ஜனாவின் பெயர் ஃபோனின் திரையில் மிளிர்ந்ததும், வசந்தா உடனே அதை ஆன் செய்து காதில் வைத்து, அவன் பேசும் முன்னே, “எங்க இருக்க…?” எனச் சற்று பதட்டதுடன் கேட்டார்.
அவனிடம் பேசாமல் இருந்தாலும், மகன் இரவு முழுவதும் வீட்டிற்கே வரவில்லை என தெரிந்ததால் மனம் பதறியது.
“நாங்க ஃபைன்மா, விஜியோட அம்மா…” எனத் தொடங்கி, மங்கையின் நிலையை விவரித்தான்.
“ஓ! இப்ப எப்படி இருக்காங்க..?”
“ஈவ்னிங் தான் தெரியும் போல. காலையிலே அப்பா கிட்ட சொல்ல வேணாமேனு உங்களுக்கு கூப்புட்டேன். நாங்க வீட்டில் இல்லைனு பயந்துடக் கூடாதுல, அப்பா கிட்ட மெதுவா சொல்லுங்க, நாங்க என்னனு பாத்துட்டு வரோம். ஏதாவது முக்கியமுனா கூப்புடுங்க” என்றான்.
“எந்த ஹாஸ்பெட்டல்..?”
ஜனா அதைக் கூறியதும், “சரி!” என ஃபோனை கட் பண்ணினார்.
***
ஜனா அப்படியே கேண்டின் பக்கம் அனைவருக்கும் குடிக்க டீ வாங்கி கொண்டு, ஜெய் பையனுக்கு பிஸ்கட் எதுவும் வாங்கலாம் என்று நடந்தான்.
ஜனா எழுந்து சென்ற சிறிது நேரத்திலே விஜியின் தூக்கம் களைந்தது, விழித்ததும் நிமிர்ந்து அமர்ந்தாள்.
அருகில் ஜனா இல்லாததைக் கண்டு, வெளியில் போய் இருப்பான் போல என எண்ணி, தன் முகத்தை அழுத்தி துடைத்தவள் எதிரில் நல்ல தூக்கத்தில் இருந்த மூவரையும் நோக்கினாள்.
அவளின் பார்வையானது முத்தையாவிடம் வந்து நிலைக் குத்தி நின்றது.
அடர்ந்த கேசத்தில் நிறைய நரை முடிகள் தெரிய, முகம் எல்லாம் முதிர்ச்சியில் களைத்து தெரிந்தது.
அவள் பார்த்து ரசித்த தந்தை முத்தையா அவளின் பார்வைக்குள் எப்பொழுதும் கம்பீர நாயகனாக தெரிவார்.
இன்று ஏனோ நோயாளியாக, எதையோ இழந்த உணர்வற்ற மனிதராக காட்சியளித்தார்.
பக்கத்தில் இருக்கும் கடைக்கு செல்ல கூட வெள்ளை வெளிர் நிறத்தில் தான் வேஷ்டி அணிந்து செல்வார், இன்று அழுக்கு வேஷ்டியோடு ஊரில் இருந்து சென்னை வந்திருக்கார் என்றால் ஏன்..?
விஜியின் மனம் யோசித்து’தன் தாயின் நிலையே’ என அவருக்கு சாதகமாக கூறியது.
நீண்ட வருடங்கள் பிறகு தன் தந்தையை இத்தனை பக்கத்தில் நிதானமாக இன்று தான் பார்க்கின்றாள்.
மனம் அவளை மீறி’ஏன்பா! ஏன் இப்டி பண்ணிட்டு போனீங்க…? நான் என்ன பாவம் பண்ணேன், உங்க ஜிமிக்கிப் பொண்ணு பத்தி ஏன் யோசிக்கல..? என்னைய விட்டுப் போய் என்னைய ஏன் இப்படி மாத்துனீங்க…? அப்பா உறவையே வெறுக்க வச்சுட்டீங்களே.’ என விம்மியது.
கண் முழித்த முத்தையா, தன்னை நிதானப்படுத்தி சுற்றிப் பார்த்தார்.
ஜனாவைக் காணாததால் எழுந்திரித்தவர், தனியாக உறங்கும் மகளைக் கண்டார்.
திரும்பி ஜமுனா, ஜெய்யை காண அவர்கள் இன்னும் தூக்கத்தில் இருந்தனர்.
முத்தையா மெல்ல நடந்து வந்து மகள் அருகில் அமர்ந்தார்.
அவர் அமர்ந்த நொடியில் தந்தையின் வாசத்தை இத்தனை வருடங்கள் கழித்து மெல்ல உணர தொடங்கினாள் அவரின் ஜிமிக்கிப் பொண்ணு.
அவளுக்கு மனம் ஏனோ படபடவென்று அடித்தது. சொல்ல முடியாத அவளின் ஏக்கமோ, கிடைக்க தவறிய அவரின் அன்பு வாசத்தை ஏற்க துடித்தது. ஆனால் அதை ஏற்க முடியாமல் தவித்தாள்.
அருகில் அமர்ந்த முத்தையா வாஞ்சனையாக மகளின் தலையில் கைவைத்து தடவிக் கொடுத்தார்.
“ஜிமிக்கிமா! ஏன்டா என்னைய இந்தளவு வெறுக்குற..? நான் பண்ணது பாவம் ஆனா உன் மேல நான் வச்ச பாசத்துல ஒரு துளிக் கூட குறையாம பாதுகாத்துட்டு இருக்கேன்டா, நீ என்னைய எப்படி வெறுத்தாலும் உன் மேல உள்ள என் அன்போட அளவு அதிகரிக்குமே தவிர குறையாதுடா.. ஏனா நீ என் ஜிமிக்கிப் பொண்ணுமா, என் இரத்தம், என்னைய அப்பானு இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தி அந்த பதவியை கிரீடத்தோடு கொடுத்தவ நீ தான்மா. என் இளவரசி நீ.
நீ தூங்கும் போதாச்சும் உன் கூட பேச வாய்ப்பு கிடைச்சுதேனு நிம்மதியா இருக்குடா, சின்ன ஜிமிக்கிப் போட்டு பட்டுப் பாவாடையில் மின்னிய நட்சத்திரம் இன்னைக்கு பௌர்ணமி நிலா போல வளர்ந்து நிக்குற, ஆனா என்னால உரிமைக் கொண்டாட முடியல.” என அவளின் தலையை இன்னும் வருடியவர் குரல் உணர்வின்றி அமுங்கியது.
“நீ என் கூடப் பேசலைனா என்ன, நீ நல்லா இருப்படா… உனக்கு அமைஞ்ச புருசன் தங்கமான பையன். அவரும், நீயும் நூறு வருசம் சந்தோஷமா வாழ்ந்து, என் பேரப்பிள்ளைங்களோடு செழிப்பா இருப்படா ஜிமிக்கி…. நான் சீக்கிரம் போய் சேர்ந்துடுவேனு தோணுது ஜிமிக்கி. நான் செத்தப்பிறகு கூட என்னைய மன்னிக்க மாட்டனு புரிஞ்சுட்டு, வேணாம் விடு நான் உன் வாழ்க்கையில் பாவம் தான்.” என கையை எடுத்தவர், எழுந்து வெளியில் சென்று விட்டார்.
அதுவரை அனைத்து உணர்வுகளையும் அடக்கினாலும், முத்தையாவின் கடைசி வரிகளில், கண்கள் கலங்கி கண்ணீர் வெளியில் வரக் காத்திருக்க அப்படியே அழுத்தமாக இருந்தவள், அவர் சென்றதும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் துளிகள் அவளை மீறி வெளியேறியது.
‘நான் ஏன் அழுதுட்டு இருக்கேன்..?’ என சுடிதார் ஷாலை எடுத்து அவசரமாக துடைத்தாள்.
விஜி எழுந்தது, முத்தையா பேசியது என அனைத்தையும் ஜனா கவனித்துக் கொண்டு இருந்தான். ஆனால் அப்பொழுது தான் வருவது போல் அந்தப் பகுதிற்குள் நுழைந்தான்.
விஜி அவசரமாக முகத்தைத் துடைக்க, ஜனா”எழுந்திரிச்சுட்டீயா..?” எனக் கேட்டவாறு அருகில் அமர்ந்தான்.
“ச்சே! ச்சே! அம்மா அப்படி நினைக்க மாட்டாங்க. நீ நார்மலா இரு”
முத்தையாவும் அந்த நேரத்தில் நுழைந்தார்.
ஜமுனாவும், ஜெய் கண்கள் முழிக்க, ஜனா
“ஜெய்! நீ போய் முகத்தைக் கழுவிட்டு வா, பிஸ்கட் சாப்புடலாம்” என்றான்.
அவனோ தன் தாயைப் பார்த்தான்.
“அதான் மாமா சொல்றாங்கள, போ! போய் முகம் கழுவிட்டு வா, ஜமுனா கூட்டிட்டுப் போயிட்டு வா” என்றார் முத்தையா.
அவர்கள் எழுந்து செல்ல, விஜியும் முகம் கழுவி வர சென்றாள்.
காலை நேரம் ஆக, மங்கையை நேரில் காணவும் விடவில்லை.
கேண்டினில் காலை உணவை மாறி மாறி சென்று முடித்து வந்தனர்.
முத்தையா”மாப்புள்ள! நீங்க வேணா வீட்டுக்குப் போயிட்டு வாங்க, அதான் நாங்க இருக்கமுல..” என்றார்.
“ம்ம்ம்! பரவாயில்ல மாமா, அத்தை கண் முழிக்கட்டும், கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குமுல” என்றான்.
பத்து மணிக்கு மேல் ஆக, முத்துவும், வசந்தாவும் அங்கு வந்தனர்.
அவர்களை எதிர்பார்க்காத விஜி இருக்கையில் இருந்து எழவும், ஜனா
“அப்பா! நீங்க ஏன் இங்க.. அதான் நான் இருக்கேன்ல” என்றான் வருத்தமாக.
“அது எப்படி ஜனா, விசயத்தைக் கேள்விப் பட்டு எனக்கு என்னனு இருக்க முடியும்..” என முத்தையா அருகில் சென்று அமர்ந்தார்.
“முத்தையா! உங்களை பார்த்து வருசக் கணக்கு ஆச்சு.. ஆளே மாறிப் போயிட்டீங்க. கவலைபடாதீங்க விஜி அம்மாக்கு ஒன்னும் ஆகாது” என ஆறுதல் கூறினார்.
“அப்படி தான் நானும் நம்புறேன் முத்து. எனக்காக இல்லைனாலும் என் பொண்ணுக்காக நல்லா ஆகனும்.”
வசந்தா மெல்ல ஜமுனா அருகில் சென்று அமர்ந்து, பொதுவாக என்ன நடந்தது எப்படி நடந்ததுனு விசாரித்தார்.
முத்தையா”உங்க உடம்பும் பாதியா போச்சே முத்து.. இப்ப எப்படி இருக்கு…?” என நலம் விசாரித்தார்.
இடையில் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தாலும், நேரில் இப்பொழுது தான் பார்த்துக் கொண்டதால், ஒருவரை ஒருவர் விசாரித்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
விஜி நிற்க, முத்து”உட்காரும்மா! ஏன் நிக்குற..? உட்காரு” என்றார்.
“இருக்கட்டும் மாமா!” என்றாள்.
முத்தையாவிற்கு மகளின் மரியாதையை நினைத்துப் பெருமையாக இருந்தது.
“அட என்னம்மா, நீ உட்காரு நானும் உன் அப்பா மாதிரி தான்”
ஜனா கண் காட்டவும், மெல்ல அமர்ந்தாள்.
“அப்பு ஸ்கூல் போயிட்டான மாமா.?”
“ம்ம்ம்! போயிட்டான்மா, உங்களை தான் கேட்டான், வந்துடுவீங்கனு சொல்லிட்டு தான் வந்தோம்.”
“ம்ம்ம்!”
“இவர் தான் உன் மகனா முத்தையா?” என ஜெய்யை பார்த்துக் கேட்ட முத்து, “தம்பி! நீ ஏன் இங்க தங்கி கஷ்டப்படுற, எங்க கூட வீட்டுக்கு வா, அங்க ஒருத்தன் இருக்கான் உன் மாமாவோட தம்பி, நல்லா பொழுதுப் போகும்” என்றார்.
“இல்ல! நான் பெரியம்மாவைப் பாக்கனும்.. இங்கயே இருக்கேன்” என்றான் ஜெய்.
“பெரியம்மா கண்ணு முழிச்சதும் நீ வரலாம்பா”
“இல்ல பரவாயில்லைங்க, நான் இங்கயே இருக்கேன்”
முத்தையா”மாமானு சொல்லு ஜெய்.” என்றார்.
“சரி விடுங்க முத்தையா” என்ற முத்து,
மகனிடம்”ஜனா! டாக்டர் எப்ப வருவாங்க…?” எனக் கேட்டார்.
“ம்ம்ம்! எல்லாரும் இங்கயே இருப்பதற்கு வீட்டிற்கு வந்து குளிச்சுட்டு வரலாமுல”
“ஈவ்னிங் வரோம்பா!” என்றான் பொதுவாக.
“சரி! டாக்டர் வந்ததும் ஃபோன் பண்ணுப்பா” என முத்து எழுந்தார்.
வசந்தா எதுவும் பேசவில்லை, கணவர் கூடவே எழவும்..
யாரோ சிலர் வேகமாக நுழைந்தது அந்த வாயிலின் முன் தெரிந்தது.
விஜி, முத்தையா, ஜனா என அனைவருமே அங்குத் திரும்பி பார்த்தனர்.
தர்மா, ராமு, சுந்தர் என மூவரும் வேகமாக வந்துக் கொண்டு இருந்தனர்.
ஜனா முன்னெச்சரிக்கையாக”அப்பா! அவங்க தான் விஜி மாமாங்க..” என்றான்.
அவர்கள் வந்த வேகத்தில்”யோவ்! எங்க அக்காவை இப்படி கொன்னுப் போட தான், பஞ்சாயத்து வச்சு கூட்டிட்டுப் போனீயா..?” என முத்தையாவிடம் சீறினான் ராமு.
“என்ன பண்றீங்க..?” என ஜமுனா கேட்க, முத்தையா கையைக் காட்டித் தடுத்தார் அவளை.
“தம்பி! கொஞ்சம் பொறுமையா இருங்க” என முத்துக் கூறவும்,
சுந்தர்”நீ யாருய்யா இடையில்..?” எனக் கோபமாக கேட்டான்.
ஜனாவிற்கு கோபம் ஏறிட, “அவரு என் அப்பா, பார்த்துப் பேசுங்க” என்றான்.
தர்மா”டேய்! மத்தவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சு… போய் டாக்டர் யாருனு பாரு, நம்ம வேற பெரிய டாக்டர் கிட்ட அக்காவை கூட்டிட்டுப் போவோம்” என்றார்.
“இங்கயும் பிரச்சனை செய்யாமல் போ தர்மா, உங்கக் கூட எல்லாம் சண்டைப் போட உடம்பில் தெம்பில்லை” என்றார் முத்தையா.
“இந்த நடிப்பு எல்லாம் எங்க கிட்ட வேணாம், எங்களுக்கு எங்க அக்கா உயிரோடு வேணும், டேய்! போய் அந்த டாக்டரை கூட்டிட்டு வாங்க” என்றார் தர்மா.
அதுவரை பொறுமையாக இருந்த விஜி
“மாமா! ப்ளீஸ் பிரச்சனை பண்ணாம அமைதியா இருங்க, இதுவும் நல்ல ஹாஸ்பிடல், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இருக்காங்க” எனக் கூறினாள்.
“நாங்க பிரச்சனை பண்ண வரலை விஜி. விசயத்தைக் கேள்விப்பட்டு அடிச்சுப் புடிச்சு ஓடி வரோம். எங்களுக்கு அக்கா தான் முக்கியம். உன் அப்பாவை நம்பி அனுப்பி வச்சீயே, அந்தாளு எப்டி கொண்டுவந்து படுக்கப் போட்டார் பாரு உன் அம்மாவை.
இப்ப புரியுதா.? நாங்க எப்டி எங்க அக்காவை பாத்துக்கிட்டோமுனு. டேய்! என்னடா நான் பேசுறதை வாய் வேடிக்கைப் பாக்குறீங்க. போய் டாக்டர் யாருனு பாருங்கடா, இவனுங்க காசுக்காக படுக்கப் போட்டு ஏமாத்துவானுங்க.. நம்ம வேற டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவோம்..” என தம்பிகளை அதட்டினார் தர்மா.
முத்தையா”இது நல்லா இல்ல தர்மா, அவ என் பொண்டாட்டி, நான் பாத்துக்கிறேன். நீங்க எல்லாம் அமைதியா இருங்க.” என்றார் கோபமாக.
“உன்னைய எல்லாம் நான் மதிப்பதே இல்லை. பேசி எங்க கிட்ட வாங்கி கட்டிக்காத, இது மருத்துவமனைனு பாக்குறேன். இதோ இவன் உன் மருமகன் இருக்க தைரியமா…? எவனா இருந்தாலும் ஒரு கைப் பாத்துடுவோம். என் அக்கா தான் எங்களுக்கு முக்கியம்” என அதட்டினார் தர்மா.
வசந்தாவிற்கு ஜனாவைப் பேசியதும் கோபம் வந்தது, “ஏங்க என்னது இது எல்லாம்..? கண்டவங்க பேச தான் நம்ம பிள்ளையை பெத்துப் போட்டு இருக்கமா..?” என ஆதங்கப்பட்டார்.
“நீ பேசாம இரு!” என்றார் முத்து.
“அப்பா! நீங்க அம்மாவை கூப்புட்டு கிளம்புங்க” என்றான் ஜனா, அவர்கள் எதும் பிரச்சனை செய்தால் தேவை இல்லாதது புதிதாக கிளம்பிவிடும் என்ற பயத்தில்.
ராமுவும், சுந்தரும் டாக்டரை அழைக்க நகரப் போக…
“ஜனா! இப்ப எதுக்கு அவங்களைப் போக சொல்றீங்க..? இங்கிருந்து போக வேண்டியது இவங்க தான்..” என தர்மா முன் நின்றாள் விஜி.
ராமுவும், சுந்தரும் அப்படியே நின்றனர்.
“நாங்களா…? உள்ள படுத்திருப்பது எங்க அக்கா… எங்களுக்கு இல்லாத உரிமையா..? விஜி அமைதியா போய் உட்காரு” என்றார் தர்மா.
“மாமா! எனக்கு ரொம்பவே நன்றிக் கடன் இருக்கு உங்க மேல.. அதுக்கான மரியாதையும் வச்சு இருக்கேன் ஆனா மறுபடியும் மறுபடியும் நீங்க பண்ணிட்டு இருக்க அநியாயத்தை என்னால பொறுக்க முடியாது.
அவரை எனக்குப் புடிக்காது தான். இப்பவும் நான் அவரை மன்னிக்கல.. ஆனா அவர் எனக்கு அப்பா, என் அம்மாக்கு புருசன்.. இப்பவும் அம்மாக்கு சட்டப்படி புருசன். உள்ள படுத்திருக்கும் உங்க அக்காக்கு அவரு தான் முதலில், அப்புறம் தான் நானே.. அப்ப நீங்க..?
உங்களுக்கு மேலான உரிமை அவருக்கு இருக்கு. இப்ப இவ்ளோ பேசுறீங்களே, அன்னைக்கு என் அம்மாவை, அதான் உங்க அக்காவை உங்க ரெண்டுப் பேரு பொண்டாட்டியும் சேர்ந்து வெளியில் தள்ளி விட்டாங்களே அப்ப அமைதியா தானே நின்னீங்க…?
அத்தனை வருசமும் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் என்னால உங்களை, உங்க பாசத்தை எதிர்க்க முடியாம தவிச்சேன். நீங்க என்னப் பேசினாலும் நமக்கு சோறுப் போட்டாங்க, நல்ல ட்ரஸ் வாங்கி கொடுத்தாங்க, படிப்புக் கொடுத்தாங்கனு பொறுமையா இருந்தேன்.
ஆனா என் அம்மாவை அதுவும் சரியான மனநிலையில் இல்லாதவங்களை வெளியில் புடிச்சு அனாதை மாதிரி தள்ளி விடும் போது நீங்க மூணுப் பேருமே கேக்கலை. இப்ப எந்த முகத்தை வச்சுட்டு அக்கானு வந்தீங்க..?
அன்னைக்கு மாமிங்க எங்களுக்கு சோறு போட்டு பாத்துகிட்டது எல்லாத்துக்கும் கணக்கு சொன்னாங்கள. அது எல்லாத்துக்கும் மேலயே அதோ நிக்குறாரே அந்த மனுசன் சம்பாரிச்ச இடத்தை தான் கொடுத்தாச்சுல.
எப்ப கையெழுத்து வேணுமோ சொல்லுங்க வந்து போடுறேன். அவ்ளோ தான் முடிஞ்சுட்டு உங்களுக்கும் எனக்கும் என் அம்மாக்கும் இருக்க உறவு.
தயவு செஞ்சு போயிடுங்க மாமா, எந்தப் பிரச்சனையும் பண்ணாம, நல்லவரோ கெட்டவரோ அவரு, நானு, என் அம்மா எப்டியோ போறோம். நீங்க அக்கா! அக்கானு சொல்லி எங்க வாழ்க்கையில் வரது போதும்.
எங்க வாழ்க்கையை வாழவிடுங்க, இது அம்மா ஆசைப்படுற வாழ்க்கை. அம்மாவைக் காப்பாத்தி அவரோட தான் அனுப்புவேன். அம்மா சாகுற நிலை வந்தாலும் அவரு பக்கத்தில் சாகட்டும்.
போதும்! ப்ளீஸ் மாமா! உங்களுக்கு தேவையான பணம். நீங்க செஞ்ச செலவுக்கான கடன் கொடுத்தாச்சுனு மறக்காம போய் வீட்டில் சொல்லுங்க.
ஏனா! உங்க பாசம் அம்மா மேல உண்மை தான் அதை நான் மறுக்கல.. ஆனா பொதுவான குடும்பஸ்தர்கள் நீங்க.. போதும்! போங்க மாமா” என கையெடுத்து கும்பிட்டாள்.
அனைவருமே வாயடைத்துப் பார்த்தனர்.
தர்மா, ராமு, சுந்தர் முதற்கொண்டு.
முத்தையாவிற்கு மனம் தாங்க முடியவில்லை தன் பெண் பேசியதை எண்ணி… அப்படியே நாற்காலியில் சரிந்து வாயில் துண்டை வைத்து அழுதார்.
சுந்தர் ஏதோ பேச வர, தர்மா அவனைத் தடுத்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ராமுவும், சுந்தரும் கூடவே நடந்தனர்.
ஜனா விஜியின் அருகே சென்று கையைப் பிடித்து ஆறுதல் செய்தான்.