ஜனா விஜியின் வருகைக்காக காத்திருந்தான், ‘அவசரமா போய் அம்மாவுக்கு சீரியஸ்னு சொன்னா பதறியடிச்சுட்டு வருவா, மாமா சொன்ன நேரப்படி, அவர்கள் வர இன்னும் நேரமிருக்கு, இப்பவே விஜி கிட்ட சொன்னா ரொம்ப அழுது ஆர்பாட்டம் பண்ணிடுவா, சென்னைக்குள்ள எண்டர் ஆகட்டும்’ என்று எண்ணிய படி தான் பைக்கில் சாய்ந்தவாறு நின்றான்.
அவனை தனது அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்த ராம்கி, “ஓ! பொண்டாட்டியை அழைச்சுட்டுப் போக புருசன் வெயிட்டிங் போல, அப்படி என்ன இவன் பெரிய அழகன்..? இந்த விஜி நம்ம கிட்ட மடங்காம இவன் கிட்ட மயங்கிட்டா, ம்ம்ம்!” என கூறியவாறு இரு கைகளின் விரல்களால் கட்டம் கட்டிக் கொண்டு இருந்தான்.
சுஜாதா என்கிற சுஜா, அவனின் மனைவியானவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“வா சுஜா!”
“ராமி! நியூ கன்டென்ட் செக் பண்ணிட்டேன், விஜி கிட்ட தான் சொல்லி இருக்கேன், அத முடிச்சுத் தருவா நீங்க பாத்துட்டு வாங்க நான் கிளம்புறேன், வீட்டுல பிள்ளைங்க தனியா இருப்பாங்க” என்றாள் சுஜா.
“யா ஓகே சுஜா, நீ போ, நான் பாத்துட்டு வரேன்”
“தேங்க்ஸ்டா! நீங்க வர லேட் ஆகுமா..?”
“ஆமா! இங்க வொர்க் முடியனுமே சுஜா”
“ம்ம்ம்!” என கணவன் அருகில் வந்தவள், அவன் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, “நீங்க வந்ததும் தான் எனக்கு பாதி டென்சன் குறைஞ்சுட்டு” எனக் கூறியப்படி, ஃபோனை அவன் டேபிளில் வைத்துவிட்டு பாத் ரூமிற்குள் சென்றாள்.
ராம்கி லேப் டாப் ஸ்கீரினை பார்வையிட, வெளியில் வந்த சுஜா ஃபோனை மறந்தவாறு அவனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டாள்.
ஜனா மீண்டும் முத்தையாவிற்கு ஃபோன் செய்து எந்த இடத்தில் வந்துக் கொண்டு இருக்கிறீர் எனக் கேட்டு கொண்டான்.
வெளியில் ஜனா காத்திருப்பதை அறியாமல், விஜி வேலையில் பிஸியாக இருந்தாள்.
நேரம் கடந்தது…
விஜி வேலையை முடித்துக் கொண்டு ராம்கி அறையை நோக்கி சென்றாள்.
“எக்ஸ் க்யூஸ் மீ சார்..?”
“எஸ்!” என்றவன், விஜி தந்த கன்டென்ட்ஸை வாங்கி ஆராய்ந்தான்.
அதை பார்வையிட்டவாரே, “என்ன விஜி! டெய்லி ஹஸ்பன்ட் கூட ஓரே ரொமான்ஸ் ட்ராவெல் தான் போல..?” என அவளைப் பார்க்காமலே கேட்டான்.
விஜிக்கு ஜனா வெளியில் வெயிட் பண்றது தெரியாது, ராம்கிக்கு அவளுக்கு தெரியும் போலவென்று அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தான்.
“சார்! செக் பண்ணிட்டுச் சொல்லுங்க, நான் வரேன்” எனத் திரும்பினாள்.
“இங்க நான் தான் பாஸ், நான் ஃபைலை பாத்து முடிக்குற வரை இங்க தான் நிக்கனும்” என்றான் வேகமாக.
விஜி அமைதியாக நின்றாள்.
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்ல” என்றான் மீண்டும்.
“நீங்க இந்த ஆபிஸீக்கு தான் பாஸ். என்னோட பெர்செனலுக்கு பாஸ் வேறொருத்தர் சார், இந்த ஃபைலில் டவுட்ஸ் இருந்தா கேளுங்க” என்றாள் அழுத்தமாக.
அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
“ம்ம்ம்! புருசன் மேல அவ்ளோ லவ் போல, பரவாயில்ல விஜி எனக்கும் கொஞ்சம் அதுல ஷேர் பண்ணிப் பாரு, அப்புறம் யார் பெஸ்ட்னு உனக்கே தெரியும், என்ன நான் சொல்றது… நீ ஷேர் பண்றதுனா எப்ப வேணாலும் நான் ரெடி” என்று நக்கலாக பார்த்து சிரித்தான்.
“ஷட் அப்! திஸ் இஸ் லிமிட் ராம்கி” என்றாள் அழுத்தமாக.
“எனக்கு எல்லாம் லிமிட்டே இல்லை விஜி, நானும் உன்ன பார்த்த நாளுல இருந்து ட்ரை பண்றேன், மசிய மாட்டேனுங்குற, பாத்தா திடீருனு கல்யாணம், கச்சேரி, டெய்லியும் ரொமான்ஸ்னு என் கண் முன்னாடியே போற, நான் நெனச்சா உன்னைய இங்கயே என்ன வேணாலும் பண்ண முடியும்.. பட்! ஐ ஆம் நாட் லைக் தட், நீயா வந்தீனா அது வேற மாதிரி இருக்கும், ஸி! நான் சுஜாக்கு அப்புறம் பாத்து ஆசைப்பட்டது உன்னைய தான்.. ஐ வான்ட் யூ….” என முடிக்கவில்லை, ராம்கியின் வாயில் ஒரு குத்து விழுந்திருந்தது.
ராம்கி வாயில் கைவைத்தவாறு நிமிர்ந்தான், கையை எடுக்க அதில் இருந்து இரத்தம் வழிந்தது.
“ஜனா! நீங்க எப்படி இங்க…?” என ஆச்சரியமாக கேட்டாள் விஜி.
“இவன் இவ்வளவு அசிங்கமா பேசிட்டு இருக்கான், நீ வேடிக்கைப் பாத்துட்டு நிக்குற, உனக்கு அறிவு இருக்கா..? இவன் கிட்ட வேலைச் செஞ்சு தான் நீ பிழைக்கனு இருக்கா ஜிமிக்கி..” என மனைவியை முறைத்தான்.
“இல்ல ஜனா! இவனை மாதிரி ஆளுங்க போற இடத்தில் எல்லாம் இருப்பாங்க தான், அதுக்காக நான் ஓடிட்டே இருக்க முடியுமா..?”
“ஓட வேணாம், அட்லீஸ்ட் இப்படி ஏதாவது கொடுக்கலாமே..?” என ராம்கியை நாற்காலியோடு எட்டி உதைத்தான்.
விஜி தடுக்கவில்லை, நாற்காலியோடு போய் குப்புற விழுந்தவன், எழுந்து”டேய்! யாரு மேல கை வைக்குறனு தெரியுமா..?” என உறுமினான்.
“தெரியும்! ஒரு பொறுக்கியோடு தான். ஆ! இவனுக்கு கல்யாணம் ஆகிட்டுல விஜி, அதுவும் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்க பொறுக்கி நாய் கூட. சாரி! நாய் கூட பரவாயில்லை நன்றியுள்ள ஜீவன்”
“விஜி! உன் செருப்பைக் கழட்டி நாலு அடிப் போட்டு வா” என்றான் ஜனா கோபமாக.
“ச்சீ! என் செருப்புக் கூட அவனைத் தொட கூடாது ஜனா, நீங்க வாங்க போகலாம்”
“டேய்! உன்னைய இப்படியே விட்டுப் போக மனசு வரலை, உன்னை..” என்ற ஜனா, மேலும் பல அடிகளைக் கொடுத்து வெளுத்து வாங்கினான்.
“இனி! விஜி கிட்ட ஏதாவது வால் ஆட்டின, நறுக்கிடுவேன் அடுத்த முறை, ஜாக்கிரதை! ஷேரிங் கேக்குதா உனக்கு, உன் பொண்டாட்டி கிட்ட போய் கேளுடா அதை… அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கேக்குற வெட்கமா இல்லை நாயே!” என வேகமாக அடித்ததால் ராம்கி சரிந்து விழுந்தான்.
“ஜனா! வாங்க” என விஜி வேகமாக அவனை வெளியில் இழுத்துச் சென்றாள்.
“விடு விஜி! அவன் கிட்ட எல்லாம் எப்படி வொர்க் பண்ண..?” எனக் கத்தினான்.
“ஜனா! கூல் டவுன். தண்ணீ குடிங்க” என அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.
அதற்குள் ஜனா ஃபோன் அடித்தது.
அப்போது தான் ஜனாவிற்கு நினைவு வர,
“விஜி! நீ வா, ஒரு முக்கியமான அவசரத்தில் தான் உன்னைய கூப்புட வந்தேன்” என அவளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வேகமாக ஓடினான்.
வெளியில் நின்ற ரெனியும் புரியாமல்”ஜனா! விஜி எங்கனு கேட்டீங்க இப்ப எங்கப் போறீங்க அவசரமா..?” எனக் கேட்டாள்.
“நான் ஃபோன் பண்றேன் ரெனி” எனக் கூறிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து, விஜியை பின்னால் ஏறி அமர சொன்னான்.
“என்ன ஆச்சு ஜனா…?” எனக் கேட்டவாறே அமர்ந்தவள், “ஜனா! மாமா ஓகேவா..?” என்றாள் வார்த்தைகள் தடுமாறியவாறு.
“அப்பா ஃபைன், நீ கொஞ்சம் அமைதியா வா… நான் ஸ்பீடா போறேன்” என அவளை பேசவிடாமல் தடுத்தான்.
சென்னைக்குள் நுழைந்து விட்டதாக முத்தையா ஃபோன் வந்ததும் ஜனா விஜியைத் தேடி உள்ளே வர, ரெனி அவள் ராம்கியின் அறையில் இருப்பதாக கூறினாள்.
சிறிது நேரம் காத்திருந்தவன், நேரம் ஆகியதால், ராம்கி அறையை நோக்கி சென்ற போது தான் சம்பவம் நடந்தது.
***
ராம்கி வாங்கிய அடிகளின் வீரியத்தால், எழுந்து பாத் ரூம் சென்று தன்னை சரிசெய்து வந்தான்.
அந்த நேரத்தில் தான் ஃபோன் அடித்தது. ராம்கி ரிங் டோன் வைத்து தான் அது சுஜா ஃபோன் என உணர்ந்தான்.
நீண்ட ரிங் முடியும் வேளையில் எடுத்து காதில் வைத்தான்.
“ஹேய் டார்லிங்! ஐ ஆம் வெயிட்டிங் ஹியர்.. என்ன பண்ற இன்னும்..? அந்த ஸ்லேவ் தான் உன் வேலையைப் பார்க்க இருக்கானே..” எனப் பேசியவனிடம் பதில் பேசாமல், அவன் யாரென்று புரியாமல் யோசித்தான் ராம்கி.
“சுஜா! ஆர் யு தேர்….? டிட் யு ஹியர் மை வாய்ஸ்..”
ராம்கி அதிர்ச்சியாகி அப்படியே அமர்ந்திருந்தான்.
“சுஜா! சுஜிஜிஜி!” எனக் கத்தியவன் ஃபோனை கட் பண்ணினான் ராம்கி.
அடுத்த நொடியில் மெசேஜ் வந்தது.
“வாய்ஸ் கேக்கல, பிங்க் பண்ணுடி.” என அனுப்பினான்.
ராம்கி மெசேஜை ஓபன் செய்ய, அது லாக்கில் இருந்தது.
அவன் அறியாத ஃபாஸ்வோர்டு அது.. மனம் அலறியது இப்போது. ஏததோ போட்டு முயற்சித்தான் அதனை திறக்க முடியவில்லை.
கோபம் மிகுந்து மனைவியைத் தேடி சென்றான். அவனின் முதுகைத் திரும்பி பார்க்காமல், மனைவிக்கு ஒருவன் மெசேஜ் அனுப்பினால் தவறு, தான் அடுத்தவன் மனைவியிடம், அடுத்த பெண்ணிடம் வரம்பு மீறலாமா..?
****
மருத்துவமனை வாசலில் பைக்கை நிறுத்தினான் ஜனா…
“ஜனா! யாருக்கு உடம்பு சரியில்லை.?”
எனக் கேட்டவாறு பைக்கில் இருந்து இறங்கினாள்.
“அம்மாக்கு….” என ஆரம்பித்து நிறுத்தினான், “உன் அம்மாக்கு என்ன ஆச்சு..? நல்லா தானே இருந்தாங்க” என பதறியபடிக் கேட்டாள்.
“விஜி! என் அம்மாக்கு இல்லை, உன் அம்மாக்கு” என அவன் முடிக்கவில்லை..
“என் அம்மாக்கா..? இங்கயா இருக்காங்க என்ன ஆச்சு ஜனா..? ஏன் என் கிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்தீங்க..?” என மருத்துவமனை வாயிலை நோக்கி ஓடினாள்.
“இரு!” என அவளின் கையைப் பிடித்து தடுத்தவன், “அம்மாக்கு மயக்கமாகி அன்கான்சியஸ் ஆகிட்டாங்க, ஆம்புலன்ஸில் கொண்டு வராங்க, அதை சொல்ல தான் அங்க வந்தேன் அதுக்குள்ள…. சரி விடு, வெயிட் பண்ணு ஆம்புலன்ஸ் வரட்டும்” என்றான்.
“அன்கான்சியஸா..? அம்மா! ஜனா என் கிட்ட எதும் மறைக்கலையே.. உண்மையை சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு” என அப்படியே மண்டியிட்டுக் கதறினாள்.
“ஒன்னும் இல்ல விஜி, அமைதியா இரு ப்ளீஸ்.” என அவளை எழுப்பி தேற்றிக் கொண்டு இருக்க, ஆம்புலன்ஸ் வளாகத்திற்குள் நுழைந்தது.
அவர்கள் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து நிற்கவும், அதில் இருந்து முத்தையா இறங்கினார்.
அவரைக் கண்ட விஜி வேகமாக எழுந்து ஓடினாள், உள்ளே படுத்திருந்த மங்கையிடம் சென்றவள்”அம்மா! அம்மா! இங்கப் பாரு நான் விஜிம்மா, கண்ணைத் திற” என அழுதுக் கொண்டே அவரை உலுக்கினாள்.
செவிலியர் வந்து அவளை விலக்க சொல்லவும், ஜனா விஜியைப் பிடித்து வெளியில் அழைத்து வந்தான்.
அடுத்தடுத்து துரிதமாக செயல்பட்டு மங்கையை ஐசியு வில் அட்மிட் செய்தார்கள்.
முத்தையா, ஜெய், ஜமுனா என மூவரும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, விஜி, ஜனா மறுபக்கம் அமர்ந்திருந்தார்கள்.
மங்கை அவசர சிகிச்சையில் இருந்ததால் எவருக்குமே தெம்பில்லை பேசுவதற்கு, ஜனா தான் அனைவரையும் தேற்றினான்.
சின்ன பையன் ஜெய் அழுதவாறு அமர்ந்திருக்க, ஜனா அவனை அருகில் அழைத்து ஆறுதல் கூறினான்.
“அழுவாத ஜெய், பெரியம்மா சீக்கிரம் சரியாகிடுவாங்க”
“பெரியம்மா பாவம், அவங்களுக்கு ஒன்னும் ஆகாதுல மாமா” எனக் கேட்டான்.
“அது எல்லாம் சரியாகிடுவாங்கடா, நீ அமைதியா இரு, போய் அப்பா, அம்மாக்கு ஆறுதல் சொல்லு”
அதுவரை ஜனாவின் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டு இருந்தவள் சட்டென்று எழுந்து முத்தையா முன் சென்றாள்.
“என்னமோ பொண்டாட்டினு கூட்டிட்டுப் போனீங்க, எதுக்கு இப்படி மூச்சுப் பேச்சு இல்லாம கொண்டு வரதானா…? மாமா வீட்டுல இருந்தவர அம்மா உயிர் மட்டுமாச்சும் இருந்துச்சு, இப்ப அதுக்கும் முடிவுக் கட்ட தான் கூட்டிட்டுப் போனீங்களா..?” என கோபம் பொங்கிட கண்கள் சிவக்க கேட்டாள்.
முத்தையா இதனை எதிர்பார்த்து தான் காத்திருந்தார்.
“விஜி! இப்ப இதை எல்லாம் பேச வேண்டிய நேரமில்லை, அமைதியா இரு. அவங்களுக்கு ஏற்கனவே ஹெல்த் இஷ்யு இருக்கு, இவங்களை ப்ளேம் பண்ணாத” என சற்றுக் கடுமையாக கூறினான்.
“ஜனா! தயவுசெய்து இவருக்கு சப்போர்ட் பண்ணி என் கிட்ட பேசாதீங்க, இவரு என் அம்மாவைக் கொன்னுடலாமுனு தான் கூட்டிட்டுப் போய் இருக்கார்” என்றாள் கோபத்தில்.
“விஜி! என்னடி பேசுற..?” என ஜமுனா எழுந்து வந்து வேகமாக கேட்டாள்.
“யார் நீ..? என் பேரைச் சொல்லி கூப்புடுற? ஓரமாப் போய் உட்காரு, புடிக்கலைனாலும் நான் இந்த ஆளு மூலமா இந்த உலகத்துக்கு வந்த பாவத்துக்காக இவர் கிட்ட பேசிட்டு இருக்கேன். உனக்கு மரியாதை கிடைக்காதுப் போயிடு” என்றாள் சித்தியிடம்.
“விஜிம்மா! உன் கோபம் நியாயம் தான், ஆனா அக்காக்கு திடீருனு இப்படி ஆச்சுடி, நம்பு நாங்க நல்லா பாத்துக்கிட்டோம்டி. அப்பாவைத் தப்பு சொல்லாத” என எடுத்துக் கூறினாள் ஜமுனா.
“ஓ! உனக்கு எப்பவுமே இவரு தான் முக்கியம்.. எப்படியோ போய்தொலைங்க. தயவு செஞ்சு இங்க இருந்து நீங்க எல்லாரும் போங்க, இல்லைனா நான் என்ன செய்வேனு தெரியாது”
“விஜி!” என அதட்டினான் ஜனா.
“நோ ஜனா! இவங்களை எல்லாம் போக சொல்லுங்க”
“ஜிமிக்கிம்மா! நான் வேணா உன் காலில் விழுறேன்டா, என்னைய மன்னிச்சுடுடா” என முத்தையா சட்டென்று விஜி காலில் விழப் போக, ஜனா பிடித்துவிட்டான்.