பிள்ளை வேணுமுனு கேட்கும் போது சரியான பதில் நான் கொடுக்குறேன். நீ பொறுமையா இரு ப்ளீஸ். நம்ம மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை. அதனால நம்ம நார்மலா இருப்போம், எதையுமே நம்ம பிளான் பண்ணி செய்யல . ஆனா இனி நம்ம சரியான முடிவெடுத்து வாழ்க்கையை நகர்த்தலாம்.. முதலில் இப்பொழுது வீடு.. அதை மாத்துற வேலையை பாப்போம்.”
“ம்ம்ம்!”
“நான் இருக்கேன்டா, ஃபீல் ப்ரீ… என் ஜிமிக்கில…” என கொஞ்சினான் சிரித்தவாறு.
“ம்ம்ம்! சரி விடுங்க ஜனா, நான் போறேன் கீழே…” என்றாள் பாவமாக.
அவளின் மனம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு என உணர்ந்தவன், அவளை விலக்கினான்.
“சரி போ!”
விஜி கண்ணாடி முன் நின்று தன்னை சரிசெய்தவள், அவனை பார்த்து மெல்லிய புன்னகை செய்து வெளியேறினாள்.
***
அடுப்படிற்குள் நுழைந்தவளின் மனம் ஒரு வித பயத்துடன் இருந்தது மாமியார் முகத்தை பார்க்க வேண்டுமே என்று.
வசந்தா அங்கு இல்லை. இல்லை என அறிந்ததும் நிம்மதி மூச்சினை வெளியிட்டவள் காதில் யாரோ வரும் அரவம் கேட்க, சட்டென்று சிறிது பயத்துடன் திரும்பினாள்.
அப்பு தான் அங்கு வந்தது. ஃபீல் ப்ரீயானவள், “வா அப்பு!” என்றாள்.
“அண்ணி! நீங்க கிச்சனில் என்ன பண்றீங்க…? அம்மா இல்லையா..?”
“ஏன் நான் கிச்சனுக்கு வரக்கூடாதா..?” எனச் சிரித்தாள்.
“ச்சே! ச்சே! அப்படியில்லை, முதல் தடவை இந்த இடத்தில் பாக்குறேன்ல அதான்.” என அவனும் சிரித்தான்.
“உனக்கு ஏதாவது வேணுமா அப்புமா” என்றாள் ஜனா மாதிரியே..
அது என்னவோ அப்புவிற்கு பாசிட்டிவ் வைபாக இருந்தது.
“ம்ம்ம்! ஆமா அண்ணி, ஒரு டீ கிடைக்குமா..? இயர்லியா படிக்க எழுந்திரிச்சேன் அதான் ஒரு மாதிரி இருக்கு, அம்மா போட்டு வருவாங்க ஆனா ஆளையே காணும்” என்றான்.
“ஓகே! நீ போ, நான் போட்டு வரேன்..”
“ம்ம்ம்!” என அவன் சென்றான்.
வசந்தா அவர் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
தான் கோபத்தில் அதிகமாக பேசிவிட்டோம் என மனம் வேதனையானது, ஆனாலும் அவரின் கோபம் மாறவில்லை. அதனால் மனம் அமைதியாக வந்து அமர்ந்தவர் எழவே இல்லை, அருகில் முத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.