இரவில் சரியான தூக்கமின்மை காரணமாக இப்பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, கணவரை நோக்கியவாறே அமர்ந்திருந்தார் வசந்தா.
அவரின் மனம் அவரை கேவலமாக பார்த்து,
‘வசந்தா! நெல்லைக் கொட்டினா அள்ளிடலாம் சொல்லைக் கொட்டினா அள்ள முடியாதுனு தெரியாத அனுபவசாலியா நீ…?’ எனக் கேட்டது.
அவரோ மனம் கேட்ட கேள்விக்குப் பதில் கூற இயலாமல் அமர்ந்திருந்தார்.
‘ஒரு காலத்தில் நீ இந்த வாழ்க்கைக்கு ஏங்கிட்டு இருந்தீயே நினைவு இருக்கா..?’ என மனம் கேட்க, கண்களில் கண்ணீர் வழிந்தது.
வசந்தாவும் முத்துவும் ஒன்றாக இருந்தது அதாவது தாம்பத்யத்தில், அந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்தளவு சொற்பமான நாட்கள்.
ஜனா பிறந்து நீண்ட வருடங்கள் கழித்தே முத்து ஊருக்கு வந்தார், அந்த சில நாட்களில் உண்டானவன் தான் அப்பு.
அதன் பிறகு மறுபடியும் வெளிநாடு பிரவேசம். அவருடைய இத்தனை வாழ்நாளில் பாதிற்கு மேல் வெளிநாடு வாழ்க்கை தான். வசந்தாவிற்கு தன் இளமையை மீறிய உணர்வுகளின் ஆறுதல் மகன்களே.
மகன்களின் ஒரு நாள் தேவைகளே வசந்தாவின் பொழுதுப் போக்கு, காலை முதல் இரவு வரை பிள்ளைகள், பிள்ளைகள் மட்டுமே. இரவில் கணவனிடம் இருந்து வரும் அந்த ஃபோன் கால் ஒரு அரைமணிநேரத்திற்கு சொர்க்க வாழ்க்கையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.
இந்த வெறுத்த வெறுமையான வாழ்க்கையில் வசந்தா எண்ணிருந்தது இது மட்டும் தான், தன் மகன்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை கூடாது, அப்படியே கிடைத்தாலும் மனைவியை அழைத்துச் செல்லும் தகுதியில் இருக்க வேண்டும் என எண்ணினார்.
அதை அடிக்கடி மகன்களிடம் கூறியும் வந்தவர் தான் அவர், நானும் அப்பாவும் கடைசிக் காலத்தில் எங்க வாழ்க்கையை வாழ்ந்துடுவோம், நீங்க எங்க வேலைத் தேடிப் போறீங்களோ அங்க தான் உங்க பொண்டாட்டி, பிள்ளைங்க இருக்கனும் என கூறி அவர்கள் மனதில் ஏத்தி வைப்பார்.
அப்படிப் பட்டவர் இன்று இப்படி பேசியது அவருக்கே அருவருப்பாகத் தோன்றியது.
முத்து உடல்நிலை சரியில்லாமல் தான் தாய்நாட்டிற்கே திரும்பியது.
அவர் வந்த நாள் முதல் வசந்தாவிற்கு மருத்துவமனை, பத்தியச் சாப்பாடு, தூக்கமின்மை இப்படியே தான் நகர்கிறது.
தன்னால் அப்பவும் வாழ முடியவில்லை, இப்பவும் வாழ முடியவில்லை என்ற ஆதங்கம், கோபம் எல்லாமே ஆழ் மனதில் அடங்கி அவரை கல்லாக்கி இருந்தது.
எப்படியாவது கணவரை தேற்றி அவரோட சில வருடங்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிட ஆசைக் கொண்டார்.
அவர் உடல்நலம் சரியாகவும், ஜனாவிற்கு கல்யாணம் முடித்து பேரப்பிள்ளைகளை கணவர் பார்க்க வேண்டும் என அவரோட ஆசைகள் வளரத் தொடங்கியது.
ஆனால் அது தடைப்பட்டது போல் ஜனா விஜியை கல்யாணம் செய்துக் கூட்டி வந்தது, வசந்தாவின் கோபத்தை உச்சத்தில் நிற்க செய்திருந்தது.
‘இப்படி பண்ணிட்டானே, இனிமே எப்படி இவரை காப்பாத்துவான், அவ்ளோ தானா வாழ்க்கை.. முடிஞ்சுட்டா’ என மனதிற்குள் புழுங்கிக் கொண்டு இருந்தார்.
அதன் விளைவு தான் சிதறிய அள்ளிட முடியாத சொற்கள்..
தன்னையே வெறுத்து நொந்தார்.
‘நான் ஆசையா வளர்த்த மகனிடம் போய் இவ்ளோ அசிங்கமா பேசிட்டோமே…? எனக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை’ என தன் முகத்தை மூடி அழுதார், கணவர் முழித்துவிடாமல்.
மனமோ’இப்ப எதுக்கு அழுது வேஷம் போடுற..? அந்தளவு நீ பேசுனீயே, அப்ப உனக்கு உன் புருசன் உயிர் காப்பாத்தி நீ அவரோட வாழனும், அந்த சின்னப்புள்ளைங்க ஒன்னா இருக்க கூடாது, அப்படி தானே…
அவங்க வயசுல உன்னால வாழ முடியலைனு வருத்தப்பட்ட நீ இப்படி பேசலாமா.? சரியோ, தப்போ ஜனா கூட்டிட்டு வந்துட்டான் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமுனு விட வேண்டியது தானே…
அவங்களை அந்த நிலையில் பார்த்த நீ சத்தம் இல்லாமல் திரும்பி வந்திருக்கனும், தப்பு பண்ணிட்ட வசந்தா, பெத்த மகனை போய் பொறாமையா பாத்து இருக்க..’ என தன் மனமே குற்றம் சாட்டியதும்,
“இல்ல! இல்ல!” என்றார் வாய் விட்டு கூறியவர், நொடியில் தன்னிலையை உணர்ந்து, கணவரை நோக்கினார்.
‘நான் பேசியது ரொம்ப தப்பு தான், ஆனா நான் பொறாமைப்படவில்லை, அவன் என் பையன், புடிச்சப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கிட்டான் ஆனா இப்ப உள்ள நிலையில் என்னால ஏத்துக்க முடியல, எப்படி ஏத்துக்க முடியும்..? இப்ப இந்த வீடுக் கூட நிரந்தம் இல்லையே!
நான் அசிங்கமா பேசிருக்க கூடாது, தப்பு! தப்பு தான்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. என் மூளை இப்படியுமா யோசிக்கும்..? எந்தளவு கேவலமா போய் பேசிட்டேன், அந்த பொண்ணு..? ச்சே! எப்படி அவங்க ரெண்டுப் பேரு முகத்தில் இனி முழிப்பேன்.
கடவுளே! எட்டு நாளா உங்களை தானே மனசுல நினைச்சுட்டே பஜனை பாடினேன்
இன்னைக்கு எனக்கு கொஞ்சம் பொறுமையை கொடுத்திருக்க கூடாதா…?
நாக்குல சனியை விளையாட விட்டு வேடிக்கை பாக்குறீங்களா..? நான் பெத்த பிள்ளை கிட்டயே….’ என கண்களை மூடித் திறந்தார்.
‘சரி! புடிக்கலைனா நான் தான் ஒதுங்கி இருக்கனும், இனி அவங்க வழியில் நான் போக மாட்டேன். கடவுளே! என் புருசனை மட்டும் நல்லப்படியா காப்பாத்தி கொடுத்துடு போதும், ஜனா அவன் மனசுக்குப் புடிச்ச மாதிரி வாழட்டும்’ என வேண்டிக் கொண்டவர், கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.
முத்து அசையும் சத்தம் கேட்க, “என்னங்க ஆச்சு, எதும் வேணுமா..?” எனக்கேட்டார்.
“கால் வலிக்க ஆரம்பிச்சுட்டு வசந்தா” என்றார் அவர் முகத்தைச் சுளித்தவாறு.
“இருங்க!” என எழுந்து கால்கள் பக்கம் சென்றுப் பார்த்தார்.
“வீக்கமாகிட்டு, நான் புடிச்சு விடுறேன் நீங்க தூங்குங்க” என கால்களை மாற்றி மாற்றி அமுக்கி விட்டார்.
இது தினசரி நாட்களில் பெரும்பாலான வேளைகளில் நிகழும் ஒன்று தான்.
முத்துவின் கால்கள் அப்பப்போ பந்தாக வீங்கிக் கொள்ளும்.
முத்து மறுபடியும் தூக்கத்திற்கு செல்ல, ‘கோயில் போனால் மனசு பாரம் இறங்கிடுமோ..?’ என்ற நப்பாசையில் வசந்தா வெளியில் எழுந்து சென்றார்.
ஹாலில் அப்பு அமர்ந்திருக்க, நேராக பூஜை அறைக்குள் சென்றவர், அங்கிருந்த ஸ்லோகங்கள் நிறைந்த புத்தகப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அப்பு தேநீர் அருந்திக் கொண்டு இருப்பதைக் கண்ட வசந்தா மனம் வருந்தி”அய்யோ அப்புமா! டீ போட்டு தர மறந்துட்டேனா, நீயே போட்டுகிட்டீயா..? மன்னிச்சுடுடா..” என்றார்.
“பரவாயில்லைமா! இந்த டீ போட்டது நான் இல்லை, அண்ணி” என அப்பு சொல்லி முடிக்க, விஜி சமையல் அறைக்குள் இருந்து இரு டீ கப்களோடு வெளியில் வந்தாள். அவளும் ஜனாவும் அருந்துவதற்காக.
அவளை எதேச்சையாக பார்த்தவர் கண்டுக் கொள்ளாமல், “அப்பு! அப்பா நல்லா தூங்கிட்டு இருக்கார், இட்லி, சட்னி ரெடிப் பண்ணிட்டேன், சாப்புட எடுத்துக் கொடு. நீ எங்கயும் போயிடமா இங்கயே உட்காந்து படி, நான் ஒரு மணிக்கு வந்துடுறேன். சாதம் மட்டும் தான் வைக்கனும் வந்து வச்சுடுறேன்” எனக் கூறிவிட்டு கிளம்பினார்.
“இன்னைக்கு என்னம்மா இவ்வளவு இயர்லியா போறீங்க…?”
“கடைசி நாள்ல அதான்.. நீ படி” என வேகமாக வெளியில் சென்றார்.
அவர் வெளியில் சென்று மறைந்ததும்,
விஜி”அப்பு! உங்கம்மா எங்கப் போறாங்க..?”
“கோயிலில் பூஜை நடக்குதுல அண்ணி, அங்க தான்”
“ஓ! சரி நீ படி அப்புமா, நான் போய் உன் அண்ணனுக்கு டீ குடுத்துட்டு வரேன்”
“ஓகே அண்ணி! பொறுமையா வாங்க, அம்மா டிபன் எல்லாம் ரெடிப் பண்ணி தான் வச்சுட்டுப் போய் இருக்காங்க” என நட்பாகச் சிரித்தான்.
“ம்ம்ம்!” என அவளும் சிரித்தப்படி மாடிக்கு சென்றாள்.
***
ஜனா ஃபோனை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
“ஹலோ கோல்ட்! இந்தாங்க டீ, நான் போட்டது” என சிரித்தப்படியே நீட்டினாள்.
நிமிர்ந்தவன் சந்தேகமாக”அம்மா!” என இழுத்தான்.
“நான் கிச்சனுக்குப் போகும் போது இல்ல, அப்பு டீ கேட்டான் அதான் நமக்கும் சேத்துப் போட்டேன். ஆமா கோல்ட்! உங்க அம்மா டெய்லி இந்த டைமுக்கு கோயில் போயிடுவாங்களா..?”
“ஓ! அந்த பூஜை ஃபாலோ பண்றீங்களா..? எங்க பக்கம் எல்லாம் இல்லை” என்றாள் சாதரணமாக.
“எங்க வீட்டிலும் முன்னாடி நவராத்திரிப் பூஜை ஃபாலோ அப் கிடையாது, அப்பா உடம்பு பிரச்சனை ஆனதில் இருந்து அம்மா ஒரு விரதத்தையும் மிச்ச வைக்கலை, எல்லா விரதமும், பூஜையும் பண்றாங்க, மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் வெஜ் தான்.
அப்பாக்கு தனி சாப்பாடு முறை, அம்மாவும் அப்பா சாப்புடும் சாப்பாடு தான், ஆனா எனக்கும், அப்புக்கும் உப்பு, காரம், புளிப்பு போட்டு தனியா செஞ்சு வச்சுடுவாங்க, இப்ப வேணா போய் பாரு சட்னியே ரெண்டு வகை இருக்கும்”
“அவங்க ஏன் அப்படி சாப்புடுறாங்க ஜனா..?” எனக் கேட்டாள் புரியாமல்.
“ஜிமிக்கி! அம்மா வாழ்ந்த வாழ்க்கையே ரொம்ப சேக்ரிபிகேசன் லைஃப். நான் பொறந்ததுக்கு அப்புறம் நானும், அம்மாவும் தான் ஒன்னா இருந்தோம், அந்த கஷ்டமான நிலையிலும் அம்மாவோட அம்மா எங்க பாட்டி, அவங்க வீட்டுக்கு கூப்புட்டும் அம்மா போகலை, அப்பாவோட அம்மாவும் இருந்தாங்க துணைக்கு இங்க, அவங்க கொஞ்ச வருசங்களில் இறந்துட்டாங்க.
நான் எய்த் படிக்கும் போதும் அப்பா ரொம்ப வருசங்கள் கழிச்சு ஊருக்கு வந்தாங்க. அந்த நேரத்தில் தான் அம்மா மறுபடியும் கன்சீவ் ஆனது, எதிர்ப்பார்க்காத ஒன்னு தான். நான் பெரியவனா இருந்ததால் அம்மா, அப்பாக்கு சங்கடமாகிட்டு.
அப்பா வெளிநாடு போன பிறகு தான் அம்மாக்கு தெரியும், அப்பா பரவாயில்லை இருக்கட்டுமுனு சொன்னாங்க, அம்மாக்கும் ஆசை என் கிட்ட கேட்டாங்க.. நான் மறுப்புச் சொல்லி தப்பா நினைப்பேனு பயம் அவங்களுக்கு.
சொந்தகாரங்க எல்லாருமே கிண்டல் பண்ணினாங்க.
எனக்கு அப்ப அது எல்லாம் புரியல, அம்மாக்கு குழந்தைப் பிறக்கப் போகுதுனு சொன்னதும், நான் ஹேப்பி தான். ஏனா எங்க அப்பா பெத்த பாட்டி இறந்ததுக்கு பிறகு நான் வெளியில் போனால் அம்மா தனியா இருப்பாங்கனு எனக்கு பாவமாகவும், பயமாகவும் இருக்கும்.
இப்ப இன்னொரு குழந்தை வந்தால் அம்மாக்கு துணையா இருக்குமுனு நினைச்சேன். அம்மாக்கு பொண்ணு பொறக்க ஆசை. ஆனா அப்பு பொறந்ததும் ஏமாற்றம் ஆகிட்டு” என சிரித்தான் ஜனா.
விஜியும் சிரித்தாள்.
“உங்க அம்மா வீட்டுப் பாட்டி இல்லையா..?”
“அவங்களும் இறந்துட்டாங்க”
“ஓ! அப்பு அன்எக்ஸ்பெட்டெடு பையனா..?”
“ஆனா எனக்கு ஹேப்பி ஜிமிக்கி.. தம்பியோ, தங்கச்சியோ அம்மாக்கு துணை அவன், இதை தான் நான் யோசித்தேன். இப்ப வரை நான் இல்லாதப்போ அப்பு தான் அம்மாக்கு எல்லாம்.
“அப்பாவை பிரிஞ்சு அம்மா கஷ்டப்பட்டாங்கனு எனக்கு வயசு வரும் போது தான் அர்த்தம் புரிந்தது ஜிமிக்கி. அதான் அப்படி சொல்லி இருக்காங்க. இப்ப அப்பா வந்ததும் அம்மா அவருக்காகவே வாழுறாங்க, அவரே பத்திய சாப்பாடு சாப்புடும் போது நான் மட்டும் காரச்சாரமா சாப்புட முடியுமானு அப்பா என்ன சாப்புடுறாங்களோ அதையே பழகிட்டாங்க.
அம்மா அப்பாக்காக மட்டுமே வாழ ஆரம்பிச்சு இருக்காங்க ஜிமிக்கி, அவரு கஷ்டப்பட்டு சம்பாரிச்சது எல்லாமே போயிட்டு, உடம்பும் போயிட்டு, அவங்க இளமை வாழ்க்கையும் வாழாமலே போயிட்டு, ஆனா நான், அம்மா, அப்பு, இப்ப அப்பானு சந்தோஷமா இருக்கோம். இதை நிலைக்க வைக்க தான் அம்மா கோயில் கோயிலா பூஜை, விரதம் இருக்காங்க” என்றான் பொறுமையாக.
“ம்ம்ம்! புரியுது, கிரேட் வைய்ப்….”
“கிரேட் அம்மாவும் தான்…”
“ம்ம்ம்! ஆனா என்னைய இந்த வீட்டில், இன்னும் அந்த கிரேட் வைய்ப், கிரேட் அம்மா ஏத்துக்க யோசிக்குறாங்க.. அது ஏனு இப்ப புரியுது, நான் அவங்க கூட்டை கலைக்க வந்த காகமுனு நினைக்குறாங்க, அந்த காகத்திற்கும் கூடு இருக்குமுனு யோசிக்கலை, ஏனா அவங்க நார்மல் மாமியாரா இருக்காங்களோ கோல்ட்..” எனக் கேட்டு கண் சிமிட்டிச் சிரித்தாள்.
“நீ எந்த மோடில் சொல்றனு புரியல ஜிமிக்கி, ஆங்கிரியா..? இல்ல நார்மலா..? எப்படி இருந்தாலும் அம்மா பேசினது தப்பு தான்..” என விரக்தியாகப் பேசினான்.
“ம்ம்ம்! தப்பு தான்.. ஆனால் அவங்க மேல எனக்கு ஒரு இன்ஸ்ப்ரேசன் வருது மிஸ்டர் கோல்ட்” என புருவத்தை உயர்த்தி சிரித்தாள்.
“ஏன்…?”
“இல்ல! உங்க அம்மா உங்களோட அப்பா கூட இல்லைனாலும் ஒரு அழகான கூட்டைக் கட்டி வச்சுட்டாங்க, அப்பா வந்து அதுல ஐக்கியமாகிட்டார். அவருக்கு உடல்நிலை மட்டும் தானே சரியில்லை, ஆனா மனநிலை பொண்டாட்டி, பிள்ளைங்க கூட இருக்க அந்த மனவலிமை இருக்குதுல, உங்க அம்மாவும் இதுக்காக தானே போராடுறாங்க அவங்களுக்கு தெரிஞ்ச வழியில்.
ஏன் கோல்ட் என்னோட அம்மாவும் இப்படி யோசிச்சு அப்பானு ஒரு கேரக்டருக்காக ஒரு கூட்டைக் கட்டி இருந்தால், நாங்களும் சந்தோஷமா எங்க வாழ்க்கையை வாழ்ந்து இருப்போமுல….” என கண்கள் கலங்க கேட்டாள்.
“ஜிமிக்கி!” என எழுந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“ஃபீல் பண்ணாத, எல்லாம் சரியாகும்..”
“இனிமே எப்படி சரியாகும் கோல்ட். அது முடிஞ்ச கதை. ஆனா உங்க அம்மா ரியலி கிரேட் வாரியர் வுமன், கணவர் கூட இல்லாமல் தனியாக சமாளிப்பது அவ்ளோ ஈஸியான விசயமில்லை. அப்புறம்” என அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“அப்புறம் என்ன…?” என்ற ஜனாவின் விழிகளை அசையாமல் நோக்கினாள்.
“ஹேய்! என்னடி லுக்..?” என சிரித்தான் சிறிய நக்கலுடன்.
“ம்ம்ம்! இந்த மிஸ்டர் கோல்ட் இவ்வளவு நல்ல தங்க பையனா இருக்கானே, இவன் எப்படி எனக்கு கிடைச்சானு தான் பாக்குறேன்..”
“எனக்கு கூட இந்த ஜிமிக்கி பொண்ணு கிடைச்சு இருக்கா.. கொஞ்சம் கோபக்காரி முன்னாடி ஆனா இப்ப பாசக்காரியா தெரியுறாளே! ஆச்சிரியமா இருக்கு” என மேலும் அவளை இறுக்கினான்.
“போகனும் தானுங்க மேடம், ஏதோ கிடைக்குற நொடியை என்ஜாய் பண்ணிக்குறேனே” என சிரித்துவிட்டு, அவளிடம் இருந்து விலகினான்.
***
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்த நாட்கள் நகர்ந்தது.
காலையில் கிச்சனுக்குள் வரும் போது டீ போடப்பட்டிருக்கும் இல்லை என்றால் விஜி போட்டு வைப்பாள், பிறகு முழு நாளும் ஆபிஸ் போனால் இரவே திரும்புவாள்.
விஜி மாமியாரிடம் இருந்து தப்பிக்க, முடிந்தளவு வீட்டில் இருப்பதில்லை, ஜனாவும் சைட் வொர்க் என பகலில் வெளியில் சுற்றிவிட்டு இரவில் தான் வீடுத் திரும்புவது.
வசந்தா அன்று காலை பிறகு இருவரையும் கண்டுக் கொள்வதில்லை.
விஜி மாமனார், கொழுந்தனாரிடம் நன்றாக பேசத் தொடங்கியிருந்தாள்.
மாமியார்- மருமகள் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவு வந்தது போல், வீடு மாற்றும் நாள் வந்து சேர்ந்தது.
வீட்டில் அனைவருமே இருக்க வேண்டிய சூழ்நிலை.
அவரவர் பொருட்களை மூட்டைக் கட்ட தொடங்கியிருந்தனர்.
சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு அதுவும், சிறிய வீட்டிற்கு போக வேண்டுமானால் பாதி பொருட்கள், மரச்சாமான்கள் வைக்க இடம் போதாது.
ஜனா, அமர் மூலமாக ஒரு குடோனில் இடம் கேட்டு இருந்தான், பெரிய பொருட்களை எல்லாம் பாதுக்காப்பாக வைப்பதற்கு.
தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவைகளை நன்கு பாதுகாப்பான முறையில் லாரியில் ஏற்றி அந்த குடோனிற்கு எடுத்துச் சென்றனர்.
அதை எல்லாம் பார்த்தால் மனம் வலிக்கும் என, ஜனா அப்பா, அம்மாவை அப்புவுடன் புது வாடகை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான் முன்பே.
வசந்தா எல்லா பொருட்களையும் எடுத்து அனுப்பிவிட்டு வருவதாக அமரிடம் கூறினார், ஆனால் ஜனா மறுக்கவும் அவர் அவனை கண்டுக் கொள்ளாமல் நின்றார்.
பிறகு ஜனா தந்தையிடம் கூற, அவர் தனக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என மகனிற்காக கூறவும் கிளம்பினார் வசந்தா.
ஒரு வழியாக ஜனாவும், விஜியும் புதிதாக பார்க்கப்பட்ட வீட்டிற்கு சென்றனர்.
முன்பக்கம் வராண்டா, கதவை திறந்துக் கொண்டு போனால் நடுவில் ஹால், இரு அறைகள் பெட் ரூம் சற்று பெரிதாக ஒன்று, மிகச்சிறியதாக ஒன்று.
அதாவது பெரிய அறையில் கட்டில் போட முடியும், சிறிய அறையில் பெரிய கட்டில் போட. இயலாது வேண்டுமானால் கயிற்றுக் கட்டில், நாடா கட்டில் போட்டுக் கொள்ளலாம்.
சிறிய கிச்சன் சேர்ந்தாற் போல் கதவின்றி மேடை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.
அமர், ஜனா, ஆட்கள் வந்து பொருட்களை எடுத்து அடுக்கினர்.
பெரிய அறையில் பெட், காட் போட்டு அந்த அறையை தயார் செய்து முத்துவை சென்று படுக்க சொன்னான் ஜனா.
அவரோ”எங்களுக்கு எதுக்குப்பா அந்த ரூம், சின்ன ரூம் போதும் நீங்க அதை எடுத்துக்கோங்க” என்றார்.
“மாமா! உங்களுக்கு தான் இப்ப முக்கியம் பெட், காட் எல்லாம், எங்களுக்கு எதுக்கு..? பிரச்சனையில்ல, நம்ம இந்த வீட்டிலே இருக்கப் போறதில்ல, இருக்குற வரை நீங்க ப்ரீயா நிம்மதியா இருங்க, உங்க பையனை சிவில் இன்ஞ்சினியர் ஆக்கி இருக்கீங்க, உங்களுக்காக ஒரு வீடுக் கட்டி கூட்டிட்டுப் போக மாட்டாரா என்ன…? கண்டிப்பாக நடக்கும்” எனக் கூறி ஆறுதலாக பேசினாள் விஜி.
“இனி எனக்கு என்னம்மா, நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கனும், அது போதும்..”
“அப்பா! போதும், நீங்க வாங்க” என ஜனா அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க செய்தான்.
வசந்தா ஒரு மூலையில் ஹாலில் அமர்ந்திருந்தார்.
வாழ்க்கை மறுபடியும் முதல் படிக்கே சென்றுவிட்டது என்ற ஆதங்கமான மனதோடு.
ஆனாலும் விஜியின் வார்த்தைகள் அவரை ஏதோ உயிர்பித்தது. புதிதாக ஜனா வீடுக் கட்டுவானா..? அதை பார்க்க நாங்க இருப்போமா…? என்ற கேள்வி வந்தது அவருக்கு.. வசந்தா அப்படியே தரையில் தலை சாய்த்துப் படுத்துவிட்டார்.
ஜனாவும், விஜியும், அப்புவும் அமருடன் சேர்ந்து வீட்டினை ஓரளவிற்கு முறைப்படுத்தினர்.