அந்த இரவுப் பொழுதில், வீட்டில் இருந்த அனைவருமே இயந்திரம் போல் நடமாடினர்.
ஓரளவிற்கு வீட்டின் பொருட்கள் இளையர்வர்களின் முயற்சியினால் தேவையான இடங்களில் சென்றமர்ந்தது.
அமரும், ஜனாவும் இரவு உணவினை வெளியில் சென்று உணவகத்தில் வாங்கி வந்தனர்.
முத்து சாப்பிட்டு முடித்து மாத்திரைகளை போட்டுக் கொண்டார். அப்புவின் முயற்சியால் வசந்தாவும் சாப்பிட்டு விட்டு கணவர் இருந்த அறைக்குள் சென்றவர், பாய் எடுத்துப் போட்டுத் தரையில் படுத்துக் கொண்டார்.
முத்துவின் மனதில் இழப்பு, உடலின் சோர்வு என சேர்ந்திட பாரம் கூடியதால் அவரும் கண்களை மூடிக் கொண்டு நித்திரையைத் தேடினார்.
அமரும் அனைத்தும் முடிந்தமையால் விடைப் பெற்றுக் கொண்டான்.
அப்பு ஹாலில் ஒரு ஓரமாக படுக்கையை விரித்துக் கொண்டு, கையில் புத்தகத்துடன் அமர்ந்தான்.
ஜனா அதனைக் கண்டு ஆதங்கம் கொண்டாலும், வேறு வழியில்லாமல்
“அப்பு! காலையில படிச்சிகலாம் படுடா, நீயும் தானே வேலை பார்த்த, டயர்டா இருக்கும்” எனக் கூறினான்.
“இல்லண்ணா! எனக்கு பிரச்சனையில்லை, தூக்கம் வந்தா படுத்துப்பேன். நீங்க போங்க” என்றான் இளையவன்.
ஜனா அதற்கு மேல் அங்கு நிற்காமல், அடுத்து இருந்த அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தான்.
விஜி அங்கு இருந்த அந்த ஒற்றை ஜன்னலின் கம்பிகளைப் பிடித்தப்படி வெளியில் வேடிக்கைப் பார்த்தவாறு நின்றாள்.
அறைக்குள் நுழைந்தவன், கதவைத் தாழிட்டுவிட்டு, அவள் பின்னால் சென்று அணைத்தவாறு நின்றான்.
“அப்பு படுத்தாச்சா..?” என அவன் பக்கம் திரும்பாமலே கேட்டாள்.
“இல்ல ஜிமிக்கி! படிச்சுட்டு இருக்கான்.”
“ம்ம்ம்! உங்க அம்மா முகமே சரியில்ல ஜனா”
“பாத்தேன், ஆனா என்ன செய்றது..? அவங்க ரெண்டுப் பேரும் கஷ்டப்பட்டு உருவாக்கின எல்லாமே அழிஞ்சுட்டு, இப்ப எதுவுமே இல்லாம நிக்குற நிலையை நெனச்சா அவங்களுக்கு எப்டி தாங்கிக்க முடியும்” என வருந்த வார்த்தைகள் தடுமாறியது அவனிற்கு.
அவனை திரும்பி நோக்கியவள், “ப்ளீஸ்! காம் டவுன், இது ஓரு இக்கட்டான நிலை தான் ஆனா இப்படியே எப்பையும் வாழ்ந்துட மாட்டோம், அதை மட்டும் மனசுல வைங்க” என ஆறுதல் கூறினாள்.
“புரியுது! ஆனா அப்பாவோட இந்த நிலையில் அவர மனசளவுல சந்தோஷமா வச்சுக்க முடியலைனு கில்டியா இருக்கு எனக்கு” என்றவனை, திரும்பி இடுப்போடு கட்டி அணைத்தாள்.
“மறுபடியும் சொல்றேன் கோல்ட், எல்லாம் மாறும் கவலைப்படாதீங்க”
“ம்ம்ம்!” என அவளை இறுக்கி தோளில் முகத்தை பதித்தவன், “அப்பா, அம்மா,நான் கூட பரவாயில்ல ஏற்ற இறக்கங்களில் வாழ்ந்து பழகி இருக்கோம், ஆனா அப்பு அவனுக்கு ரொம்ப புதுசு ஜிமிக்கி, பாவம் அவன், அந்த வீட்டில் தனி ரூம், எல்லாமே வசதியா இருந்துச்சு ஆனா இங்க ஹாலில் பொதுவா தங்கி இருக்கான், அவன் வறுமையை பழகி இருந்தா எனக்கு பெருசா தெரியாது. அவனுக்கு விவரம் தெரியும் போது எல்லாம் நாங்க நல்ல நிலையில் இருந்தோம்” என கலங்கினான்.
“ம்ம்ம்! புரியுது கோல்ட், நான் ஒன்னு சொல்லவா..?”
அவளிடம் இருந்து விலகியவன், “என்ன..?” எனக் கேட்டான்.
“நீங்க போய் அப்பு கூட தூங்குங்க, நான் இங்க படுத்துக்குறேன்”
அவன் முகத்தில் லேசான புன்னகைப் பூத்தது.
“என்ன..?”
“இல்ல! நானுமே இதை யோசிச்சேன், ஆனா நீ எப்படி எடுத்துப்பனு தெரியாம அமைதியாகிட்டேன், ஏனா! உன்னை சந்தோஷமா வச்சுக்கிறேனு கூட்டிட்டு வந்துட்டு இப்ப…” என நிறுத்தினான்.
“இப்ப நான் சந்தோஷமா இல்லைனு யாரு சொன்னா, நான் ஹேப்பி தான் மிஸ்டர் கோல்ட், உங்க கூட இருக்கேன் அது போதாதா..? எந்த இடத்தில் இருந்தா என்ன..? இடமா முக்கியம். உங்களோட இந்த மனசு இந்த காலத்தில் எத்தனைப் பேருக்கு வரும். அப்பா சம்பாரிச்சு வச்சதை பங்குப் பிரிச்சு அனுப்பவிக்கவும், அவ்வளவு செலவு செஞ்சு ஆப்ரேசன் பண்ணினாலும் பாசிட்டிவா ஆகலாம், நெகட்டிவா போகலாமுனு தெரிஞ்சும் இப்பவரை செலவு செஞ்சு காப்பாத்திட நினைக்கிறீங்க.
இந்த மனசு இருக்க உங்க கூட நான் இருக்க சந்தோஷம் இல்லாம இருக்குமா சொல்லுங்க, நீங்க எனக்கு பணத்தைக் கொடுப்பீங்க, ஆடம்பரமான வாழ்க்கையைக் கொடுப்பீங்கனா எதிர்பார்த்து நான் வரலயே, இந்த வீடும் நல்லா இருக்கு, நம்ம மனசு ஏத்துக்கிட்டா போதும், ஓகேவா” என அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினாள்.
“தேங்க்ஸ்டி!” என அவளை இறுக்கி அணைத்தான்.
“ஹலோ! வெளியில் அப்பு இருக்கான்”
“இருக்கட்டும், உஷ்ஷ்!” என விஜியின் நெற்றியில் முத்தம் வைத்தவன், “சரி! நீ படு” என விலகினான்.
விஜி அந்த அறையின் ஓரமாக இருந்த பாயை எடுத்து விரித்தாள்.
“ஜிமிக்கி! நாளைக்கு சின்ன மெத்தை வாங்கி தரேன், அந்த வீட்டு ரூம் மெத்தை இங்க இடம் பத்தாதுனு தான் கொண்டு வரல”
“தெரியும்! தெரியும்! போய் படுங்க, இதுல தூங்குறது எனக்கும் பழக்கமிருக்கு.”
அவளையே நோக்கியவன், பிறகு”குட் நைட்!” என வெளியில் செல்ல திரும்பினான்.
“ம்ம்ம்! ஜனா ஒரு நிமிசம்” என அழைத்தாள்.
“என்ன ஜிமிக்கி.?”
“நான் ஒன்னு சொல்வேன் நீங்க தப்பா நினைக்க கூடாது”
“சொல்லு!”
“நான் வேணுனா என் பேருல உள்ள இடத்தை விக்குற பணத்தில் கடனா மாமா கிட்ட கேக்கவா..? நான் சைன் போட்டா தானே அவங்க விக்கவும் முடியும்..”
“இல்ல விஜி, எனக்காக அந்தப் பணத்தைப் பத்தி நீ பேசினாலே எனக்கு அது அவமானமா ஆகிடும், நான் உன்னைய கல்யாணம் பண்ணினதும் அதுக்காகனு ப்ரூவ்டு ஆகும். வேணாம் உன் அப்பா நல்லவரோ, கெட்டவரோ அவர் சொன்ன மாதிரி அந்த இடத்தை அவங்களே எடுத்துக்கட்டும், அட்லீஸ்ட் உனக்கான கடனாச்சும் தீரட்டும், உன் மாமாங்க பாசம் உண்மையா இருக்கலாம் அதுக்கு விலை வைக்க முடியாது, அட்லீஸ்ட் இனிமே உங்க மாமிங்க பேச மாட்டாங்கள, நாங்க அத பண்ணோம் இத பண்ணோமுனு.. இனிமே அதைப் பத்தி பேசாத.. அவங்க எப்ப கூப்புட்டாலும் போய் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு வா” எனக் கூறிவிட்டு வெளியேறினான்.
விஜியின் மனம் கணவனை எண்ணி ஒருவாறு மகிழ்ச்சியில் மிதந்தது.
****
காலைப் பொழுது விடிந்தது.
வசந்தாவின் மனம் அசதியாக இருந்தாலும், அன்றாட வேலைகள் மனதில் ஓட, எழுந்தமர்ந்தார்.
முத்துவும் இருமியவாறு எழுந்திட, “என்னங்க! தண்ணீ வேணுமா..?” எனக் கேட்டார்.
“ம்ம்ம்! ஒன்னுமில்ல, பாத் ரூம் போயிட்டு வரேன், டீ போட்டு வா வசந்தா” என எழுந்து நடந்தார்.
வசந்தா எழுந்ததும் பாயைச் சுருட்டி வைத்துவிட்டு, கணவன் பின்னாலே நடந்தார்.
வெளியில் வந்த முத்து, அப்படியே நின்றுக் கொண்டு இருந்தார்.
“என்னங்க! பாத் ரூம் போகனுமுனு இங்கயே நிக்குறீங்க..?” என அவரும் அந்தக் காட்சியைக் கண்டு அப்படியே நின்றார்.
“சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்குதுங்க ரெண்டும்” என்றார் ஆசையாக மகன்களைப் பார்த்தவாறு.
ஜனாவும், அப்புவும் ஒரு போர்வைக்குள் அருகருகே படுத்திருந்தனர்.
“சரி தான் வசந்தா, ஆனா ஜனாவுக்கு கல்யாணம் ஆகிட்டு, அவங்க தனி தனியா ஏன் படுக்கனும்.?” என கோபமாக கேட்டார் முத்து.
“தெரியலையே!” என்றாலும், வசந்தாவின் மனம் பயத்தில் விழித்தது, ‘ஒரு வேளை நம்ம தான் காரணமோ..?’ எனக் கேட்டு.
முத்து ஜனாவை எழுப்ப போனார். அதற்குள் அப்போது தான் எழுந்து வெளியில் வந்த விஜி”என்ன ஆச்சு மாமா? எதும் வேணுமா ஜனாவை ஏன் எழுப்புறீங்க..?” எனக் கேட்டாள்.
“இல்லம்மா! இவன் ஏன் இங்கப் படுத்து இருக்கான்…? உள்ள வசதிப் பத்தலையா நீங்க வேணா இந்த ரூமில் படுத்துக்கோங்க” என்றார் அவர்கள் அறையைக் காட்டியவாறு.
“இனி வசந்தா அப்புக் கூட படுத்துப்பா, இன்னையில் இருந்து ஜனாவை உள்ள படுக்க சொல்லும்மா”
“மாமா! உங்களுக்கு ஏதாவது தேவைனா அவங்க தான் பாக்கனும். இப்ப என்ன ஆச்சு..? ஜனா இங்க அப்பு கூட படுப்பதால் எனக்கு பிரச்சனையில்ல,
அதோட அப்புக்கு இது டுவெல்த், வீட்டுச் சூழ்நிலை அவனோட படிப்பைப் பாதிச்சிட கூடாது, நீங்க அமைதியா இருங்க மாமா, நானும் ஜனாவும் சந்தோஷமா தான் இருக்கோம், இரவு ஒன்னா தூங்காததால் எங்க வாழ்க்கை மாறிடாது, அப்படி பாத்தா நீங்களும், இவங்களும் அந்த வாழ்க்கையை தானே வாழ்ந்தீங்க..? நான் போய் டீ போட்டு வரேன்” என பட்டென்று கேட்டுவிட்டு, விலகி நடந்தாள்.
வசந்தா அதிர்ச்சியாக கணவனைக் கண்டார், அவரும் எதிர்பார்க்காமல் வந்த விஜியின் பதிலில் கொஞ்சம் அதிர்ச்சியில் நின்றார்.
ஜனாவின் காதில் அவர்கள் பேசுவது அனைத்தும் விழுந்தாலும், அசையாமல் படுத்து இருந்தான்.
அறைக்குள் உடை மாற்றிக் கொண்டு இருந்த ஜனா, விஜி நுழைந்ததும்”என்ன மேடம்! காலையில் அப்பா கிட்ட ஏதோப் பேசிட்டு இருந்தீங்க போல..?” என தலைமுடிகளை வாரியவாறுக் கேட்டான்.
“அப்ப இந்த ப்ராடு தூங்கல”
“தூங்கிட்டு இருக்காங்களேனு போய் ஓரமா பேசாம, இப்ப நான் ப்ராடா..?” என திரும்பி சிரித்தான்.
“ஆமா!” எனக் குளிப்பதற்கு உடைகளை எடுத்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பின்னால் இருந்து அணைத்தான் ஜனா, அவனின் அணைப்பை எதிர்பார்க்காதவள்”ஆ!” எனக் கத்திவிட்டாள்.
“ஏய்! ஏன்டி சத்தம் போடுற..?” எனப் பயந்து விலகியவன், அடுத்த நொடியே வெளியில் சென்று விட்டான்.
வீடே சிறியது, அந்த அறையில் மெல்ல பேசினால் பரவாயில்லை, ஆனால் இப்படி சத்தம் போட்டால் வீடு முழுவதும் கேட்கும்.
அப்பு சத்தம் கேட்டு, நொடியில் வெளியில் வந்த ஜனாவிடம்”என்ன அண்ணா ஆச்சு..? அண்ணிக்கு எது அடிப்பட்டுச்சா..?” எனக் கேட்டான்.
வசந்தா”நீ சாப்புட்டு ஸ்கூலுக்கு கிளம்புற வழியைப் பாரு” என அதட்டினார்.
“இல்லம்மா! அண்ணி கத்தினாங்க அதான் எதும் அடிப்பட்டுச்சானு..” என இழுத்தான் அப்பு.
“ம்ம்ம்! அத பாக்க எல்லாம் ஆளு இருக்கு, நீ படிக்குற வேலையை மட்டும் பாரு..” என அடுப்படிற்குள் சென்றார்.
ஜனா”அப்பு! எப்டி ஸ்கூல் போவ…?” எனப் பேச்சினை மாற்றினான்.
“ப்ரண்ட் வருவான் அண்ணா”
“ம்ம்ம்!”
விஜி வெளியில் வந்து, ஜனாவைப் பார்த்து கண்களால் சாரி சொல்லிவிட்டுப் போனாள்.
அவனோ அவளை முறைத்தவாறு அமர்ந்திருந்தான்.
“அப்பு! கிளம்பியாச்சா..?”
“ஆமா அண்ணி! பை”
“ஓகே!” எனக் குளிக்க சென்றாள்.
ஜனா மனதில்’அய்யோ! என் மானமே போச்சு..’ என முழித்தவன், ‘ஆமா! இந்த அப்பு பயலுக்கு இது கூடவா தெரியல. பச்சப்புள்ளையா இருக்கானே..’ என தலையைக் குலுக்கினான்.
‘ஆமா! அவனை பொத்திப் பொத்தி பொம்பளைப் புள்ள மாதிரி வளர்த்தா எப்டிடா தெரிஞ்சுப்பான். எல்லாம் நீயும் உன் அம்மாவும் பண்ணினது.. பாவம் அது பால் குடிக்குற புள்ளையா இருக்கு’ என அவன் மனம் நக்கலடித்தது.
அதுவும் உண்மை தான், அப்பு ஸ்கூல் போவது, அடுத்து வீடு இது தான் அப்போது இருந்தே. நட்புகள் வட்டம் ரொம்ப குறைவு, அதுவும் அவனைப் போல பச்சப்புள்ளைங்க.
ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. முத்து ஜனாவிடம் நேரடியாக கூறியும், அவன் அப்புவுடன் தான் தூங்கினான். அவரும் அதற்கு மேல் பேசாமல் அமைதியானார்.
வசந்தாவின் மனம் கேள்வியில் மிதந்தது.
அன்று இரவு விஜி வேலைக்குச் சென்றதும், ஜனாவிற்கு ஃபோன் வந்தது.
முத்தையா தான் மறுப்பக்கம் அழைத்திருந்தது.
ஃபோனை எடுத்த ஜனா”ஆ! சொல்லுங்க மாமா, நல்லா இருக்கீங்களா..?” என நலம் விசாரித்தான்.
“மாப்பிள்ளை! ஒரு அவசரமான சேதி, மங்கைக்கு திடீருனு மயக்கம்”
“அச்சோ! என்ன ஆச்சு மாமா..? இப்ப எப்படி இருக்காங்க..?”
“இங்க காட்டினோம், முதலுதவிக் கொடுத்து சென்னைப் போக சொல்லிட்டாங்க, ஆம்புலன்ஸில் தான் வரோம், அதைச் சொல்ல தான் கூப்புட்டேன். விஜி ஃபோனுக்கு கூப்புட்டா பயந்துடும் அதான், கொஞ்சம் சீரியஸ் தான் எனக்கும் பயமா இருக்குப்பா, புள்ளைய அழைச்சுட்டு வந்துடுங்க”
“எந்த ஹாஸ்பெட்டல் வரீங்க மாமா?”
“அ**லோ தான்பா, சுகர் ஓவராச்சு இப்ப சுயநினைவு இல்ல, எனக்கு என்ன பண்றதுனு தெரியல..?”
“நீங்க கவலைப்படாதீங்க மாமா, நாங்க வந்துடுறோம், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?”
“இன்னும்…..” என அவர் கூறவும், ஃபோனை வைத்துவிட்டு விஜி எப் எம் ஸ்டேசன் நோக்கி புறப்பட்டான்.